#இன்றைய வேத வசனம் #இன்றைய இறைவார்த்தை #இன்றைய வசனம் சிந்தனை* *“நானே என் மந்தையைத் தேடிச்சென்று பேணிக் காப்பேன்”* நகரில் இருந்த நண்பர்கள் இருவர் பணி நிமித்தமாக ஒரு சிற்றூரின் வழியாகத் தங்களிடம் இருந்த மகிழுந்தில் செல்ல நேர்ந்தது. வழியில் அவர்கள் இருவரும், ஓர் ஆயன் தன் மந்தையை ஓட்டிக்கொண்டு போவதைப் பார்த்தார்கள். உடனே அவர்களில் ஒருவன் மற்றவனிடம், “ஆயன் என்றால் கையில் கத்தியோடு இருப்பான் என்றல்லவா நினைத்தேன். இப்படிச் சாதாரண ஒரு கோலுடன் இருக்கின்றானே! அதுவும் அந்தக் கோலை அவன் எப்போதாவதுதான் பயன்படுத்துகின்றான்” என்றான். அதற்கு மற்றவன், “கையில் கத்தியோடு இருப்பவனுக்குப் பெயர் கசாப்புக் கடைக்காரன். கோலோடு இருப்பவனுக்குப் பெயர்தான் ஆயன்” என்று விளக்கம் அளித்தான். இன்றைக்கு ஆயனாக, தலைவனாக இருக்கவேண்டிய பலர், ஆடுகளை கொன்று போடும் கசாப்புக் கடைக்காரனாக இருப்பது வேதனையிலும் வேதனையான உண்மை. இத்தகைய சூழலில், இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை. ஆண்டவர் ஓர் ஆயனாக இருந்து தன் மந்தையைத் தேடிச் சென்று, பேணிக் காப்பார் என்கிறது. அது குறித்து நாம் சிந்திப்போம். *திருவிவிலியப் பின்னணி:* ஆயர் என்பவர் ஆடுகளை நல்லமுறையில் மேய்க்க வேண்டும். ஆடுகளை மேய்ந்து கொள்பவருக்குப் பெயர் ஆயர் இல்லை. இஸ்ரயேலில் ஆயர்களாக இருந்த பலர் மக்களை நல்ல முறையில் பேணிக் காக்காமல், தங்களைப் பேணிக் காத்துக் கொண்டார்கள். அதைவிடவும் அவர்கள் நலிந்தவற்றைத் திடப்படுத்தாமல், பிணியுற்றவற்றை நலமாக்காமலும், காணாமல் போனவற்றைத் தேடாமல் இருந்தார்கள். இதனால் ஆண்டவர் இறைவாக்கினர் எசேக்கியேல் வாயிலாக அவர்களுக்கு எதிராக இறைவாக்கு உரைக்கின்றார். இறுதியில், “நானே என் மந்தையைத் தேடிச் சென்று காப்பேன்” என்கிறார் அவர். ஆண்டவர் தம் மந்தையைத் தேடிச் சென்று, பேணிக் காப்பார் என்பதன் அடையாளமாக இருப்பதுதான் இன்றைய நற்செய்தியில் இயேசு சொல்லும் திராட்சைத் தோட்ட வேலையாள்கள் உவமை. இஸ்ரயேலில், அறுவடைக் காலத்தில் மழை வந்து எல்லாவற்றையும் பாழாக்கிவிடக்கூடாது என்பதற்கு எவ்வளவு வேலையாள்களை வேலைக்கு அமர்த்த முடியுமோ, அவ்வளவு வேலையாள்களை வேலைக்கு அமர்த்தி திராட்சைத் தோட்ட உரிமையாளர்கள் அறுவடை செய்வார்கள். இந்த வாழ்வியல் உண்மையை எடுத்துக்கொண்டு இயேசு திராட்சைத் தோட்ட வேலையாள்கள் உவமையைச் சொல்கின்றார். காலை ஆறுமணிக்கு வேலைக்கு வருபவர்களிடம் ஒரு தெனாரியம் கூலி என்று பேசும் திராட்சைத் தோட்ட உரிமையாளர், ஒன்பது மணிக்கு வருபவர்களிடம், “நேர்மையான கூலியைக் கொடுப்பேன்” என்கிறார். நண்பகல் பன்னிரண்டு மணிக்கும், மாலை ஐந்து மணிக்கும் வருபவர்களிடம் கூலியைப் பற்றி அவர் எதையும் பேசவில்லை. இவ்வாறு வேலையாள்களை வேலைக்கு அமர்த்தியவர் மாலை ஆறுமணிக்கு தனது மேற்பார்வையாளரை அழைத்துக் கூலி கொடுக்கிறார். இதில் நாம் கவனிக்க வேண்டியது, முதலில் வேலைக்கு வந்தவர்களுக்கு முதலிலேயே கூலி கொடுத்திருந்தால், வாக்குவாதம் ஏற்பட்டிருக்காது. ஆனால், கடைசியில் வந்தவர்களுக்கு முதலில் கூலி கொடுக்கப்படுகின்றது. அதுவும் ஒரு தெனாரியம். இதனால் முதலில் வேலைக்கு வந்தவர்கள் தங்களுக்கு மிகுதியாகக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கின்றர்கள். அது கிடைக்காதபோது அவர்கள் திராட்சைத் தோட்ட உரிமையாளரோடு வாக்குவாதம் செய்கின்றார்கள். அப்போதுதான் அவர் நான் விரும்பியபடி கூலி கொடுப்பது என் விருப்பம்; நான் நல்லவனாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா? என்கிறார். இங்கே முதலில் வந்தவர்களுக்கு அநீதி இழக்கப்பட வில்லை. அவர்களுக்குப் பேசியது போன்றுதான் கூலி கொடுக்கப்படுகின்றது. ஆனால், கடைசியில் வந்தவர்களுக்கும் ஒரு தெனாரியம் கொடுக்கப்படுகின்றது. ஒருவேளை திராட்சைத் தோட்ட உரிமையாளர் கடைசியில் வந்தவர்களுக்கு ஒரு தெனாரியத்திற்கும் குறைவாகக் கொடுத்திருந்தால், அவர்களின் வருமானத்தை நம்பி வாழும் அவர்களுடைய குடும்பம் மிகவும் துன்பப்படும் என்பதாலேயே திராட்சைத் தோட்ட உரிமையாளர் அவ்வாறு செய்கின்றார. இயேசு இந்த உவமையின் வழியாக கடவுளின் இரக்கமும் நீதியும் வறியவர்களுக்கு மிகுதியாகக் கிடைக்கின்றது; அத்தகைய இரக்கமும் நீதியும் அநீதி அல்ல, அது சமநீதி என்ற உண்மையை உணர்த்துகின்றார். இஸ்ரயேலில் இருந்த ஆயர்கள் வறியவர்களைத் தேடிச் சென்று பேணிக் காக்காதபோது, ஆண்டவர் இயேசு வறியவரைத் தேடிச் சென்று, அவர்களைக் காத்தார். இதன்மூலம் அவர் நல்ல ஆயராகத் திகழ்ந்தார். இறைவார்த்தையும் அவர் உண்மையை என்று நிரூபித்தார். எனவே, இயேசுவைப் போன்று வறியவர்களைத் தேடிச் சென்று, அவர்களைப் பேணிக் காத்து, இயேசுவின் உண்மையான சீடர்களாய் நாம் விளங்குவோம். *சிந்தனைக்கு:*  கடவுளின் பார்வையில் கடைநிலையில் உள்ளவருக்கு எப்போதும் தனியிடம் உண்டு.  ஆண்டவர் ஒருவருக்கு காட்டும் இரக்கத்தைக் கண்டு, நாம் அவர்மீது பொறாமைப்படக் கூடாது. ஏனெனில், பொறாமை ஒருவரை அழிக்கும் மிகக் கொடிய நோய்.  நல்ல ஆயர்களை, தலைவர்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நாம் நல்ல ஆயர்களாக, தலைவர்களாக மாறுவது எப்போது? *இறைவாக்கு:* ‘உன்னிடம் ஒப்படைக்கப்பட்டதைப் பாதுகாப்பாயாக’ (1 திமொ 6:20) என்று பவுல் திமொத்தேயுவிடம் கூறுவார். எனவே, நாம் நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட மக்களை நல்லமுறையில் பாதுகாப்போம். அதற்கு முன்னதாக நாம் அவர்களுக்கு முன்மாதிரியாய் இருந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம். *- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.*
8 shares

More like this