A Mohan Raj
768 views • 2 days ago
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #சிவன் #திருமுறை #பன்னிரு திருமுறை
*"திருமுறை ஓதாய் திருமுறையே தாய்"*
தினம் ஒரு திருமுறை அறிவோம் 🙏
*பன்னிரெண்டாம் திருமுறை*
*பெரியபுராணம் அல்லது திருத்தொண்டர் புராணம் என்பது சேக்கிழார் பெருமான் அவர்களால் பெருங்காப்பிய இலக்கணங்கள் பலவும் கொண்டதாக இயற்றப்பெற்ற சைவ காப்பியமாகும். சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டத் தொகை எனும் நூலை முதல் நூலாகக் கொண்டும். சுந்தரமூர்த்தி சுவாமிகளைக் காப்பிய தலைவராகக் கொண்டும், அவர் போற்றிய சைவ அடியார்களின் வாழ்க்கை வரலாற்றினையும் இந்நூலில் சேக்கிழார் பெருமான் விவரிக்கிறார்.*
*பெரியபுராணம் முதல் காண்டம், இரண்டாம் காண்டமென இரு காண்டமாகவும், முதல் காண்டத்தில் ஐந்து சருக்கங்களையும், இரண்டாம் காண்டத்தில் எட்டுச் சருக்கங்களையும் உடையதாக அமைக்கப்பெற்றுள்ளது. சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டத் தொகையில் இடம்பெற்றுள்ள பாடல்களின் முதல் வரியே சருக்கங்களின் பெயர்களாக உள்ளது.*
*காப்பிய தொகுப்பானது கயிலாயத்தில் தொடங்கப்பெற்றுச் சைவ அடியார்களின் வாழ்க்கையை விவரித்து, இறுதியாகக் கயிலாயத்தில் முடிகிறது.*
*முதற் காண்டத்தில்,
திருமலைச் சருக்கம்,
தில்லை வாழ் அந்தணர் சருக்கம்,
இலை மலிந்த சருக்கம்,
மும்மையால் உலகாண்ட சருக்கம்,
திருநின்ற சருக்கம்
என்ற ஐந்து சருக்கங்களும்,*
*இரண்டாம் காண்டத்தில்,
வம்பறா வரிவண்டுச் சருக்கம்,
வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்,
பொய்யடிமையில்லாத புலவர் சருக்கம்,
கறைக்கண்டன் சருக்கம்,
கடல்சூழ்ந்த சருக்கம்,
பத்தராய்ப் பணிவார் சருக்கம்,
மன்னிய சீர்ச் சருக்கம்,
வெள்ளானைச் சருக்கம்
என்னும் 8 சருக்கங்களும் அமைந்துள்ளன.*
*இடைக்கால இலக்கியத்தில் மக்களின் வாழ்க்கை பற்றி வரலாற்றுப் போக்கில் அறிவதற்கு இந்நூல் உதவுகிறது. நான்காயிரத்து இருநூற்று எண்பத்து ஆறு (4286) செய்யுள்களைக் கொண்ட இப்புராணத்தில் ஆளுடையபிள்ளை எனப்படும் திருஞானசம்பந்தரின் வரலாறு மட்டும் 1256 செய்யுட்களால் விரிவாகக் கூறப்பட்டுள்ளதால் "பிள்ளை பாதி; புராணம் பாதி" என்கிற பழமொழி ஏற்பட்டது.*
இறைவனின் திருநாமம் - சிற்சபை: ஆனந்தநடராஜ மூர்த்தி, மூலஸ்தானம்: ஸ்ரீ மூலநாதர்
இறைவி - சிற்சபை: சிவகாமசுந்தரி, மூலஸ்தானம்: உமாபார்வதி
அமைவிடம் : கோயில் (சிதம்பரம், தில்லை) சோழநாடு காவிரி வடகரைத் ஸ்தலம்
பதிகம் பற்றிய சுருக்கமான
*பன்னிரெண்டாம் திருமுறையில் இருந்து சேக்கிழார் பெருமான் அருளிய திருத்தொண்டர் புராணம் - திருநின்ற சருக்கம் - திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்*
திருநின்ற சருக்கத்தில் திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம் என்பது சேக்கிழார் பெருமானால் அருளப்பட்ட பெரியபுராணம் நூலில் இடம்பெறும் மிக முக்கியமான புராணங்களில் ஒன்றாகும். இது அப்பர் என்று அழைக்கப்படும் திருநாவுக்கரசு நாயனாரின் புகழையும், அவரது இறைத் தொண்டுகளையும் விவரிக்கிறது.
*இந்த புராணத்தில் கிட்டத்தட்ட 500 பாடல்கள் வரை உள்ளதால் அன்பர்கள் படித்து புரிந்து கொள்ள வசதியாக அடுத்த சில நாட்களுக்கு தினமும் 50 பாடல்கள் வீதம் பகிர்ந்து கொள்கிறேன்.*🙏
*இன்றைய பதிவில் 51 முதல் 100 வரையிலான பாடல்கள்*
பாடல் வரிகள் :
*பன்னிரெண்டாம் திருமுறையில் இருந்து சேக்கிழார் பெருமான் அருளிய திருத்தொண்டர் புராணம் - திருநின்ற சருக்கம் - திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்*
அச் சமயத்து இடைத் தாம்
முன் அதிகரித்து வாய்த்து வரும்
விச்சைகளால் தடுத்திடவும் மேல்
மேலும் மிக முடுகி
உச்சம் உற வேதனை நோய் ஓங்கி
எழ ஆங்கு அவர் தாம்
நச்சரவின் விடம் தலைக் கொண்டு
என மயங்கி நவையுற்றார். 51
அவர் நிலைமை கண்ட அதற்பின்
அமண் கையர் பலர் ஈண்டிக்
கவர் கின்ற விடம் போல் முன்
கண்டு அறியாக் கொடும் சூலை
இவர் தமக்கு வந்தது இனி
யாது செயல் என்று அழிந்தார்
தவம் என்று வினைப் பெருக்கிச்
சார்பு அல்லா நெறிசார்வார். 52
புண் தலைவன் முருட்டு அமணர்
புலர்ந்து செயல் அறியாது
குண்டிகை நீர் மந்திரித்துக்
குடிப்பித்தும் தணியாமை
கண்டு மிகப் பீலி கொடு
கால் அளவும் தடவி இடவும்
பண்டையினும் நோவு மிகப்
பரிபவத்தால் இடர் உழந்தார். 53
தாவாத புகழ்த் தரும
சேனருக்கு வந்த பிணி
ஓவாது நின்று இடலும்
ஒழியாமை உணர்ந்தாராய்
ஆ! ஆ! நாம் என் செய்கோம்
என்று அழிந்த மனத்தினராய்ப்
போவார்கள் இது நம்மால் போக்க
அரிதாம் எனப் புகன்று. 54
குண்டர்களும் கை விட்டார் கொடும்
சூலை மிசைக் கொண்டு
மண்டி மிக மேல் மேலும்
பெருகுதலால் மதி மயங்கிப்
பண்டை உறவு உணர்ந்தார்க்குத்
திலகவதியார் உளராகக்
கொண்டு அவர்பால் ஊட்டுவான்
தனைவிட்டார் குறிப்பு உணர்த்த. 55
ஆங்கு அவன் போய்த் திருவதிகை
தணை அடைய அரும் தவத்தார்
பூங்கமழ் நந்தனவனத்தின் புறம்பு
அணையக் கண்டு இறைஞ்சி
ஈங்கு யான் உமக்கு இளையார்
ஏவலினால் வந்தது எனத்
தீங்கு உளவோ என
வினவ மற்றவனும் செப்புவான். 56
கொல்லாது சூலை நோய்
குடர் முடக்கித் தீராமை
எல்லாரும் கை விட்டார் இது
செயல் என் முன் பிறந்த
நல்லாள் பால் சென்று இயம்பி
நான் உய்யும்படி கேட்டு இங்கு
அல்லாகும் பொழுது அணைவாய்
என்றார் என்று அறிவித்தான். 57
என்று அவன் முன் கூறுதலும் யான்
அங்கு உன் உடன் போந்து
நன்று அறியா அமண் பாழி
நண்ணுகிலேன் எனும் மாற்றம்
சென்று அவனுக்கு உரை
என்று திலகவதியார் மொழிய
அன்று அவனும் மீண்டு போய்ப்
புகுந்தபடி அவர்க்கு உரைத்தான். 58
அவ் வார்த்தை கேட்டலுமே அயர்வு
எய்தி இதற்கு இனி யான்
எவ்வாறு செய்வன் என
ஈசர் அருள் கூடுதலால்
ஒவ்வா இப் புன் சமயத்து
ஒழியா இத்துயர் ஒழியச்
செவ்வாறு சேர் திலக வதியார்
தாள் சேர்வன் என. 59
எடுத்த மனக் கருத்து உய்ய
எழுதலால் எழு முயற்சி
அடுத்தலுமே அயர்வு ஒதுங்கத்
திருவதிகை அணைவதனுக்கு
உடுத்து உழலும் பாய் ஒழிய
உறி உறு குண்டிகை ஒழியத்
தொடுத்த பீலியும் ஒழியப்
போவதற்குத் துணிந்து எழுந்தார். 60
பொய் தரும் மால் உள்ளத்துப்
புன் சமணர் இடம் கழிந்து
மெய் தருவான் நெறி அடைவார்
வெண் புடைவை மெய் சூழ்ந்து
கை தருவார் தமை ஊன்றிக்
காணாமே இரவின் கண்
செய் தவ மாதவர் வாழும்
திருவதிகை சென்று அடைவார். 61
சுலவி வயிற்று அகம் கனலும்
சூலை நோயுடன் தொடரக்
குலவி எழும் பெருவிருப்புக் கொண்டு
அணையக் குலவரை போன்று
இலகு மணி மதில் சோதி
எதிர் கொள் திருவதிகையினில்
திலக வதியார் இருந்த திரு
மடத்தைச் சென்று அணைந்தார். 62
வந்து அணைந்து திலகவதியார்
அடிமேல் உற வணங்கி
நம் தமது குலம் செய்த
நல் தவத்தின் பயன் அனையீர்
இந்த உடல் கொடும் சூலைக்
கிடைந்து அடைந்தேன் இனி மயங்காது
உய்ந்து கரை ஏறுநெறி உரைத்து
அருளும் என உரைத்து. 63
தாள் இணை மேல் விழுந்து
அயரும் தம்பியார் தமை நோக்கி
ஆள் உடைய தம் பெருமான்
அருள் நினைந்து கை தொழுது
கோளில் பரசமய நெறிக்
குழியில் விழுந்து அறியாது
மூளும் அரும் துயர் உழந்தீர்!
எழுந்தீர்! என மொழிந்தார். 64
மற்ற வுரை கேட்டலுமே
மருண் நீக்கியார் தாமும்
உற்ற பிணி உடல் நடுங்கி
எழுந்து தொழ உயர் தவத்தோர்
கற்றை வேணியர் அருளே காணும்
இது கழல் அடைந்தோர்
பற்று அறுப்பார் தமைப் பணிந்து
பணி செய்வீர் எனப் பணித்தார். 65
என்ற பொழுது அவர் அருளை
எதிர் ஏற்றுக் கொண்டு இறைஞ்ச
நின்ற தபோதனியாரும் நின்மலன்
பேர் அருள் நினைந்து
சென்று திரு வீரட்டம்
புகுவதற்குத் திருக் கயிலைக்
குன்று உடையார் திரு நீற்றை
அஞ்சு எழுத்து ஓதிக் கொடுத்தார். 66
திரு வாளன் திரு
நீறு திலகவதியார் அளிப்ப
பெரு வாழ்வு வந்தது எனப்
பெருந்தகையார் பணிந்து ஏற்று அங்கு
உருவார அணிந்து தமக்குற்ற
இடத்து உய்யும் நெறி
தருவாராய்த் தம் முன்பு வந்தார்
பின் தாம் வந்தார். 67
நீறு அணிந்தார் அகத்து இருளும்
நிறை கங்குல் புறத்து இருளும்
மாற வரும் திருப் பள்ளி
எழுச்சியினில் மாதவம் செய்
சீர் அடியார் திரு அலகும்
திரு மெழுக்கும் தோண்டியும் கொண்டு
ஆறு அணிந்தார் கோயிலின் உள்
அடைந்தவரைக் கொடு புக்கார். 68
திரைக் கெடில வீரட்டானத்து
இருந்த செங்கனக
வரைச் சிலையார் பெரும் கோயில்
தொழுது வலம் கொண்டு இறைஞ்சித்
தரைத் தலத்தின் மிசை வீழ்ந்து
தம்பிரான் திரு அருளால்
உரைத் தமிழ் மாலைகள் சாத்தும்
உணர்வு பெற உணர்ந்து உரைப்பார். 69
வேறு - எண்சீர் ( 8 மாச்சீர் )
நீற்றால் நிறைவு ஆகிய மேனியுடன் நிறை
அன்பு உறுசிந்தையில் நேசம் மிக
மாற்றார் புரம் மாற்றிய வேதியரை
மருளும் பிணி மாயை அறுத்திடுவான்
கூற்று ஆயினவாறு விலக்ககிலீர்
எனநீடிய கோதில் திருப்பதிகம்
போற்றால் உலகு ஏழின் வரும் துயரம்
போமாறு எதிர் நின்று புகன்றனரால். 70
மன்னும் பதிகம் அது பாடியபின் வயிறு
உற்று அடு சூலை மறப்பிணிதான்
அந் நின்ற நிலைக் கண் அகன்றிடலும்
அடியேன் உயிரோடு அருள் தந்தது எனாச்
செந் நின்ற பரம் பொருள் ஆனவர்
தம் திருவாரருள் பெற்ற சிறப்பு உடையோர்
முன் நின்ற தெருட்சி மருட்சியினால்
முதல்வன் கருணைக் கடல் மூழ்கினரே. 71
அங்கங்கள் அடங்க உரோமம் எலாம் அடையப்
புளகம் கண் முகிழ்த்து அலரப்
பொங்கும் புனல் கண்கள் பொழிந்து இழியப்
புவிமீது விழுந்து புரண்டு அயர்வார்
இங்கு என் செயல் உற்ற பிழைப்பு அதனால்
ஏறாத பெருந்திடர் ஏறிட நின்
தங்கும் கருணைப் பெரு வெள்ளம் இடத்
தகுமோ என இன்னன தாம் மொழிவார். 72
பொய் வாய்மை பெருக்கிய புன் சமயப்
பொறியில் சமண் நீசர் புறத் துறையாம்
அவ்வாழ் குழியின் கண் விழுந்து எழுமாறு
அறியாது மயங்கி அவம் புரிவேன்
மை வாச நறும் குழல் மா மலையாள்
மணவாளன் மலர்க்கழல் வந்து அடையும்
இவ் வாழ்வு பெறத் தரு சூலையினுக்கு
எதிர்செய் குறை என்கொல் எனத் தொழுவார். 73
மேவுற்ற இவ் வேலையில் நீடிய சீர்
வீரட்டம் அமர்ந்த பிரான் அருளால்
பாவுற்று அலர் செந்தமிழின் சொல்
வளப் பதிகத் தொடைபாடிய பான்மையினால்
நாவுக்கு அரசு என்று உலகு ஏழினும்
நின்நன்நாமம் நயப்புற மன்னுக என்று
யாவர்க்கும் வியப்புற மஞ்சு உறை வான்
இடையே ஒருவாய்மை எழுந்ததுவே. 74
இத் தன்மை நிகழ்ந்துழி நாவின் மொழிக்கு
இறைஆகிய அன்பரும் இந்நெடுநாள்
சித்தம் திகழ் தீவினையேன் அடையும்
திருவோ இதுஎன்று தெருண்டு அறியா
அத்தன்மையன் ஆகிய இராவணனுக்கு அருளும்
கருணைத் திறமான அதன்
மெய்த் தன்மை அறிந்து துதிப்பதுவே
மேல்கொண்டு வணங்கினர் மெய்யுறவே. 75
பரசும் கருணைப் பெரியோன் அருளப்பறி
புன்தலையோர் நெறி பாழ்பட வந்து
அரசு இங்கு அருள் பெற்று உலகு உய்ந்தது
எனாஅடியார் புடை சூழ் அதிகைப் பதி தான்
முரசம் பட கந்துடி தண்ணுமை யாழ்
முழவம் கிளை துந்துபி கண்டை உடன்
நிரை சங்கு ஒலி எங்கும் முழங்குதலால்
நெடுமா கடல் என்ன நிறைந்துளதே. 76
மையல் துறை ஏறி மகிழ்ந்து அலர்
சீர்வாகீசர் மனத்தொடு வாய்மையுடன்
மெய் உற்ற திருப்பணி செய்பவராய்
விரவும் சிவ சின்னம் விளங்கிடவே
எய்துற்ற தியானம் அறா உணர்வும்
ஈறு இன்றி எழும் திருவாசகமும்
கையில் திகழும் உழவாரமுடன்
கைக்கொண்டு கலந்து கசிந்தனரே. 77
மெய்ம்மைப் பணி செய்த விருப்பு அதனால்
விண்ணோர் தனி நாயகனார் கழலில்
தம் இச்சை நிரம்ப வரம் பெறும்
அத்தன்மைப் பதி மேவியதா பதியார்
பொய்மைச் சமயப் பிணி விட்டவர்
முன்போதும் பிணி விட்டருளிப் பொருளா
எம்மைப் பணிகொள் கருணைத் திறம்
இங்கு யார் பெற்றனர் என்ன இறைஞ்சினரே. 78
வேறு - கலித்துறை
இன்ன தன்மையில் இவர்
சிவ நெறியினை எய்தி
மன்னு பேர் அருள் பெற்று
இடர் நீங்கிய வண்ணம்
பன்னு தொன்மையில் பாடலி
புத்திர நகரில்
புன்மை யே புரி அமணர்
தாம் கேட்டு அது பொறாராய். 79
தரும சேனர்க்கு வந்த அத்
தடுப்ப அரும் சூலை
ஒருவராலும் இங்கு ஒழிந்திடாமையின்
அவர் உய்யப் போய்ப்
பெருகு சைவராய்ப் பெயர்ந்து தம்
பிணி ஒழித்து உய்ந்தார்
மருவு நம் பெரும் சமயம்
வீழ்ந்தது என மருள்வார். 80
மலையும் பல் சமயங்களும்
வென்று மற்றவரால்
நிலையும் பெற்ற இந்நெறி இனி
அழிந்தது என்று அழுங்கிக்
கொலையும் பொய்மையும் இலம்
என்று கொடுமையே புரிவோர்
தலையும் பீலியும் தாழ வந்து
ஒரு சிறை சார்ந்தார். 81
இவ்வகைப் பல அமணர்கள்
துயருன் ஈண்டி
மெய் வகைத் திறம்
அறிந்திடில் வேந்தனும் வெகுண்டு
சைவனாகி நம் விருத்தியும்
தவிர்க்கும் மற்று இனி நாம்
செய்வது என் என
வஞ்சனை தெரிந்து சித்திரிப்பார். 82
தவ்வை சைவத்து நிற்றலின்
தரும சேனரும் தாம்
பொய் வகுத்தது ஓர் சூலை
தீர்ந்திலது எனப் போய் இங்கு
எவ்வ மாக அங்கு எய்தி
நம் சமய லங்கனமும்
தெய்வ நிந்தையும் செய்தனர்
எனச் சொலத் தெளிந்தார். 83
சொன்ன வண்ணமே செய்வது
துணிந்த துன் மதியோர்
முன்னம் நாம் சென்று
முறைப்படுவோம் என முயன்றே
இன்ன தன்மையில் இருள்
குழாம் செல்வது போல
மன்னன் ஆகிய பல்லவன்
நகரில் வந்து அணைந்தார். 84
உடை ஒழிந்து ஒரு பேச்சு
இடை இன்றி நின்று உண்போர்
கடை அணைந்தவன் வாயில்
காவலருக்கு நாங்கள்
அடைய வந்தமை அரசனுக்கு
அறிவியும் என்ன
இடை அறிந்து புக்க வரும்
தம் இறைவனுக்கு இசைப்பார். 85
வேறு - கொச்சகக் கலிப்பா
அடிகண்மார் எல்லாரும் ஆகுலமாய்
மிக அழிந்து
கொடி நுடங்கு திருவாயில் புறத்து
அணைந்தார் எனக் கூற
வடி நெடுவேல் மன்னவனும்
மற்றவர் சார்பு ஆதலினால்
கடிது அணைவான் அவர்க்கு உற்றது என்
கொல் எனக் கவன்று உரைத்தான். 86
கடை காவல் உடையார்கள் புகுத
விடக் காவலன் பால்
நடை ஆடும் தொழில் உடையார்
நண்ணித் தாம் எண்ணியவாறு
உடையார் ஆகிய தரும
சேனர் பிணி உற்றாராய்ச்
சடையானுக்கு ஆளாய் நின்
சமயம் ஒழித்தார் என்றார். 87
விரை அலங்கல் பல்லவனும் அது
கேட்டு வெகுண்டு எழுந்து
புரை உடைய மனத்தினராய் போவதற்குப்
பொய்ப் பிணி கொண்டு
உரை சிறந்த சமயத்தை
அழித்து ஒழியப் பெறுவதே
கரையில் தவத்தீர் இதனுக்கு என்
செய்வது எனக் கனன்றான். 88
தலை நெறி ஆகிய சமயம்
தன்னை அழித்து உன்னுடைய
நிலை நின்ற தொல் வரம்பின்
நெறி அழித்த பொறி இலியை
அலை புரிவாய் எனப் பரவி
வாயால் அஞ்சாது உரைத்தார்
கொலை புரியா நிலை கொண்டு
பொய் ஒழுகும் அமண் குண்டர். 89
அருள் கொண்ட உணர்வு
இன்றி நெறிகோடி அறிவென்று
மருள் கொண்ட மன்னவனும்
மந்திரிகள் தமை நோக்கித்
தெருள் கொண்டோர் இவர்
சொன்ன தீயோனைச் செறுவதற்குப்
பொருள் கொண்டு விடாது என்
பால் கொடுவாரும் எனப் புகன்றான். 90
அரசனது பணிதலை நின்ற
அமைச்சர்களும் அந்நிலையே
முரசு அதிரும் தானையொடு முன்
சென்று முகில் சூழ்ந்து
விரை செறியும் சோலை சூழ்
திருவதிகை தனை மேவி
பரசமயப் பற்று அறுத்த
பான்மையினார் பால் சென்றார். 91
சென்று அணைந்த அமைச்சர் உடன்
சேனை வீரரும் சூழ்ந்து
மின் தயங்கு புரிவேணி
வேதியனார் அடியவரை
இன்று நுமை அரசன் அழைக்க
எமை விடுத்தான் போதும் என
நின்றவரை நேர் நோக்கி நிறை
தவத்தோர் உரை செய்வார். 92
நாம் ஆர்க்கும் குடி அல்லோம்
என்று எடுத்து நான்மறையின்
கோமானை நதியின் உடன் குளிர்
மதி வாழ் சடை யானைத்
தேமாலைச் செந்தமிழின் செழும்
திருத் தாண்டகம் பாடி
ஆமாறு நீர் அழைக்கும் அடைவிலம்
என்று அருள் செய்தார். 93
ஆண்ட அரசருள் செய்யக் கேட்ட
வரும் அடி வணங்கி
வேண்டியவர்க் கொண்டு ஏக
விடை உகைத்தார் திருத்தொண்டர்
ஈண்டு வரும் வினைகளுக்கு எம்பிரான்
உளன் என்று இசைந்து இருந்தார்
மூண்ட சினப் போர் மன்னன்
முன் அணைந்து அங்கு அறிவித்தார். 94
பல்லவனும் அது கேட்டுப் பாங்கு
இருந்த பாய் உடுக்கை
வல் அமணர் தமை நோக்கி
மற்று அவனைச் செய்வது இனிச்
சொல்லும் என அறம் துறந்து
தமக்கு உறுதி அறியாத
புல் அறிவோர் அஞ்சாது நீற்று
அறையில் இடப் புகன்றார். 95
அருகு அணைந்தார் தமை நோக்கி
அவ் வண்ணம் செய்க எனப்
பெருகு சினக் கொடுங் கோலான்
மொழிந்திடலும் பெருந் தகையை
உருகு பெரும் தழல் வெம்மை
நீற்று அறையின் உள் இருத்தித்
திருகு கரும் தாள் கொளுவிச்
சேமங்கள் செய்து அமைத்தார். 96
ஆண்ட அரசு அதன் அகத்துள்
அணைந்த பொழுது அம்பலத்துத்
தாண்டவம் முன் புரிந்து அருளும்
தாள் நிழலைத் தலைக் கொண்டே
ஈண்டு வரும் துயர் உளவோ
ஈசன் அடியார்க்கு என்று
மூண்டமனம் நேர் நோக்கி
முதல்வனையே தொழுது இருந்தார். 97
வெய்ய நீற்று அறையது தான்
வீங்கு இளவேனில் பருவம்
தை வரும் தண் தென்றல் அணை
தண் கழுநீர்த் தடம் போன்று
மொய் ஒளி வெண் நிலவு
அலர்ந்து முரன்ற யாழ் ஒலியினதாய்
ஐயர் திருவடி நீழல்
அருள் ஆகி குளிர்ந்ததே. 98
மாசு இல் மதி நீடுபுனல்
மன்னி வளர் சென்னியனைப்
பேச இனியானை உலக
ஆளுடைய பிஞ்ஞகனை
ஈசனை எம்பெருமானை எவ்
உயிரும் தருவானை
ஆசை இல் ஆரா அமுதை
அடி வணங்கி இனிது இருந்தார். 99
ஓர் எழுநாள் கழிந்து அதன்பின்
உணர்வில் அமணரை அழைத்துப்
பாரும் இனி நீற்று அறையை
என உரைத்தான் பல்லவனும்
கார் இருண்ட குழாம் போலும்
உரு உடைய கார் அமணர்
தேரும் நிலை இல்லாதார்
நீற்று அறையைத் திறந்தார்கள். 100
திருச்சிற்றம்பலம் 🕉️🙏
ஓம் நமசிவாயம் 🕉️🙏
சிவாய நம ஓம் 🕉️🙏
நற்றுணையாவது நாதன் நாமம் நமச்சிவாயவே🕉️
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
11 shares