A Mohan Raj
1K views 11 days ago
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #சிவன் #திருமுறை #பன்னிரு திருமுறை *"திருமுறை ஓதாய் திருமுறையே தாய்"* தினம் ஒரு திருமுறை அறிவோம் 🙏 *பன்னிரெண்டாம் திருமுறை* *பெரியபுராணம் அல்லது திருத்தொண்டர் புராணம் என்பது சேக்கிழார் பெருமான் அவர்களால் பெருங்காப்பிய இலக்கணங்கள் பலவும் கொண்டதாக இயற்றப்பெற்ற சைவ காப்பியமாகும். சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டத் தொகை எனும் நூலை முதல் நூலாகக் கொண்டும். சுந்தரமூர்த்தி சுவாமிகளைக் காப்பிய தலைவராகக் கொண்டும், அவர் போற்றிய சைவ அடியார்களின் வாழ்க்கை வரலாற்றினையும் இந்நூலில் சேக்கிழார் பெருமான் விவரிக்கிறார்.* *பெரியபுராணம் முதல் காண்டம், இரண்டாம் காண்டமென இரு காண்டமாகவும், முதல் காண்டத்தில் ஐந்து சருக்கங்களையும், இரண்டாம் காண்டத்தில் எட்டுச் சருக்கங்களையும் உடையதாக அமைக்கப்பெற்றுள்ளது. சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டத் தொகையில் இடம்பெற்றுள்ள பாடல்களின் முதல் வரியே சருக்கங்களின் பெயர்களாக உள்ளது.* *காப்பிய தொகுப்பானது கயிலாயத்தில் தொடங்கப்பெற்றுச் சைவ அடியார்களின் வாழ்க்கையை விவரித்து, இறுதியாகக் கயிலாயத்தில் முடிகிறது.* *முதற் காண்டத்தில், திருமலைச் சருக்கம், தில்லை வாழ் அந்தணர் சருக்கம், இலை மலிந்த சருக்கம், மும்மையால் உலகாண்ட சருக்கம், திருநின்ற சருக்கம் என்ற ஐந்து சருக்கங்களும்,* *இரண்டாம் காண்டத்தில், வம்பறா வரிவண்டுச் சருக்கம், வார்கொண்ட வனமுலையாள் சருக்கம், பொய்யடிமையில்லாத புலவர் சருக்கம், கறைக்கண்டன் சருக்கம், கடல்சூழ்ந்த சருக்கம், பத்தராய்ப் பணிவார் சருக்கம், மன்னிய சீர்ச் சருக்கம், வெள்ளானைச் சருக்கம் என்னும் 8 சருக்கங்களும் அமைந்துள்ளன.* *இடைக்கால இலக்கியத்தில் மக்களின் வாழ்க்கை பற்றி வரலாற்றுப் போக்கில் அறிவதற்கு இந்நூல் உதவுகிறது. நான்காயிரத்து இருநூற்று எண்பத்து ஆறு (4286) செய்யுள்களைக் கொண்ட இப்புராணத்தில் ஆளுடையபிள்ளை எனப்படும் திருஞானசம்பந்தரின் வரலாறு மட்டும் 1256 செய்யுட்களால் விரிவாகக் கூறப்பட்டுள்ளதால் "பிள்ளை பாதி; புராணம் பாதி" என்கிற பழமொழி ஏற்பட்டது.* இறைவனின் திருநாமம் - சிற்சபை: ஆனந்தநடராஜ மூர்த்தி, மூலஸ்தானம்: ஸ்ரீ மூலநாதர் இறைவி - சிற்சபை: சிவகாமசுந்தரி, மூலஸ்தானம்: உமாபார்வதி அமைவிடம் : கோயில் (சிதம்பரம், தில்லை) சோழநாடு காவிரி வடகரைத் ஸ்தலம் பதிகம் பற்றிய சுருக்கமான *பன்னிரெண்டாம் திருமுறையில் இருந்து சேக்கிழார் பெருமான் அருளிய திருத்தொண்டர் புராணம் - திருநின்ற சருக்கம் - திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்* திருநின்ற சருக்கத்தில் திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம் என்பது சேக்கிழார் பெருமானால் அருளப்பட்ட பெரியபுராணம் நூலில் இடம்பெறும் மிக முக்கியமான புராணங்களில் ஒன்றாகும். இது அப்பர் என்று அழைக்கப்படும் திருநாவுக்கரசு நாயனாரின் புகழையும், அவரது இறைத் தொண்டுகளையும் விவரிக்கிறது. *இந்த புராணத்தில் கிட்டத்தட்ட 500 பாடல்கள் வரை உள்ளதால் அன்பர்கள் படித்து புரிந்து கொள்ள வசதியாக அடுத்த சில நாட்களுக்கு தினமும் 50 பாடல்கள் வீதம் பகிர்ந்து கொள்கிறேன்.*🙏 *இன்றைய பதிவில் 252 முதல் 300 வரையிலான பாடல்கள்* பாடல் வரிகள் : *பன்னிரெண்டாம் திருமுறையில் இருந்து சேக்கிழார் பெருமான் அருளிய திருத்தொண்டர் புராணம் - திருநின்ற சருக்கம் - திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்* மாட வீதி அலங்கரித்து மறையோர் வாயின் மணி விளக்கு நீடு கதலி தழைப் பூகம் நிரைத்து நிறை பொன் குடம் எடுத்துப் பீடு பெருகும் வாகீசர் பிள்ளையாரும் தொண்டர்களும் கூட மகிழ்ந்து விண் இழிந்த கோயில் வாயில் சென்று அணைந்தார். 251 சென்று உள் புகுந்து திருவீழி மிழலை அமர்ந்த செங்கனகக் குன்ற வில்லியார் மகிழ்ந்த கோயில் வலமா வந்து திரு முன்றில் வணங்கி முன் எய்தி முக்கண் செக்கர் சடை மவுலி வென்றி விடையார் சேவடிக் கீழ் விழுந்தார் எழுந்தார் விம்மினார். 252 கைகள் குவித்துக் கழல் போற்றிக் கலந்த அன்பு கரைந்து உருக மெய்யில் வழியும் கண் அருவி விரவப் பரவும் சொல் மாலை செய்ய சடையார் தமைச் சேரார் தீங்கு நெறி சேர்கின்றார் என்று உய்யும் நெறித் தாண்டகம் மொழிந்து அங்கு ஒழியாக் காதல் சிறந்து ஓங்க. 253 முன்னாள் அயனும் திருமாலும் முடிவும் முதலும் காணாத பொன்னார் மேனி மணி வெற்பைப் பூ நீர் மிழலையினில் போற்றிப் பல் நாள் பிரியா நிலைமையினால் பயிலக் கும்பிட்டு இருப்பாராய் அந்நாள் மறையோர் திருப்பதியில் இருந்தார் மெய்ம்மை அருந்தவர்கள். 254 சீரின் விளங்கும் திருத்தொண்டர் இருந்து சில நாள் சென்று அதன் பின் மாரி சுருங்கி வளம் பொன்னி நதியும் பருவம் மாறுதலும் நீரின் இயன்ற உணவு அருகி நிலவும் பல மன் உயிர்கள் எல்லாம் பாரின் மலிந்த இலம் பாட்டில் படர் கூர் வறுமை பரந்ததால். 255 வையம் எங்கும் வற்கடமாய்ச் செல்ல உலகோர் வருத்தமுற நையும் நாளில் பிள்ளையார் தமக்கும் நாவுக்கு அரசருக்கும் கையில் மானும் மழுவும் உடன் காணக் கனவில் எழுந்து அருளிச் செய்ய சடையார் திருவீழி மிழலை உடையார் அருள் செய்வார். 256 கால நிலைமையால் உங்கள் கருத்தில் வாட்டம் உறீர் எனினும் ஏல உம்மை வழி படுவார்க்கு அளிக்க அளிக்கின்றோம் என்று கோலம் காண எழுந்து அருளிக் குலவும் பெருமை இருவர்க்கும் ஞாலம் அறியப் படிக்காசு வைத்தார் மிழலை நாயகனார். 257 விண்ணின் நின்று இழிந்த விமானத்தின் கிழக்கும் மேற்கும் பீடத்தில் அண்ணல் புகலி ஆண் தகையார் தமக்கும் ஆண்ட அரசினுக்கும் நண்ணும் நாள்கள் தொறும் காசு படிவைத்து அருள நானிலத்தில் எண்ணில் அடியார் உடன் அமுது செய்து அங்கு இருந்தார் இருவர்களும். 258 அல்லார் கண்டத்து அண்டர் பிரான் அருளால் பெற்ற படிக்காசு பல்லாறு இயன்ற வளம் பெருகப் பரமன் அடியார் ஆனார்கள் எல்லாம் எய்தி உண்கஎன இரண்டு பொழுதும் பறை நிகழ்த்திச் சொல்லால் சாற்றிச் சோறு இட்டார் துயர்கூர் வறுமை தொலைத்திட்டார். 259 ஈசர் மிழலை இறையவர் பால் இமையப் பாவை திருமுலைப் பால் தேசம் உய்ய உண்டவர் தாம் திருமா மகனார் ஆதலினால் காசு வாசியுடன் பெற்றார் கைத் தொண்டு ஆகும் படிமையினால் வாசி இல்லாக் காசு படி பெற்று வந்தார் வாகீசர். 260 ஆறு சடை மேல் அணிந்து அருளும் அண்ணல் வைத்த படிக் காசால் ஈறு இலாத பொருள் உடைய இருவர் உடைய திருமடங்கள் சோறு நாளும் தொண்டர் மகிழ்ந்து உண்ண உண்ணத் தொலையாதே ஏறு பெருமை புவி போற்ற இன்புற்று இருக்கும் அந் நாளில். 261 காலம் தவறு தீர்ந்து எங்கும் கலிவான் பொழிந்த புனல் கலந்து ஞாலம் எல்லாம் குளிர் தூங்கி உணவு பெருகி நலம் சிறப்ப மூல அன்பர் இருவர்களும் மொழி மாலைகளும் பல சாத்தி நீல கண்டர் உறை பதிகள் பிறவும் வணங்க நினைவுற்றார். 262 வாய்ந்த மிழலை மா மணியை வணங்கிப் பிரியா விடை கொண்டு பூந்தண் புனல் சூழ் வாஞ்சியத்தைப் போற்றிப் புனிதர் வாழ்பதிகள் ஏய்ந்த அன்பினால் இறைஞ்சி இசை வண்தமிழ்கள் புனைந்து போய்ச் சேர்ந்தார் செல்வத் திருமறைக்காடு எல்லை இல்லாச் சீர்த்தியினார். 263 மன்றல் விரவு மலர்ப் புன்னை மணம் சூழ் சோலை உப்பளத்தின் முன்றில் தோறும் சிறு மடவார் முத்தம் கொழிக்கும் மறைக் காட்டுக் குன்ற வில்லியார் மகிழ்ந்த கோயில் புகுந்து வலம் கொண்டு சென்று சேர்ந்தார் தென் புகலிக் கோவும் அரசும் திரு முன்பு. 264 பரவை ஓதக் கழிக்கானல் பாங்கு நெருங்கும் அப் பதியில் அரவச் சடை அந்தணனாரை அகில மறைகள் அர்ச்சனை செய்து உரவக் கதவம் திருக் காப்புச் செய்த அந்நாள் முதல் இந்நாள் வரையும் அடைத்தே நிற்கின்ற மணி நீள் வாயில் வணங்குவார். 265 தொல்லை வேதம் திருக் காப்புச் செய்த வாயில் தொடர் அகற்ற வல்ல அன்பர் அணையாமை மருங்கு ஓர் வாயில் வழி எய்தி அல்லல் தீர்ப்பார் தமை அருச்சிப்பார்கள் தொழுவார் ஆம்படி கண்டு எல்லை இல்லாப் பெரும் புகழார் இதனை அங்குக் கேட்டு அறிந்தார். 266 ஆங்கு அப் பரிசை அறிந்து அருளி ஆழித்தோணி புரத்து அரசர் ஓங்கு வேதம் அருச்சனை செய் உம்பர் பிரானை உள் புக்குத் தேங்கா திருவோம் நேர் இறைஞ்சத் திருமுன் கதவம் திருக்காப்பு நீங்கப் பாடும் அப்பர் என நீடும் திருநாவுக்கு அரசர். 267 உண்ணீர்மையினால் பிள்ளையார் உரைசெய்து அருள அதனாலே பண்ணினேரு மொழியாள் என்று எடுத்துப் பாடப் பயன் துய்ப்பான் தெண்ணீர் அணிந்தார் திருக்காப்பு நீக்கத் தாழ்க்கத் திருக் கடைக்காப்பு எண்ணீர் இரக்கம் ஒன்று இல்லீர் என்று பாடி இறைஞ்சுதலும். 268 வேத வனத்தின் மெய்ப் பொருளின் அருளால் விளங்கும் மணிக் கதவம் காதல் அன்பர் முன்பு திருக் காப்பு நீங்கக் கலை மொழிக்கு நாதர் ஞான முனிவருடன் தொழுது விழுந்தார் ஞாலத்துள் ஓத ஒலியின் மிக்கு எழுந்த தும்பர் ஆர்ப்பும் மறை ஒலியும். 269 அன்பர் ஈட்டம் களி சிறப்ப ஆண்ட அரசும் சிவக் கன்றும் இன்ப வெள்ளத்து இடை மூழ்கி எழுந்து உள் புகுந்து தம் பெருமான் முன்பு பணிந்து போற்றி இசைத்துப் பரவி மொழி மாலைகள் பாடி என்பு கரைய உள் உருகி இறைஞ்சி அரிதில் புறத்து அணைந்தார். 270 புறம்பு நின்று வாகீசர் புனிதர் அருளால் இக் கதவம் திறந்தும் அடைத்தும் செல்லும் நெறி திருந்தமலையாள் திருமுலையில் கறந்த ஞானம் குழைத்த அமுது செய்த புகலிக் கவுணியரை நிறைந்த கதவம் அடைக்கும் வகை நீரும் பாடி அருளும் என. 271 சண்பை ஆளும் தமிழ் விரகர் தாமும் திரு நாவுக்கரசர் பண்பின் மொழிந்த உரை கொண்டு பதிகம் பாடும் அவ்வளவில் கண் பொற்பமைந்த நுதல் காளகண்டர் அருளால் கடிதுடனே திண் பொன் கதவம் திருக் காப்புச் செய்தது எடுத்த திருப் பாட்டில். 272 அது கண்டு உடைய பிள்ளையார் தாமும்ஆண்ட அரசும் மகிழ்ந்து இது நம் பெருமான் அருள் செய்யப் பெற்றோம் என்று அங்கு இறைஞ்சிய பின் பதிகம் நிரம்பப் பிள்ளையார் பாடித் தொழுது பணிவு உற்றார் எதிர் பொன் திருவாயிலின் வழக்கம் என்றும் நிகழ்ச்சி எய்தியது ஆல். 273 அங்கு நிகழ்ந்த அச்செயல் கண்டுஅடியார் எல்லாம் அதிசயித்துப் பொங்கு புளகம் எய்திட மெய் பொழியும் கண்ணீர் பரந்து இழிய எங்கும் நிகர் ஒன்று இல்லாத இருவர் பாதம் இறைஞ்சினார் நங்கள் புகலிப் பெரும் தகையும் அரசும் மடத்தில் நண்ணிய பின். 274 அரிதில் திறக்கத் தாம் பாட அடைக்க அவர் பாடிய எளிமை கருதி நம்பர் திருவுள்ளம் அறியாது அயர்ந்தேன் எனக் கவன்று பெரிதும் அஞ்சித் திருமடத்தில் ஒருபால் அணைந்து பேழ் கணித்து மருவும் உணர்வில் துயில் கொண்டார் வாய்மை திறம்பா வாகீசர். 275 மன்னும் செல்வ மறைக்காட்டு மணியின் பாதம் மனத்தின் கண் உன்னித் துயிலும் பொழுதின் கண் உமை ஓர் பாகம் உடையவர் தாம் பொன்னின் மேனி வெண் நீறு புனைந்த கோலப் பொலிவினொடும் துன்னி அவர்க்கு வாய் மூரில் இருப்போம் தொடர வா என்றார். 276 போதம் நிகழ வா என்று போனார் என் கொல் எனப் பாடி ஈது எம்பெருமான் அருளாகில் யானும் போவேன் என்று எழுந்து வேத வனத்தைப் புறகிட்டு விரைந்து போக அவர் முன்னே ஆதி மூர்த்தி முன் காட்டும் அவ் வேடத்தால் எழுந்து அருள. 277 சீரார் பதியின் நின்று எழுந்து செல்லும் திருநாவுக்கு அரசர் ஆரா அன்பில் ஆரமுதம் உண்ண எய்தா வாறே போல் நீரார் சடையார் எழுந்து அருள நெடிது பின்பு செல்லும் அவர் பேராளரை முன் தொடர்ந்து அணையப் பெறுவார் எய்தப் பெற்று இலரால். 278 அன்ன வண்ணம் எழுந்து அருளி அணித்தே காட்சி கொடுப்பார் போல் பொன்னின் கோயில் ஒன்று எதிரே காட்டி அதனுள் புக்கு அருளத் துன்னும் தொண்டர் அம் மருங்கு விரைந்து தொடரப் போந்த படி மன்னும் புகலி வள்ளலார் தாமும் கேட்டு வந்து அணைந்தார். 279 அழைத்துக் கொடு போந்து அணியார் போல் காட்டி மறைந்தார் என அயர்ந்து பிழைத்துச் செவ்வி அறியாதே திறப்பித் தேனுக்கே அல்லால் உழைத்தாம் ஒளித்தால் கதவம் தொண்டு உறைக்கப் பாடி அடைப்பித்த தழைத்த மொழியார் உப்பாலார் தாம் இங்கு எப்பால் மறைவது என. 280 மாட நீடு திருப்புகலி மன்னர் அவர்க்கு மால் அயனும் நேடி இன்னங் காணாதார் நேரே காட்சி கொடுத்து அருள ஆடல் கண்டு பணிந்து ஏத்தி அரசும் காணக் காட்டுதலும் பாட அடியார் என்று எடுத்துப் பரமர் தம்மைப் பாடினார். 281 பாடும் தமிழ் மாலைகள் கொண்டு பரமர் தாமும் எழுந்து அருள நீடும் திருவாய்மூர் அடைந்து நிலவும் கோயில் வலம் செய்து சூடும் பிறையார் பெரும் தொண்டர் தொழுது போற்றித் துதி செய்து நாடும் காதல் வளர்ந்து ஓங்க நயந்து அந் நகரில் உடன் உறைந்தார். 282 ஆண்ட அரசும் பிள்ளையார் உடனே அங்கண் இனிது அமர்ந்து பூண்ட காதல் பொங்கி எழ வாய் மூர் அடிகள் போற்றி மூண்ட அன்பின் மொழிமாலை சாத்தி ஞான முனிவரொடு மீண்டு வந்து திருமறைக் காடு எய்தி விமலர் தாள் பணிந்தார். 283 ஆதி முதல்வர் தமைப் பணிந்து அங்கு ஆன பணி செய்து அமரும் நாள் சீத மதி வெண் குடை வளவர் மகளார் தென்னன் தேவியாம் கோதில் குணத்துப் பாண்டி மா தேவியார் முன் குலச்சிறையார் போத விட்டார் சிலர் வந்தார் புகலி வேந்தர் தமைக் காண. 284 வந்து சிவனார் திருமறைக் காடு எய்தி மன்னு வேணுபுரி அந்தணாளர் தமக்கு அறிவித்து அவர் பால் எய்தி அடி வணங்க சிந்தை மகிழ்ந்து தீது இன்மை வினவத் தீங்கும் உளவாமோ இந்த உலகம் உய வந்தீர் இரு தாள் நினைவார்க்கு என்று உரைப்பார். 285 சைவ நெறி வைதிகம் நிற்கச் சழக்கு நெறியைத் தவம் என்னும் பொய் வல் அமணர் செயல் தன்னைப் பொறுக்க கில்லோம் எனக் கேட்டே அவ் வன் தொழிலோர் செயல் மாற்றி ஆதிசைவ நெறி விளங்கத் தெய்வ நீறு நினைந்து எழுந்தார் சீர் கொள் சண்பைத் திரு மறையோர். 286 ஆய பொழுது திரு நாவுக்கரசு புகலி ஆண் தகைக்குக் காய மாசு பெருக்கி உழல் கலதி அமணர் கடுவினை செய் மாயை சாலம் மிக வல்லார் அவர் மற்று என்னை முன் செய்த தீய தொழிலும் பல கெட்டேன் செல்ல இசையேன் யான் என்றார். 287 என்று கூற எல்லை இலா நீறு போற்றும் இருவரையும் சென்று காணும் கருத்து உடையேன் அங்குத் தீங்கு புரி அமணர் நின்ற நிலைமை அழிவித்துச் சைவ நெறி பாரித்து அன்றி ஒன்றும் செய்யேன் ஆணை உமது என்றார் உடைய பிள்ளையார். 288 போமா துணிந்து நீர் அங்குப் போகப் போதா அவ் அமணர் தீ மாயையினை யானே போய்ச் சிதைத்து வருகின்றேன் என்ன ஆமாறு எல்லாம் உரைத்து அவரை மறுக்க மாட்டது அரசு இருப்பத் தாம் ஆதரவால் தமிழ் நாட்டில் போனார் ஞானத் தலைவனார். 289 வேணு புரக்கோன் எழுந்து அருள விடைகொண்டு இருந்த வாகீசர் பூணும் அன்பால் மறைக்காட்டில் புனிதர் தம்மைப் போற்றி இசைத்துப் பேணி இருந்து அங்கு உறையும் நாள் பெயர்வார் வீழிமிழலை அமர் தாணுவின் தன் செய்ய கழல் மீண்டும் சார நினைக்கின்றார். 290 சோலை மறைக் காட்டு அமர்ந்து அருளும் சோதி அருள் பெற்று அகன்று போய் வேலை விடம் உண்டவர் வீழி மிழலை மீண்டும் செல்வன் என ஞாலம் நிகழ்ந்த நாகைக் காரோணம் பிறவும் தாம் பணிந்து சாலு மொழி வண் தமிழ்ப் பாடித் தலைவர் மிழலை வந்து அடைந்தார். 291 வீழி மிழலை தனைப் பணிந்து வேத முதல்வர் தாம் இருப்ப ஆழி வலம் ஏந்திய அரியால் ஆகாசத்தின் நின்று இழிந்த வாழி மலர்ந்த கோயில்தனில் மன்னும் பொருளை போற்றிசைத்துத் தாழும் நாளில் பிறபதியும் பணியும் காதல் தலை நிற்பார். 292 பூவில் பொலியும் புனல் பொன்னிக் கரை போய்ப் பணிவார் பொற்பு அமைந்த ஆவுக்கு அருளும் ஆவடு தண் துறையார் பாதம் அணைந்து இறைஞ்சி நாவுக் கரசர் ஞானப் போன கர்க்குச் செம் பொன் ஆயிரமும் பாவுக்கு அளித்த திறம் போற்றிப் போந்து பிறவும் பணிகின்றார். 293 செய்ய சடையார் பழையாறை எய்த அதனில் செல் பொழுதில் மையல் அமணர் மறைத்த வடதளியின் மன்னும் சிவனாரைக் கைகள் கூப்பித் தொழுது அருளக் கண்டவாற்றால் அமணர்கள் தம் பொய் கொள் விமானம் எனக் கேட்டுப் பொறாத உள்ளம் மிகப் புழுங்கி. 294 அந்த விமானம் தனக்கு அருகா ஆங்கு ஓர் இடத்தின் பாங்கு எய்திக் கந்தம் மலரும் கடிக் கொன்றை முடியார் செய்ய கழல் உன்னி மந்த அமணர் வஞ்சனையால் மறைத்த வஞ்சம் ஒழித்தருளிப் பந்தம் கொண்ட குண்டர் திறம் பாற்றும் என்று பணிந்து இருந்தார். 295 வண்ணம் கண்டு நான் உம்மை வணங்கி அன்றிப் போகேன் என்று எண்ண முடிக்கும் வாகீசர் இருந்தார் அமுது செய்யாதே அண்ணலாரும் அது உணர்ந்து அங்கு அரசு தம்மைப் பணிவதற்குத் திண்ணமாக மன்னனுக்குக் கனவில் அருளிச் செய்கின்றார். 296 அறிவில் அமணர் நமை மறைப்ப இருந்தோம் என்று அங்கு அடையாளக் குறிகள் அறியச் செய்து அருளி நம்மை அரசு கும்பிடுவான் நெறியில் அமணர் தமை அழித்து நீக்கிப் போக்கு என்று அருள் புரிய செறிவில் அறிவுற்று எழுந்து அவனும் செங்கை தலைமேல் குவித்து இறைஞ்சி. 297 கண்ட வியப்பு மந்திரிகட்கு இயம்பிக் கூடக் கடிது எய்தி அண்டர் பெருமான் அருள் செய்த அடையாளத்தின் வழி கண்டு குண்டர் செய்த வஞ்சனையைக் குறித்து வேந்தன் குலவு பெரும் தொண்டர் தம்மை அடி வணங்கித் தொக்க அமணர் தூர் அறுத்தான். 298 ஆனை இனத்தில் துகைப்புண்ட அமண் ஆயிரமும் மாய்ந்தற் பின் மேன்மை அரசன் ஈசர்க்கு விமானம் ஆக்கி விளக்கியபின் ஆன வழி பாட்டு அர்ச்சனைக்கு நிபந்தம் எல்லாம் அமைத்து இறைஞ்ச ஞான அரசும் புக்கு இறைஞ்சி நாதர் முன்பு போற்றுவார். 299 தலையின் மயிரைப் பறித்து உண்ணும் சாதி அமணர் மறைத்தாலும் நிலை இலாதார் நிலைமையினால் மறைக்க ஒண்ணுமோ என்னும் விலை இல் வாய்மைக்குறுந் தொகைகள் விளம்பிப் புறம் போந்து அங்கு அமர்ந்தே இலை கொள் சூலப் படையார் சேர் இடங்கள் பிறவும் தொழ அணைவார். 300 திருச்சிற்றம்பலம் 🕉️🙏 ஓம் நமசிவாயம் 🕉️🙏 சிவாய நம ஓம் 🕉️🙏 நற்றுணையாவது நாதன் நாமம் நமச்சிவாயவே🕉️ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
22 shares

More like this