A Mohan Raj
1K views • 11 days ago
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #சிவன் #திருமுறை #பன்னிரு திருமுறை
*"திருமுறை ஓதாய் திருமுறையே தாய்"*
தினம் ஒரு திருமுறை அறிவோம் 🙏
*பன்னிரெண்டாம் திருமுறை*
*பெரியபுராணம் அல்லது திருத்தொண்டர் புராணம் என்பது சேக்கிழார் பெருமான் அவர்களால் பெருங்காப்பிய இலக்கணங்கள் பலவும் கொண்டதாக இயற்றப்பெற்ற சைவ காப்பியமாகும். சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டத் தொகை எனும் நூலை முதல் நூலாகக் கொண்டும். சுந்தரமூர்த்தி சுவாமிகளைக் காப்பிய தலைவராகக் கொண்டும், அவர் போற்றிய சைவ அடியார்களின் வாழ்க்கை வரலாற்றினையும் இந்நூலில் சேக்கிழார் பெருமான் விவரிக்கிறார்.*
*பெரியபுராணம் முதல் காண்டம், இரண்டாம் காண்டமென இரு காண்டமாகவும், முதல் காண்டத்தில் ஐந்து சருக்கங்களையும், இரண்டாம் காண்டத்தில் எட்டுச் சருக்கங்களையும் உடையதாக அமைக்கப்பெற்றுள்ளது. சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டத் தொகையில் இடம்பெற்றுள்ள பாடல்களின் முதல் வரியே சருக்கங்களின் பெயர்களாக உள்ளது.*
*காப்பிய தொகுப்பானது கயிலாயத்தில் தொடங்கப்பெற்றுச் சைவ அடியார்களின் வாழ்க்கையை விவரித்து, இறுதியாகக் கயிலாயத்தில் முடிகிறது.*
*முதற் காண்டத்தில்,
திருமலைச் சருக்கம்,
தில்லை வாழ் அந்தணர் சருக்கம்,
இலை மலிந்த சருக்கம்,
மும்மையால் உலகாண்ட சருக்கம்,
திருநின்ற சருக்கம்
என்ற ஐந்து சருக்கங்களும்,*
*இரண்டாம் காண்டத்தில்,
வம்பறா வரிவண்டுச் சருக்கம்,
வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்,
பொய்யடிமையில்லாத புலவர் சருக்கம்,
கறைக்கண்டன் சருக்கம்,
கடல்சூழ்ந்த சருக்கம்,
பத்தராய்ப் பணிவார் சருக்கம்,
மன்னிய சீர்ச் சருக்கம்,
வெள்ளானைச் சருக்கம்
என்னும் 8 சருக்கங்களும் அமைந்துள்ளன.*
*இடைக்கால இலக்கியத்தில் மக்களின் வாழ்க்கை பற்றி வரலாற்றுப் போக்கில் அறிவதற்கு இந்நூல் உதவுகிறது. நான்காயிரத்து இருநூற்று எண்பத்து ஆறு (4286) செய்யுள்களைக் கொண்ட இப்புராணத்தில் ஆளுடையபிள்ளை எனப்படும் திருஞானசம்பந்தரின் வரலாறு மட்டும் 1256 செய்யுட்களால் விரிவாகக் கூறப்பட்டுள்ளதால் "பிள்ளை பாதி; புராணம் பாதி" என்கிற பழமொழி ஏற்பட்டது.*
இறைவனின் திருநாமம் - சிற்சபை: ஆனந்தநடராஜ மூர்த்தி, மூலஸ்தானம்: ஸ்ரீ மூலநாதர்
இறைவி - சிற்சபை: சிவகாமசுந்தரி, மூலஸ்தானம்: உமாபார்வதி
அமைவிடம் : கோயில் (சிதம்பரம், தில்லை) சோழநாடு காவிரி வடகரைத் ஸ்தலம்
பதிகம் பற்றிய சுருக்கமான
*பன்னிரெண்டாம் திருமுறையில் இருந்து சேக்கிழார் பெருமான் அருளிய திருத்தொண்டர் புராணம் - திருநின்ற சருக்கம் - திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்*
திருநின்ற சருக்கத்தில் திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம் என்பது சேக்கிழார் பெருமானால் அருளப்பட்ட பெரியபுராணம் நூலில் இடம்பெறும் மிக முக்கியமான புராணங்களில் ஒன்றாகும். இது அப்பர் என்று அழைக்கப்படும் திருநாவுக்கரசு நாயனாரின் புகழையும், அவரது இறைத் தொண்டுகளையும் விவரிக்கிறது.
*இந்த புராணத்தில் கிட்டத்தட்ட 500 பாடல்கள் வரை உள்ளதால் அன்பர்கள் படித்து புரிந்து கொள்ள வசதியாக அடுத்த சில நாட்களுக்கு தினமும் 50 பாடல்கள் வீதம் பகிர்ந்து கொள்கிறேன்.*🙏
*இன்றைய பதிவில் 252 முதல் 300 வரையிலான பாடல்கள்*
பாடல் வரிகள் :
*பன்னிரெண்டாம் திருமுறையில் இருந்து சேக்கிழார் பெருமான் அருளிய திருத்தொண்டர் புராணம் - திருநின்ற சருக்கம் - திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்*
மாட வீதி அலங்கரித்து மறையோர்
வாயின் மணி விளக்கு
நீடு கதலி தழைப் பூகம் நிரைத்து
நிறை பொன் குடம் எடுத்துப்
பீடு பெருகும் வாகீசர்
பிள்ளையாரும் தொண்டர்களும்
கூட மகிழ்ந்து விண் இழிந்த
கோயில் வாயில் சென்று அணைந்தார். 251
சென்று உள் புகுந்து திருவீழி
மிழலை அமர்ந்த செங்கனகக்
குன்ற வில்லியார் மகிழ்ந்த கோயில்
வலமா வந்து திரு
முன்றில் வணங்கி முன் எய்தி
முக்கண் செக்கர் சடை மவுலி
வென்றி விடையார் சேவடிக் கீழ்
விழுந்தார் எழுந்தார் விம்மினார். 252
கைகள் குவித்துக் கழல் போற்றிக்
கலந்த அன்பு கரைந்து உருக
மெய்யில் வழியும் கண் அருவி
விரவப் பரவும் சொல் மாலை
செய்ய சடையார் தமைச் சேரார்
தீங்கு நெறி சேர்கின்றார் என்று
உய்யும் நெறித் தாண்டகம் மொழிந்து
அங்கு ஒழியாக் காதல் சிறந்து ஓங்க. 253
முன்னாள் அயனும் திருமாலும்
முடிவும் முதலும் காணாத
பொன்னார் மேனி மணி வெற்பைப் பூ
நீர் மிழலையினில் போற்றிப்
பல் நாள் பிரியா நிலைமையினால்
பயிலக் கும்பிட்டு இருப்பாராய்
அந்நாள் மறையோர் திருப்பதியில்
இருந்தார் மெய்ம்மை அருந்தவர்கள். 254
சீரின் விளங்கும் திருத்தொண்டர் இருந்து
சில நாள் சென்று அதன் பின்
மாரி சுருங்கி வளம் பொன்னி
நதியும் பருவம் மாறுதலும்
நீரின் இயன்ற உணவு அருகி நிலவும்
பல மன் உயிர்கள் எல்லாம்
பாரின் மலிந்த இலம் பாட்டில்
படர் கூர் வறுமை பரந்ததால். 255
வையம் எங்கும் வற்கடமாய்ச்
செல்ல உலகோர் வருத்தமுற
நையும் நாளில் பிள்ளையார்
தமக்கும் நாவுக்கு அரசருக்கும்
கையில் மானும் மழுவும் உடன்
காணக் கனவில் எழுந்து அருளிச்
செய்ய சடையார் திருவீழி மிழலை
உடையார் அருள் செய்வார். 256
கால நிலைமையால் உங்கள் கருத்தில்
வாட்டம் உறீர் எனினும்
ஏல உம்மை வழி படுவார்க்கு
அளிக்க அளிக்கின்றோம் என்று
கோலம் காண எழுந்து அருளிக்
குலவும் பெருமை இருவர்க்கும்
ஞாலம் அறியப் படிக்காசு
வைத்தார் மிழலை நாயகனார். 257
விண்ணின் நின்று இழிந்த விமானத்தின்
கிழக்கும் மேற்கும் பீடத்தில்
அண்ணல் புகலி ஆண் தகையார்
தமக்கும் ஆண்ட அரசினுக்கும்
நண்ணும் நாள்கள் தொறும் காசு
படிவைத்து அருள நானிலத்தில்
எண்ணில் அடியார் உடன் அமுது
செய்து அங்கு இருந்தார் இருவர்களும். 258
அல்லார் கண்டத்து அண்டர் பிரான்
அருளால் பெற்ற படிக்காசு
பல்லாறு இயன்ற வளம் பெருகப்
பரமன் அடியார் ஆனார்கள்
எல்லாம் எய்தி உண்கஎன இரண்டு
பொழுதும் பறை நிகழ்த்திச்
சொல்லால் சாற்றிச் சோறு இட்டார்
துயர்கூர் வறுமை தொலைத்திட்டார். 259
ஈசர் மிழலை இறையவர் பால்
இமையப் பாவை திருமுலைப் பால்
தேசம் உய்ய உண்டவர் தாம்
திருமா மகனார் ஆதலினால்
காசு வாசியுடன் பெற்றார் கைத்
தொண்டு ஆகும் படிமையினால்
வாசி இல்லாக் காசு படி
பெற்று வந்தார் வாகீசர். 260
ஆறு சடை மேல் அணிந்து அருளும்
அண்ணல் வைத்த படிக் காசால்
ஈறு இலாத பொருள் உடைய
இருவர் உடைய திருமடங்கள்
சோறு நாளும் தொண்டர் மகிழ்ந்து
உண்ண உண்ணத் தொலையாதே
ஏறு பெருமை புவி போற்ற
இன்புற்று இருக்கும் அந் நாளில். 261
காலம் தவறு தீர்ந்து எங்கும்
கலிவான் பொழிந்த புனல் கலந்து
ஞாலம் எல்லாம் குளிர் தூங்கி
உணவு பெருகி நலம் சிறப்ப
மூல அன்பர் இருவர்களும் மொழி
மாலைகளும் பல சாத்தி
நீல கண்டர் உறை பதிகள்
பிறவும் வணங்க நினைவுற்றார். 262
வாய்ந்த மிழலை மா மணியை
வணங்கிப் பிரியா விடை கொண்டு
பூந்தண் புனல் சூழ் வாஞ்சியத்தைப்
போற்றிப் புனிதர் வாழ்பதிகள்
ஏய்ந்த அன்பினால் இறைஞ்சி இசை
வண்தமிழ்கள் புனைந்து போய்ச்
சேர்ந்தார் செல்வத் திருமறைக்காடு
எல்லை இல்லாச் சீர்த்தியினார். 263
மன்றல் விரவு மலர்ப் புன்னை
மணம் சூழ் சோலை உப்பளத்தின்
முன்றில் தோறும் சிறு மடவார்
முத்தம் கொழிக்கும் மறைக் காட்டுக்
குன்ற வில்லியார் மகிழ்ந்த கோயில்
புகுந்து வலம் கொண்டு
சென்று சேர்ந்தார் தென் புகலிக்
கோவும் அரசும் திரு முன்பு. 264
பரவை ஓதக் கழிக்கானல் பாங்கு
நெருங்கும் அப் பதியில்
அரவச் சடை அந்தணனாரை அகில
மறைகள் அர்ச்சனை செய்து
உரவக் கதவம் திருக் காப்புச்
செய்த அந்நாள் முதல் இந்நாள்
வரையும் அடைத்தே நிற்கின்ற மணி
நீள் வாயில் வணங்குவார். 265
தொல்லை வேதம் திருக் காப்புச்
செய்த வாயில் தொடர் அகற்ற
வல்ல அன்பர் அணையாமை மருங்கு
ஓர் வாயில் வழி எய்தி
அல்லல் தீர்ப்பார் தமை அருச்சிப்பார்கள்
தொழுவார் ஆம்படி கண்டு
எல்லை இல்லாப் பெரும் புகழார்
இதனை அங்குக் கேட்டு அறிந்தார். 266
ஆங்கு அப் பரிசை அறிந்து
அருளி ஆழித்தோணி புரத்து அரசர்
ஓங்கு வேதம் அருச்சனை செய்
உம்பர் பிரானை உள் புக்குத்
தேங்கா திருவோம் நேர் இறைஞ்சத்
திருமுன் கதவம் திருக்காப்பு
நீங்கப் பாடும் அப்பர் என
நீடும் திருநாவுக்கு அரசர். 267
உண்ணீர்மையினால் பிள்ளையார் உரைசெய்து
அருள அதனாலே
பண்ணினேரு மொழியாள் என்று எடுத்துப்
பாடப் பயன் துய்ப்பான்
தெண்ணீர் அணிந்தார் திருக்காப்பு நீக்கத்
தாழ்க்கத் திருக் கடைக்காப்பு
எண்ணீர் இரக்கம் ஒன்று இல்லீர்
என்று பாடி இறைஞ்சுதலும். 268
வேத வனத்தின் மெய்ப் பொருளின்
அருளால் விளங்கும் மணிக் கதவம்
காதல் அன்பர் முன்பு திருக்
காப்பு நீங்கக் கலை மொழிக்கு
நாதர் ஞான முனிவருடன்
தொழுது விழுந்தார் ஞாலத்துள்
ஓத ஒலியின் மிக்கு எழுந்த
தும்பர் ஆர்ப்பும் மறை ஒலியும். 269
அன்பர் ஈட்டம் களி சிறப்ப
ஆண்ட அரசும் சிவக் கன்றும்
இன்ப வெள்ளத்து இடை மூழ்கி எழுந்து
உள் புகுந்து தம் பெருமான்
முன்பு பணிந்து போற்றி இசைத்துப்
பரவி மொழி மாலைகள் பாடி
என்பு கரைய உள் உருகி
இறைஞ்சி அரிதில் புறத்து அணைந்தார். 270
புறம்பு நின்று வாகீசர் புனிதர்
அருளால் இக் கதவம்
திறந்தும் அடைத்தும் செல்லும்
நெறி திருந்தமலையாள் திருமுலையில்
கறந்த ஞானம் குழைத்த அமுது
செய்த புகலிக் கவுணியரை
நிறைந்த கதவம் அடைக்கும் வகை
நீரும் பாடி அருளும் என. 271
சண்பை ஆளும் தமிழ் விரகர்
தாமும் திரு நாவுக்கரசர்
பண்பின் மொழிந்த உரை கொண்டு
பதிகம் பாடும் அவ்வளவில்
கண் பொற்பமைந்த நுதல்
காளகண்டர் அருளால் கடிதுடனே
திண் பொன் கதவம் திருக் காப்புச்
செய்தது எடுத்த திருப் பாட்டில். 272
அது கண்டு உடைய பிள்ளையார்
தாமும்ஆண்ட அரசும் மகிழ்ந்து
இது நம் பெருமான் அருள் செய்யப்
பெற்றோம் என்று அங்கு இறைஞ்சிய பின்
பதிகம் நிரம்பப் பிள்ளையார் பாடித்
தொழுது பணிவு உற்றார்
எதிர் பொன் திருவாயிலின் வழக்கம்
என்றும் நிகழ்ச்சி எய்தியது ஆல். 273
அங்கு நிகழ்ந்த அச்செயல் கண்டுஅடியார்
எல்லாம் அதிசயித்துப்
பொங்கு புளகம் எய்திட மெய்
பொழியும் கண்ணீர் பரந்து இழிய
எங்கும் நிகர் ஒன்று இல்லாத
இருவர் பாதம் இறைஞ்சினார்
நங்கள் புகலிப் பெரும் தகையும்
அரசும் மடத்தில் நண்ணிய பின். 274
அரிதில் திறக்கத் தாம் பாட
அடைக்க அவர் பாடிய எளிமை
கருதி நம்பர் திருவுள்ளம் அறியாது
அயர்ந்தேன் எனக் கவன்று
பெரிதும் அஞ்சித் திருமடத்தில் ஒருபால்
அணைந்து பேழ் கணித்து
மருவும் உணர்வில் துயில் கொண்டார்
வாய்மை திறம்பா வாகீசர். 275
மன்னும் செல்வ மறைக்காட்டு மணியின்
பாதம் மனத்தின் கண்
உன்னித் துயிலும் பொழுதின் கண் உமை
ஓர் பாகம் உடையவர் தாம்
பொன்னின் மேனி வெண் நீறு
புனைந்த கோலப் பொலிவினொடும்
துன்னி அவர்க்கு வாய் மூரில்
இருப்போம் தொடர வா என்றார். 276
போதம் நிகழ வா என்று போனார்
என் கொல் எனப் பாடி
ஈது எம்பெருமான் அருளாகில் யானும்
போவேன் என்று எழுந்து
வேத வனத்தைப் புறகிட்டு விரைந்து
போக அவர் முன்னே
ஆதி மூர்த்தி முன் காட்டும்
அவ் வேடத்தால் எழுந்து அருள. 277
சீரார் பதியின் நின்று எழுந்து
செல்லும் திருநாவுக்கு அரசர்
ஆரா அன்பில் ஆரமுதம் உண்ண
எய்தா வாறே போல்
நீரார் சடையார் எழுந்து அருள
நெடிது பின்பு செல்லும் அவர்
பேராளரை முன் தொடர்ந்து அணையப்
பெறுவார் எய்தப் பெற்று இலரால். 278
அன்ன வண்ணம் எழுந்து அருளி
அணித்தே காட்சி கொடுப்பார் போல்
பொன்னின் கோயில் ஒன்று எதிரே
காட்டி அதனுள் புக்கு அருளத்
துன்னும் தொண்டர் அம் மருங்கு
விரைந்து தொடரப் போந்த படி
மன்னும் புகலி வள்ளலார் தாமும்
கேட்டு வந்து அணைந்தார். 279
அழைத்துக் கொடு போந்து அணியார் போல்
காட்டி மறைந்தார் என அயர்ந்து
பிழைத்துச் செவ்வி அறியாதே
திறப்பித் தேனுக்கே அல்லால்
உழைத்தாம் ஒளித்தால் கதவம் தொண்டு
உறைக்கப் பாடி அடைப்பித்த
தழைத்த மொழியார் உப்பாலார் தாம்
இங்கு எப்பால் மறைவது என. 280
மாட நீடு திருப்புகலி மன்னர்
அவர்க்கு மால் அயனும்
நேடி இன்னங் காணாதார் நேரே
காட்சி கொடுத்து அருள
ஆடல் கண்டு பணிந்து ஏத்தி
அரசும் காணக் காட்டுதலும்
பாட அடியார் என்று எடுத்துப்
பரமர் தம்மைப் பாடினார். 281
பாடும் தமிழ் மாலைகள் கொண்டு
பரமர் தாமும் எழுந்து அருள
நீடும் திருவாய்மூர் அடைந்து நிலவும்
கோயில் வலம் செய்து
சூடும் பிறையார் பெரும் தொண்டர்
தொழுது போற்றித் துதி செய்து
நாடும் காதல் வளர்ந்து ஓங்க நயந்து
அந் நகரில் உடன் உறைந்தார். 282
ஆண்ட அரசும் பிள்ளையார் உடனே
அங்கண் இனிது அமர்ந்து
பூண்ட காதல் பொங்கி எழ
வாய் மூர் அடிகள் போற்றி
மூண்ட அன்பின் மொழிமாலை சாத்தி
ஞான முனிவரொடு
மீண்டு வந்து திருமறைக் காடு
எய்தி விமலர் தாள் பணிந்தார். 283
ஆதி முதல்வர் தமைப் பணிந்து அங்கு
ஆன பணி செய்து அமரும் நாள்
சீத மதி வெண் குடை
வளவர் மகளார் தென்னன் தேவியாம்
கோதில் குணத்துப் பாண்டி மா
தேவியார் முன் குலச்சிறையார்
போத விட்டார் சிலர் வந்தார்
புகலி வேந்தர் தமைக் காண. 284
வந்து சிவனார் திருமறைக் காடு
எய்தி மன்னு வேணுபுரி
அந்தணாளர் தமக்கு அறிவித்து அவர்
பால் எய்தி அடி வணங்க
சிந்தை மகிழ்ந்து தீது இன்மை
வினவத் தீங்கும் உளவாமோ
இந்த உலகம் உய வந்தீர் இரு
தாள் நினைவார்க்கு என்று உரைப்பார். 285
சைவ நெறி வைதிகம் நிற்கச்
சழக்கு நெறியைத் தவம் என்னும்
பொய் வல் அமணர் செயல் தன்னைப்
பொறுக்க கில்லோம் எனக் கேட்டே
அவ் வன் தொழிலோர் செயல்
மாற்றி ஆதிசைவ நெறி விளங்கத்
தெய்வ நீறு நினைந்து எழுந்தார் சீர் கொள்
சண்பைத் திரு மறையோர். 286
ஆய பொழுது திரு நாவுக்கரசு
புகலி ஆண் தகைக்குக்
காய மாசு பெருக்கி உழல்
கலதி அமணர் கடுவினை செய்
மாயை சாலம் மிக வல்லார் அவர்
மற்று என்னை முன் செய்த
தீய தொழிலும் பல கெட்டேன்
செல்ல இசையேன் யான் என்றார். 287
என்று கூற எல்லை இலா
நீறு போற்றும் இருவரையும்
சென்று காணும் கருத்து உடையேன்
அங்குத் தீங்கு புரி அமணர்
நின்ற நிலைமை அழிவித்துச் சைவ
நெறி பாரித்து அன்றி
ஒன்றும் செய்யேன் ஆணை உமது
என்றார் உடைய பிள்ளையார். 288
போமா துணிந்து நீர் அங்குப்
போகப் போதா அவ் அமணர்
தீ மாயையினை யானே போய்ச்
சிதைத்து வருகின்றேன் என்ன
ஆமாறு எல்லாம் உரைத்து அவரை
மறுக்க மாட்டது அரசு இருப்பத்
தாம் ஆதரவால் தமிழ் நாட்டில்
போனார் ஞானத் தலைவனார். 289
வேணு புரக்கோன் எழுந்து அருள
விடைகொண்டு இருந்த வாகீசர்
பூணும் அன்பால் மறைக்காட்டில் புனிதர்
தம்மைப் போற்றி இசைத்துப்
பேணி இருந்து அங்கு உறையும்
நாள் பெயர்வார் வீழிமிழலை அமர்
தாணுவின் தன் செய்ய கழல்
மீண்டும் சார நினைக்கின்றார். 290
சோலை மறைக் காட்டு அமர்ந்து அருளும்
சோதி அருள் பெற்று அகன்று போய்
வேலை விடம் உண்டவர் வீழி
மிழலை மீண்டும் செல்வன் என
ஞாலம் நிகழ்ந்த நாகைக் காரோணம்
பிறவும் தாம் பணிந்து
சாலு மொழி வண் தமிழ்ப் பாடித்
தலைவர் மிழலை வந்து அடைந்தார். 291
வீழி மிழலை தனைப் பணிந்து
வேத முதல்வர் தாம் இருப்ப
ஆழி வலம் ஏந்திய அரியால்
ஆகாசத்தின் நின்று இழிந்த
வாழி மலர்ந்த கோயில்தனில்
மன்னும் பொருளை போற்றிசைத்துத்
தாழும் நாளில் பிறபதியும் பணியும்
காதல் தலை நிற்பார். 292
பூவில் பொலியும் புனல் பொன்னிக் கரை
போய்ப் பணிவார் பொற்பு அமைந்த
ஆவுக்கு அருளும் ஆவடு தண்
துறையார் பாதம் அணைந்து இறைஞ்சி
நாவுக் கரசர் ஞானப் போன
கர்க்குச் செம் பொன் ஆயிரமும்
பாவுக்கு அளித்த திறம் போற்றிப்
போந்து பிறவும் பணிகின்றார். 293
செய்ய சடையார் பழையாறை எய்த
அதனில் செல் பொழுதில்
மையல் அமணர் மறைத்த
வடதளியின் மன்னும் சிவனாரைக்
கைகள் கூப்பித் தொழுது அருளக்
கண்டவாற்றால் அமணர்கள் தம்
பொய் கொள் விமானம் எனக் கேட்டுப்
பொறாத உள்ளம் மிகப் புழுங்கி. 294
அந்த விமானம் தனக்கு அருகா
ஆங்கு ஓர் இடத்தின் பாங்கு எய்திக்
கந்தம் மலரும் கடிக் கொன்றை
முடியார் செய்ய கழல் உன்னி
மந்த அமணர் வஞ்சனையால்
மறைத்த வஞ்சம் ஒழித்தருளிப்
பந்தம் கொண்ட குண்டர் திறம்
பாற்றும் என்று பணிந்து இருந்தார். 295
வண்ணம் கண்டு நான் உம்மை
வணங்கி அன்றிப் போகேன் என்று
எண்ண முடிக்கும் வாகீசர்
இருந்தார் அமுது செய்யாதே
அண்ணலாரும் அது உணர்ந்து அங்கு
அரசு தம்மைப் பணிவதற்குத்
திண்ணமாக மன்னனுக்குக் கனவில்
அருளிச் செய்கின்றார். 296
அறிவில் அமணர் நமை மறைப்ப
இருந்தோம் என்று அங்கு அடையாளக்
குறிகள் அறியச் செய்து அருளி
நம்மை அரசு கும்பிடுவான்
நெறியில் அமணர் தமை அழித்து நீக்கிப்
போக்கு என்று அருள் புரிய
செறிவில் அறிவுற்று எழுந்து அவனும்
செங்கை தலைமேல் குவித்து இறைஞ்சி. 297
கண்ட வியப்பு மந்திரிகட்கு இயம்பிக்
கூடக் கடிது எய்தி
அண்டர் பெருமான் அருள் செய்த
அடையாளத்தின் வழி கண்டு
குண்டர் செய்த வஞ்சனையைக் குறித்து
வேந்தன் குலவு பெரும்
தொண்டர் தம்மை அடி வணங்கித்
தொக்க அமணர் தூர் அறுத்தான். 298
ஆனை இனத்தில் துகைப்புண்ட அமண்
ஆயிரமும் மாய்ந்தற் பின்
மேன்மை அரசன் ஈசர்க்கு
விமானம் ஆக்கி விளக்கியபின்
ஆன வழி பாட்டு அர்ச்சனைக்கு
நிபந்தம் எல்லாம் அமைத்து இறைஞ்ச
ஞான அரசும் புக்கு இறைஞ்சி
நாதர் முன்பு போற்றுவார். 299
தலையின் மயிரைப் பறித்து உண்ணும்
சாதி அமணர் மறைத்தாலும்
நிலை இலாதார் நிலைமையினால்
மறைக்க ஒண்ணுமோ என்னும்
விலை இல் வாய்மைக்குறுந் தொகைகள்
விளம்பிப் புறம் போந்து அங்கு அமர்ந்தே
இலை கொள் சூலப் படையார் சேர்
இடங்கள் பிறவும் தொழ அணைவார். 300
திருச்சிற்றம்பலம் 🕉️🙏
ஓம் நமசிவாயம் 🕉️🙏
சிவாய நம ஓம் 🕉️🙏
நற்றுணையாவது நாதன் நாமம் நமச்சிவாயவே🕉️
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
22 shares