A Mohan Raj
1K views 3 days ago
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #சிவன் #திருமுறை #பன்னிரு திருமுறை *"திருமுறை ஓதாய் திருமுறையே தாய்"* தினம் ஒரு திருமுறை அறிவோம் 🙏 *பன்னிரெண்டாம் திருமுறை* *பெரியபுராணம் அல்லது திருத்தொண்டர் புராணம் என்பது சேக்கிழார் பெருமான் அவர்களால் பெருங்காப்பிய இலக்கணங்கள் பலவும் கொண்டதாக இயற்றப்பெற்ற சைவ காப்பியமாகும். சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டத் தொகை எனும் நூலை முதல் நூலாகக் கொண்டும். சுந்தரமூர்த்தி சுவாமிகளைக் காப்பிய தலைவராகக் கொண்டும், அவர் போற்றிய சைவ அடியார்களின் வாழ்க்கை வரலாற்றினையும் இந்நூலில் சேக்கிழார் பெருமான் விவரிக்கிறார்.* *பெரியபுராணம் முதல் காண்டம், இரண்டாம் காண்டமென இரு காண்டமாகவும், முதல் காண்டத்தில் ஐந்து சருக்கங்களையும், இரண்டாம் காண்டத்தில் எட்டுச் சருக்கங்களையும் உடையதாக அமைக்கப்பெற்றுள்ளது. சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டத் தொகையில் இடம்பெற்றுள்ள பாடல்களின் முதல் வரியே சருக்கங்களின் பெயர்களாக உள்ளது.* *காப்பிய தொகுப்பானது கயிலாயத்தில் தொடங்கப்பெற்றுச் சைவ அடியார்களின் வாழ்க்கையை விவரித்து, இறுதியாகக் கயிலாயத்தில் முடிகிறது.* *முதற் காண்டத்தில், திருமலைச் சருக்கம், தில்லை வாழ் அந்தணர் சருக்கம், இலை மலிந்த சருக்கம், மும்மையால் உலகாண்ட சருக்கம், திருநின்ற சருக்கம் என்ற ஐந்து சருக்கங்களும்,* *இரண்டாம் காண்டத்தில், வம்பறா வரிவண்டுச் சருக்கம், வார்கொண்ட வனமுலையாள் சருக்கம், பொய்யடிமையில்லாத புலவர் சருக்கம், கறைக்கண்டன் சருக்கம், கடல்சூழ்ந்த சருக்கம், பத்தராய்ப் பணிவார் சருக்கம், மன்னிய சீர்ச் சருக்கம், வெள்ளானைச் சருக்கம் என்னும் 8 சருக்கங்களும் அமைந்துள்ளன.* *இடைக்கால இலக்கியத்தில் மக்களின் வாழ்க்கை பற்றி வரலாற்றுப் போக்கில் அறிவதற்கு இந்நூல் உதவுகிறது. நான்காயிரத்து இருநூற்று எண்பத்து ஆறு (4286) செய்யுள்களைக் கொண்ட இப்புராணத்தில் ஆளுடையபிள்ளை எனப்படும் திருஞானசம்பந்தரின் வரலாறு மட்டும் 1256 செய்யுட்களால் விரிவாகக் கூறப்பட்டுள்ளதால் "பிள்ளை பாதி; புராணம் பாதி" என்கிற பழமொழி ஏற்பட்டது.* இறைவனின் திருநாமம் - சிற்சபை: ஆனந்தநடராஜ மூர்த்தி, மூலஸ்தானம்: ஸ்ரீ மூலநாதர் இறைவி - சிற்சபை: சிவகாமசுந்தரி, மூலஸ்தானம்: உமாபார்வதி அமைவிடம் : கோயில் (சிதம்பரம், தில்லை) சோழநாடு காவிரி வடகரைத் ஸ்தலம் பதிகம் பற்றிய சுருக்கமான *பன்னிரெண்டாம் திருமுறையில் இருந்து சேக்கிழார் பெருமான் அருளிய திருத்தொண்டர் புராணம் - திருநின்ற சருக்கம் - திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்* திருநின்ற சருக்கத்தில் திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம் என்பது சேக்கிழார் பெருமானால் அருளப்பட்ட பெரியபுராணம் நூலில் இடம்பெறும் மிக முக்கியமான புராணங்களில் ஒன்றாகும். இது அப்பர் என்று அழைக்கப்படும் திருநாவுக்கரசு நாயனாரின் புகழையும், அவரது இறைத் தொண்டுகளையும் விவரிக்கிறது. *இந்த புராணத்தில் கிட்டத்தட்ட 500 பாடல்கள் வரை உள்ளதால் அன்பர்கள் படித்து புரிந்து கொள்ள வசதியாக அடுத்த சில நாட்களுக்கு தினமும் 50 பாடல்கள் வீதம் பகிர்ந்து கொள்கிறேன்.*🙏 பாடல் வரிகள் : *பன்னிரெண்டாம் திருமுறையில் இருந்து சேக்கிழார் பெருமான் அருளிய திருத்தொண்டர் புராணம் - திருநின்ற சருக்கம் - திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்* கொச்சகக் கலிப்பா திருநாவுக்கு அரசுவளர் திருத்தொண்டின் நெறிவாழ வருஞானத் தவமுனிவர் வாகீசர் வாய்மைதிகழ் பெருநாமச் சீர்பரவல் உறுகின்றேன் பேருலகில் ஒருநாவுக்கு உரைசெய்ய ஒண்ணாமை உணராதேன். 1 தொன்மை முறை வரு மண்ணின் துகள் அன்றித் துகள் இல்லா நன்மை நிலை ஒழுக்கத்து நலம் சிறந்த குடி மல்கிச் சென்னி மதி புனையவளர் மணி மாடச் செழும் பதிகள் மன்னி நிறைந்து உளது திரு முனைப்பாடி வளநாடு. 2 புனப் பண்ணை மணியினோடும் புறவின் நறும் புதுமலரின் கனப்பெண்ணில் திரை சுமந்து கரை மருங்கு பெரும் பகட்டேர் இனப் பண்ணை உழும் பண்ணை எறிந்து உலவி எவ்வுலகும் வனப்பெண்ண வரும் பெண்ணை மா நதி பாய் வளம் பெருகும். 3 காலெல்லாம் தகட்டு வரால் கரும்பு எல்லாம் கண் பொழி தேன் பாலெல்லாம் கதிர்ச் சாலி பரப்பு எல்லாம் குலைக் கமுகு சாலெல்லாம் தரள நிரை தடம் எல்லாம் செங்கழுநீர் மேலெல்லா ம் அகில் தூபம் விருந்து எல்லாம் திருந்து மனை. 4 கடைஞர் மிடை வயல் குறைத்த கரும்பு குறை பொழி கொழும் சாறு இடை தொடுத்த தேன் கிழிய இழிந்து ஒழுகு நீத்தம் உடன் புடை பரந்து ஞிமிறொலிப்பப் புதுப் புனல் போல் மடை உடைப்ப உடை மடையக் கரும்படு கட்டியின் அடைப்ப ஊர்கள் தொறும். 5 கரும் கதலிப் பெருங்குலைகள் களிற்றுக் கைம் முகம் காட்ட மருங்கு வளர் கதிர்ச் செந்நெல் வயப் புரவி முகம் காட்டப் பெருஞ்சகடு தேர் காட்ட வினைஞர் ஆர்ப்பொலி பிறங்க நெருங்கிய சாதுரங்க பல நிகர்பனவாம் நிறை மருதம். 6 நறையாற்றுங் கமுகு நவ மணிக் கழுத்தின் உடன் கூந்தல் பொறை ஆற்றா மகளிர் எனப் புறம்பு அலை தண்டலை வேலித் துறை ஆற்ற மணி வண்ணச் சுரும்பு இரைக்கும் பெரும் பண்ணை நிறை ஆற்று நீர்க் கொழுந்து படர்ந்தேறும் நிலைமையதால். 7 மரு மேவு மலர் மேய மா கடலினுட் படியும் உரு மேகம் என மண்டி உகைத்த கரும் கன்று போல் வரு மேனிச் செங்கண் வரால் மடி முட்டப் பால் சொரியும் கரு மேதி தனைக் கொண்டு கரை புரள்வ திரை வாவி. 8 மொய்யளி சூழ் நிரைநீல முழு வலயங்களின் அலையச் செய்ய தளிர் நறு விரலில் செழு முகையின் நகம் சிறப்ப மெய்யொளியின் நிழல் காணும் ஆடி என வெண் மதியை வைய மகள் கை அணைத்தால் போல் உயர்வ மலர்ச் சோலை. 9 எயில் குலவும் வளம் பதிகள் எங்கும் மணம் தங்கும் வயல் பயிர்க் கண்வியல் இடங்கள் பல பரந்து உயர் நெற் கூடுகளும் வெயில் கதிர்மென் குழை மகளிர் விரவிய மாடமும் மேவி மயில் குலமும் முகில் குலமும் மாறாட மருங்கு ஆடும். 10 மறம் தரு தீ நெறி மாற மணிகண்டர் வாய்மை நெறி அறம் தரு நாவுக்கரசும் ஆலால சுந்தரரும் பிறந்து அருள உளதானால் நம் அளவோ பேர் உலகில் சிறந்த திருமுனைப் பாடித் திறம் பாடும் சீர்ப் பாடு. 11 இவ் வகைய திரு நாட்டில் எனைப் பல ஊர்களும் என்றும் மெய் வளங்கள் ஓங்க வரும் மேன்மையன ஆங்கு அவற்றுள் சைவ நெறி ஏழ் உலகும் பாலிக்கும் தன்மையினால் தெய்வ நெறிச் சிவம் பெருக்கும் திருவாமூர் திருவாமூர். 12 ஆங்கு வன முலைகள் சுமந்து அணங்குவன மகளிர் இடை ஏங்குவன நூபுரங்கள் இரங்குவன மணிக் காஞ்சி ஓங்குவன மாட நிரை ஒழுகுவன வழுவில் அறம் நீங்குவன தீங்கு நெறி நெருங்குவன பெரும் குடிகள். 13 மலர் நீலம் வயல் காட்டும் மைஞ் ஞீலம் மதி காட்டும் அலர் நீடு மறு காட்டும் அணி ஊசல் பல காட்டும் புலர் நீலம் இருள் காட்டும் பொழுது உழவர் ஒலி காட்டும் கல நீடு மனை காட்டும் கரை காட்டாப் பெருவளங்கள். 14 தலத்தின் கண் விளங்கிய அத் தனிப் பதியில் அனைத்து வித நலத்தின் கண் வழுவாத நடை மரபில் குடி நாப்பண் விலங்கின் மனை ஒழுக்கத்தின் மேதக்க நிலைவேளாண் குலத்தின் கண் வரும் பெருமைக் குறுக்கையர் தம் குடி விளங்கும். 15 அக் குடியின் மேல் தோன்றலாய பெரும் தன்மையினார் மிக்க மனை அறம் புரிந்து விருந்து அளிக்கும் மேன்மையினார் ஒக்கல் வளர் பெரும் சிறப்பின் உளர் ஆனார் உளர் ஆனார் திக்கு நிலவும் பெருமை திகழ வரும் புகழனார். 16 புகழனார் தமக்கு உரிமைப் பொருவில் குலக்குடியின் கண் மகிழவரு மணம் புணர்ந்த மாதினியார் மணி வயிற்றில் நிகழும் மலர்ச் செங்கமல நிரை இதழின் அகவயினில் திகழ வருந் திரு அனைய திலகவதியார் பிறந்தார். 17 திலகவதியார் பிறந்து சில முறை ஆண்டு அகன்றதன் பின் அலகில் கலைத் துறை தழைப்ப அரும் தவத்தோர் நெறிவாழ உலகில் வரும் இருள் நீக்கி ஒளி விளங்கு கதிர் போல் பின் மலரும் மருள் நீக்கியார் வந்து அவதாரம் செய்தார். 18 மாதினியார் திரு வயிற்றின் மன்னிய சீர்ப் புகழனார் காதலனார் உதித்த தற்பின் கடன் முறைமை மங்கலங்கள் மேதகு நல் வினை சிறப்ப விரும்பிய பாராட்டினுடன் ஏதமில் பல் கிளை போற்ற இளங் குழவிப் பதம் கடந்தார். 19 மருள் நீக்கியார் சென்னி மயிர் நீக்கும் மணவினையும் தெருண் நீர்ப்பன் மாந்தர் எலாம் மகிழ் சிறப்பச் செய்து அதற்பின் பொருள் நீத்தம் கொள வீசிப் புலன் கொளுவ மன முகிழ்த்த சுருள் நீக்கி மலர் விக்கும் கலை பயிலத் தொடங்கு வித்தார். 20 தந்தையார் களி மகிழ்ச்சி தலை சிறக்க முறைமையினால் சிந்தை மலர்ந்து எழும் உணர்வில் செழும் கலையின் திறங்கள் எல்லாம் முந்தை முறைமையில் பயின்று முதிர அறிவு எதிரும் வகை மைந்தனார் மறு ஒழித்த இளம் பிறை போல் வளர் கின்றார். 21 அந்நாளில் திலகவதியாருக்கு ஆண்டு ஆறு இரண்டின் முன்னாக ஒத்த குல முதல் வேளாண் குடித் தலைவர் மின்னார் செஞ்சடை அண்ணல் மெய் அடிமை விருப்புடையார் பொன்னாரும் மணி மௌலிப் புரவலன் பால் அருள் உடையார். 22 ஆண் தகைமைத் தொழிலின் கண் அடல் அரியேறு என உள்ளார் காண் தகைய பெருவனப்பில் கலிப்பகையார் எனும் பெயரார் பூண்ட கொடைப் புகழனார் பால் பொருவின் மகள் கொள்ள வேண்டி எழுங் காதலினால் மேலோரைச் செலவிட்டார். 23 அணங்கு அனைய திலகவதியார் தம்மை ஆங்கு அவர்க்கு மணம் பேசி வந்தவரும் வந்தபடி அறிவிப்பக் குணம் பேசிக் குலம் பேசிக் கோதில் சீர்ப் புகழனார் பணம் கொள் அரவு அகல் அல்குல் பைந் தொடியை மணம் நேர்ந்தார். 24 கன்னித் திருத் தாதையார் மணம் இசைவு கலிப்பகையார் முன் அணைந்தார் அறிவிப்ப வதுவை வினை முடிப்பதன் முன் மன்னவற்கு வடபுலத்து ஓர் மாறு ஏற்க மற்றவர்மேல் அன்னவர்க்கு விடை கொடுத்தான் அவ்வினை மேல் அவர் அகன்றார். 25 வேந்தற்கு உற்று உழி வினை மேல் வெஞ்சமத்தில் விடை கொண்டு போந்த வரும் பொரு படையும் உடன் கொண்டு சில நாளில் காய்ந்த சினப் பகைப் புலத்தைக் கலந்து கடும் சமர்க் கடலை நீந்துவார் நெடு நாள்கள் நிறை வெம் போர்த் துறை விளைத்தார். 26 ஆய நாள் இடை இப்பால் அணங்கு அனையாள் தனைப் பயந்த தூயகுலப் புகழனார் தொன்று தொடு நிலையாமை மேய வினைப் பயத்தாலே இவ் உலகை விட்டு அகலத் தீய அரும் பிணி உழந்து விண் உலகில் சென்று அடைந்தார். 27 மற்றவர் தாம் உயிர் நீப்ப மனைவியார் மாதினியார் சுற்றம் உடன் மக்களையும் துகளாகவே நீத்துப் பெற்றிமையால் உடன் என்றும் பிரியாத உலகு எய்தும் கற்பு நெறி வழுவாமல் கணவனார் உடன் சென்றார். 28 தாதையாரும் பயந்த தாயாரும் இறந்த அதன் பின் மாதரார் திலகவதியாரும் அவர் பின் வந்த காதலனார் மருண் நீக்கியாரும் மனக் கவலையினால் பேது உறு நல் சுற்றமொடும் பெரும் துயரில் அழுந்தினார். 29 ஒருவாறு பெரும் கிளைஞர் மனம் தேற்றத் துயர் ஒழிந்து பெரு வானம் அடைந்தவர்க்குச் செய் கடன்கள் பெருக்கினார் மருவார்மேல் மன்னவற்காய் மலையப் போம் கலிப்பகையார் பொருவாரும் போர்க் களத்தில் உயிர் கொடுத்துப் புகழ் கொண்டார். 30 வெம் முனை மேல் கலிப்பகையார் வேல் வேந்தன் ஏவப் போய் அம் முனையில் பகை முருக்கி அமர் உலகம் ஆள்வதற்குத் தம் உடைய கடன் கழித்த பெரு வார்த்தை தலம் சாற்றச் செம்மலர் மேல் திரு அனைய திலகவதியார் கேட்டார். 31 எந்தையும் எம் அனையும் அவர்க்கு எனக் கொடுக்க இசைந்தார்கள் அந்த முறையால் அவர்க்கே உரியது நான் ஆதலினால் இந்த உயிர் அவர் உயிரோடு இசைவிப்பன் எனத் துணிய வந்தவர் தம் அடி இணை மேல் மருண் நீக்கியார் விழுந்தார். 32 அந் நிலையில் மிகப் புலம்பி அன்னையும் அத்தனும் அகன்ற பின்னையும் நான் உமை வணங்கப் பெறுதலின் உயிர் தரித்தேன் என்னை இனித் தனிக் கைவிட்டு ஏகுவீர் எனில் யானும் முன்னம் உயிர் நீப்பன் என மொழிந்து இடரின் அழுந்தினார். 33 தம்பியார் உளர் ஆக வேண்டும் என வைத்த தயா உம்பர் உலகு அணைய உறு நிலை விலக்க உயிர் தாங்கி அம் பொன் மணி நூல் தாங்காது அனைத்து உயிர்க்கும் அருள் தாங்கி இம்பர் மனைத் தவம் புரிந்து திலகவதியார் இருந்தார். 34 மாசின் மனத் துயர் ஒழிய மருண் நீக்கியார் நிரம்பித் தேச நெறி நிலையாமை கண்டு அறங்கள் செய்வாராய்க் காசினி மேல் புகழ் விளங்க நிதி அளித்துக் கருணையினால் ஆசில் அறச் சாலைகளும் தண்ணீர்ப் பந்தரும் அமைப்பார். 35 கா வளர்த்தும் குளம் தொட்டும் கடப்பாடு வழுவாமல் மேவினர்க்கு வேண்டுவன மகிழ்ந்து அளித்தும் விருந்து அளித்தும் நாவலர்க்கு வளம் பெருக நல்கியும் நால் நிலத்து உள்ளோர் யாவர்க்கும் தவிராத ஈகை வினைத் துறை நின்றார். 36 நில்லாத உலகு இயல்பு கண்டு நிலையா வாழ்க்கை அல்லேன் என்று அறத் துறந்து சமயங்களான வற்றின் நல்லாறு தெரிந்துணர நம்பர் அருளாமை யினால் கொல்லாமை மறைந்து உறையும் அமண் சமயம் குறுகுவார். 37 பாடலி புத்திரம் என்னும் பதி அணைந்து சமண் பள்ளி மாடணைந்தார் வல்லமணர் மருங்கு அணைந்து மற்றவர்க்கு வீடு அறியும் நெறி இதுவே என மெய் போல் தங்களுடன் கூடவரும் உணர்வு கொளக் குறி பலவும் கொளுவினார். 38 அங்கு அவரும் அமண் சமயத்து அரும் கலை நூல் ஆன எலாம் பொங்கும் உணர்வுறப் பயின்றே அந் நெறியில் புலன் சிறப்பத் துங்க முழு உடல் சமணர் சூழ்ந்து மகிழ்வார் அவர்க்குத் தங்களின் மேலாம் தரும சேனர் எனும் பெயர் கொடுத்தார். 39 அத்துறையின் மீக் கூரும் அமைதியினால் அகல் இடத்தில் சித்த நிலை அறியாத தேரரையும் வாதின் கண் உய்த்த உணர்வினில் வென்றே உலகின் கண் ஒளி உடைய வித்தகராய் அமண் சமயத் தலைமையினில் மேம் பட்டார். 40 வேறு - ஈர் அசையும் பயின்று வந்த கொச்சகக் கலிப்பா அந் நெறியின் மிக்கார் அவர் ஒழுக ஆன்ற தவச் செந்நெறியின் வைகும் திலகவதியார் தாமும் தொன்னெறியின் சுற்றத் தொடர்பு ஒழியத் தூய சிவ நன்னெறியே சேர்வதற்கு நாதன் தாள் நண்ணுவார். 41 பேராத பாசப் பிணிப்பு ஒழியப் பிஞ்ஞகன் பால் ஆராத அன்பு பெற ஆதரித்த அம் மடவார் நீரார் கெடில வட நீள் கரையில் நீடு பெரும் சீரார் திருவதிகை வீரட்டானம் சேர்ந்தார். 42 சென்று திரு வீரட்டானத்து இருந்த செம் பவளக் குன்றை அடி பணிந்து கோதில் சிவ சின்னம் அன்று முதல் தாங்கி ஆர்வம் உறத் தம் கையால் துன்று திருப் பணிகள் செய்யத் தொடங்கினார். 43 வேறு - கொச்சகக் கலிப்பா புலர்வதன் முன் திருவலகு பணி மாறிப் புனி அகன்ற நலம் மலி ஆன் சாணத்தால் நன்கு திரு மெழுக்கிட்டு மலர் கொய்து கொடு வந்து மாலைகளும் தொடுத்து அமைத்துப் பலர் புகழும் பண்பினால் திருப்பணிகள் பல செய்தார். 44 நாளும் மிகும் பணி செய்து குறைந்து அடையும் நன்னாளில் கேளுறும் அன்புற ஒழுகும் கேண்மையினார் பின் பிறந்தார் கோளுறு தீவினை முந்தப் பர சமயம் குறித்து அதற்கு மூளும் மனக் கவலையினால் முற்ற வரும் துயர் உழந்து. 45 தூண்டு தவ விளக்கு அனையார் சுடர் ஒளியைத் தொழுது என்னை ஆண்டு அருளும் நீராகில் அடியேன் பின் வந்தவனை ஈண்டு வினைப் பர சமயக் குழி நின்றும் எடுத்து ஆள வேண்டும் எனப் பல முறையும் விண்ணப்பம் செய்தனரால். 46 தவம் என்று பாய் இடுக்கி தலை பறித்து நின்று உண்ணும் அவம் ஒன்று நெறி வீழ்வான் வீழாமே அருளும் எனச் சிவம் ஒன்று நெறி நின்ற திலகவதியார் பரவப் பவம் ஒன்றும் வினை தீர்ப்பார் திரு உள்ளம் பற்றுவார். 47 மன்னு தபோ தனியார்க்குக் கனவின் கண் மழ விடையார் உன்னுடைய மனக் கவலை ஒழி நீ உன் உடன் பிறந்தான் முன்னமே முனியாகி எனை அடையத் தவம் முயன்றான் அன்னவனை இனிச் சூலை மடுத்து ஆள்வம் என அருளி. 48 பண்டு புரி நல் தவத்துப் பழுதின் அளவில் இறை வழுவும் தொண்டரை ஆளத் தொடங்கும் சூலை வேதனை தன்னைக் கண் தரு நெற்றியர் அருளக் கடும் கனல் போல் அடும் கொடிய மண்டு பெரும் சூலை அவர் வயிற்றின் இடைப் புக்கதால். 49 அடைவில் அமண் புரி தரும சேனர் வயிற்று அடையும் அது வட அனலும் கொடு விடமும் வச்சிரவும் பிறவுமாம் கொடிய எலாம் ஒன்றாகும் எனக் குடரின் அகம் குடையப் படர் உழந்து நடுங்கி அமண் பாழியறை இடை விழுந்தார். 50 திருச்சிற்றம்பலம் 🕉️🙏 ஓம் நமசிவாயம் 🕉️🙏 சிவாய நம ஓம் 🕉️🙏 நற்றுணையாவது நாதன் நாமம் நமச்சிவாயவே🕉️ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
8 shares

More like this