*🔸நற்செய்தி சி #இன்றைய வேத வசனம் #இன்றைய இறைவார்த்தை #இன்றைய வசனம் ந்தனை* *"மனித ஞானமும் - கடவுளின் ஞானமும்"* எல்லாராலும் ஞானி என்று கருதப்பட்ட ஒருவர் இருந்தார். அவரைப் பார்ப்பதற்காக பலரும் பல்வேறு இடங்களிலிருந்தும் வந்து போனார்கள். ஒருநாள் அவரைப் பார்ப்பதற்காகப் பெருந்திரளான மக்கள் வந்திருந்தார்கள். அவர்கள் அவரை சூழ்ந்துகொண்டு, தங்களுக்கு ஏதாவது போதிக்குமாறு அவரிடம் கேட்டார்கள். அவர்கள் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் அவர், தனக்கு இடப்பக்கம் அமர்ந்திருந்தவர்களைப் பார்த்தார். பின்னர் அவர் வலப்பக்கம் அமர்ந்திருந்தவர்களைப் பார்த்தார். சிறிது நேரம் இடைவெளிக்குப் பின்பு அவர் தனக்குப் பின்னால் அமர்ந்திருந்தவர்களையும், தனக்கு முன்னால் அமர்ந்திருந்தவர்களையும் பார்த்தார். மீண்டுமாக சிறிதுநேரம் அமைதி நிலவியது பின்னர் அவர் மேலயும் கீழேயும் பார்த்துவிட்டு அமைதியாகிவிட்டார். திரண்டிருந்த மக்கள் அனைவரும் அவரது ஒவ்வொரு செயலையும் பார்த்துவிட்டு, ‘என்னவொரு ஞான நிறைந்த போதனை’ என்று வியந்து, கைகளைத் தட்டி ஆர்ப்பரித்தார்கள். நீதிமொழிகள் நூல் சொல்வது போல், பேசாதிருந்தால் மூடனும் ஞானமுள்ளவன் (நீமொ 17: 28) எனக் கருதப்படலாம். ஆனால், அவன் உண்மையில் ஞானமுள்ளவன் கிடையாது. இன்றைய இறைவார்த்தை யார் ஞானமுள்ளவர் என்ற சிந்தனையைத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம். *திருவிவிலியப் பின்னணி:* இன்றைக்குப் பலரும் தங்களை ‘ஞானி’ என நினைத்துக் கொள்கின்றார்கள், அல்லது காட்டிக் கொள்கின்றார்கள். உண்மையில் அவர்கள் ஞானியா? என்பது மிகப்பெரிய கேள்வி. “தொங்கவிடப்பட்டவன் கடவுளால் சபிக்கப்பட்டவன்” (இச 21: 23) என்ற இறைவார்த்தையின் அடிப்படையில், சிலுவை உலகினரின் பார்வையில் மடமையாகக் கருதப்பட்டது. ஆனால், இன்றைய முதல் வாசகத்தில் பவுல், “மனித ஞானத்தைவிடக் கடவுளின் மடமை ஞானம் மிக்கது; மனித வலிமையைவிட அவருடைய வலுவின்மை வலிமை மிக்கது” என்கிறார். எனில், சிலுவையில் அறையைப்பட்ட கிறிஸ்துவே கடவுளின் ஞானமாக வல்லமையாக இருக்கின்றார். இதில் எந்தவொரு மாற்றுக்கருத்தும் இல்லை. இந்த இறைஞானத்தை ஒருவர் பெறவேண்டும் என்றால், அவர் இயேசுவின்மீது நம்பிக்கை வைக்க வேண்டும். அவர்மீது நம்பிக்கை வைக்காமல், இறைஞானத்தைப் பெறுவது சாத்தியமில்லாது. இன்றைய நற்செய்தி வாசகம் இறைஞானத்தோடு செயல்பட்டால் விண்ணரசில் நுழையலாம், விண்ணக விருந்தில் கலந்து கொள்ளலாம் என்ற சிந்தனையைத் தருகின்றது. பொதுவாக யூதர்களின் திருமண நிகழ்வு மணமகள் வீட்டிலிருந்து தொடங்கும். மணமகன் மணமகளின் வீட்டிற்கு வந்தபிறகு (அது எந்த நேரமாகவும் இருக்கலாம்) பவனி தொடங்கி மணமகன் வீட்டை அடையும். அதன்பிறகு திருமண விருந்து தொடங்கும். இதற்காக மணமகளின் தோழிகள் ஆயத்தமாய் இருக்க வேண்டும். நற்செய்தியில் இயேசு சொல்லும் உவமையில் வரும் ஐந்து தோழிகள் அறிவிலிகளாக இருக்கின்றார்கள். இவர்கள் இயேசுவின்மீது நம்பிக்கை கொள்ளாதவர்களுக்கு, அவரது வருகைக்கு ஆயத்தம் இல்லாமல் இருப்பவர்களுக்கு அடையாளம். முன்மதியுடைய தோழிகளோ ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டவர்களுக்கு, அவருடைய வருகைக்காக ஆயத்தமாக இருந்தவர்களுக்கு அடையாளம். யாரெல்லாம் இயேசுவின்மீது நம்பிக்கை கொண்டிருக்கின்றார்களோ, அவர்களுக்கு அவர் இறைஞானத்தைத் தருகின்றார். அதைக் கொண்டு அவர்கள் முன்மதியோடு செயல்பட்டு, ஆண்டவரின் அரசில் நுழைகின்றார்கள். எனவே, இறைஞானம் நமக்குக் கிடைக்க இயேசுவின்மீது நம்பிக்கை கொண்டு வாழ்வோம். *சிந்தனைக்கு:*  ஆண்டவரைப் பற்றிய அச்சமே ஞானத்தின் தொடக்கம்  உலக அறிவு கடவுளுக்கு முன்பு ஒன்றுமே இல்லை.  கடவுளுக்கு முன்பாகத் தாழ்த்தி கொள்வோரைக் கடவுள் தனது அருளால் உயர்த்துவார். *இறைவாக்கு:* ‘என்னைப் பொறுத்தமட்டில் என் ஆண்டவராம் கிறிஸ்து இயேசுவைப் பற்றிய அறிவே நான் பெறும் ஒப்பற்ற செல்வம்’ (பிலி 3: 8) என்பார் புனித பவுல். எனவே, இயேசுவைப் பற்றிய அறிவே ஒப்பற்ற செல்வம் என உணர்ந்து வாழ்ந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
16 shares

More like this