D Muthu Prakash, Kanchipuram 💐
கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை 12ஆம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 23.06.2026.
அய்யா துணை
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
அகிலம்:
========
நாரத மாமுனியும் நாட்டில்பே யத்தனையும்
காரண வைகுண்டர் காலில்வந்து தெண்டனிட்டார்
தெண்டனிட்ட போது சொல்வார் முனியுடனே
பண்டா கமப்படியே பசாசையெல் லாமெரிக்க
என்மனதி லுற்றேன் இங்கேவந்து வாய்த்ததென்று
நன்முனியே பேயை நகன்றிடாக் காருமென்றார்
.
விளக்கம்:
=========
நாட்டில் உள்ள பேய்கள் அத்தனையும், நாரதரும், எல்லாரும் விரும்பும் வைகுண்டரின் பாதங்களில் விழுந்து வணங்கினர். இவ்வாறு பேய்களும் நாரதரும் தம்மை வணங்கியதைக் கண்ட வைகுண்டர், நாரத முனியை நோக்கி, நாரத முனிவனே, முந்தைய ஆகமப்படி இந்தப் பிசாசுகளை எல்லாம் எரித்திட மனதில் எண்ணி உள்ளேன். அதற்கு ஏற்ப அவை இங்கு வந்து மாட்டிக் கொண்டன. இனி அவை தப்பித்துப் போகாவண்ணம் நீ காத்துக் கொள்வாயாக என்று கட்டளை பிறப்பித்தார்.
.
.
அகிலம்:
========
முன்னேநீ பேய்க்கு முதல்யா மியங்கொடுத்து
இந்நேரங் கூட்டி என்னிடத்தில் கொண்டுவந்தாய்
வந்தது நல்லதுதான் வாய்த்தமுனி யேயிப்போ
இந்தாப் பேய்க்கணக்கை எடுத்துரைக்கேன் கேட்டிருநீ
.
விளக்கம்:
=========
மீண்டும் தொடர்ந்து முனிவரை நோக்கி, முனிவனே, முன்பு நீ இப்பேய்களுக்குப் பிணை கொடுத்து அதன்படி இந்நேரம் எல்லாரையும் இங்குக் கூட்டி கொண்டு வந்துள்ளாய். இவ்வாறு வந்தது மிகவும் சாதகமான காரியம் ஆகும். முனிவனே, இப்பொழுது இந்தப் பேய்க்கணக்கைப் பற்றி எடுத்து உரைக்கிறேன். கேட்பாயாக.
.
.
அகிலம்:
========
பொல்லாக் கலியன் பிறந்தநா ளன்றுமுதல்
எல்லாம் பேய்களுக்கு ஈந்தவர மானதினால்
நீசன் கொடுமை நீணிலமெல் லாம்பரந்து
தேசச் சிறப்புச் சிதறிக் குலைந்ததெல்லாம்
வாயநா ராயணரும் வைகுண்ட மாய்ப்பிறந்து
ஞாய நடுகேட்டு நாட்டுக்குற்றந் தீர்த்து
ஆகாத்த தெல்லாம் அழித்துநர கத்திலிட்டு
வாகாய் நரக வாசல் தனைப்பூட்டி
நல்லோர்க்கு நாலு வரங்கொடுத் தேயெழுப்பி
பொல்லாரை நரகில் போட்டுக் கதவடைத்து
வல்லோரைச் சொல்லொன்றுள் வைந்த ரரசாளப்
பிறந்துபூ மிதனிலே பேறாக வந்தவுடன்
இறந்ததுகாண் பேய்கள் இவர்க்காகாப் பேர்களெல்லாம்
என்று பேய்களுக்கு ஈந்துவரம் கொடுத்ததெல்லாம்
அன்று பேய்க்கணக்கு வாசித்தா ராதியுமே
.
விளக்கம்:
=========
பொல்லாத கலியன் பிறந்த நாளிலிருந்து ஈசர் பேய்களுக்குக் கொடுத்த வரத்தின் சக்தியினாலும், நீசனுக்குக் கொடுத்த வரங்களாலும், இந்த உலகங்கள் எல்லாம் கொடுமை பரந்து இந்த நாட்டின் சிறப்புகள் எல்லாம் சீர் குலைந்து மக்கள் துன்புறுகின்றனர். எனவே, ஆயர் நாராயணர் வைகுண்டராய்ப் பிறந்து நாட்டில் நடக்கும் குற்றங்களைத் தெளிவாகக் கேட்டு, நியாய நடுத்தீர்ப்பு செய்து தீய குணம் உடையவற்றையும், நாட்டுக்கு ஆகாதவற்றையும் அழித்து, நரகத்தில் கள்ளிக் கவனமாக நரக வாசலைப் பூட்டி, நல்லோர்க்கு நான்கு ஞானப்பூமிகளைக் கடப்பதற்குரிய ஞான உபதேசமும், கொடுத்து, ஆத்மீக விழிப்புற்று எழச் செய்து, வல்லவர்களைத் தமது ஒரு சொல்லுக்குள் அரசாள வைகுண்டர் பிறந்து பூமியில் வந்ததும், பேயக்ளும் வைகுண்டருக்கு ஆகாதவர்களும் அழிந்து விடுவர் என்று பேய்களுக்கு ஈசர் வரம் கொடுத்த பேய்கணக்கை வைகுண்டர் வாசித்தார்.
.
.
அகிலம்:
========
இம்மணியி லித்திவசம் ஈந்தவர மல்லாது
எம்மணியு மிப்பேய்க்கு எள்ளளவு மில்லையென்றார்
உண்டோகாண் பேய்க்கு ஒருமணிதா னானாலும்
கண்டோ முனியே கணக்குண்டோ சொல்லுஇனி
.
விளக்கம்:
=========
பிறகு நாரதரை நோக்கி, நாரதரே, இன்றைக்கு இந்த மணிவரைதான் அவர்களுக்குக் கொடுத்த வரம் நீடிக்குமே அல்லாது இதற்கு மேல் சிறு மணித்துளி நேரம்கூட இவை வாழுவதற்கு விதியில்லை. முனிவனே, அப்படி பேய்கள் வாழுவதற்கு ஏதாவது விதிக்கணக்கு இருக்குமானால் இனி நீ எடுத்துரைப்பாயாக என்று வைகுண்டர் கூறினார்.
.
.
அகிலம்:
========
கேட்டு முனியும் கெஞ்சிமிக வாய்புதைத்து
நாட்டுக் குடைய நாரா யணருரைத்தால்
எவர்தா னெதிர்த்து இல்லையென்று சொல்லுவது
மூவரு மங்கே ஒடுங்கி யிருக்கையிலே
அல்லாமல் நீசன் அழிவாகு முன்னதியாய்
எல்லாமவ னோடுளது ஏலமே சாகணுமே
.
விளக்கம்:
=========
இதைக் கவனமாகக் கேட்ட நாரதர், பேசமுடியாது வாய் புதைத்துப் பேய்களுக்காகக் கெஞ்சியவண்ணம் நின்று கொண்டு வைகுண்டரைப் பணிந்து, சுவாமி, நீவிர் சொல்லும் கணக்கை அப்படி இல்லை என்று எவராவது எதிர்த்துப் பேச முடியுமா? முடியாது. மூவரும்கூட வைகுண்டரிடம் எதிர்த்துப் பேச முடியாமல் ஒதுங்கி இருக்கிறார்கள். அப்படியிருக்க நாங்கள் என்ன செய்ய முடியும்? அதுமட்டுமல்லாமல், கலிநீசன் அழிவதற்கு முன்னால் கலியனோடு உள்ள ஏனைய தீயவை எல்லாம் அழிய வேண்டும் அல்லவா?
.
.
அகிலம்:
========
நீசன் வலுவெல்லாம் நேர்முன்னே தானறுத்து
ஓசையொன்றுக் குள்ளே உகங்கேட்க நிச்சயித்தீர்
நன்றிகெட்ட நீசன்வேர் நாள்வழியே நீரறுத்து
ஒன்று விளிக்குள் உகமழித்துத் தீர்ப்புசெய்து
நல்லோரை யெழுப்பி நகரொருசொல் லுள்ளான
வல்லோராய் நீரும் வரம்பெற்ற மாதவமே
ஆனதினால் பேய்க ள் அந்நீசக் குலமதினால்
வானக் கனலில் மாளுமிக் காலமிதாம்
.
விளக்கம்:
=========
நீசனுடைய சக்தியை எல்லாம் அவனுக்கு எதிர்த்து நிற்கச் செய்து, அவனை அவனால் அழியச் செய்து ஒரு சொல்லுக்கு கீழ் ஆட்சி புரிந்து, கலியுகக் குற்றம் கேட்க நிச்சயித்துள்ளீர். நன்றி கெட்ட நீசனைச் சிறிது சிறிதாக அழியச் செய்து ஒரு சொல்லுக்குள் கலியுகத்தை அழித்து நடுத்தீர்ப்பு செய்து, நல்லோரை ஆத்மீக விழிப்புற்று எழச் செய்து ஒரு சொல்லுக்குள் ஆட்சி புரிய மிகுந்த சக்தியுடைய வரம் பெற்று வந்த மாதவப்பொருளே, பேய்களும் நீசக்குலம் ஆனதால் வானளவு உயர்வாக வளரும் அக்கினியில் அவை விழுந்து இறக்கக் கூடிய காலம் இது ஆகும் என்று நாரத முனிவர் உரைத்தார்.
.
.
அகிலம்:
========
என்று முனியுரைக்க ஏற்றவை குண்டமுதல்
நன்று முனியே நம்பேரில் குற்றமில்லை
முன்னுள்ள ஆகம முறைநூற் படியாலே
என்னூ லொழுங்கில் எரிக்கிறே னிப்பேயை
மாமுனியே நீசாட்சி மாயாண்டி நீசாட்சி
நாமுனியே சாட்சி நல்லவரே நீசாட்சி
எல்லோருஞ் சாட்சி என்பேரில் குற்றமில்லை
.
விளக்கம்:
=========
நாரத முனியின் வார்த்தைகளை ஏற்றுக் கொண்ட வைகுண்டர் அவரை அமைதியாக நோக்க, நல்லது முனிவனே, எமது பேரில் எந்தவிதக் குற்றமும் இல்லை. முன்புள்ள ஆகம நூலின் விதிப்படியும் என்னுடைய கடமை ஒழுங்கின்படியும், இப்பேய்களை எரிக்கப் போகிறேன். நாரதமுனியே, மாயாண்டியே, நரமுனியே, நல்லவர்களே, நீங்கள் எல்லாரும் என்மேல் குற்றம் இல்லை என்பதற்குச் சாட்சியாக இருங்கள்.
.
.
அகிலம்:
========
வல்லாத்தான் வைகுண்ட மாலவ ருஞ்சாட்சி
என்றுநா ராயணரும் எரிக்கலுற்றார் பேய்களையும்
பண்டு அந்தப்பேயைப் பார்மீதில் கொண்டாடும்
நருட்கள் மிகப்பார்த்து நாலைந்து தான்தாக்கிக்
கருக்கிவிட வென்று களிவைத் தலையாட்டி
மனுக்க ளறிய மனுநருளைத் தானாட்டித்
தனுக்கள் மிகவாங்கத் தானினைத்தா ரம்மானை
.
விளக்கம்:
=========
மிகுந்த வல்லமையுள்ள வைகுண்டரின் தந்தை திருமால் சாட்சியாக இருக்கட்டும் என்று கூறினார். பிறகு வைகுண்டர் பேய்களை எரிக்க வேண்டிய வகைகளைச் செய்தார். ஏற்கெனவே பேய்ப்பிடித்துக் கொண்டு ஆடுகின்ற மக்களைப் பிடித்த சில பேய்களைத் துன்புறுத்தி, அவற்றின் தலைகளை ஆடச் செய்து இவற்றையெல்லாம் சாட்சியாகப் பார்த்துக் கொண்டு நிற்கும் மக்களின் முன்னால் அவர்கள் அறியும்படியாக அப்பேய்களை எரித்துக் கருக்கிவிட நினைத்தார்.
.
.
தொடரும்... அய்யா உண்டு. #அய்யா வைகுண்டர் {1008} #🚩அய்யா வைகுண்டர் 🚩 #💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர் #Ayya Vaikundar