A Mohan Raj
4K views • 1 months ago
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #ஆன்மீக #திருமுறை #பன்னிரு திருமுறை
*"திருமுறை ஓதாய் திருமுறையே தாய்"*
தினம் ஒரு திருமுறை அறிவோம் 🙏
*பதினோராம் திருமுறை*
*பதினோராம் திருமுறை என்பது காரைக்கால் அம்மையார், நம்பியாண்டார் நம்பி உட்பட 12 பன்னிரு சைவ அடியவர்கள் பாடிய 40 பிரபந்தங்களின் (சிற்றிலக்கியங்கள்) தொகுப்பாகும். இது "சைவப் பிரபந்த மாலை" என்றும் அழைக்கப்படுகிறது.*
*பதினோராம் திருமுறை ஆசிரியர்கள் (12 பேர்)* :
*1 திரு ஆலவாய் உடையார்
2 காரைக்கால் அம்மையார்
3 ஐயடிகள் காடவர்கோன் நாயனார்
4 சேரமான் பெருமாள் நாயனார்
5 நக்கீரதேவ நாயனார்
6 கல்லாடதேவ நாயனார்
7 கபிலதேவ நாயனார்
8 பரணதேவ நாயனார்
9 இளம்பெருமான் அடிகள்
10 அதிராவடிகள்
11 பட்டினத்து அடிகள்
12 நம்பியாண்டார் நம்பி.*
*தொகுப்பாளர் : இத்திருமுறையைத் தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி ஆவார்.*
*சிறப்பு : இத்திருமுறையில் விநாயகர் வழிபாடு மற்றும் அடியார் சிறப்புகள் இடம்பெற்றுள்ளன.*
*பொருளடக்கம் : திருஈங்கோய்மலை எழுபது, திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம், போற்றித் திருக்கலிவெண்பா, ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை போன்ற இலக்கியங்கள் இதில் உள்ளன.*
இறைவனின் திருநாமம் - சிற்சபை: ஆனந்தநடராஜ மூர்த்தி, மூலஸ்தானம்: ஸ்ரீ மூலநாதர்
இறைவி - சிற்சபை: சிவகாமசுந்தரி, மூலஸ்தானம்: உமாபார்வதி
அமைவிடம் : கோயில் (சிதம்பரம், தில்லை) சோழநாடு காவிரி வடகரைத் ஸ்தலம்
பதிகம் பற்றிய சுருக்கமான விளக்கம் :
*பதினோராம் திருமுறையில் இருந்து நம்பியாண்டார் நம்பி அருளிய திருத்தொண்டர் திருவந்தாதி*
*திருத்தொண்டர் திருவந்தாதி என்பது சைவத் திருமுறைகளில் பதினோராம் திருமுறையில் இடம்பெற்றுள்ள ஒரு புகழ்பெற்ற நூலாகும். சுந்தரமூர்த்தி நாயனாரின் 'திருத்தொண்டத்தொகை'-யை அடிப்டையாகக் கொண்டு, நம்பியாண்டார் நம்பிகளால் இந்நூல் இயற்றப்பட்டது. நாயன்மார்களின் அவதாரத் தலம், குலம், அவர்கள் செய்த சிவத்தொண்டு, மற்றும் முக்தி அடைந்த விதம் ஆகியவற்றை மிகச் சுருக்கமாக அறிய உதவுகிறது.*
பாடல் வரிகள் :
*பதினோராம் திருமுறையில் இருந்து நம்பியாண்டார் நம்பி அருளிய திருத்தொண்டர் திருவந்தாதி*
பொன்னி வடகரை சேர்நாரை
யூரில் புழைக்கைமுக
மன்னன் அறுபத்து மூவர்
பதிதேம் மரபுசெயல்
பன்னஅத் தொண்டத் தொகைவகை
பல்கும்அந் தாதிதனைச்
சொன்ன மறைக்குல நம்பிபொற்
பாதத் துணைதுணையே. 1
தில்லைவாழ் அந்தணர்
செப்பத் தகுபுகழ்த் தில்லைப்
பதியிற் செழுமறையோர்
ஒப்பப் புவனங்கள் மூன்றினும்
உம்பரின் ஊர்எரித்த
அப்பர்க் கமுதத் திருநடர்க்
கந்திப் பிறையணிந்த
துப்பர்க் குரிமைத் தொழில்புரி
வோர்தமைச் சொல்லுதுமே. 2
திருநீலகண்ட நாயனார்
சொல்லச் சிவன்திரு
ஆணைதன்தூமொழி தோள்நசையை
ஒல்லைத் துறந்துரு மூத்ததற்
பின்உமை கோன் அருளால்
வில்லைப் புரைநுத லாளோ
டிளமைபெற் றின்பமிக்கான்
தில்லைத் திருநீல கண்டக்
குயவனாம் செய்தவனே. 3
இயற்பகை நாயனார்
செய்தவர் வேண்டிய தியாதும்
கொடுப்பச் சிவன்தவனாய்க்
கைதவம் பேசிநின் காதலி
யைத்தரு கென்றலுமே
மைதிகழ் கண்ணியை ஈந்தவன்
வாய்ந்த பெரும்புகழ்வந்
தெய்திய காவிரிப் பூம்பட்
டினத்துள் இயற்பகையே. 4
இளையான்குடிமாற நாயனார்
இயலா விடைச்சென்ற மாதவற்
கின்னமு தாவிதைத்த
வயலார் முளைவித்து வாரி
மனைஅலக் கால்வறுத்துச்
செயலார் பயிர்விழுத் தீங்கறி
ஆக்கும் அவன்செழுநீர்க்
கயலார் இளையான் குடியுடை
மாறன்எங் கற்பகமே. 5
மெய்ப்பொருள் நாயனார்
கற்றநன் மெய்த்தவன் போல்ஒரு
பொய்த்தவன் காய்சினத்தால்
செற்றவன் தன்னை அவனைச்
செறப்புக லும்திருவாய்
மற்றவன் ‘தத்தா நமரே’
எனச்சொல்லி வான்உலகம்
பெற்றவன் சேதிபன் மெய்ப்பொரு
ளாம்என்று பேசுவரே. 6
விறன்மிண்ட நாயனார்
பேசும் பெருமையவ்
வாரூரனையும் பிரானவனாம்
ஈசன் தனையும் புறகுதட்
டென்றவன் ஈசனுக்கே
நேசன் எனக்கும் பிரான்மனைக்
கேபுக நீடுதென்றல்
வீசும் பொழில்திருச் செங்குன்றம்
மேய விறன்மிண்டனே. 7
அமர்நீதி நாயனார்
மிண்டும் பொழில்பழை யாறை
அமர்நீதி வெண்பொடியின்
முண்டம் தரித்த பிராற்குநல்
லூரின்முன் கோவணம்நேர்
கொண்டிங் கருளென்று தன்பெருஞ்
செல்வமும் தன்னையுந்தன்
துண்ட மதிநுத லாளையும்
ஈந்த தொழிலினனே. 8
சுந்தரமூர்த்தி நாயனார்
தொழுதும் வணங்கியும் மாலயன்
தேடரும் சோதிசென்றாங்
கெழுதும் தமிழ்ப்பழ ஆவணம்
காட்டி எனக்குன்குடி
முழுதும் அடிமைவந் தாட்செய்
எனப்பெற்ற வன்முரல்தேன்
ஒழுகு மலரின்நற் றார்எம்பி
ரான்நம்பி யாரூரனே. 9
எறிபத்த நாயனார்
ஊர்மதில் மூன்றட்ட உத்தமற்
கென்றோர் உயர்தவத்தோன்
தார்மலர் கொய்யா வருபவன்
தண்டின் மலர்பறித்த
ஊர்மலை மேற்கொள்ளும் பாகர்
உடல்துணி யாக்குமவன்
ஏர்மலி மாமதில் சூழ்கரு
வூரில் எறிபத்தனே. 10
ஏனாதிநாத நாயனார்
பத்தனை ஏனாதி நாதனைப்
பார்நீ டெயினைதன்னுள்
அத்தனைத் தன்னோ டமர்மலைந்
தான்நெற்றி நீறுகண்டு
கைத்தனி வாள்வீ டொழிந்தவன்
கண்டிப்ப நின்றருளும்
நித்தனை ஈழக் குலதீபன்
என்பர்இந் நீள்நிலத்தே. 11
கண்ணப்ப நாயனார்
நிலத்தில் திகழ்திருக் காளத்தி
யார்திரு நெற்றியின்மேல்
நலத்தில் பொழிதரு கண்ணிற்
குருதிகண் டுள்நடுங்கி
வலத்தில் கடுங்கணை யால்தன்
மலர்க்கண் இடந்தப்பினான்
குலத்திற் கிராதன்நம் கண்ணப்ப
னாம்என்று கூறுவரே. 12
குங்குலியக்கலய நாயனார்
ஏய்ந்த கயிறுதன் கண்டத்திற்
பூட்டி எழிற்பனந்தாள்
சாய்ந்த சிவன்நிலைத் தான்என்பர்
காதலி தாலிகொடுத்
தாய்ந்தநற் குங்குலி யங்கொண்
டனற்புகை காலனைமுன்
காய்ந்த அரற்கிட்ட தென்கட
வூரில் கலயனையே. 13
மானக் கஞ்சாற நாயனார்
கலச முலைக்கன்னி காதற்
புதல்வி கமழ்குழலை
நலசெய் தவத்தவன் பஞ்ச
வடிக்கிவை நல்கெனலும்
அலசும் எனக்கரு தாதவள்
கூந்தல் அரிந்தளித்தான்
மலைசெய் மதிற்கஞ்சை மானக்கஞ்
சாறன் எனும்வள்ளலே. 14
அரிவாட்டாய நாயனார்
வள்ளற் பிராற்கமு தேந்தி
வருவோன் உகலும்இங்கே
வெள்ளச் சடையாய் அமுதுசெய்
யாவிடில் என்தலையைத்
தள்ளத் தகுமென்று வாட்பூட்
டியதடங் கையினன் காண்
அள்ளற் பழனக் கணமங்
கலத்தரி வாட்டாயனே. 15
ஆனாய நாயனார்
தாயவன் யாவுக்கும் தாழ்சடை
மேல்தனித் திங்கள்வைத்த
தூயவன் பாதம் தொடர்ந்துதொல்
சீர்துளை யாற்பரவும்
வேயவன் மேல்மழ நாட்டு
விரிபுனல் மங்கலக்கோன்
ஆயவன் ஆனாயன் என்னை
உவந்தாண் டருளினனே. 16
சுந்தர மூர்த்தி நாயனார்
‘அருட்டுறை அத்தற் கடிமைப் பட்டேன்
இனி அல்லன்’என்னும்
பொருட்டுறை யாவதென் னேஎன்ன
வல்லவன் பூங்குவளை
இருட்டுறை நீர்வயல் நாவற்
பதிக்கும் பிரான்அடைந்தோர்
மருட்டுறை நீக்கிநல் வான்வழி
காட்டிட வல்லவனே. 17
மூர்த்தி நாயனார்
அவந்திரி குண்டமண் ஆவதின்
மாள்வனென் றன்றாலவாய்ச்
சிவன்திரு மேனிக்குச் செஞ்சந்
தனமாச் செழுமுழங்கை
உவந்தொளிர் பாறையில் தேய்த்துல
காண்டஒண் மூர்த்திதன்னூர்
நிவந்தபொன் மாட
மதுரா புரியென்னும் நீள்பதியே. 18
முருக நாயனார்
பதிகம் திகழ்தரு பஞ்சாக்
கரம்பயில் நாவினன்சீர்
மதியம் சடையாற் கலர்தொட்
டணிபவன் யான்மகிழ்ந்து
துதியம் கழற்சண்பை நாதற்குத்
தோழன்வன் றொண்டன்அம்பொன்
அதிகம் பெறும்புக லூர்முரு
கன்எனும் அந்தணனே. 19
உருத்திர பசுபதி நாயனார்
அந்தாழ் புனல்தன்னில் அல்லும்
பகலும்நின் றாதரத்தால்
உந்தாத அன்பொ டுருத்திரஞ்
சொல்லிக் கருத்தமைந்த
பைந்தார் உருத்(தி)ர பசுபதி
தன்னற் பதிவயற்கே
நந்தார் திருத்தலை யூர்என்
றுரைப்பர்இந் நானிலத்தே. 20
திருநாளைப்போவார் நாயனார்
நாவார் புகழ்த்தில்லை அம்பலத்
தான்அருள் பெற்றுநாளைப்
போவான் அவனாம் புறத்திருத்
தொண்டன்தன் புன்புலைபோய்
மூவா யிரவர்கை கூப்ப
முனியா யவன்பதிதான்
மாவார் பொழில்திகழ் ஆதனூர்
என்பர்இம் மண்டலத்தே. 21
திருக்குறிப்புத்தொண்ட நாயனார்
மண்டும் புனற்சடை யான்தமர்
தூசெற்றி வாட்டும்வகை
விண்டு மழைமுகில் வீடா
தொழியின்யான் வீவன்என்னா
முண்டம் படர்பாறை முட்டும்
எழிலார் திருக்குறிப்புத்
தொண்டன் குலங்கச்சி ஏகா
லியர்தங்கள் தொல்குலமே. 22
சண்டேசுர நாயனார்
குலமே றியசேய்ஞ லூரில்
குரிசில் குரைகடல்சூழ்
தலமே றியவிறல் சண்டிகண்
டீர்தந்தை தாள்இரண்டும்
வலமே றியமழு வால்எறிந்
தீசன் மணிமுடிமேல்
நலமே றியபால் சொரிந்தலர்
சூட்டிய நன்னிதியே. 23
சுந்தரமூர்த்தி நாயனார்
‘நிதியார் துருத்திதென் வேள்விக்
குடியாய் நினைமறந்த
மதியேற் கறிகுறி வைத்த
புகர்பின்னை மாற்றி’டென்று
துதியா அருள்சொன்ன வாறறி
வாரிடைப் பெற்றவன்காண்
நதியார் புனல்வயல் நாவலர்
கோன்என்னும் நற்றவனே. 24
திருநாவுக்கரசு நாயனார்
நற்றவன் நல்லூர்ச் சிவன்திருப்
பாதம்தன் சென்னிவைக்கப்
பெற்றவன் மற்றிப் பிறப்பற
வீரட்டர் பெய்கழற்றாள்
உற்றவன் உற்ற விடம்அடை
யார்இட ஒள்ளமுதாத்
துற்றவன் ஆமுரில் நாவுக்
கரசெனும் தூமணியே. 25
மணியினை மாமறைக் காட்டு
மருந்தினை வண்மொழியால்
திணியன நீள்கத வந்திறப்
பித்தன தெண்கடலிற்
பிணியன கல்மிதப் பித்தன
சைவப் பெருநெறிக்கே
அணியன நாவுக் கரையர்
பிரான்தன் அருந்தமிழே. 26
குலச்சிறை நாயனார்
அருந்தமி ழாகரன் வாதில்
அமணைக் கழுநுதிமேல்
இருந்தமிழ் நாட்டிடை ஏற்றுவித்
தோன்எழிற் சங்கம்வைத்த
பெருந்தமிழ் மீனவன் தன்அதி
காரி பிரசம்மல்கு
குருந்தவிழ் சாரல் மணமேற்
குடிமன் குலச்சிறையே. 27
பெருமிழலைக் குறும்ப நாயனார்
சிறைநன் புனல்திரு நாவலூ
ராளி செழுங்கயிலைக்
கிறைநன் கழல்நாளை எய்தும்
இவனருள் போற்றஇன்றே
பிறைநன் முடியன் அடியடை
வேன்என் றுடல்பிரிந்தான்
நறைநன் மலர்த்தார் மிழலைக்
குறும்பன் எனும்நம்பியே. 28
காரைக்கால் அம்மையார்
‘நம்பன் திருமலை நான்மிதி
யேன்’என்று தாள்இரண்டும்
உம்பர் மிசைத்தலை யால்நடந்
தேற உமைநகலும்
செம்பொன் உருவன்’என் அம்மை’
எனப்பெற் றவள் செழுந்தேன்
கொம்பின் உகுகாரைக் காலினில்
மேய குலதனமே. 29
அப்பூதியடிகள் நாயனார்
தனமா வதுதிரு நாவுக்
கரசின் சரணம்என்னா
மனமார் புனற்பந்தர் வாழ்த்திவைத்
தாங்கவன் வண்தமிழ்க்கே
இனமாத் தனது பெயரிடப்
பெற்றவன் எங்கள்பிரான்
அனமார் வயல்திங்கள் ஊரினில்
வேதியன் அப்பூதியே. 30
திருநீலநக்க நாயனார்
பூதிப் புயத்தர் புயத்திற்
சிலந்தி புகலும்அஞ்சி
ஊதித் துமிந்த மனைவியை
நீப்பஉப் பாலவெல்லாம்
பேதித் தெழுந்தன காணென்று
பிஞ்ஞகன் காட்டுமவன்
நீதித் திகழ்சாத்தை நீலநக்
கன்எனும் வேதியனே. 31
நமிநந்தியடிகள் நாயனார்
வேத மறிக்கரத் தாரூர்
அரற்கு விளக்குநெய்யைத்
தீது செறிஅமண் கையர்அட்
டாவிடத் தெண்புனலால்
ஏத முறுக அருகரென்
றன்று விளக்கெரித்தான்
நாதன் எழில்ஏமப் பேறூர்
அதிபன் நமிநந்தியே. 32
சுந்தரமூர்த்தி நாயனார்
நந்திக்கும் நம்பெரு மாற்குநல்
ஆருரில் நாயகற்குப்
பந்திப் பரியன செந்தமிழ்
பாடிப் படர்புனலிற்
சிந்திப் பரியன சேவடி
பெற்றவன் சேவடியே
வந்திப் பவன்பெயர் வன்தொண்டன்
என்பர்இவ் வையகத்தே. 33
திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார்
வையம் மகிழயாம் வாழ
அமணர் வலிதொலைய
ஐயன் பிரம புரத்தரற் கம்மென்
குதலைச் செவ்வாய்
பைய மிழற்றும் பருவத்துப்
பாடப் பருப்பதத்தின்
தையல் அருள்பெற் றனன்என்பர்
ஞானசம் பந்தனையே. 34
பந்தார் விரலியர் வேள்செங்கட்
சோழன் முருகன்நல்ல
சந்தார் அகலத்து நீலநக்
கன்பெயர் தான்மொழிந்து
கொந்தார் சடையர் பதிகத்தில்
இட்டடி யேன்கொடுத்த
அந்தாதி கொண்ட பிரான்அருட்
காழியர் கொற்றவனே. 35
ஏயர்கோன் கலிக்காம நாயனார்
கொற்றத் திறல்எந்தை தந்தைதன்
தந்தைஎங் கூட்ட மெல்லாம்
தெற்றச் சடையாய் நினதடி
யேந்திகழ் வன்தொண்டனே
மற்றிப் பிணிதவிர்ப் பான்என்
றுடைவாள் உருவிஅந்நோய்
செற்றுத் தவிர்கலிக் காமன்
குடிஏயர் சீர்க்குடியே. 36
திருமூல நாயனார்
குடிமன்னு சாத்தனூர்க் கோக்குலம்
மேய்ப்போன் குரம்பைபுக்கு
முடிமன்னு கூனற் பிறையாளன்
தன்னை முழுத்தமிழின்
படிமன்னு வேதத்தின் சொற்படி
யேபர விட்டென்உச்சி
அடிமன்ன வைத்த பிரான்மூலன்
ஆகின்ற அங்கணனே. 37
தண்டியடிகள் நாயனார்
கண்ணார் மணிஒன்றும் இன்றிக்
கயிறு பிடித்தரற்குத்
தண்ணார் புனல்தடம் தொட்டலும்
தன்னை நகும்அமணர்
கண்ணாங் கிழப்ப அமணர்
கலக்கங்கண் டம்மலர்க்கண்
விண்ணா யகனிடைப் பெற்றவன்
ஆரூர் விறல்தண்டியே. 38
மூர்க்க நாயனார்
தண்டலை சூழ்திரு வேற்காட்டூர்
மன்னன் தருகவற்றால்
கொண்டவல் லாயம்வன் சூதரை
வென்றுமுன் கொண்டபொருள்
முண்டநன் னீற்றன் அடியவர்க்
கீபவன் மூர்க்கனென்பர்
நண்டலை நீரொண் குடந்தையில்
மேவுநற் சூதனையே. 39
சோமாசிமாற நாயனார்
சூதப் பொழில் அம்பர் அந்தணன்
சோமாசி மாறன்என்பான்
வேதப் பொருள்அஞ் செழுத்தும்
விளம்பியல் லால்மொழியான்
நீதிப் பரன்மன்னு நித்த
நியமன் பரவையென்னும்
மாதுக்குக் காந்தன்வன் தொண்டன்
தனக்கு மகிழ்துணையே. 40
சுந்தரமூர்த்தி நாயனார்
துணையும் அளவும் இல் லாதவன்
தன்னரு ளேதுணையாக்
கணையும் கதிர்நெடு வேலும்
கறுத்த கயலிணையும்
பிணையும் நிகர்த்தகண் சங்கிலி
பேரமைத் தோள்இரண்டும்
அணையும் அவன்திரு வாரூரன்
ஆகின்ற அற்புதனே. 41
சாக்கிய நாயனார்
தகடன ஆடையன் சாக்கியன்
மாக்கற் றடவரையன்
மகள்தனந் தாக்கக் குழைந்ததிண்
தோளர்வண் கம்பர்செம்பொன்
திகழ்தரு மேனியிற் செங்கல்
எறிந்து சிவபுரத்துப்
புகழ்தரப் புக்கவன் ஊர்சங்க
மங்கை புவனியிலே. 42
சிறப்புலி நாயனார்
புவனியிற் பூதியும் சாதன
மும்பொலி வார்ந்துவந்த
தவநிய மற்குச் சிறப்புச்செய்
தத்துவ காரணனாம்
அவனியில் கீர்த்தித் தென் ஆக்கூர்
அதிபன் அருமறையோன்
சிவன்நிய மந்தலை நின்றதொல்
சீர்நஞ் சிறப்புலியே 43
சிறுத்தொண்ட நாயனார்
புலியின் அதளுடைப் புண்ணியற்
கின்னமு தாத்தனதோர்
ஒலியின் சதங்கைக் குதலைப்
புதல்வன் உடல்துணித்துக்
கலியின் வலிகெடுத் தோங்கும்
புகழ்ச்சிறுத் தொண்டன்கண்டீர்
மலியும் பொழில்ஒண்செங் காட்டம்
குடியவர் மன்னவனே. 44
சேரமான்பெருமாள் நாயனார்
மன்னர் பிரான்எதிர் வண்ணான்
உடல்உவர் ஊறிநீறார்
தன்னர் பிரான்தமர் போல
வருதலும் தான்வணங்க
என்னர் பிரான்அடி வண்ணான்
எனஅடிச் சேரன்என்னும்
தென்னர் பிரான்கழ றிற்றறி
வான்எனும் சேரலனே. 45
சேரற்குத் தென்னா வலர்பெரு
மாற்குச் சிவன்அளித்த
வீரக் கடகரி முன்புதன்
பந்தி இவுளிவைத்த
வீரற்கு வென்றிக் கருப்புவில்
வீரனை வெற்றிகொண்ட
சூரற் கெனதுள்ளம் நன்றுசெய்
தாய்இன்று தொண்டுபட்டே. 46
கணநாத நாயனார்
தொண்டரை யாக்கி அவரவர்க்
கேற்ற தொழில்கள் செய்வித்
தண்டர்தங் கோனக் கணத்துக்கு
நாயகம் பெற்றவன்காண்
கொண்டல்கொண் டேறிய மின்னுக்குக்
கோல மடல்கள் தொறும்
கண்டல்வெண் சோறளிக் குங்கடல்
காழிக் கணநாதனே. 47
கூற்றுவ நாயனார்
நாதன் திருவடி யேமுடி
யாகக் கவித்துநல்ல
போதங் கருத்திற் பொறித்தமை
யால்அது கைகொடுப்ப
ஓதந் தழுவிய ஞாலம்எல்
லாமொரு கோலின்வைத்தான்
கோதை நெடுவேற் களப்பாளன்
ஆகிய கூற்றுவனே. 48
சுந்தரமூர்த்தி நாயனார்
கூற்றுக் கெவனோ புகல்திரு
வாரூரன் பொன்முடிமேல்
ஏற்றுத் தொடையலும் இன்அடைக்
காயும் இடுதருமக்
கோற்றொத்துக் கூனனும் கூன்போய்க்
குருடனும் கண்பெற்றமை
சாற்றித் திரியும் பழமொழி
யாம்இத் தரணியிலே. 49
பொய்யடிமை இல்லாத புலவர்
தரணியிற் பொய்ம்மை இலாத்தமிழ்ச்
சங்கம் அதிற்கபிலர்
பரணர்நக் கீரர் முதல்நாற்பத்
தொன்பது பல்புலவோர்
அருள்நமக் கீயும் திருவால
வாய்அரன் சேவடிக்கே
பொருளமைத் தின்பக் கவிபல
பாடும் புலவர்களே. 50
திருச்சிற்றம்பலம் 🕉️🙏
ஓம் நமசிவாயம் 🕉️🙏
சிவாய நம ஓம் 🕉️🙏
நற்றுணையாவது நாதன் நாமம் நமச்சிவாயவே🕉️
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
128 likes
3 comments • 50 shares