தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மற்றும் தஞ்சாவூரை பூர்வீகமாகக் கொண்ட செளமியா மற்றும் மோதி, சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கோலாலம்பூருக்குக் குடிபெயர்ந்துள்ளனர். இந்நிலையில் ஒரு வீடியோவில் இரண்டு நாடுகளிலும் வசித்த தங்கள் அனுபவங்கள் குறித்து அவர்கள் பகிர்ந்துள்ளனர். அதாவது, "நாங்கள் சிங்கப்பூரில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் வாழ்ந்தோம். ஒரு நாள், திடீரென்று எல்லாவற்றையும் மூட்டை கட்டிக்கொண்டு மலேசியாவிற்குச் செல்ல முடிவு செய்தோம்," என்று மோதி கூறினார்.
2019 முதல் 2022 வரையிலான காலக்கட்டத்தில், சிங்கப்பூரில் இரண்டு படுக்கையறைகள் கொண்ட ஒரு அடுக்குமாடி குடியிருப்பை வாடகைக்கு எடுக்க தங்களுக்கு சுமார் 4,000 சிங்கப்பூர் டாலர், இந்திய மதிப்பில் சுமார் ரூ. 2.50 லட்சம் ஆனது என்று தெரிவித்தனர். ஆனால், கோலாலம்பூருக்குக் குடிபெயர்ந்த பிறகு, தற்போது பாங்சார் (Bangsar) எனும் முக்கியப் பகுதியில் சுமார் 2,000 சதுர அடி பரப்பளவு கொண்ட ஒரு பிரம்மாண்டமான குடியிருப்பை வாடகைக்கு எடுத்துள்ளனர்.
ஆச்சரியம் என்னவென்றால், இதற்காக அவர்கள் செலுத்தும் வாடகை சிங்கப்பூரை விட மிகவும் குறைவு. ஒப்பிட்டுப் பார்த்தால், பாதி செலவிலேயே அதிக இடவசதி கொண்ட, பாதுகாப்பான மற்றும் தரமான வீடுகள் மலேசியாவில் கிடைப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
சிங்கப்பூரில், ஒரு வாரத்திற்கான மளிகைப் பொருட்கள் வாங்க அவர்களுக்குச் சுமார் 250 முதல் 300 சிங்கப்பூர் டாலர் வரை செலவாகியுள்ளது. ஆனால், தற்போது கோலாலம்பூரில் அதைவிட அதிகப்படியான பொருட்களை வாங்க வெறும் 400 முதல் 500 மலேசிய ரிங்கிட் மட்டுமே செலவாகுகிறதாம். மலேசியாவிலேயே விளைவிக்கப்படும் உள்ளூர் பொருட்கள் தாராளமாகக் கிடைப்பதால், மளிகைப் பொருட்கள் மிகவும் பிரஸ்ஸாகவும், விலை குறைவாகவும் இருப்பதாக அவர்கள் குறிப்பிட்டனர்.
மேலும், சிங்கப்பூரின் பொதுப் போக்குவரத்து அமைப்புடன் எதையும் ஒப்பிட முடியாது என்றும், கார் இல்லாமலே எங்கும் செல்லும் அளவுக்கு அங்கு திறமையான பொது போக்குவரத்து இருப்பதாக அந்த தம்பதி தெரிவித்தனர். ஆனால், கோலாலம்பூரில் வசதிக்காக ஒரு கார் வைத்திருப்பது கிட்டத்தட்ட அவசியமாகிவிட்டது என்றும் அவர்கள் கூறினர்.
சிங்கப்பூருடன் ஒப்பிடும்போது மலேசியாவில் இணைய வேகம் குறைவாக இருப்பதாகவும், அதன் விலை அதிகமாக இருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். சிங்கப்பூரில் குழாய் நீரை தாராளமாகக் குடிக்கலாம் என்றும் மலேசியாவில், குடிநீரைச் சுத்திகரிக்க ஒவ்வொரு மாதமும் வாட்டர் பியூரிஃபையருக்காக பணம் செலவழிக்க வேண்டியுள்ளது என்றும் செளமியா கூறினார். #🗞️ ஏப்ரல் 10 ட்ரெண்டிங் நியூஸ் 📱 #வாழ்வின் சுவாரசியம்


