#kelvi-pathil
அன்பர்களின் கேள்விகளும் – அருட்தந்தையின் பதில்களும்
கேள்வி: மகரிஷி அவர்களே! மந்திரம் என்றால் என்ன? அதை உச்சரிப்பதன் கருத்தென்ன?
பதில்: பக்தியோகத்தில் கடவுளை வணங்கும்பொழுது மனம் ஒரு குறிப்பிட்ட வடிவத்தை எடுக்க வேண்டும். மனித வாழ்வில் எந்த சம்பத்து குறைவாக உள்ளதோ அதை நிறைவு செய்ய அதற்குத் தகுந்தாற்போல் கடவுளுக்கு உருவம், குணம் அமைத்துள்ளார்கள்.
மனம் அந்த வடிவத்தை எடுக்கும்பொழுது என்ன பலனை அடைய வேண்டுமோ அந்த நுணுகிய நிலைக்குச் செல்ல வேண்டும். புறமனத்திலிருந்து நடுமனத்திற்கும், பிறகு அடிமனத்திற்கும் (Super Consciousness Mind) செல்ல வேண்டும். மனம் அந்த நிலைக்குச்செல்ல அதற்கேற்றவாறு 51 அட்சரங்களிலிருந்து ஒலி வடிவத்தை சித்தர்கள் அமைத்துள்ளார்கள்.
அந்த ஒலி வடிவங்களைத் தொடர்ந்து ஓதிக் கொண்டேயிருந்தால் நாடி நரம்புகளிலெல்லாம் உடலில் காந்த ஆற்றல் இயக்கத்தை ஏற்படுத்தி நுணுகிய நிலைக்கு மனதைக் கொண்டு வருகிறது என்பதை நீண்ட ஆராய்ச்சிக்குப் பிறகு கண்டுபிடித்துள்ளார்கள்.
வாழ்வில் மனிதன் ஒரு பொருளையோ, நலத்தையோ, உயர்வையோ அடைவதற்கு ஏற்படுத்திய ஒலி அமைப்புகளுக்கு மந்திரம் என்று பெயர். அவ்வாறு அமைந்த சொல்லை உச்சரிக்கும்போது சொல்லின் முதலுக்கும் முடிவுக்கும் இடைப்பட்ட ஒலியே (Cubic inches of air) மந்திரம் எனப்படும்.
மந்திரங்களை உச்சரிக்கும்போது புறமனம் அடிமனத்திற்குச் செல்கிறது. அடிமனம் என்பது இறைநிலையோடு தொடர்புடையது. “முழுமையின் பின்னம் முறையிட்டுக் கேட்டால் முழுமை அதைக்கொடுக்கும்” (if fraction demands the Totality will supply) அதற்கு உடலும் மனமும் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும். அதற்காகவே வழிபாட்டில் மந்திரங்களை இணைத்து வைத்துள்ளார்கள்.
வாழ்க வளமுடன்!
அருள்தந்தை தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி
(நாளையும் தொடரும்)
🌹🌹🌹


