இன்றைய வெளிப்படுத்தின விசேஷ தியானம் : 11/07/2026 வெளிப்படுத்தின விசேஷம் விளக்கம் POST - 320 வெளிப்படுத்தல் 14-ம் அதிகாரம் : XIII 2. “பின்பு, பரலோகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகக் கேட்டேன்; அது கர்த்தருக்குள் மரிக்கிறவர்கள் இது முதல் பாக்கியவான்கள் என்றெழுது; அவர்கள் தங்கள் பிரயாசங்களை விட்டொழிந்து இளைப்பாறுவார்கள்; அவர்களுடைய கிரியைகள் அவர்களோடே கூடப்போம்; ஆவியானவரும் ஆம் என்று திருவுளம் பற்றுகிறார் என்று சொல்லிற்று." (வெளி 14:13) கர்த்தருக்குள் அன்பான பரிசுத்தவான்களே, வெளி 14-ம் அதிகாரத்தில் வெளிப்படும் ஐந்தாவது அறிக்கையே வெளி 14:13-ம் வசனமாகும். முதலாவது வெளி 14:2-ம் வசனத்திலும் இரண்டாவது வெளி 14:6,7 வசனங்களிலும் மூன்றாவதாக வெளி 14:8 வசனத்திலும், நான்காவதாக வெளி 14:9 வசனத்திலும் ஆக நான்கு அறிக்கைகளை வாசித்து தியானம் செய்திருக்கிறோம். வெளி 10:4,8; வெளி 11:12; வெளி 18:4; வெளி 21:3 ஆகிய வசனங்களிலும் பரலோகத்திலிருந்து உண்டாகும் சத்தங்களையும் பார்க்கிறோம். கிறிஸ்தவ கல்லறைத் தோட்டங்களில் பல கல்லறைகளில் உன்றப்பட்டிருக்கும் சிலுவைகளில், "கர்த்தருக்குள் மரிக்கிறவர்கள் இது முதல் பாக்கியவான்கள்" என்று எழுதப்பட்டிருப்பதைப் பார்க்கலாம். இந்த வசனம் கிருபையின் காலத்தில் மரிப்பவர்களுக்குப் பொருந்தாது என்பதை விசுவாசிகள் அறிந்து கொள்வதில்லை. அடக்க ஆராதனைகளில் பிரசங்கம் பண்ணுபவர்களுக்கும் இது தெரியாது. “இது முதல்" என்று அன்பின் தேவனால் திட்டவட்டமாக குறிப்பிடப்பட்டிருப்பதினால் அந்திக் கிறிஸ்துவின் உபத்திரவ, மகா உபத்திரவ காலமாகிய 7 வருடங்களில், மிருகத்தையும் அதின் சொரூபத்தையும் வணங்காமலும் அதின் முத்திரையைத் தங்கள் நெற்றியிலாவது கையிலாவது தரித்துக் கொள்ளாமல் அந்திக்கிறிஸ்துவை எதிர்த்துப் போராடியதினிமித்தம், அவனால் கொலை செய்யப்பட்டு கர்த்தருக்காக இரத்த சாட்சிகளாய் மரித்தவர்களை மட்டுமே பாக்கியவான்கள் என்று இந்த வசனத்தில் எழுத சொல்லுகிறார். காத்தருக்குள் மரிக்கிறவர்கள் இது முதல் பாக்கியவான்கள்" என்று எழுதப்பட்ட இப்பரிசுத்த கூட்டத்தாரைக் குறித்து வெளி 7:9-17: வெளி 13:5-7; வெளி 15:2-4; வெளி 20:4 ஆகிய கர்த்தருடைய திருவசனங்களில் எழுதப்பட்டுள்ளவைகளை வாசிக்கலாம். "இவர்கள் பாக்கியவான்கள்" என்பதை எழுதும்படியாக பரலோகத்தின் சத்தம் கட்டளையிடுகிறபடியால், இது கிறிஸ்து இயேசு ராஜாவின் சத்தமாகவே இருக்கும் என்று கர்த்தருடைய ஆவிக்குள் நிதானிக்கிறோம். ஏற்கனவே கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ராஜா, திவ்ய வாசகனாகிய அப். யோவானுக்கு “இவைகளை எழுது” என்று கட்டளையிட்டதை கீழ்க்காணும் வெளிப்படுத்தல் 1:11,19; வெளி 2:1,8,12,18; வெளி 3:1,7,14 ஆகிய வசனங்களில் வாசித்து தியானித்திருக்கிறோம். இவைகளை பரிசுத்த ஆவியானவரும் "ஆம்" என்று கிறிஸ்து ராஜாவின் அறிவிப்பை அங்கீகரிக்கிறார். இது ஒரு முக்கியமான சத்தியம் என்பதை அறிந்து கொள்கிறோம். "அவர் (பரிசுத்தாவியானவர்) என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பதினால் என்னை மகிமைப்படுத்துவார்” என்று யோவா 16:13,14ம் வசனங்களில் இயேசு மகாராஜா கூறியதை அறிகிறோம். “கர்த்தருக்குள் மரிப்பவர்கள் இது முதல் பாக்கியவான்கள்" என்பதற்கான இரண்டு காரணங்களை இந்த வசனத்தில் வாசிக்கிறோம். 1. பிரயாசங்களை விட்டொழிந்து இளைப்பாறுவார்கள். 2.இவர்களுடைய கிரியைகள் அவர்களோடு போகும். இவர்கள் அந்திக்கிறிஸ்துவின் 7 வருட உபத்திரவ மகா உபத்திரவ காலங்களின் வாழ்க்கையில் பல பிரயாசங்களை அனுபவித்தவர்கள். உலகத்தார்களுக்குப் பொதுவாக உண்டாகும் வியாதி வருத்தங்கள், தோல்விகள் மட்டுமல்ல, சாத்தான், அந்திக்கிறிஸ்து கள்ளத்தீர்க்கதரிசி ஆகியோரின் மும்முனைத் தாக்குதலினால் மிகுந்த உபத்திரவங்களை அனுபவித்தவர்கள். அந்திக் கிறிஸ்துவின் 7 வருட ஆட்சியில் "இளைப்பாறுதல்" என்பதே இல்லாத வாழ்க்கை வாழ்ந்தவர்கள் (வெளி 7:14-17) வசனங்களில் இவர்கள் இளைப்பாறுதல் இல்லாத பாடுகளின் வாழ்க்கையை வாழ்ந்தவர்கள் என்பதை அறிவிக்கின்றது. “இவர்கள் மிகுந்த உபத்திரவத்திலிருந்து வந்தவர்கள்" (வெளி 7:14). "பசி, தாகம், வெயில், உஷ்ணம், கண்ணீர் இவைகளுக்குரிய வாழ்க்கைச் சந்தித்தவர்கள்" (வெளி 14:16,17) "கண்ணீர், மரணம், துக்கம், அலறுதல், வருத்தம் (வெளி 21:4) ஆகியவைகளுடைய வாழ்க்கையை வாழ்ந்தவர்கள். "உலகமுண்டானது முதல் இது வரைக்கும் சம்பவித்திராததும், இனிமேலும் சம்பவியாததுமான மிகுந்த உபத்திரவங்களை அனுபவித்தவர்கள்." (மத் 24:21) என்றெல்லாம் மேற்காணும் கர்த்தருடைய திருவசனங்கள் மூலம் அறிகிறோம். இப்படிப்பட்ட வாழ்க்கையில் கர்த்தராகிய இயேசு தேவனுக்காக அந்திக்கிறிஸ்துவின் 7 ஆண்டு காலத்தில் வாழ்ந்து இரத்த சாட்சிகளாய் மரித்தவர்களானபடியால், இவர்களுடைய சரீர மரணத்தின் மூலமாக நித்திய இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்கும் சிலாக்கியத்தைப் பெறுகிறார்கள். மரணமடைந்த அவர்களுடைய சரீரம் பூமியில் விடப்பட்டாலும் அவர்கள் நடப்பித்த நற்கிரியைகள் அவர்களோடு சீயோனுக்கு எடுத்துக் கொள்ளப்படும். வெளி 14:12-ம் வசனத்தில் பரிசுத்தவான்களுடைய விசுவாசத்தையும் பொறுமையையுங் குறித்துப் பார்த்தோம். வெளி 2:19-ம் வசனத்தில் "உன் கிரியைகளையும், உன் அன்பையும், உன் ஊழியத்தையும், உன் விசுவாசத்தையும், உன் பொறுமையையும், நீ முன்பு செய்த கிரியைகளிலும் பின்பு செய்த கிரியைகள் அதிகமாயிருக்கிறதையும் அறிந்திருக்கிறேன்" என்கிறார் அன்பின் தேவனாகிய கர்த்தர். இவைகளுக்கான பிரதிபலன்கள் இவர்களுக்குப் பரலோகத்தில் உண்டாயிருக்கும். "பரலோகத்திலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்து வையுங்கள்; அங்கே பூச்சியாவது துருவாவது கெடுக்கிறதும் இல்லை; அங்கே திருடர் கன்னமிட்டுத் திருடுகிறதும் இல்லை. உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்." (மத் 6:20,21) என்கிறார் அன்புநாதர் இயேசு ராஜா. ''உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்பு கூராதிருங்கள்: ஒருவன் உலகத்தில் அன்பு கூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை". (யோவா 2:15) "எனக்குப் பிரியமான சகோதரரே, கர்த்தருக்குள் நீங்கள் படுகிற பிரயாசம் விருதாவாயிராதென்று அறிந்து, நீங்கள் உறுதிப்பட்டவர்களாயும், அசையாதவர்களாயும் கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாயும் இருப்பீர்களாக". (I கொரி 15:58) என்று அன்பின் ஆவியாகிய தேவன் கூறுகிறார். ஆனால் இந்த நித்தியத்தைச் சார்ந்த மேன்மைகளைச் சுதந்தரித்துக் கொள்ள ஒரு அதிமுக்கியமான நிபந்தனை இவ்வசனத்தில் சொல்லப்படுகிறது. அவர்கள் கர்த்தருக்குள் மரித்திருக்க வேண்டும். கர்த்தருக்குள் மரிக்க வேண்டுமானால் முதலாவது அவர்களுடைய வாழ்க்கையின் ஜீவிதம் கர்த்தருக்குள்ளானதாய் இருக்க வேண்டும். "மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாகச் சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக் கொள்ளுங்கள்" (எபே 4:22-24; கொலோ 3:10) என்ற திருவசனங்களின்படியான வாழ்க்கைக்குள்ளானவர்களாய் வாழ்ந்திருக்க வேண்டும். "கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும். பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கி வருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்." (1 தெச 4:16) என்ற வசனத்தின்படியான சிலாக்கியத்திற்குரிய தகுதியை அடைய, கிறிஸ்துவோடு தாங்கள் கொண்டிருந்த ஐக்கியத்தை தங்கள் இறுதி மூச்சு வரை தளர விடாமல் காத்துக் கொண்டவர்களாக இருந்தால் மட்டுமே கர்த்தருக்குள் மரித்தவர்கள் என்று அழைக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்படுவார்கள். அந்திக்கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டு 7 ஆண்டுகள் மகிழ்ச்சியாக வாழ்ந்து, அதன் பின்பு மரித்து அவனோடு நித்திய காலமாய் அக்கினிக்கடலிலே வெந்து, அழுகையும் பற்கடிப்புமான வாழ்க்கையை அனுபவிப்பதைப் பார்க்கிலும், கிறிஸ்துவுக்காக இரத்த சாட்சியாக மரித்து முதலாம் உயிர்த்தெழுதலில் பங்கடைந்து, கிறிஸ்துவோடு ஆயிர வருட அரசாட்சி, பின்பு நித்தியத்தில் நேசர் இயேசுவோடு என்றென்றைக்கும் வாழ்க்கை எவ்வளவு அதிக மேன்மையானது என்பதை அறிந்து கொள்ள அன்பின் ஆவியாகிய தேவன் நம்மை அழைக்கிறார். கிறிஸ்துவின் ஊழியப்பாதையிலே அப்போஸ்தலர், I. ஆசீர்வாதம் "பரிசுத்த புதிய எருசலேம் மணவாட்டி சபை" மதுரை, இந்தியா, (தினந்தோறும் எங்களது Whatsapp Channel - மூலமாக வசனம் மற்றும் சத்தியங்களை அறிந்துக்கொள்ள இணையுங்கள். ஜெப தொடர்பிற்கு Pr.Arulnatharaj 8682882815, Pr Sam Gunaraj 8682882805) Follow the பரிசுத்த புதிய எருசலேம் மணவாட்டி சபை channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaNA8Y66BIEhjWAI0K3n. #🙏ஆன்மீகம் #✝பைபிள் வசனங்கள் #🙏கோவில் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #✝️இயேசுவே ஜீவன்
21 likes
3 comments 9 shares

More like this