saravanan.
3K views • 18 days ago
#innraya SINTHANAY
*இன்றைய சிந்தனை* ( 08.07.2026)
.........................................................
*'கொரோனா தீநுண்மி கொடுத்திருக்கும் பாடம்''*
.....................................................
இனம், மதம், மொழி, நாடு, கண்டங்கள் என அனைத்தையும் கடந்து மனித குலத்தை இந்த கொரோனா என்னும் தீநுண்மி தாக்குகின்றது...
அடங்கிக் கிடக்கின்றது உலகம் என்கின்றார்கள், ஆனால் வழக்கம் போல சூரியன் அதன்போக்கில் உதிக்கின்றது. மழை அதன் போக்கில் பொழிகின்றது. வழக்கமான உற்சாகத்துடன் கடல் அலைகள் கரைகளைத் தொட்டு விளையாடுகின்றது...
மான்கள் துள்ளியாடுகின்றன, அருவிகள் வீழ்கின்றன, யானைகள் உலாவுகின்றன, முயல்கள் விளையாடுகின்றன, மீன்கள் வழக்கம் போல் நீந்துகின்றன...
தவளைகள் கூட துள்ளி ஆடுகின்றது, பல்லிக்கும் பயமில்லை, எலிகளும், அணில்களும் அதன் போக்கில் ஓடுகின்றன, காக்கைகளும் புறாக்களும் மைனாக்களும் சிட்டுக் குருவிகளும், ஏன்!? குளவிகளும் கூட அஞ்சவில்லை இந்நாளில்...
மானிட இனம் மட்டும் தான் அஞ்சிக் கிடக்கின்றது, மற்ற மனிதனையும் அதனால் நேசிக்கத் தயங்குகின்றது, தம் கூடுகளில் வாழும் அனைத்தையும் அணைத்துக் கொண்டு தன்னகத்தே அடக்கி, முடக்கிக் கிடக்கின்றது...
முடங்கியது உலகமல்ல, மானிடன் கண்டு வைத்த கற்பனை உலகம். அதில் அவன் மட்டும் வாழ்ந்தான், அவன் மட்டும் ஆடினான், அவனுக்கொரு உலகம் சமைத்து அதுதான் உலகமென்றான்...!
இப்பேருலகில் தானொரு தூசு என்பது அவனுக்குத் தெரியவில்லை. உழைப்பென்றான், சம்பாத்தியமென்றான், விஞ்ஞானமென்றான், என் மதம் என்றான்,என் சாதி என்றான்.என் கடவுள் என்றான்...!
உலகம் பிறந்ததும், உயிர்கள் பிறந்ததும் எனக்காக என்றான், நதியும் கடலும் எல்லாமும் எனக்காக என்றான், ஆடினான், ஆடினான் அவனால் முடிந்த மட்டும் ஆடினான். ஓடினான், பறந்தான் உயர்ந்தான் இயன்றவரை சுற்றினான்...
ஒரு தீநுண்மி கண்ணுக்குத் தெரியா ஒரேயொரு தீநுண்மி சொல்லிக் கொடுத்தது பாடம்...!
முடங்கிக் கிடக்கின்றான் மனிதன், கண்ணில் தெரிகின்றது அச்சம், நெஞ்சில் தெரிகின்றது கலக்கம்...!
பல்லிக்கும் பாம்புக்கும் நத்தைக்கும் ஆந்தைக்கும் கூட உள்ள பாதுகாப்பு தனக்கில்லை, இவ்வளவு தான் நான் என இன்று விம்முகின்றான்...
மண்புழுவிற்கும் கூட நான் சமமானவன் பலமானவன் இல்லையா என்பதில் அழுகின்றான்...
முளைத்து வரும் விதை கூட அஞ்சவில்லை, நிலைத்து விட்ட மரமும் அஞ்சவில்லை எனில், மரத்தை விட கீழானவனா நான் என நினைக்கும் பொழுது அவன் கண்ணீர் மேலும் பெருக்கெடுக்கின்றது...
மாமரத்துக் கிளி அவனைப் பகடி செய்கின்றது, காட்டுக்குள் விலங்குகளும் பறவைகளும் மரங்களும், நீர் வீழ்ச்சிகள் கூட அவர்கள் மொழியில் கேளிக்கை பேசுகின்றன, ஆட்டுமந்தைக் கூட்டங்களும் , கோழிகளும் கூட எள்ளி நகையாடுவதாகவே அவனுக்குத் தோன்றுகின்றது...
கொரோனா என்னும் தீநுண்மிக்காக மனிதன் கை கழுவிக் கொண்டு இருப்பதைப் பார்த்துக் கொண்டு இடுப்பினைச் சொறிகின்றது வானரங்கள்...
மருத்துவமனையில் அவன் அடைபட்டுக் கிடப்பதைப் பார்த்துக் கொண்டே இருக்கின்றது பண்ணையில் வளர்க்கப்படும் கோழிகள், அணிவகுத்து நிறுத்தப்பட்ட விமானங்களைக் கண்டபடி முகம் சுழித்து நகைத்தவாறே பறக்கின்றது பருந்து, நிறுத்தி வைக்கப்பட்ட கப்பலைக் கண்டு சிரிக்கின்றது மீன்கள் இனம்...
அவன் வீட்டில் முடங்கிக் கிடக்க, வாசலில் வந்து நலம் விசாரிக்கின்றது காக்கைகள், கொஞ்சிக் கேட்கின்றது சிட்டுகள், கடற்கரை வந்து சிரிக்கின்றது வலையிட்ட நண்டுகள் ...
மரத்தில் கனியினைக் கடித்தபடி இவையெல்லாம் பார்த்துச் சிரிக்கின்றது அணில்கள். வானில் உயரப் பறந்து தீநுண்மி தொற்றிய நோயாளியை உண்டாலும் எனக்கும் அச்சமில்லை என்கின்றது கழுகு...
தெருவோர நாய் பயமின்றி நடக்க, வீட்டில் ஏழு பூட்டுகளோடு முடங்கிக் கிடக்கின்றான் மனிதன்...!
தெரு நாயினை விட அவனொன்றும் தற்போது உயர்ந்தவன் அல்ல...!
அவமானத்திலும், வேதனையிலும் தலைக்கனம் உடைத்து கவிழ்ந்து கிடந்து கண்ணீர் விட்டு ஞானம் பெறுகின்றது மானிட இனம், இன்று மனிதனைக் காண்பதற்கே பாவமாக இருக்கிறது...
மனித குலத்திற்கே பெரும் அச்சுறுத்தலாக இன்று விளங்கும் இந்தக் கொரோனா தீநுண்மி தொற்று, உலகெங்கும் இருக்கும் மத நிறுவனங்களையும், சகல கடவுளர்களையும், பெரும் கேள்விகளுக்கு உள்ளாக்கி இருக்கிறது...
அனைத்துவிதமான வழிபாட்டு இடங்களிலும் மக்கள் கூட்டமாக கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது, கடவுளை மறந்துவிட்டு, மற்ற மனிதர்களைப் பற்றி மட்டும் நினைக்கத் தொடங்கி விட்டார்கள் மக்கள்...
*ஆம் நண்பர்களே...!*
நாம் அறிவியல் துணை கொண்டு இந்தக் கொரோனா என்னும் தீநுண்மியை வெல்வோம்...!
சமூக - பொருளாதார - பண்பாட்டுச் சிந்தனைகளில், தீநுண்மி ஏற்படுத்திய தாக்கம், பல நல்ல விளைவுகளை கொடுக்கும் என்று எதிர்பார்ப்போம்...!
”ஒன்றே குலம்” அதுவே மனித குலம் என எல்லோரும் எல்லைகளை கடந்து இயற்கையின் வாழ்த்துகளுடன் விஞ்ஞானத்தால் மனித குலத்தை காப்பாற்றி மனிதத்தை வாழ வைப்போம்...!
- உடுமலை சு. தண்டபாணி✒️
💐💐💐🙏🏻🌺🌺🌺
20 likes
1 comment • 22 shares