Arunachalam
915 views 1 months ago
ஒன்றிய மோடி அரசோடு இணக்கமாக இருப்பதுதான் சாதுர்யமானதா?! பாசிசத்திற்கு ஒத்திசைவாக ஒரு புதிய வாதம்! பா.ஜ.க.வும் மோடி அரசும் கொண்டுவருகிற பாசிச சட்டங்கள், திட்டங்களை மிகவும் தீவிரமாக எதிர்த்து முறியடிக்க வேண்டியது இன்றைய அவசர, அவசியப் பணியாக உள்ளது. ஆம் ஆத்மி, திரிணாமுல், சிவசேனா போன்ற கட்சிகளை உடைத்து, மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பெற பா.ஜ.க. மூர்க்கத்தனமாக முயன்றுவருகிறது. அதன்மூலம் தொகுதி மறுவரையறை, ஒரேநாடு ஒரேதேர்தல் உள்ளிட்டு அரசியல் அமைப்புச் சட்டத்தில் தான் விரும்பும் அனைத்து மாற்றங்களையும் செய்யத் தீவிரமாக முயன்று வருகிறது. “2024 தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெறாத காரணத்தினால் மோடி அரசு முந்தைய ஆட்சியைப் போல தனது பாசிசத் திட்டங்களை வேகமாக நடைமுறைப்படுத்த இயலாது; சந்திரபாபு நாயுடு நிதிஷ் போன்றோர் அதற்குக் கடிவாளமாக இருப்பார்கள்” என்று முன்வைக்கப்பட்ட ஆருடங்கள் எல்லாம் பொய்யாகிப் போயுள்ளன. நிதிஷையும் சந்திரபாபு நாயுடுவையும் விடுங்கள், “உறுதியான பாசிச எதிர்ப்பு சக்தி” என்று முன்வைக்கப்பட்ட “இந்தியா” கூட்டணியில் இருக்கும் கட்சிகளே ஊழல்வாதிகள், பிழைப்புவாதிகள் என்ற உண்மை அம்பலமாகி நாறுகிறது. ரூ. 40 கோடி 50 கோடிக்கு ஆசைப்பட்டும்; ஊழல் வழக்குகளைக் கண்டஞ்சியும் பா.ஜ.க. கூட்டணிக்குத் தாவி வரும் இவர்களின் “பாசிச எதிர்ப்பின் யோக்கியதை” சந்தி சிரித்து ஊரே நாறுகிறது! “மக்கள்தான் பாசிசத்தை உறுதியாக எதிர்க்க முடியும்; இந்தியா கூட்டணி ஒரு சந்தர்ப்பவாதப் பிழைப்புவாதக் கூட்டணி” என்று செங்கனல் எழுதியபோதெல்லாம் எள்ளி நகையாடிவிட்டு, “இந்தியா கூட்டணிதான் பாசிச எதிர்ப்பில் தற்போதைய ஒரே நம்பிக்கை” என்று பேசியவர்கள் இன்று விஜயைப் போன்றே கள்ள மெளனம் காக்கின்றனர். மேற்கூறிய சம்பவங்கள் அனைத்தும் பாசிசம் முன்னெப்போதையும் விட வேகமாகவும் மூர்க்கத்தனமாகவும் தீவிரமாகவும் முன்னேறி வருவதையே நிரூபிக்கின்றன. இந்தச் சூழலில், முன்னெப்போதையும் விட பா.ஜ.க. எதிர்ப்பு, மோடி அரசு எதிர்ப்பு, பாசிச எதிர்ப்பு – ஆகியவற்றைத் தீவிரப்படுத்த வேண்டும் என்பது சொல்லாமலே விளங்கும்! ஆனால், அதற்கு நேரெதிராக, பா.ஜ.க. எதிர்ப்பு, மோடி அரசு எதிர்ப்பு, மத்திய அரசு எதிர்ப்பு – போன்றவை “தேவையற்றவை” அவர்களோடு “இணக்கமாக இருப்பதே சாதுர்யமானது” என்ற மனநிலை தமிழகத்தில் நைச்சியமாகத் திணிக்கப்பட்டு வருகிறது. ஜனநாயகன் படத்தை முடக்கியது, தனிப்பெரும்பான்மை பெற்றும் ஆட்சியமைக்க விடாமல் தடுத்தது போன்ற தன்னுடைய சொந்தப் பிரச்சனைகளுக்குக் கூட ஒன்றிய பா.ஜ.க. அரசை எதிர்த்து விஜய் பேசவில்லை. ஒன்றிய அரசு, மோடி, பா.ஜ.க போன்ற வார்த்தைகள் கூட விஜய் வாயிலிருந்தோ, தவெக அமைச்சர்கள் வாயிலிருந்தோ வருவதில்லை. இதை திமுக உள்ளிட்ட கட்சிகள் விமர்சிக்கின்றன. இதற்கு மாற்றாகவே மேற்கூறிய மனநிலைமை நைச்சியமாக உருவாக்கப்படுகிறது. “கடந்த சில ஆண்டுகளாக திமுக ஒன்றிய அரசோடு தேவையில்லாமல் சண்டையிட்டு இணக்கமற்ற போக்கைக் கடைபிடித்தது; எதற்கெடுத்தாலும் பாஜக, மோடி, ஒன்றிய அரசு எனத் தேவையின்றிப் பேசினர்; கடந்த 2026 தேர்தலைக்கூட ‘டெல்லி vs தமிழ்நாடு’ என்ற முழக்கத்தை முன்வைத்தது மக்களிடையே எடுபடவில்லை; எனவே, ஒன்றிய அரசோடு ஏன் முரண்பட வேண்டும்; இணக்கமாக இருந்து மாநிலத்திற்குத் தேவையான திட்டங்களைச் சாதித்துக் கொள்வதுதான் சாதுர்யமானது” என்று கடந்த சில வாரங்களாக பொதுவெளிகளிலும் தொலைக்காட்சி விவாதங்களிலும் பலர் பேசி வருகின்றனர். மேலும் எடுப்பாகச் சொல்வதென்றால், “முந்தைய ஆட்சியில் ஆளுநர் ரவியோடு திமுக தேவையற்ற மோதல் போக்கைக் கடைபிடித்தது; ஆனால், தற்போதைய தவெக அரசைப் பாருங்கள், சாதுர்யமாக ஆளுநர் உரையை வாசிக்க வைப்பதில் வெற்றிபெற்றுள்ளது; இவையெல்லம் விஜயின் இராஜதந்திர வெற்றிகள்” என்றெல்லாம் விதந்தோதப்படுகிறது. இன்றைய (23.06.26) தனது சட்டமன்ற உரையில், “ஒன்றிய அரசோடு சும்மா நாங்கள் சண்டைபோடமாட்டோம்” என்று மேற்கூறிய கருத்துக்கு ஒத்திசைவாக விஜய் திருவாய் மலர்ந்துள்ளார். திமுக பா.ஜ.க.வையும் மோடி அரசையும் தனது ஓட்டுச் சீட்டுக் கணக்குகளில் இருந்தே எதிர்க்கிறது என்பதுதான் உண்மை. பாசிச எதிர்ப்பு என்று நாடகமாடிக் கொண்டே பா.ஜ.க.வோடு இணக்கமான போக்கைக் கடைபிடித்துவிட்டு, பெயரளவில் சில திட்டங்கள், சட்டங்களை எதிர்ப்பது போல நாடகமாடியது என்பதே உண்மை. ஆனால், இந்தப் பெயரளவிலான எதிர்ப்பு கூடத் தேவையில்லை என்னும் அரசியல் மனநிலை தமிழகத்தில் மெல்ல மெல்ல நுழைக்கப்படுகிறது. இது மிகவும் ஆபத்தான போக்காகும். மக்களிடையே இருக்கும் கொஞ்ச நஞ்ச பா.ஜ.க. எதிர்ப்பு, மோடி எதிர்ப்பு மனநிலையையும் மழுங்கடிக்கச் செய்து பாசிசத்திற்கு ஒத்திசைவான முறையில் சேவையாற்றுவதாகும். மேலே கூறியதுபோல, பாசிசம் மூர்க்கமாக முன்னேறித் தாக்கிவரும் இன்றைய சூழலில், “மத்திய அரசோடு மோதல் போக்கு கூடாது; இணக்கமாக இருக்க வேண்டும்” என்பது போன்ற வாதங்கள் அபத்தமானவை மட்டுமல்ல, ஆபத்தானவையும் ஆகும். இவற்றை அம்பலப்படுத்தித் தனிமைப்படுத்துவது பாசிச எதிர்ப்பைக் கூர்மைப்படுத்துவதில் முக்கியப் பணியாகும்! #TVKVijay #TVKITWING #senkanal #👨மோடி அரசாங்கம்
14 likes
28 shares

More like this