A Mohan Raj
1K views 9 days ago
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #சிவன் #திருமுறை #பன்னிரு திருமுறை *"திருமுறை ஓதாய் திருமுறையே தாய்"* தினம் ஒரு திருமுறை அறிவோம் 🙏 *பன்னிரெண்டாம் திருமுறை* *பெரியபுராணம் அல்லது திருத்தொண்டர் புராணம் என்பது சேக்கிழார் பெருமான் அவர்களால் பெருங்காப்பிய இலக்கணங்கள் பலவும் கொண்டதாக இயற்றப்பெற்ற சைவ காப்பியமாகும். சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டத் தொகை எனும் நூலை முதல் நூலாகக் கொண்டும். சுந்தரமூர்த்தி சுவாமிகளைக் காப்பிய தலைவராகக் கொண்டும், அவர் போற்றிய சைவ அடியார்களின் வாழ்க்கை வரலாற்றினையும் இந்நூலில் சேக்கிழார் பெருமான் விவரிக்கிறார்.* *சுந்தரமூர்த்தி நாயனார் அருளிச் செய்த 11 பாடல்களைக் கொண்ட திருத்தொண்டத் தொகை, நம்பியாண்டார் நம்பி எழுதிய 90 பாடல்களைக் கொண்ட திருத்தொண்டர் திருவந்தாதி ஆகியவற்றை மூலநூல்களாகக் கொண்டும், இரண்டாம் குலோத்துங்க சோழனிடம் அமைச்சராக இருந்த சேக்கிழார் பெருமான் பல ஊர்களுக்கும் சென்று திரட்டிய தகவல்களைக் கொண்டும் பெரியபுராணம் எழுதப் பெற்றுள்ளது. இரண்டாம் குலோத்துங்க சோழனின் ஆணையின்படி தில்லைக்குச் சென்றவர், அங்கிருக்கும் இறைவனான நடராஜர் பெருமான் உலகெலாம் என்று அடியெடுத்துக் கொடுக்க சேக்கிழார் உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன் எனப் பெரியபுராணத்தினைத் தொடங்கினார்.* *பெரியபுராணம் முதல் காண்டம், இரண்டாம் காண்டமென இரு காண்டமாகவும், முதல் காண்டத்தில் ஐந்து சருக்கங்களையும், இரண்டாம் காண்டத்தில் எட்டுச் சருக்கங்களையும் உடையதாக அமைக்கப்பெற்றுள்ளது. சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டத் தொகையில் இடம்பெற்றுள்ள பாடல்களின் முதல் வரியே சருக்கங்களின் பெயர்களாக உள்ளது.* *காப்பிய தொகுப்பானது கயிலாயத்தில் தொடங்கப்பெற்றுச் சைவ அடியார்களின் வாழ்க்கையை விவரித்து, இறுதியாகக் கயிலாயத்தில் முடிகிறது.* *முதற் காண்டத்தில், திருமலைச் சருக்கம், தில்லை வாழ் அந்தணர் சருக்கம், இலை மலிந்த சருக்கம், மும்மையால் உலகாண்ட சருக்கம், திருநின்ற சருக்கம் என்ற ஐந்து சருக்கங்களும்,* *இரண்டாம் காண்டத்தில், வம்பறா வரிவண்டுச் சருக்கம், வார்கொண்ட வனமுலையாள் சருக்கம், பொய்யடிமையில்லாத புலவர் சருக்கம், கறைக்கண்டன் சருக்கம், கடல்சூழ்ந்த சருக்கம், பத்தராய்ப் பணிவார் சருக்கம், மன்னிய சீர்ச் சருக்கம், வெள்ளானைச் சருக்கம் என்னும் 8 சருக்கங்களும் அமைந்துள்ளன.* *இடைக்கால இலக்கியத்தில் மக்களின் வாழ்க்கை பற்றி வரலாற்றுப் போக்கில் அறிவதற்கு இந்நூல் உதவுகிறது. நான்காயிரத்து இருநூற்று எண்பத்து ஆறு (4286) செய்யுள்களைக் கொண்ட இப்புராணத்தில் ஆளுடையபிள்ளை எனப்படும் திருஞானசம்பந்தரின் வரலாறு மட்டும் 1256 செய்யுட்களால் விரிவாகக் கூறப்பட்டுள்ளதால் "பிள்ளை பாதி; புராணம் பாதி" என்கிற பழமொழி ஏற்பட்டது.* இறைவனின் திருநாமம் - சிற்சபை: ஆனந்தநடராஜ மூர்த்தி, மூலஸ்தானம்: ஸ்ரீ மூலநாதர் இறைவி - சிற்சபை: சிவகாமசுந்தரி, மூலஸ்தானம்: உமாபார்வதி அமைவிடம் : கோயில் (சிதம்பரம், தில்லை) சோழநாடு காவிரி வடகரைத் ஸ்தலம் பதிகம் பற்றிய சுருக்கமான *பன்னிரெண்டாம் திருமுறையில் இருந்து சேக்கிழார் பெருமான் அருளிய திருத்தொண்டர் புராணம் - இலை மலிந்த சருக்கம் - எறிபத்த நாயனார் புராணம்* *எறிபத்த நாயனார் புராணம் என்பது சேக்கிழார் பெருமானால் இயற்றப்பட்ட பன்னிரண்டாம் திருமுறையான பெரிய புராணத்தில், முதற் காண்டத்தில் உள்ள "இலை மலிந்த சருக்கம்" என்னும் பகுதியில் ஒன்பதாவது புராணமாக இடம்பெற்றுள்ளது. சுந்தரமூர்த்தி நாயனாரின் திருத்தொண்டத் தொகையில் வரும் "இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தர்க்கு அடியேன்" என்ற அடியை அடிப்படையாகக் கொண்டு இந்த வரலாறு விரித்துரைக்கப்பட்டுள்ளது. சிவனடியார்களுக்குத் துன்பம் விளைவிப்போரைத் தன் கையில் எப்போதும் இருக்கும் 'மழு' (கோடரி) என்னும் ஆயுதத்தால் தண்டிப்பதே இவரின் சிவத்தொண்டாக இருந்தது.* பாடல் வரிகள் : *பன்னிரெண்டாம் திருமுறையில் இருந்து சேக்கிழார் பெருமான் அருளிய திருத்தொண்டர் புராணம் - இலை மலிந்த சருக்கம் - எறிபத்த நாயனார் புராணம்* அறுசீர் விருத்தம் மல்லல் நீர்ஞாலந் தன்னுள் மழவிடை உடையான் அன்பர்க்கு ஒல்லை வந்துஉற்ற செய்கை உற்றிடத்து உதவும் நீரார் எல்லையில் புகழின் மிக்க எறிபத்தர் பெருமை எம்மால் சொல்லலாம் படித்து அன்றேனும் ஆசையால் சொல்லல் உற்றாம். 1 பொன் மலைப்புலி வென்றுஓங்கப் புதுமலை இடித்துப் போற்றும் அந்நெறி வழியே ஆகஅயல் வழி அடைத்த சோழன் மன்னிய அநபாயன் சீர் மரபின் மாநகர மாகும் தொன்நெடுங் கருவூர் என்னுஞ்சுடர் மணி வீதி மூதூர். 2 மாமதில் மஞ்சுசூழும் மாளிகை நிரை விண் சூழும் தூமணி வாயில் சூழும் சோலையில் வாசம் சூழும் தேமலர் அளகஞ் சூழும் சிலமதி தெருவிற் சூழும் தாம் மகிழ்ந்து அமரர்சூழும் சதமகன் நகரம் தாழ. 3 கடகரி துறையில் ஆடும்களி மயில் புறவில் ஆடும் அடர்மணி அரங்கில் ஆடும் அரிவையர் குழல் வண்டுஆடும் படரொளி மறுகில் ஆடும்பயில் கொடி கதிர் மீதுஆடும் தடம்நெடும் புவி கொண்டாடும் தனிநகர் வளமை ஈதால். 4 மன்னிய சிறப்பின் மிக்கவள நகர் அதனில் மல்கும் பொன்னியல் புரிசை சூழ்ந்து சுரர்களும் போற்றும் பொற்பால் துன்னிய அன்பின் மிக்கதொண்டர் தம் சிந்தை நீங்கா அந்நிலை அரனார் வாழ்வது ஆனிலை என்னும் கோயில். 5 பொருட்டிரு மறை கடந்த புனிதரை இனிது அக்கோயில் மருட்டுறை மாற்றும் ஆற்றால் வழிபடும் தொழிலர் ஆகி இருட்கடு ஒடுங்கு கண்டத்து இறையவர்க்கு உரிமை பூண்டார்க்கு அருட்பெரும் தொண்டு செய்வார் அவர் எறிபத்தர் ஆவார். 6 மழைவளர் உலகில் எங்கும் மன்னிய சைவம் ஓங்க அழலவிர் சடையான் அன்பர்க்கு அடாதன அடுத்த போது முழையரி என்னத் தோன்றிமுரண் கெட எறிந்து தீர்க்கும் பழமறை பரசும் தூய பரசுமுன் எடுக்கப் பெற்றார். 7 அண்ணலார் நிகழும் நாளில் ஆனி லைஅடிக ளார்க்குத் திண்ணிய அன்பு கூர்ந்த சிவகாமி ஆண்டார் என்னும் புண்ணிய முனிவனார் தாம்பூப் பறித்து அலங்கல் சாத்தி உண்ணிறை காதலோடும் ஒழுகுவார் ஒருநாள் முன் போல். 8 வைகறை உணர்ந்து போந்துபுனல் மூழ்கி வாயும் கட்டி மொய்ம்மலர் நெருங்கு வாச நந்தன வனத்து முன்னிக் கையினில் தெரிந்து நல்லகமழ் முகை அலரும் வேலைத் தெய்வ நாயகருக்குச் சாத்தும்திருப் பள்ளித் தாமம் கொய்து. 9 கோலப் பூங்கூடை தன்னை நிறைத்தனர் கொண்டு நெஞ்சில் வாலியநேசம் கொண்டு மலர்க் கையில் தண்டும் கொண்டங்கு ஆலயம் அதனை நோக்கி அங்கணர்க்கு அமைத்துச் சாத்தும் காலை வந்துஉதவ வேண்டிக் கடிதினில் வாரா நின்றார். 10 மற்றவர் அணைய இப்பால் வளநகர் அதனில் மன்னும் கொற்றவர் வளவர் தங்கள்குலப் புகழ்ச் சோழனார் தம் பற்றலர் முனைகள் சாய்க்கும் பட்ட வர்த்தனமாம் பண்பு பெற்றவெங் களிறு கோலம் பெருகு மாநவமி முன்னாள். 11 மங்கல விழைவு கொண்டுவரு நதித் துறை நீராடிப் பொங்கிய களிப்பினோடும் பொழி மதம் சொரிய நின்றார் எங்கணும் இரியல் போகஎதிர் பரிக் காரர் ஓடத் துங்கமால் வரைபோல் தோன்றித் துண்ணென அணைந்தது அன்றே. 12 வென்றிமால் யானை தன்னை மேல் கொண்ட பாகரோடும் சென்றுஒரு தெருவின் முட்டிச் சிவகாமியார் முன் செல்ல வன்தனித் தண்டில் தூங்கும் மலர்கொள் பூக்கூடை தன்னைப் பின்தொடர்ந்து ஓடிச் சென்று பிடித்துமுன் பறித்துச் சிந்த. 13 மேல்கொண்ட பாகர் கண்டு விசைகொண்ட களிறு சண்டக் கால்கொண்டு போவார் போலக் கடிதுகொண்டு அகலப் போக நூல்கொண்ட மார்பின் தொண்டர் நோக்கினர் பதைத்துப் பொங்கி மால்கொண்ட களிற்றின் பின்பு தண்டுகொண்டு அடிக்க வந்தார். 14 அப்பொழுது அணைய ஒட்டாது அடற் களிறு அகன்றுபோக மெய்ப்பெருந் தொண்டர் மூப்பால் விரைந்து பின்செல்ல மாட்டார் தப்பினர் விழுந்து கையால்தரை அடித்து எழுந்து நின்று செப்புஅரும் துயரம்நீடிச் செயிர்த்து முன் சிவதா என்பார். 15 வேறு - கலிவிருத்தம் களி யானையின் ஈர்உரியாய் சிவதா! எளியார் வலியாம் இறைவா! சிவதா! அளியார் அடியார் அறிவே! சிவதா! தெளிவார் அமுதே! சிவதா! சிவதா!. 16 ஆறும் மதியும் அணியும் சடைமேல் ஏறும் மலரைக் கரிசிந் துவதே வேறுள் நினைவார் புரம்வெந்து அவியச் சீறும் சிலையாய்! சிவதா! சிவதா!. 17 தஞ்சே சரணம் புகுதுந் தமியோர் நெஞ்சே துயரம் கெடநேர் தொடரும் மஞ்சே எனவீழ் மறலிக்கு இறைநீள் செஞ்சே வடியாய்! சிவதா! சிவதா!. 18 நெடியோன் அறியா நெறியார் அறியும் படியால் அடிமைப் பணிசெய்து ஒழுகும் அடியார் களில்யான் ஆரா அணைவாய் முடியா முதலாய் எனவே மொழிய. 19 வேறு - அறுசீர் விருத்தம் என்றவர் உரைத்த மாற்றம் எறிபத்தர் எதிரே வாரா நின்றவர் கேளாமூளும் நெருப்பு உயிர்த்து அழன்று பொங்கி மன்றவர் அடியார்க்கு என்றும்வழிப் பகை களிறே அன்றோ கொன்று அதுவீழ்ப்பன் என்று கொலை மழுஎடுத்து வந்தார். 20 வந்தவர் அழைத்த தொண்டர்தமைக் கண்டு வணங்கி உம்மை இந்தவல் இடும்பை செய்த யானை எங்குற்றது என்ன எந்தையார் சாத்தும் பூவைஎன் கையில் பறித்து மண்மேல் சிந்திமுன் பிழைத்துப் போகா நின்றது இத்தெருவே என்றார். 21 இங்கது பிழைப்பது எங்கே இனிஎன எரிவாய் சிந்தும் அங்கையின் மழுவும் தாமும் அனலும் வெங்காலும் என்னப் பொங்கிய விசையில் சென்றுபொரு கரி தொடர்ந்து பற்றும்* செங்கண் வாள்அரியிற் கூடிக் கிடைத்தனர் சீற்ற மிக்கார். (*தொடர்ந்து செல்லும் என்றும் பாடம்) 22 கண்டவர் இதுமுன்பு அண்ணல் உரித்த அக்களிறே போலும் அண்டரும் மண் உளோரும் தடுக்கினும் அடர்த்துச் சிந்தத் துண்டித்துக் கொல்வேன் என்றுசுடர் மழு வலத்தில் வீசிக் கொண்டு எழுந்து ஆர்த்துச்சென்று காலினால் குலுங்கப் பாய்ந்தார். 23 பாய்தலும் மிசைகொண்டு உய்க்கும் பாகரைக் கொண்டு சீறிக் காய்தழல் உமிழ்கண் வேழம் திரிந்து மேற்கதுவ அச்சம் தாய்தலை அன்பின் முன்பு நிற்குமே தகைந்து பாய்ந்து தோய்தனித் தடக்கை வீழ மழுவினால் துணித்தார் தொண்டர். 24 கையினைத் துணித்த போதுகடல் எனக் கதறி வீழ்ந்து மைவரை அனைய வேழம் புரண்டிட மருங்கு வந்த வெய்யகோல் பாகர் மூவர் மிசை கொண்டார் இருவர்ஆக ஐவரைக் கொன்று நின்றார் அருவரை அனைய தோளார். 25 வெட்டுண்டு பட்டுவீழ்ந்தார் ஒழிய மற்று உள்ளார் ஓடி மட்டவிழ் தொங்கல் மன்னன் வாயில் காவலரை நோக்கி பட்ட வர்த்தனமும் பட்டுப் பாகரும் பட்டார் என்று முட்ட நீர்கடிது புக்கு முதல்வனுக்கு உரையும் என்றார். 26 மற்றவர் மொழிந்த மாற்றம் மணிக்கடை காப்போர் கேளாக் கொற்றவன் தன்பால் எய்திக்குரை கழல் பணிந்து போற்றிப் பற்றலர் இலாதாய் நின்பொற் பட்டமால் யானை வீழச் செற்றனர் சிலராம் என்று செப்பினார் பாகர் என்றார். 27 வளவனும் கேட்ட போதில் மாறின்றி மண் காக்கின்ற கிளர்மணித் தோள் அலங்கல் சுரும்பினம் கிளர்ந்து பொங்க அளவில் சீற்றத்தினாலே யார் செய்தார் என்றும் கேளான் இளஅரி ஏறுபோல எழில் மணி வாயில் நீங்க. 28 தந்திரத் தலைவர் தாமும் தலைவன்தன் நிலைமை கண்டு வந்துறச் சேனை தன்னைவல் விரைந்து எழமுன் சாற்ற அந்தரத்து அகலம் எல்லாம் அணிதுகில் பதாகை தூர்ப்ப எந்திரத்தேரும் மாவும் இடை இடை களிறும் ஆகி. 29 வில்லொடு வேல்வாள் தண்டு பிண்டி பாலங்கள் மிக்க வல்லெழும் உசலம் நேமிமழுக் கழுக்கடை முன் ஆன பல்படைக் கலன்கள் பற்றிப் பைங்கழல் வரிந்தவன் கண் எல்லையில் படைஞர் கொட்புற்று எழுந்தனர் எங்கும் எங்கும். 30 சங்கொடு தாரை காளம் தழங்கொலி முழங்கு பேரி வெங்குரல் பம்பை கண்டைவியன் துடி திமிலை தட்டி பொங்கொலிச் சின்னம் எல்லாம்பொரு படை மிடைந்த பொற்பின் மங்குல் வான்கிளர்ச்சி நாண மருங்கு எழுந்து இயம்பிமல்க. 31 தூரியத் துவைப்பும் முட்டுஞ்சுடர்ப் படை ஒலியும் மாவின் தார்மணி இசைப்பும் வேழ முழக்கமும் தடந்தேர்ச் சீரும் வீரர்தஞ்செருக்கின் ஆர்ப்பும் மிக்கு எழுந்து ஒன்றாம் எல்லைக் காருடன் கடைநாள் பொங்கும் கடல்எனக் கலித்த அன்றே. 32 பண்ணுறும் உறுப்பு நான்கில் பரந்து எழுசேனை எல்லாம் மண்ணிடை இறுகால் மேன்மேல் வந்து எழுந்ததுபோல் தோன்றத் தண்ணளிக் கவிகை மன்னன் தானைபின் தொடரத் தானோர் அண்ணலம் புரவி மேற்கொண்டு அரச மாவீதி சென்றான். 33 கடுவிசை முடுகிப் போகிக் களிற்றொடும் பாகர் வீழ்ந்த படுகளம் குறுகச் சென்றான் பகைபுலத்து அவரைக் காணான் விடுசுடர் மழுஒன்று ஏந்தி வேறு இருதடக் கைத்தாய அடுகளிறு என்ன நின்ற அன்பரை முன்பு கண்டான். 34 பொன்தவழ் அருவிக் குன்றம் எனப்புரள் களிற்றின் முன்பு நின்றவர் மன்றுள் என்றும் நிருத்தமே பயிலும் வெள்ளிக் குன்றவர் அடியார் ஆனார் கொன்றவர் இவரென்று ஓரான் வென்றவர் யாவர் என்றான் வெடிபட முழங்கும் சொல்லான். 35 அரசன் ஆங்கருளிச் செய்ய அருகு சென்றணைந்து பாகர் விரை செய்தார் மாலையோய்நின் விறற் களிற்று எதிரேநிற்கும் திரை செய்நீர் உலகின் மன்னர் யாருளார் தீங்குசெய்தார் பரசு முன்கொண்டு நின்ற இவர்எனப் பணிந்து சொன்னார். 36 குழை யணிகாதி னானுக்கு அன்பராம் குணத்தின் மிக்கார் பிழை படின்அன்றிக் கொல்லார் பிழைத்தது உண்டுஎன்று உட்கொண்டு மழை மதயானை சேனை வரவினை மாற்றி மற்ற உழை வயப்புரவி மேல் நின்று இழிந்தனன் உலகமன்னன். 37 மைத்தடம் குன்று போலும் மதக் களிற்று எதிரேஇந்த மெய்த்தவர் சென்றபோது வேறு ஒன்றும் புகுதா விட்ட அத்தவம் உடையேன் ஆனேன் அம்பல வாணர் அன்பர் இத்தனை முனியக் கெட்டேன்என் கொலோ பிழைஎன்று அஞ்சி. 38 செறிந்தவர் தம்மைநீக்கி அன்பர் முன்தொழுது சென்று ஈது அறிந்திலேன் அடியேன் அங்குக் கேட்டது ஒன்றதுதான் நிற்க மறிந்த இக்களிற்றின் குற்றம் பாகரோடு இதனை மாள எறிந்ததே போதுமோதான் அருள் செய்யும் என்று நின்றார். 39 மன்னவன் தன்னை நோக்கி வானவர் ஈசர் நேசர் சென்னி இத்துங்க வேழம் சிவகாமி ஆண்டார் கொய்து பன்னக ஆபரணர்ச் சாத்தக் கொடுவரும் பள்ளித் தாமம் தன்னை முன்பறித்துச் சிந்தத் தரைபடத் துணித்து வீழ்த்தேன். 40 மாதங்கம் தீங்கு செய்ய வரு பரிக்காரர் தாமும் மீதங்கு கடாவு வாரும் விலக்கிடாது ஒழிந்து பட்டார் ஈதிங்கு நிகழ்ந்தது என்றார் எறிபத்தர் என்ன அஞ்சிப் பாதங்கள் முறையால் தாழ்ந்து பருவரைத் தடந்தோள் மன்னன். 41 அங்கணர் அடியார் தம்மைச் செய்த இவ்வப ராதத்துக்கு இங்கிது தன்னால் போதாது என்னையும் கொல்ல வேண்டும் மங்கல மழுவால் கொல்கை வழக்குமன்று இதுவாம் என்று செங்கையால் உடைவாள் வாங்கிக் கொடுத்தனர் தீர்வு நேர்வார். 42 வெந்தழல் சுடர்வாள் நீட்டும் வேந்தனை நோக்கிக் கெட்டேன் அந்தமில் புகழான் அன்புக்கு அளவின்மை கண்டேன் என்று தந்தவாள் வாங்க மாட்டார் தன்னைத் தான்துறக்கும் என்று சிந்தையால் உணர்வுற்று அஞ்சி வாங்கினார் தீங்கு தீர்ப்பார். 43 வாங்கிய தொண்டர் முன்பு மன்னனார் தொழுது நின்றே ஈங்கெனை வாளினால் கொன்று என்பிழை தீர்க்க வேண்டி ஓங்கிய உதவி செய்யப் பெற்றனன் இவர்பால் என்றே ஆங்கவர் உவப்பக் கண்ட எறிபத்தர் அதனுக்கு அஞ்சி. 44 வன்பெருங் களிறுபாகர் மடியவும் உடை வாளைத் தந்து என்பெரும் பிழை யினாலே என்னையும் கொல்லும் என்னும் அன்பனார் தமக்குத் தீங்கு நினைந்தனன் என்று கொண்டு முன்பெனது உயிர் செகுத்து முடிப்பதே முடிவென்று எண்ணி. 45 புரிந்தவர் கொடுத்த வாளை அன்பர் தம்கழுத்தில் பூட்டி அரிந்திடல் உற்ற போதில் அரசனும் பெரியோர் செய்கை இருந்தவாறு இது என் கெட்டேன் என்று எதிர் கடிதிற் சென்று பெருந்தடந் தோளால் கூடிப் பிடித்தனன் வாளும் கையும். 46 வளவனார் விடாது பற்ற மாதவர் வருந்து கின்ற அளவிலாப் பரிவில் வந்த இடுக்கணை அகற்ற வேண்டிக் களமணி களத்துச் செய்ய கண்ணுதல் அருளால் வாக்குக் கிளரொளி விசும்பின் மேல் வந்தெழுந்தது பலரும் கேட்ப. 47 தொழுங்கை அன்பின் மிக்கீர்! தொண்டினை மண் மேற்காட்டச் செழுந் திருமலரை இன்று சினக்கரி சிந்தத் திங்கள் கொழுந்தணி வேணிக் கூத்தர் அருளினால் கூடிற்றென்று அங்கு எழுந்தது பாக ரோடும் யானையும் எழுந்தது அன்றே. 48 ஈரவே பூட்டும் வாள்விட்டு எறிபத்தர் தாமும் அந்த நேரியர் பெருமான் தாள்மேல் விழுந்தனர் நிருபர் கோனும் போர்வடி வாளைப் போக எறிந்தவர் கழல்கள் போற்றிப் பார்மிசை பணிந்தான் விண்ணோர் பனிமலர் மாரி தூர்த்தார். 49 இருவரும் எழுந்து வானில் எழுந்த பேரொலியைப் போற்ற அருமறைப் பொருளாய் உள்ளார் அணிகொள் பூங்கூடை தன்னில் மருவிய பள்ளித் தாமம் நிறைந்திட அருள மற்றுஅத் திருவருள் கண்டு வாழ்ந்து சிவகாமி யாரும் நின்றார். 50 திருச்சிற்றம்பலம் 🕉️🙏 ஓம் நமசிவாயம் 🕉️🙏 சிவாய நம ஓம் 🕉️🙏 நற்றுணையாவது நாதன் நாமம் நமச்சிவாயவே🕉️ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
16 shares

More like this