செ.சாா்லஸ் செபஸ்டின்
642 views • 19 days ago
#இன்றைய வேத வசனம் #இன்றைய இறைவார்த்தை #இன்றைய வசனம் சிந்தனை*
*"எல்லா உயிர்களுக்கும் உணவளிக்கும் இறைவன்"*
ஆதரவற்றவர்களுக்கும், பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்ட வயது முதிய பெற்றோருக்கும், ஏழைகளுக்கும் உணவளிக்கவேண்டும் என்பதற்காகத் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கும் ஒரு மனிதரை உங்களுக்குத் தெரியுமா? அவர் யாரென்று சொல்கிறேன். கேளுங்கள்.
திருச்சியில் உள்ள பீம் நகரைச் சார்ந்தவர் திரு. பாரதி. பொறியியல் படிப்பைப் படித்து முடித்தவரான இவர், சொந்தமாகத் தொழில் செய்து வருகின்றார். இவர் தான் வசித்து வரும் பகுதியில் ஆதரவற்றவர்களும், பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்ட வயதுமுதிர்ந்த பெற்றோர்களும், வறியவர்களும் உணவின்றிப் பட்டினி கிடப்பதைக் கண்டார். இதைப் பார்த்துவிட்டு, அவர்கள்மீது பரிவுகொண்ட இவர், அவர்களுக்கு உணவளிக்கவேண்டும் என்பதற்காக 2002 ஆம் ஆண்டு ‘உதவும் மனங்கள்’ என்றோர் அமைப்பைத் தொடங்கினார்.
இந்த அமைப்பின் மூலம் இவர் ஒவ்வொருநாளும் எழுபது பேர்களுக்கும் மேல் மதிய உணவு அளிக்கத் தொடங்கினார். ஆண்டுகள் மெல்ல உருண்டோடத் தொடங்கியபொழுது, இவருடைய வீட்டில் இருந்தவர்கள் இவரிடம், திருமணம் செய்துகொள்ளச் சொன்னபொழுது, இவர் அவர்களிடம், “திருமணம் செய்துகொண்டால் மனைவி, குழந்தைகள் என்று ஆகிவிடும். அதனால் பசியோடு இருக்கும் முதியர்களுக்கு உணவளிக்க முடியாமல் போய்விடும்” என்று சொல்லி திருமணம் செய்துகொள்ளலேயே பணிசெய்து வருகின்றார். சிலநேரங்களில் இவர் தயாரித்த உணவின் அளவை விடவும் மிகுதியான எண்ணிக்கையில் ஆள்கள் வந்துவிடுவார்கள். அப்படிப்பட்ட நேரங்களில் இவர் பக்கத்தில் உள்ள உணவகங்களில் உணவு வாங்கித் தந்து, அவர்களுடைய பசியை ஆற்றுவார்.
இப்படி 2002 ஆம் ஆண்டு முதல் இன்றுவரை ஆதரவற்றவர்களுக்கு உணவளித்து வரும் இவர், நற்செய்தியில் ஆண்டவர் இயேசு பசியோடு இருந்த மக்களுக்கு உணவளிப்பதை நமக்கு நினைவுபடுத்துபவராக இருக்கின்றார். பொதுக்காலம் பதினெட்டாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, எல்லா உயிர்களுக்கும் உணவளிக்கும் இறைவன் என்ற செய்தியை நமக்கு எடுத்துச் சொல்கின்றது. அதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
*தனிமையைத் தேடி வந்தபோதும், தன்னிடம் வந்தவரிடம் பரிவுகொண்ட இயேசு*
‘உண்மையின் உரைகல்லாக’ இருந்த திருமுழுக்கு யோவான், ஏரோது மன்னனிடம் தவற்றைச் சுட்டியதால், அவன் அவரைத் தலைவெட்டிக் கொன்றுபோட்டான். இச்செய்தியைக் கேள்விப்படும் இயேசு தனிமையான ஓர் இடத்திற்கு வருகின்றார். லூக்கா நற்செய்தியாளர் இயேசு வந்த அந்தத் தனியான இடம் பெத்சாய்தா (லூக் 9:10) என்று குறிப்பிடுவார். இப்படித் தனிமையான ஓர் இடம்தேடி வந்த இயேசுவைத் தேடி மக்கள் வருகின்றார்கள். அப்பொழுது இயேசு, ‘நாமோ தனிமையான இடம்தேடி வந்திருக்கின்றோம்...! இங்கேயும் இவர்கள் வந்துவிட்டார்களே!’ என்று அவர்கள்மீது சினம் கொள்ளவில்லை. மாறாக அவர்கள்மீது அவர் பரிவுகொண்டு, அவர்களிடம் இருந்த உடல் நலமற்றவர்களை நலப்படுத்துகின்றார்.
இயேசுவுக்கு, தான் இந்த மண்ணுலகத்தில் இருக்கப்போவது குறுகிய காலம்தான் என்று தெரிந்ததால், அவர் தனக்கு வாய்ப்புக் கிடைக்கும்பொழுதெல்லாம் மக்களுக்கு நன்மைகளைச் செய்துகொண்டே இருந்தார். இயேசு தனக்கு வாய்ப்புக் கிடைத்தபொழுதெல்லாம் நன்மை செய்துகொண்டே இருந்தார் எனில் (திப 10: 38), நாமும் நமக்கு வாய்ப்புக் கிடைக்கும்பொழுதெல்லாம் நன்மைகளைச் செய்ய கடமைப்பட்டவர்களாக இருக்கின்றோம் என்பதை நம் நினைவில் வைத்துக்கொள்வது நல்லது.
*முடியாது என்று தயங்கிய சீடர்கள்*
இயேசு தன்னைத் தேடி வந்த மக்கள் நடுவில் இருந்த உடல்நலம் குன்றியவர்களை நலப்படுத்தி, அவர்களுக்குப் போதித்துக்கொண்டிருக்கையிலேயே மாலை நேரம் ஆகிவிடுகின்றது. இதனால் சீடர்கள் இயேசுவிடம், மக்களை ஊர்களுக்குச் சென்று, தேவையான உணவை வாங்கிக்கொள்ளுமாறு அனுப்பி விடும் என்கிறார்கள்.
இயேசுவின் சீடர்கள் அவரிடம் இப்படிச் சொல்வது நமக்கு ஒரு செய்தியை மிகத் தெளிவாகச் சொல்கின்றது. அது என்னவெனில், பொறுப்பைக் கையில் எடுக்காமை அல்லது சாக்குப்போக்குச் சொல்லி பொறுப்பைத் தட்டிக் கழிப்பது. இயேசுவின் சீடர்கள், மக்கள் தங்களுடைய தலைவர் இயேசுவைத் தேடித்தான் வந்திருக்கின்றார்கள்... ஆகையால், அவர்களுக்கு உணவளிப்பது தங்களுடைய கடமை என்று மக்களுக்கு உணவளிக்க, ஏதாவது செய்திருக்க வேண்டும். அவர்களோ அது தங்களுடைய பொறுப்பல்ல என்று தங்களுக்கு இருந்த பொறுப்பைத் தட்டிக் கழிக்கின்றார்கள்.
இன்றைக்கும் கூட, பலர் தங்களுக்கு இருக்கின்ற சமுதாயக் கடமைகளை நிறைவேற்றாமலும், தாங்கள் தங்களுடைய சகோதர, சகோதரிகளுக்கும், வறியவர்களுக்கும் காவலாளிகள் (தொட 4:9) என்பதை உணராமலும் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். இது ஒரு பொறுப்பற்ற தன்மை என்றுதான் சொல்லவேண்டும். இயேசு தன்னுடைய சீடர்கள் இப்படிப் பொறுப்பற்ற தன்மையோடு, தங்களால் மக்களுக்கு உணவளிக்க முடியாது என்று இருந்ததைப் பார்த்துவிட்டு, அவர்களிடம், “நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்” என்று சொல்லி பொறுப்பை அவர்கள் கையில் கொடுக்கின்றார்.
இயேசு தன்னுடைய சீடர்கள் கையில், ‘நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்’ என்று பொறுப்பினைக் கொடுத்தாலும், அவரே அதை முன்னின்று செய்து முடிக்கின்றார்.
*முடியும் என்று மக்களுக்கு உணவளித்த இயேசு*
‘தன்னை நம்பி மக்களைப் பசியோடு அனுப்பினால், அவர்கள் வழியில் மயங்கி விழுந்துவிடக்கூடும்’ என்பதை நன்றாகவே அறிந்த இயேசு, சிறுவன் கொடுத்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணார்ந்து பார்த்து, கடவுளைப் போற்றி, அவற்றைப் பிட்டு சீடர்களிடம் கொடுக்க, சீடர்கள் மக்களிடம் கொடுக்கின்றார்கள். இதனால் எல்லாரும் வயிறார உண்கின்றார்கள்.
இயேசு செய்த இந்த வல்ல செயல், நான்கு நற்செய்தி நூல்களிலும் இடம்பெறுகின்றது. இயேசுவின் உயிர்ப்புதான் நான்கு நற்செய்தி நூல்களில் சொல்லப்படும். அதற்கடுத்து நான்கு நற்செய்தி நூல்களிலும் சொல்லப்படுகின்ற ஒரே நிகழ்வு, இயேசு ஐயாயிரம் பேருக்கு உணவளித்தது. இதன்மூலம் இந்த நிகழ்வின் உண்மைத் தன்மையை நாம் உணர்ந்துகொள்ளலாம்.
இயேசு செய்த இந்த வல்ல செயல், திருப்பாடல் ஆசிரியர் சொல்வது போல் (திபா 145: 15) இறைவன் எல்லா உயிர்களுக்கும் தக்க வேளையில் உணவளிக்கின்றார் என்ற செய்தியை எடுத்துச்சொல்கின்றது. இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில், தாகமாய் இருப்பவர்களே, கையில் பணமில்லாதவர்களே! நீங்கள் என்னிடம் வாருங்கள் என்று கடவுள் அழைப்பார். இதற்கு அர்த்தம் தருகின்ற வகையில், நற்செய்தியில் இயேசு தன்னைத் தேடி வந்த மக்களுக்கு உணவளிக்கின்றார். மேலும் இன்றைய இரண்டாம் வாசகத்தில் பவுல் கூறுவது போல, கிறிஸ்துவின் அன்பிலிருந்து, பட்டினிகூட நம்மைப் பிடித்துவிட முடியாது என்ற செய்தியையும் இயேசு செய்த வல்ல செயல் எடுத்துச்சொல்வதாக இருக்கின்றது.
ஆகையால், இயேசு மக்கள்மீது பரிவுகொண்டு அவர்களுக்குச் சீடர்கள் வழியாக உணவளித்து போன்று, பசியோடு இருக்கும் மக்களின் தேவைகள் நிறைவேற இயேசுவின் சீடர்களைப் போன்று நாம் கடவுளின் கைகளில் கருவியாய் இருந்து செயல்வோம். அதன்மூலம் இந்த மண்ணகத்தில் இல்லாமை இல்லாமல் ஆக்குவோம்.
*சிந்தனை*
“இறைவா! நீர் படைத்த மக்களில் பலரும் ஏன் பசியோடு இருக்கின்றார்கள்?” என்று விண்ணை நோக்கி முறையிட்ட ஓர் இளைஞனிடம், “அதற்குத்தான் நான் உன்னைப் படைத்தேன்” என்றாராம் இறைவன். ஆம், கடவுள் எல்லாருக்கும் உணவளிக்கிறார்; ஆனால், அதை நம் வழியாக அளிக்கின்றார். இந்த உண்மையை உணர்ந்தவர்களாய், வறியவர்களுக்கு உணவளித்து, அவர்களுடைய தேவைகளைப் பரிவுள்ளத்தோடு நிறைவேற்றுவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
*- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.*
10 shares