Actor Kayal Devaraj
890 views • 7 days ago
#📽சினிமா தகவல்கள் #🎬 சினிமா #🧐நாட்டு நடப்பு #🗞அரசியல் தகவல்கள் #📺வைரல் தகவல்🤩
எம்.ஜி.ஆர் மடியில் தவழ்ந்த ரஞ்சித்
'ஆக்கம்' என்ற படத்தின் படப்பிடிப்பு இடைவேளையில் நாங்கள் பேசிக் கொண்டிருந்தபோது, ரஞ்சித் பற்றி சில சுவாரஸ்யமான விஷயங்களை தெரிந்துகொள்ள முடிந்தது.
1973ல், கோவையிலுள்ள பூங்கா ஒன்றில் நடந்த பிரமாண்டமான விழாவுக்கு வந்திருந்தார், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அப்போது மேடையேறிய ராமசாமி, காமாட்சி, பட்டுலிங்கம் ஆகியோர், எம்.ஜி.ஆரிடம் ஒரு குழந்தையைக் கொடுத்து, பெயர் சூட்டும்படி கேட்டுக்கொண்டனர். புன்சிரிப்புடன் அந்தக் குழந்தையை வாங்கி மடியில் வைத்துக்கொண்ட எம்.ஜி.ஆர்., 'செந்தில் குமார்' என்ற பெயரைச் சூட்டினார்.
சினிமாவில் நடிக்க வந்த பிறகு 'ரஞ்சித்' என்ற பெயரில் நடிக்கத் தொடங்கினார். ரஞ்சித்தின் அப்பா ராமசாமி, அம்மா காமாட்சி, மாமா பட்டுலிங்கம் ஆகியோர்தான் அன்று ரஞ்சித்தை எம்.ஜி.ஆரிடம் கொண்டு சென்றவர்கள்.
கோவை அரசு கலைக் கல்லூரியில் பி.ஏ வரலாறு படித்த ரஞ்சித், பிறகு மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரியில் நடிப்புப் பயிற்சி பெற்றார். அப்போது அவருக்கு நடிப்பு சம்பந்தமாக பாடம் நடத்தியவர், நாசர். பிறகு சினிமாவில் நடிப்பதற்காக வாய்ப்பு தேட ஆரம்பித்த ரஞ்சித், ஒரு படத்துக்கு நடிகர், நடிகையர் தேர்வு நடப்பதை அறிந்து, தன் போட்டோக்களை குறிப்பிட்ட சில இயக்குனரிடம் காண்பிப்பதற்காக, வடபழநியிலுள்ள ஒரு போட்டோ ஸ்டுடியோவில் நெகட்டிவ்வை கொடுத்து, கலர் பிரிண்ட் போட்டுத்தர சொன்னார். அவர்களும் பிரிண்ட் போட்டார்கள்.
அதே ஸ்டுடியோவில் பிரசாந்த் போட்டோவும் பிரிண்ட் போடப்பட்டிருந்தது. பிரசாந்த் போட்டோ போய்ச் சேர வேண்டிய இடம், இயக்குனர் ஆர்.கே.செல்வமணியின் அலுவலகம். அப்போது 'செம்பருத்தி' படத்தை இயக்குவதற்காக ஆயத்தமாகிக் கொண்டிருந்தார் செல்வமணி. அவரது அலுவலகத்துக்கு ரஞ்சித்தின் போட்டோக்கள் தவறுதலாக சென்றுவிட்டது. பிரசாந்தின் போட்டோக்கள் வேறொரு இயக்குனரின் அலுவலகத்துக்கு சென்றுவிட்டது.
ரஞ்சித்தின் போட்டோக்களைப் பார்த்த செல்வமணி, அவரை 'பொன்விலங்கு' படத்தில் ஹீரோவாக்கினார். பிறகு 'சிந்துநதி பூ' படத்திலும் ரஞ்சித் ஹீரோவாக நடித்தார். பாரதி இயக்கத்தில் மம்முட்டியுடன் நடித்த 'மறுமலர்ச்சி' படத்துக்காக, அப்போதைய தமிழக அரசு வழங்கிய சிறந்த வில்லன் நடிகருக்கான விருது பெற்றார் ரஞ்சித்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் உருவான பல படங்களில் ஹீரோவாகவும், வில்லனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய ரஞ்சித், மேவரிக் எண்டர்டெயின்மெண்ட்ஸ், சிக்ரன் சினிமாஸ் என்ற இரண்டு பட நிறுவனங்களை தொடங்கினார். 'பீஷ்மர்', 'டான் சேரா', 'பசுபதி மே/பா ராசக்காபாளையம்' ஆகிய படங்களை தயாரித்தார்.
இதில் 'பீஷ்மர்' படத்தில் ஹீரோவாக நடித்து, முதல்முறையாக எழுதி இயக்கினார். ரஞ்சித் ஜோடியாக தேவயானி நடித்தார். தவிர, 'ரயிலு' என்ற படத்தையும் ரஞ்சித் இயக்கியுள்ளார். சில காரணங்களால் அப்படம் இன்னும் ரிலீசாகவில்லை. கார்த்திக்-வேல்முருகன் இணைந்து இயக்கிய படம் 'நேசம் புதுசு'. இதில் வேல்முருகன் இப்போது பல படங்களில் நடித்து வருகிறார். 'எவன்டி உன்னெ பெத்தான்' என்ற படத்தையும் இயக்கி வைத்திருக்கிறார்.
'நேசம் புதுசு' படப்பிடிப்பில் ரஞ்சித், பிரியாராமன் இருவரும் நட்புடன் பழகினர். அப்போது நான் ரஞ்சித் அம்மாவிடம், ''உங்களுக்கு பிரியாராமன் மருமகளா வரப் போறாங்க'' என்று விளையாட்டாக சொல்லி வைத்தேன். ''அப்பிடி எல்லாம் சொல்லாதீங்க தம்பி'' என்றார். சில நாட்களில் அந்தச் செய்தி வந்தது. அதாவது, படப்பிடிப்பு நடக்கும்போதே ரஞ்சித் பிரியாராமனின் கழுத்தில் தாலி கட்டிவிட்டார் என்று. பிறகு முறைப்படி அவர்கள் பத்திரிகையாளர்களிடம் தங்கள் காதல், கலப்புத் திருமணம் குறித்து அறிவித்தார்கள். ஆதித்யா, ஆகாஷ் என இரு மகன்கள் இருக்கின்றனர். ரஞ்சித், பிரியாராமன் இருவருக்கும் 1999ல் திருமணம் நடந்தது.
ஸ்ரீவாரி கிரியேஷன்ஸ் சார்பில் மலையாளத்திலும், தமிழிலும் டி.வி தொடர்கள் தயாரித்த அனுபவம் கொண்ட ரஞ்சித், விரைவில் மீண்டும் படம் இயக்க உள்ளார். நல்ல குரல் வளம் கொண்டவர். வாய்ப்பாட்டு கற்றவர். ஏராளமான இலக்கியப் புத்தகங்கள் படித்தவர். அற்புதமான சிந்தனையாளர். 'நேருக்கு நேர்' என்ற படத்தில் சூர்யாவுக்கு அவரை டப்பிங் பேசக் கேட்டார்கள். என்ன காரணமோ, மறுத்துவிட்டார். பாரதிராஜா இயக்கிய 'கடல் பூக்கள்' படத்தில், மனோஜ் கே.பாரதிக்கு டப்பிங் பேசினார். திரையுலகில் இன்னும் அவர் செல்ல வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது.
5 likes
9 shares