ரவிசங்கர் ராஜா, ஆரணி
896 views • 1 months ago •
பஜனை என்றால் என்ன? – வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகள்
நமஸ்காரம்!
“பஜனை” என்று சொல்லுகிறோம். “பஜனம்” என்பதுதான் “பஜனை” என்று வந்துள்ளது. பஜனை என்பது பெருமானைக் குறித்து, அவன் திருநாமங்களைச் சொல்லி, ஸ்தோத்திரம் செய்து, பாடல்களைப் பாடுவது. இதை “நாம சங்கீர்த்தனம்” என்றும் சொல்லுவர். கீர்த்தி, கீர்த்தனம், சங்கீர்த்தனம் — இவ்வாறெல்லாம் சொல்வார்கள். ஆனால் இதில் “பஜனை” என்னும் சொல் மிகவும் பிரபலமாய், பிரசித்தமாய் உள்ளது.
ரொம்பவே விஷயம் தெரியாதவர்களுக்குக் கூட “பஜனை” என்று சொன்னாலே ஒரு ஈர்ப்பு வந்துவிடும். பஜனை சம்பிரதாயம் என்பது வெகுகாலமாக இருந்து வருகிறது. ஹனுமாரே பஜனை பண்ணியவர் தான். வால்மீகியும் செய்தவர் தான். அவ்வளவு காலம் தொட்டு, “பஜனம்”, “பஜனை” என்பது நம்மிடையே இருந்து வருகிறது.
பெருமானைத் தொழுவதில் ஒரு முறை — நாமங்களைப் பாடுவதில் ஒரு முறை — “பஜனை பண்ணி ஆடினோம், பாடினோம்” என்று சொல்லுவார்கள். ஆடத் தெரியாதவர்களுக்குக் கூட, தன்னிடையே கால் தாளம் போடும், குட்டிக்கரணம் போட்டு, ஆடி பஜனை பண்ணத் தோன்றும்.
நம்மாழ்வார் சொல்லுகிறார்:
“கும்பிடு நட்டம் இட்டு ஆடிக் கோகுகட்டுண்டு உழலாதார்”
அப்படி பஜனை பண்ணாதவர்கள் பிறந்தே பயனில்லை என்று கூறுகிறார்.
இதில் “பஜனை” என்ற சொல்லில் இருக்கக்கூடிய “பஜ” என்கிற தாது — “பஜ சேவாயாம்” என்று சொல்லுவர். “சேவை”, “தொண்டு” என்கிற பொருளில் வரும். அதனால் “பஜனை” என்று சொல்லும்போது, பாடுவது, நாமங்களைச் சொல்வது, ஆடுவது என்று மட்டும் பொருள் பெறாது.
“நான் பெருமானுக்குத் தொண்டன். அவருக்கு அடிமை” என்று நினைத்து, அவருக்குத் தொண்டு செய்வதில் ஈடுபாட்டோடு, “அந்தத் தொண்டுகளை அடியேனுக்குக் கொடுக்க வேண்டும்” என்ற எண்ணத்தோடு பாடப்படுவது தான் பஜனை.
இந்தப் பாடுவதே தொண்டு தான். “அடியேனுக்கு நீர் தொண்டு கொடுக்க வேண்டும்; கைங்கரியம் பண்ண வேண்டும்” என்ற எண்ணத்தோடு பாடப்படும் பாடல்கள் தான் பஜனை.
“பஜ” என்றாலே “பஜிப்பாய்” — அதாவது “தொண்டு செய்வாய்” என்று அர்த்தம். “ஸ்தோத்திரம் செய்வாய்” என்று மட்டும் அர்த்தமில்லை. தொண்டு எண்ணத்தோடு, “நாம் பெருமானுக்கு அடிமை” என்கிற அந்த உள்ளுணர்வோடு பாடுவது.
அதனால்தான் பஜனை பண்ணும்போது “தன்னை மறந்து பாடினார்”, “தன்னிலையிலே இல்லை”, “பரவசப்பட்டு இருந்தார்” என்றெல்லாம் சொல்லுவோம்.
ஏனென்றால், நாம் எல்லா விதத்திலும் பகவானுக்குத் தொண்டன் என்று தெரிந்த பிற்பாடு, “அவருக்காகவே தான் இருக்கிறோம்” என்று புரிந்த பிற்பாடு, நம் நிலையிலோ, நம் வசத்திலோ என்ன இருக்கிறது? அவனுடைய வசத்தில் தான் நாம் இருக்கிறோம்.
அதனால்தான் பரவசப்படுகிறார்கள்.
சாதாரணமாகப் பாட்டு பாடும்போது, “இப்படி தாளம்”, “இப்படி ராகம்”, “இவ்வளவு நேரம்”, “சஞ்சாரம் இப்படி நடக்கும்” — இதெல்லாம் இருக்கும். அதுவே பக்தி அதிகமாகப் போகும்போது நிலை கொள்ளாது.
ஆனால் “பஜனை” என்று வரும்போது, பக்திதான் அடிப்படை.
“பக்தி” என்றாலே “தொண்டு”.
“பெருமானுக்கு அடிமை” என்று புரிந்தால்தான், அவனிடத்தில் பக்தியோடு இருப்போம். அவனுடைய குணங்களை நினைத்தாலே பக்தி பெருகும். அந்தக் குணங்களை விளக்குவது தான் அவனுடைய திருநாமங்கள். அதைத்தானே இதில் பாடுகிறோம்!
அதனால் பக்தி, அன்பு, தொண்டு, அறிவு — இவை எல்லாம் ஒன்றாகச் செல்லுபவை. அதை வெளிப்படுத்துவதற்கும், அதை வேண்டுவதற்கும் தான் இந்தப் பாடல்கள்.
பக்தி முற்ற முற்ற, தன் நிலையில் அந்த பக்தன் இருக்க மாட்டான். “ந சாஸ்த்ரம் நைவ ச க்ரம:” என்று சொல்லுவார்கள். அவனுக்கு சாஸ்திரம், கட்டுப்பாடு, “இப்படித்தான் இருக்க வேண்டும்” என்ற எல்லைகள் — பக்தி முற்றும் போது நிலைக்காது.
அழுகிறான்…
தொடுகிறான்…
ஆடுகிறான்…
பாடுகிறான்…
தன் வசமற்று செய்வது — அதுதான் பஜனை ஆகிறது.
கண்ணன் கீதையில் சொல்லும்போது:
“மன்மனா பவ மத்பக்தோ மத்யாஜீ மாம் நமஸ்குரு
மாமேவைஷ்யஸி…”
“என்னையே நீ வந்து அடைகிறாய்” என்று சொல்லுகிறார்.
“ஏ மனமே! பகவானை பஜிப்பாய்!” என்று பாடல்களும் உள்ளன.
அதனால் “பஜனை” என்று சொல்லும்போதே அடிப்படை எண்ணம் தேவை:
“நான் பெருமானுக்குத் தொண்டுபட்டவன். அவருக்கே அடங்கியவன். அவருடைய வசத்தில் இருப்பவன். அவருக்குத் தொண்டு செய்வதே நம் பிறவியின் பயன்.”
இந்த எண்ணங்களால் உந்தப்பட்டு பாடுகிறோம். அப்போதுதான் “பஜ சேவாயாம்” — “சேவை செய்தல்” என்கிற தாதுவிலிருந்து வந்த “பஜனை” என்ற சொல் பொருத்தமாக இருக்கும்.
அதனால், “ஏதோ வெறும் பாடல்; பாட்டு தெரிந்தவர் பாடுகிறார்” என்று நினைக்கவே வேண்டாம். பாட்டு தெரியாவிட்டாலும், உள்ளுணர்வில் “அவனுக்கு நான் தொண்டன்” என்று புரிந்துவிட்டால், அந்த பஜனை மிகப் பொருத்தமாக இருக்கும்.
(வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி அவர்களின் விளக்கம்) 🚩🕉🪷🙏🏼 #🙏ஆன்மீகம் #தெய்வீக சிந்தனைகள் #🙏ஆன்மீக குருக்கள்🧘🏿♂️ #🙏🌹பாரதபூமி🌹🙏🌹சித்தர்கள் பூமி🌹🙏புண்ணியபூமி🌹🙏 #🕉️🕉️அர்த்தமுள்ள இந்து மதம்🕉️🕉️
14 likes
14 shares