Rationalist
402 views • 3 days ago
சீண்டினால் பெரிய பாடம் கற்பிக்கப்படும் என காண்பித்திருக்கின்றனர் Gen Z தலைமுறையினர்.
ஜல்லிக்கட்டு போராட்ட சமயத்திலும் இதே போன்றவொரு உணர்வு இருந்தது. ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு முன் வரை, 'இளைஞர்கள் பொறுப்பற்றவர்கள்', 'புட்போர்ட் அடித்து செல்பவர்கள்', 'கலாட்டா செய்பவர்கள்', 'அரசியல் அறிவு இல்லாதவர்கள்', 'இதெல்லாம் எங்கே திருந்தப் போவுது' என்றெல்லாம் பேசிக் கொண்டிருந்தனர். ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது அந்த மதிப்பீடுகள் யாவும் தலைகீழானது.
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக போராடிய இளைஞர்கள் மீது காவல்துறை கட்டவிழ்த்த ஒடுக்குமுறை, தமிழ்நாட்டில் இருந்த இளைஞர்கள் பலரையும் ஒடுக்கியது. சென்னையில் மெரினாவுக்கு அருகே ஒரு BPO-வில் வேலை பார்த்துக் கொண்டிருந்த நான் தொடங்கி, பல இளைஞர்களின் செல்பேசிகளை ஒடுக்குமுறை காணொளிகள் நிரப்பிக் கொண்டிருந்தன. அங்கு அடித்தால் இங்கு எழுவோம் என்றுதான் மெரினாவில் நான்கைந்து பேராக நிற்கத் தொடங்கி அந்த போராட்டம் வளர்ந்தது. தமிழ்நாடு இளைஞர் கூட்டம் மெரினாவை தன் கட்டுப்பாட்டில் எடுத்தது.
லட்சக்கணக்கில் மாணவர்கள் திர்ணடிருந்தனர். மொத்த சர்வீஸ் சாலையிலும் இளையோர் பத்துக்கும் மேற்பட்ட பந்தல்கள் போட்டு ஆர்ப்பாட்டங்கள் நடத்திக் கொண்டிருந்தனர். அங்கேயே தூங்கி எழுந்து போராட்டம் தொடர்ந்து கொண்டிருந்தது. மக்கள் போர்வைகளும் கொசு மருந்துகளும் வந்து கொடுத்துக் கொண்டிருந்தனர். இஸ்லாமியர்கள் குழுமியிருந்த மக்கள் அனைவருக்கும் உணவுகளை வழங்கிக் கொண்டிருந்தனர்.
ஒரு கட்டத்தில் மெரினாவுக்கு செல்லும் மொத்த ராதாகிருஷ்ணன் சாலையும் டிராபிக்காகவே இருக்கும் கட்டம் வந்தது. இளைஞர்களே போக்குவரத்தை சரி செய்யும் வேலைகளையும் செய்தனர். மெரினாவுக்கு செல்லும் வழியில் பல இடங்களில் பல பேர் குடும்பங்களாக நின்று தண்ணீர் பாட்டில், ஜூஸ் போன்றவற்றை வழங்கி தம் பங்களிப்பை உற்சாகமாக வழங்கிக் கொண்டிருந்தனர்.
ஒருவர் மெரினாவுக்கு சென்றால் போதும். எல்லா பந்தல்களிலும் நின்று கருத்துகளை கேட்கலாம். பேசலாம். உரையாடலாம். அரசியல்படும் வாய்ப்பு இருந்தது. இவை அன்றி கலை நிகழ்ச்சிகளாகவும் புதிய வடிவங்களாகவும் போராட்டம் பரிணமித்துக் கொண்டிருந்தது. ஒரு இடத்தில் மண்ணை குவித்து வைத்து மோடி என எழுதி ஒரு குழு ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தது. இன்னொரு இடத்தில் மோடி படத்தை அடிக்கும் விளையாட்டு நடந்து கொண்டிருந்தது. இவை எல்லாவற்றிலும் பங்கேற்று கருத்துகளில் திளைத்து உற்சாகமாக அந்த இரவுகள் கழிந்தன.
போலவே சமீபகாலமாக Gen Z தலைமுறையினரை கையாளும் விதம் குறித்து நமக்கு நிறைய குழப்பங்களும் எரிச்சல்களும் இருந்தன. சமூகதளங்களிலேயே வளர்ந்து எழுந்த தலைமுறை அது. நிறைய கிண்டல் செய்தோம். அவமதித்தோம். அதே 'அரசியல் அறிவு அற்றவர்கள்', 'இதெல்லாம் எங்க தேறப் போகுதோ' போன்ற வசவுகளை பொழிந்தோம். ஆங்கில பாடல்கள், K Pop, டிஜிட்டல் வார்த்தைகள், Acronym உணர்வு வெளிப்பாடுகள் யாவும் நமக்கு புரியவே இல்லை. உண்மையில் அஞ்சக் கூட செய்தோம். வங்க தேச கலகத்தில் முஜிபுர் ரகுமானின் சிலையையே Gen Z தலைமுறையினர் சாய்த்ததும் அதிர்ந்து போனோம். நேபாளத்தில் மாவோயிஸ்டுகள் மற்றும்.இடதுசாரிகளுக்கு எதிராக கலகம் நடந்ததும் அதிர்ச்சி ஏற்பட்டது. பிறகு நீரான் தலைமை பல விமர்சனத்துக்குள்ளான போதும் தேர்ந்தெடுத்தார்கள். அந்த தலைமை இப்போது அவர்களுக்கு எதிராக இயங்குவதை நாம் முன்னறிவித்தோம். ஆனால் அவர்கள் கேட்கவில்லை.
ஏனெனில் அவர்களை பொறுத்தவரை அவர்களின் முடிவு அது. அதன் விளைவை அவர்கள் சந்தித்துக் கொள்வார்கள். மற்றவர்கள் அவர்களுக்கு அறிவுரை கூற வேண்டாம் என்பதுதான் நிலைப்பாடு.
அடுத்ததாக தற்போது காக்ரோச் ஜனதா கட்சயின் மாணவர் போராட்டத்தில் நீட்டுக்கு எதிரான ஒரு முக்கியமான அடி எடுத்து வைக்கப்பட்டிருக்கிறது. இந்தப் போராட்டம் அறிமுகப்படுத்தும் இளைஞர்கள் பல சுவாரசியங்களை கொடுக்கின்றனர். இது பிறரை ஒருங்கிணைத்த உணர்வுப்பூர்வ இழையும் சுவாரஸ்யமானதாக இருக்கிறது.
காவலர்கள் அடிக்கத் தொடங்கியதும் ஒருவர் உறுதியாக நின்றுகொண்டு கோபத்துடன் 'மாரோ மாரோ' (அடி அடி) என கத்துகிறார். ஒரு கட்டத்தில் கோபம் அழுத்தி வெடித்து அவர் தன்னைத்தானே உதறி கத்துகிறார். பயந்து ஓடுபவர்களை விரட்டி விரட்டி அடிக்கும் காவல்துறை, 'அடி அடி' எனக் கத்தும் இளைஞரை பார்த்ததும் ஒன்றும் செய்யாமல் நகர்ந்து விடுகிறது.
இன்னொரு இடத்தில் முகக் கவசங்களுடன் காவலர்கள் மாணவ மாணவியரை தள்ளும்போது ஒரு மாணவி நேரடியாக ஒரு போலீஸின் முகக்கவசத்தை இழுத்து 'உன் குழந்தையா இருந்தாலும் இப்படித்தான் அடிப்பியா' என அழுதபடி கேட்கிறார்.
இன்னொரு இடத்தில் ஒரு பிளாட்பாரத்தில் அமர்ந்து கொண்டு வேறு மாநிலத்தின் கிராமத்தில் இருந்து வந்த ஒரு போராட்டக்காரர் டிபன் பாக்சில் எடுத்து வந்து சாப்பாட்டை எடுத்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். அதுவே குறைந்த அளவுதான் இருக்கிறது. அவரை பேட்டி எடுப்பவரிடம் அதை நீட்டி பரிவுடன் 'நீங்களும் எடுத்துக்கோங்க!' என்கிறார்.
இன்னொரு பக்கத்தில் மாற்றுத் திறனாளிகள் இருவர், செய்கையில் நீட்டை ஏன் எதிர்க்க வேண்டும் என விளக்குகின்றனர்.
ஓர் இடத்தில் ஒரு இளைஞரை சுற்று போட்டு போலீஸ் அடிக்கத் துவங்க ஹெல்மட் அணிந்த ஒருவர் வேகமாக போலீஸ்காரர்களை நோக்கி ஓடுகிறார். பிற போராட்டக்காரர்களும் ஓடுகின்றனர். போலீஸ் ஒதுங்குகிறது. அடி வாங்கியவர் மீட்கப்படுகிறார்.
இன்னொரு இடத்தில் ஓடி வரும் இளைஞரை ஒரு RAF-காரன் காலை நீட்டி தடுக்கி விழ வைக்கிறான். இத்தகைய ஈனத்தை செய்த அந்த நபரை விழுந்த இளைஞன் எழுந்து முறைக்கிறான்.
கடைசி தினங்களில் வந்திறங்கிய சீக்கியர்கள், காவலர்கள் இளைஞர்களை விரட்டி வந்ததும் குறுக்கே வந்து நிற்க, போலீஸ் பின்வாங்குகிறது. "எங்களுக்கு சிஜெபி, பிஜெபி பத்திலாம் கவல இல்லை. எங்க தங்கச்சிகளையும் அம்மாக்களையும் இங்க அடிச்சாங்க. அதுக்காகதான் இங்க வந்திருக்கோம்' என்கிறார் ஒரு சீக்கியர்.
இவை இல்லாமல் வட இந்திய influencer-களும் ரகளை செய்கின்றனர். ஒரு சிறுவன் நான்கைந்து பேருடன் போலீஸார் பின்னணியில் பாடலுக்கு தலையாட்டி ரீல் போடுகிறான். இன்னும் சில பெண்கள் போலீஸார் அருகாமையில் நின்று கொண்டு 'Everybody knows I'm a good girl officer' என்ற பாடலுக்கு ரீல் போடுகின்றனர். ஓர் இளைஞனை ஒரு போலீஸ் இடுப்பில் குத்துவது போல் செய்து காட்டி Good Touch Bad Touch பாடலை ஆடி காவலருக்கு விளக்கும் ரீல் போடுகிறான். மிகவும் பிடித்தது போலீஸ் விரட்டி வரும்போது ஓடியபடி வீடியோ எடுத்து Subway Surfers இசையைப் போட்ட ரீல்கள்தாம்.
மறுபக்கத்தில் 'போராட்டத்துக்கு செல்ல என்ன வகை துணி உடுத்துவது' என டுடோரியல் வீடியோவை பெண்கள் பதிவிடுகின்றனர். காவலர்கள் அச்சுறுத்தினால் என்ன செய்ய வேண்டும் எனவும் ஒரு டுடோரியல் வீடியோ. இரவுபகலாய் போராட்டக்களத்திலேயே கழித்த இளம்பெண் சொல்கிறார், 'This is the first time I feel safe in Delhi' என.
பிற இடங்களுக்கு வந்தால் இன்னும் வேறு லெவல். பிகாரில் barricade-ல் ஏறி சறுக்கு விளையாட்டு விளையாடுகின்றனர். போலிசாருடம் tug of war. 'வெயிலுக்கு நீர் பீய்ச்சி அடிக்க' வேண்டுகோள். போலிஸாரிடம் சென்று 'இன்று tear gas இல்லையா uncle' எனக் கிண்டல். 'கஞ்சா கேஸ் போட்டிடுவேன்' என சொல்லும் போலீஸை அவருக்கே தெரியாமல் ஜூப்புக்குள்ளேயே அமர்ந்து வீடியோ பிடித்து போட்டு சிரிப்பது. இன்னொருவர் 'Going for Police Station Tour Guyz' என காவல்நிலையத்துக்கு செல்லும் ரீல். 'Trippy Lights in Police Van' என ஒரு ரீல். 'Got window seat in the police van guyz' என ஒரு ரீல்.
இன்னொருவர் டீக்கடையில் டீ குடித்தபடி செல்பேசியில் "ஹலோ ஜீ ஜிங்பிங்... போராட்டத்துக்கு செலவுக்கு கொஞ்சம் பணம் தேவைப்படுது. QR Code அனுப்பி வைக்கறேன். கொஞ்சம் fund அனுப்பி வைங்க!" என சீன நிதி குறித்து கிண்டல் காணொளியும் பதிவிடுகிறார்.
இந்தளவுக்கு விளையாட்டாக இருக்க முடியுமா?
இவர்கள் தங்கள் தலைமுறையை விளக்கியும் பல பதாகைகளை வைத்திருக்கின்றனர். 'You messed up with a wrong generation' என்கிறார்கள். 'Seriously in serious in the most serious situation. Yes we are Gen Z' என்கிறார்கள்.
இவை அடிக்க வரும் காவலர்களிடமிருந்து போராட்டக்காரர்களை காக்கும் வகையில் நிற்கும் ஒரு பெண்ணின் புகைப்படமும் மும்பையில் போலீஸ் வேனில் கை வைத்து நிற்கும் பெண்ணின் காட்சியும் இந்தப் போராட்டத்தையும் Gen Z தலைமுறையையும் அடையாளப்படுத்தும் அடையாளங்கள்.
இந்த போராட்டத்தில் அரசியல் பிழைகள் இருக்கலாம். கட்டமைக்கப்பட்ட போராட்டம் என்றும் எழுதலாம். எனினும் காவலர்கள் வந்து ஓர் ஒடுக்குமுறையை கட்டவிழ்த்த பிறகும் அங்கு சென்று மீண்டும் குவிந்த Gen Z தலைமுறை சொல்வது ஒன்றுதான்.
அவர்களிடமும் நேர்மையும் அறமும் போர்க்குணமும் இருக்கிறது. அதை அவர்கள் வெளிப்படுத்தும் வழிகள்தான் வெவ்வேறு.
அவர்களுக்கான அரசியலை அவர்களின் வழிதான் கொண்டு செல்ல முடியும். அதை அவர்கள்தாம் தேர்ந்தெடுக்கவும் முடியும்.
ஒவ்வொரு தலைமுறையும் முந்தைய தலைமுறையிடம் வசவு வாங்கியே வளருகிறது. பிறகு முந்தைய தலைமுறை செய்ய மறந்த, மறுத்த விஷயத்தை செய்து காட்டி புது வரலாறு ஒன்றை அது தொடங்கி விடுகிறது.
போராட்டமும் அரசியலும் ஒவ்வொரு காலத்து தலைமுறையையும் அந்த தலைமுறைக்கு ஏற்ற வடிவம் மற்றும் தன்மைகளுடன் கண்டடைகிறது.
டெல்லி போராட்டம் இன்றைய வட இந்திய தலைமுறையின் மனவெளியில் ஒரு புதிய பதிவை விதைத்திருக்கிறது. அது இனி பல பதிவுகளை உருவாக்கும்.
போராட்டம் என்பது நினைவிலிருந்துதான் முளைவிடுகிறது. மறந்தாலும் மறுத்தாலும் உயிரின் நினைவு என்பது கருவுற்று பிறந்து வளர்ந்து தழைத்து வரலாறு ஒன்றை படைத்தே ஆகும்.
தலைமுறைகளை இணைக்கும் கண்ணிதான் போராட்டங்கள்!
போராட்டம்தான் மனிதப் பரிணாமத்தின் DNA!
. #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #Gen Review #📺அரசியல் 360🔴
10 shares