கலைஞரும் நடிகர் புனித் ராஜ்குமார்

1 Post • 501 views
-
895 views 5 months ago
*கலைஞரும் புனீத் ராஜ்குமாரும்!* 20 ஆண்டுகளுக்கு முன் இதே அக்டோபரில் கோபாலபுரம் கலைஞர் வீட்டுக்குள் நுழைக்கிறார் புனீத் ராஜ்குமார். சகோதரர்கள் சிவ ராஜ்குமார், ராகவேந்திரா ராஜ்குமார் ஆகியோருடன் 2000 அக்டோபர் 20-ம் தேதி அன்றைய முதல்வர் கலைஞரைப் பார்த்தார் புனீத் ராஜ்குமார். சந்தனக் கடத்தல் வீரப்பன், நடிகர் ராஜ்குமாரை கடத்தி சென்ற நிலையில் ’’தந்தையைக் காப்பாற்றுங்கள்’’ என்ற கோரிக்கையோடு வந்திருந்தார் புனீத் ராஜ்குமார். ராஜ்குமாரை மீட்க அன்றைய கலைஞர் அரசு கடும் முயற்சிகளை மேற்கொண்டது. அரசின் தூதர்களாகப் பழ. நெடுமாறன், நக்கீரன் கோபால் குழுவினர் காட்டுக்குள் சென்றார்கள். தொடர்ச்சியாக வீரப்பனுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில்தான் ராஜ்குமாரின் மகன்கள் கலைஞரைப் பார்க்க வந்தார்கள். தந்தையை மீட்கும் முயற்சிகள் பற்றி கலைஞரிடம் கேட்டறிந்தார்கள். அதன்பிறகு பத்திரிகையாளர்களைச் சந்தித்தவர்கள், ’’எங்கள் தந்தை விரைவில் வீடு திரும்ப வேண்டும் என்பதே எங்களது நோக்கம். சமாதான முயற்சிகளுக்காகக் காட்டுக்குள் யார் போகிறார்கள் பற்றி எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. தமிழக அரசின் மீது நம்பிக்கை உள்ளது’’ என்றனர். கடத்தப்பட்ட ராஜ்குமாரை மீட்பது தொடர்பாகப் பெங்களூர் சென்று ராஜ்குமார் குடும்பத்தினரை முதல்வர் கலைஞர் சந்தித்தார். ராஜ்குமாரின் மனைவி பர்வதம்மா, அவரது மகன்களைச் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு பற்றிச் சொன்ன பர்வதம்மா, ‘’நம்பிக்கையுடன் இருங்கள். ராஜ்குமாரை மீட்க இரு அரசுகளும் நல்லதொரு திட்டத்தை அமல்படுத்தி வருவதாகக் கலைஞர் சொன்னார்’’ என்றார். கலைஞரை கோபாலபுரத்தில் சந்தித்த பிறகு பத்து நாள் கழித்து மீண்டும் தமிழகம் வந்தார் புனீத் ராஜ்குமார். தந்தை ராஜ்குமார் விடுதலை வேண்டி தமிழகத்தின் பல்வேறு கோவில்களுக்கு புனீத் ராஜ்குமார் குடும்பத்தினருடன் வந்தார். நாகை வைத்தீஸ்வரன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தினார். பிறகு திருநள்ளார், திருவெண்காடு,பெரும்பள்ளம் ஆகிய கோயில்களுக்கு சென்று சிறப்பு பூஜைகள் செய்தார். அக்டோபர் 31-ம் தேதி சூரியனார் கோவில், கஞ்சனூர், திருமணஞ்சேரி, திருபுவனம், திருநாகேஸ்வரம், கும்பகோணம், ஆலங்குடி, திங்களூர், திருவாரூர்மற்றும் தஞ்சாவூர் கோவில்களில் அவர் சிறப்பு வழிபாடு செய்தார். மூன்று நாள் தமிழ்நாட்டில் தங்கி வழிபாடு நடத்தினார். கலைஞர் அரசு எடுத்த நடவடிக்கையால் வீரப்பனிடம் இருந்து ராஜ்குமார் பத்திரமாக மீட்கப்பட்டார். ராஜ்குமார் குடும்பம் கலைஞருக்கு நன்றி தெரிவித்தது. கலைஞர் மீது மிகுந்த அன்பைச் செலுத்தியவர் புனீத் ராஜ்குமார். கலைஞர் மறைந்த போது புனீத் ராஜ்குமார் நேரில் வந்து கலைஞர் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். கோபாலபுரம் இல்லத்திற்கு வந்து இரங்கல் தெரிவித்துவிட்டு பத்திரிகையாளர்களிடம் பேசிய புனீத் ராஜ்குமார், ‘’எனது குடும்பமும் கலைஞர் குடும்பமும் நீண்ட நாட்களாக நல்ல நட்புறவில் இருந்து வருகிறது. எனது தந்தை கடத்தப்பட்ட போது, கலைஞர் உதவியாக இருந்தார்’’ என்றார். புனீத் ராஜ்குமாரின் வாழ்க்கை பயணம் முடிந்திருக்கலாம். மக்கள் மனதில் அவர் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். #கலைஞரும் நடிகர் புனித் ராஜ்குமார்
17 likes
11 shares