#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #சிவன் #திருமுறை #பன்னிரு திருமுறை *"திருமுறை ஓதாய் திருமுறையே தாய்"* தினம் ஒரு திருமுறை அறிவோம் 🙏 *பன்னிரெண்டாம் திருமுறை* *பெரியபுராணம் அல்லது திருத்தொண்டர் புராணம் என்பது சேக்கிழார் பெருமான் அவர்களால் பெருங்காப்பிய இலக்கணங்கள் பலவும் கொண்டதாக இயற்றப்பெற்ற சைவ காப்பியமாகும். சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டத் தொகை எனும் நூலை முதல் நூலாகக் கொண்டும். சுந்தரமூர்த்தி சுவாமிகளைக் காப்பிய தலைவராகக் கொண்டும், அவர் போற்றிய சைவ அடியார்களின் வாழ்க்கை வரலாற்றினையும் இந்நூலில் சேக்கிழார் பெருமான் விவரிக்கிறார்.* *சுந்தரமூர்த்தி நாயனார் அருளிச் செய்த 11 பாடல்களைக் கொண்ட திருத்தொண்டத் தொகை, நம்பியாண்டார் நம்பி எழுதிய 90 பாடல்களைக் கொண்ட திருத்தொண்டர் திருவந்தாதி ஆகியவற்றை மூலநூல்களாகக் கொண்டும், இரண்டாம் குலோத்துங்க சோழனிடம் அமைச்சராக இருந்த சேக்கிழார் பெருமான் பல ஊர்களுக்கும் சென்று திரட்டிய தகவல்களைக் கொண்டும் பெரியபுராணம் எழுதப் பெற்றுள்ளது. இரண்டாம் குலோத்துங்க சோழனின் ஆணையின்படி தில்லைக்குச் சென்றவர், அங்கிருக்கும் இறைவனான நடராஜர் பெருமான் உலகெலாம் என்று அடியெடுத்துக் கொடுக்க சேக்கிழார் உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன் எனப் பெரியபுராணத்தினைத் தொடங்கினார்.* *பெரியபுராணம் முதல் காண்டம், இரண்டாம் காண்டமென இரு காண்டமாகவும், முதல் காண்டத்தில் ஐந்து சருக்கங்களையும், இரண்டாம் காண்டத்தில் எட்டுச் சருக்கங்களையும் உடையதாக அமைக்கப்பெற்றுள்ளது. சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டத் தொகையில் இடம்பெற்றுள்ள பாடல்களின் முதல் வரியே சருக்கங்களின் பெயர்களாக உள்ளது.* *காப்பிய தொகுப்பானது கயிலாயத்தில் தொடங்கப்பெற்றுச் சைவ அடியார்களின் வாழ்க்கையை விவரித்து, இறுதியாகக் கயிலாயத்தில் முடிகிறது.* *முதற் காண்டத்தில், திருமலைச் சருக்கம், தில்லை வாழ் அந்தணர் சருக்கம், இலை மலிந்த சருக்கம், மும்மையால் உலகாண்ட சருக்கம், திருநின்ற சருக்கம் என்ற ஐந்து சருக்கங்களும்,* *இரண்டாம் காண்டத்தில், வம்பறா வரிவண்டுச் சருக்கம், வார்கொண்ட வனமுலையாள் சருக்கம், பொய்யடிமையில்லாத புலவர் சருக்கம், கறைக்கண்டன் சருக்கம், கடல்சூழ்ந்த சருக்கம், பத்தராய்ப் பணிவார் சருக்கம், மன்னிய சீர்ச் சருக்கம், வெள்ளானைச் சருக்கம் என்னும் 8 சருக்கங்களும் அமைந்துள்ளன.* *இடைக்கால இலக்கியத்தில் மக்களின் வாழ்க்கை பற்றி வரலாற்றுப் போக்கில் அறிவதற்கு இந்நூல் உதவுகிறது. நான்காயிரத்து இருநூற்று எண்பத்து ஆறு (4286) செய்யுள்களைக் கொண்ட இப்புராணத்தில் ஆளுடையபிள்ளை எனப்படும் திருஞானசம்பந்தரின் வரலாறு மட்டும் 1256 செய்யுட்களால் விரிவாகக் கூறப்பட்டுள்ளதால் "பிள்ளை பாதி; புராணம் பாதி" என்கிற பழமொழி ஏற்பட்டது.* இறைவனின் திருநாமம் - சிற்சபை: ஆனந்தநடராஜ மூர்த்தி, மூலஸ்தானம்: ஸ்ரீ மூலநாதர் இறைவி - சிற்சபை: சிவகாமசுந்தரி, மூலஸ்தானம்: உமாபார்வதி அமைவிடம் : கோயில் (சிதம்பரம், தில்லை) சோழநாடு காவிரி வடகரைத் ஸ்தலம் பதிகம் பற்றிய சுருக்கமான *பன்னிரெண்டாம் திருமுறையில் இருந்து சேக்கிழார் பெருமான் அருளிய திருத்தொண்டர் புராணம் - இலை மலிந்த சருக்கம் - ஏனாதிநாத நாயனார் புராணம்* *ஏனாதிநாத நாயனார் புராணம் என்பது சைவ சமயத்தின் திருமுறைகளில் பன்னிரண்டாம் திருமுறையான பெரியபுராணத்தில், சேக்கிழாரால் பாடப்பட்ட உன்னதமான சிவனடியார் வரலாறு ஆகும். இவர் சோழ நாட்டின் காவிரி தென்கரைத் தலங்களுள் ஒன்றான எயினனூர் என்ற தலத்தில் அவதரித்தவர் ஆவார். திருநீற்றின் மீது கொண்ட பக்தி மற்றும் அடியார்களுக்குச் செய்யும் தொண்டிற்காகத் தன் உயிரையே தியாகம் செய்த பெருமை இவருக்கு உண்டு. அரசர்களுக்கு வாள்வித்தைப் பயிற்சி அளிக்கும் தலைமை வாளாசிரியர். வாள் வித்தையின் மூலம் ஈட்டும் பொருள் முழுவதையும் சிவனடியார்களுக்கு அமுது படைக்கவும், திருப்பணிகள் செய்யவும் செலவிட்டார். திருநீறு அணிந்தவர்களைச் சிவனாகவே மதிக்கின்ற மாபெரும் சிவதொண்டராக விளங்கினார்.* *ஏனாதிநாதரிடம் வாள் பயிற்சி பெறப் பலரும் வந்ததால், அவரிடம் கல்வி பயின்ற சீடர்களின் எண்ணிக்கை பெருகியது. இதனால், அதே ஊரில் வாள் வித்தை கற்பித்து வந்த இவருடைய தாயாதி உறவினரான அதிசூரன் என்பவனுக்கு வருவாய் குறைந்தது. வஞ்சகமும் பொறாமையும் கொண்ட அதிசூரன் தன் சுற்றத்தாரைத் திரட்டிக்கொண்டு ஏனாதிநாதருடன் போரிட முற்பட்டான். இரு தரப்பிற்கும் இடையே கடுமையான போர் மூண்டது. வில், வாள், வேல் ஏந்தி நடந்த இந்தப் போரில் ஏனாதிநாதரின் வீரத்திற்கு முன்னால் அதிசூரனின் படை தோற்று ஓடியது.தோல்வியால் அவமானம் அடைந்த அதிசூரன், நேர் வழியில் ஏனாதிநாதரை வெல்ல முடியாது என்பதை உணர்ந்து ஒரு வஞ்சகத் திட்டத்தைத் தீட்டினான்.* *ஏனாதிநாதர் திருநீறு (வெண்ணீறு) அணிந்த சிவனடியார்களைத் தன் உயிர் இருக்கும் வரை எதிர்க்க மாட்டார் என்ற ரகசியத்தை அதிசூரன் அறிந்திருந்தான்.ஒரு நாள் விடியற்காலையில், ஏனாதிநாதருக்கு ஒரு தூது அனுப்பினான். "நம் சுற்றத்தார் அழியாமல் நாம் இருவர் மட்டும் தனியிடத்தில் போரிட்டு வெல்பவர் இத்தொழிலை வைத்துக் கொள்வோம்" என்று அழைத்தான்.அதனை ஏற்ற ஏனாதிநாதர் தனியாகப் போர்க்களத்திற்குச் சென்றார்.அதிசூரன் தன் நெற்றியில் திருநீற்றைப் பூசிக்கொண்டு, அதன் மேல் எவருக்கும் தெரியாதவாறு கேடயத்தால் மறைத்துக் கொண்டு வந்தான்.போர் தொடங்கியவுடன், ஏனாதிநாதர் அவனை வெட்ட முற்படும் வேளையில் அதிசூரன் தன் கேடயத்தை விலக்கித் தன் நெற்றியில் இருந்த திருநீற்றைக் காட்டினான்.* *அதிசூரனின் நெற்றியில் திருநீற்றைக் கண்ட ஏனாதிநாதர் திடுக்கிட்டார். "இவர் சிவபெருமானின் அடியவராகிவிட்டார்; இவரை நான் கொல்லக் கூடாது" என்று நினைத்தார்.அதே நேரத்தில், ஆயுதத்தை கீழே போட்டால் ஆயுதமில்லாதவரைக் கொன்ற பழி அதிசூரனுக்கு வந்து சேரும் என்று அஞ்சினார். எனவே, தன் கையில் வாளையும் கேடயத்தையும் ஏந்தியவாறே, எவ்வித எதிர்ப்பும் காட்டாமல் அசையாது நின்றார். வஞ்சகனான அதிசூரன், ஏனாதிநாதரின் நிலையைப் பயன்படுத்தித் தன் வாளால் அவரை வெட்டிக் கொன்றான். திருநீற்றுக்காகத் தன் உயிரையே ஈந்த ஏனாதிநாதரின் பக்தியைக் கண்டு மகிழ்ந்த சிவபெருமான், உமாதேவியுடன் ரிஷப வாகனத்தில் தோன்றி அவருக்கு சிவலோக முக்தி அளித்தருளினார். இப்புராணம் நமக்குத் திருநீற்றின் பெருமையையும், சிவனடியார் வேடத்தின் மீது ஒரு பக்தன் வைக்க வேண்டிய உன்னத மதிப்பையும் உணர்த்துகிறது.* பாடல் வரிகள் : *பன்னிரெண்டாம் திருமுறையில் இருந்து சேக்கிழார் பெருமான் அருளிய திருத்தொண்டர் புராணம் - இலை மலிந்த சருக்கம் - ஏனாதிநாத நாயனார் புராணம்* கொச்சகக் கலிப்பா புண்டரிகம் பொன் வரை மேல் ஏற்றிப் புவி அளிக்கும் தண்டரள வெண்கவிகைத் தார் வளவர் சோணாட்டில் வண்டறை பூஞ் சோலை வயல் மருதத் தண் பணை சூழ்ந்து எண் திசையும் ஏறிய சீர் எயின் மூதூர் எயினனூர். 1 வேழக் கரும்பினோடு மென் கரும்பு தண்வயலில் தாழக் கதிர்ச்சாலி தான் ஓங்கும் தன்மையதாய் வாழக் குடி தழைத்து மன்னிய அப் பொற் பதியில் ஈழக் குலச் சான்றார் ஏனாதி நாதனார். 2 தொன்மைத் திரு நீற்றுத் தொண்டின் வழிபாட்டின் நன்மைக்கண் நின்ற நலம் என்றும் குன்றாதார் மன்னர்க்கு வென்றி வடிவாட் படை பயிற்றும் தன்மைத் தொழில் விஞ்சையில் தலைமை சார்ந்து உள்ளார். 3 வாளின் படை பயிற்றி வந்த வளம் எல்லாம் நாளும் பெரு விருப்பால் நண்ணுங் கடப் பாட்டில் தாளும் தட முடியும் காணாதார் தம்மையுந் தொண்டு ஆளும் பெருமான் அடித் தொண்டர்க்கு ஆக்குவார். 4 நள்ளார்களும் போற்றும் நன்மைத் துறையின் கண் எள்ளாத செய்கை இயல்பின் ஒழுகு நாள் தள்ளாத தங்கள் தொழில் உரிமைத் தாயத்தின் உள்ளான் அதிசூரன் என்பான் உளன் ஆனான். 5 மற்ற அவனும் கொற்ற வடிவாட் படைத் தொழில்கள் கற்றவர்கள் தன்னில் கடந்துள்ளார் இல்லை எனும் பெற்றிமையான் மா நிலத்து மிக்க பெருமிதம் வந்து உற்றுலகில் தன்னையே சால மதித்து உள்ளான். 6 தானாள் விருத்தி கெடத் தங்கள் குலத் தாயத்தின் ஆனாத செய் தொழிலாம் ஆசிரியத் தன்மை வளம் மேனாளுந் தான் குறைந்து மற்றவர்க்கே மேம்படலால் ஏனாதி நாதர் திறத்து ஏலா இகல் புரிந்தான். 7 கதிரோன் எழ மழுங்கிக் கால்சாயுங்காலை மதி போல் அழிந்து பொறா மற்றவனுஞ் சுற்றப் பதியோர் உடன் கூடப் பண்ணி அமர் மேல் சென்று எதிர் போர் விளைப்பதற்கே எண்ணித் துணிந்து எழுந்தான். 8 தோள் கொண்ட வல் ஆண்மைச் சுற்றத்தொடும் துணையாம் கோள் கொண்ட போர் மள்ளர் கூட்டத்தொடுஞ் சென்று வாள் கொண்ட தாயம் வலியாரே கொள்வது என மூள்கின்ற செற்றத்தான் முன் கடையில் நின்று அழைத்தான். 9 வெங்கட் புலி கிடந்த வெம் முழையில் சென்று அழைக்கும் பைங்கண் குறுநரியே போல்வான் படை கொண்டு பொங்கிப் புறம் சூழ்ந்து போர் குறித்து நேர் நின்றே அங்கட் கடை நின்று அழைத்தான் ஒலி கேளா. 10 ஆர் கொல் பொர அழைத்தார் என்றரி ஏற்றின் கிளர்ந்து சேர்வு பெறக் கச்சில் செறிந்த உடை மேல் வீக்கி வார் கழலுங் கட்டி வடிவாட் பலகைகொடு போர் முனையில் ஏனாதி நாதர் புறப்பட்டார். 11 புறப்பட்ட போதின் கட் போர்த் தொழில்கள் கற்கும் விறல் பெருஞ் சீர்க் காளையர்கள் வேறு இடத்து நின்றார் மறப் படை வாள் சுற்றத்தார் கேட்டு ஓடி வந்து செறற்கரும் போர் வீரர்க்கு இரு மருங்கும் சேர்ந்தார்கள். 12 வந்தழைத்த மாற்றான் வயப் புலிப் போத்து அன்னார் முன் நம் தமது வாள் பயிற்று நற்றாயம் கொள்ளுங்கால் இந்த வெளி மேற்கை வகுத்து இருவேம் பொரு படையும் சந்தித்து அமர் விளைத்தால் சாயாதார் கொள்வதென. 13 என்று பகைத்தோன் உரைப்ப ஏனாதி நாதர் அது நன்று உனக்கு வேண்டுமேல் நண்ணுவன் என்று உள் மகிழ்ந்து சென்றவன் முன் சொன்ன செருக் களத்துப் போர் குறிப்பக் கன்றி இரு படையும் கை வகுத்து நேர் மலைவார். 14 வேறு - மாச்சீரும் விளச்சீரும் விரவி வந்த அறுசீர் சந்த விருத்தம் மேக ஒழுங்குகள் முன் கொடு மின்னிரை தம்மிடையே கொடு மாக மருங்கினும் மண்ணினும் வல்லுரு மேல் எதிர் செல்வன வாக நெடும் பல கைக்குல மாள் வினை வாளுடை ஆடவர் காக மிடைந்த களத்திரு கைகளின் வந்து கலந்தனர். 15 கால் கழல் கட்டிய மள்ளர்கள் கைகளின் மெய்கள் அடக்கிய வாளொளி வட்ட முனைத்திட வந்து இரு கைகளின் முந்தினர் வேலொடு வேல் எதிர் நீள்வன மேவிய பாதலம் விட்டுயர் ஞாலமுறும் பணி வீரர்கள் நா நிமிர்கின்றன ஒத்தன. 16 வெங்கண் விறற் சிலை வீரர்கள் வேறு இரு கையிலும் நேர்பவர் தங்கள் சிலைக்குலம் உந்தின தாவில் சரங்கள் நெருங்குவ பொங்கு சினத்து எரியிற் புகை போகு கொடிக்கள் வளைத்து எதிர் செங்கண் விழிக் கனல் சிந்திய சீறு பொறிச் செலவு ஒத்தன. 17 வாளொடு நீள் கை துடித்தன மார்பொடு வேல்கள் குளித்தன தோளொடு வாளி நிலத்தன தோலொடு தோல்கள் தகைத்தன தாளொடு வார் கழல் இற்றன தாரொடு சூழ் சிரம் அற்றன நாளொடு சீறி மலைப்பவர் நாடிய போர் செய் களத்தினில். 18 குருதியின் நதிகள் பரந்தன குறை உடல் ஓடி அலைந்தன பொரு படை அறு துணி சிந்தின புடை சொரி குடர் உடல் பம்பின வெருவர எருவை நெருங்கின விசியறு துடிகள் புரண்டன இரு படை தனினும் எதிர்ந்தவர் எதிர் எதிர் அமர் செய் பறந்தலை. 19 நீள் இடை முடுகி நடந்து எதிர் நேர் இருவரில் ஒரு வன்றொடர் தாளிரு தொடை அற முன் பெயர் சாரிகை முறைமை தடிந்தனன் வாளொடு விழுமுடல் வென்றவன் மார்பிடை அறமுன் எறிந்திட ஆளியின் அவனும் அறிந்தனன் ஆயினர் பலர் உளர் எங்கணும். 20 கூர் முனை அயில் கொடு முட்டினர் கூடி முன் உருவிய தட்டுடன் நேருரம் உருவ உரப்புடன் நேர்பட எதிர் எதிர் குத்தினர் ஆருயிர் கழியவும் நிற்பவர் ஆண்மையில் இருவரும் ஒத்தமை போரடு படைகொடு அளப்பவர் போல்பவர் அளவிலர் பட்டனர். 21 பொற்சிலை வளைய எதிர்ந்தவர் புற்றரவு அனைய சரம்பட விற்படை துணியவும் நின்றிலர் வெற்றி கொள் சுரிகை வழங்கினர் முற்றிய பெருவளன் இன்றியும் முற்படு கொடை நிலை நின்றிட உற்றன உதவிய பண்பினர் ஒத்தனர் உளர் சில கண்டர்கள். 22 அடல்முனை மறவர் மடிந்தவர் அலர் முகம் உயிருள வென்றுறு படர் சிறை சுலவு கருங்கொடி படர்வன சுழல்வன துன்றலில் விடு சுடர் விழிகள் இரும்பு செய் வினைஞர் தம் உலையின் முகம் பொதி புடை மிடை கரியிடை தங்கிய புகை விடு தழலை நிகர்த்தன. 23 திண் படை வயவர் பிணம்படு செங்களம் அதனிடை முன் சிலர் புண்படு வழி சொரியும் குடர் பொங்கிய கழுகு பருந்தொடு கொண்டெழு பொழுதினும் முன் செயல் குன்றுதல் இலர் தலை நின்றனர் விண்படர் கொடி விடு பண் பயில் விஞ்சையர் குமரரை வென்றனர். 24 வேறு - கொச்சகக் கலிப்பா இம் முனைய வெம் போரில் இரு படையின் வாள் வீரர் வெம் முனையில் வீடியபின் வீடாது மிக்கு ஒழிந்த தம்முடைய பல் படைஞர் பின்னாகத் தாம் முன்பு தெம்முனையில் ஏனாதி நாதர் செயிர்த்து எழுந்தார். 25 வெஞ்சினவாள் தீ உமிழ வீரக் கழல் கலிப்ப நஞ்சணி கண்டர்க்கு அன்பர் தாம் எதிர்ந்த ஞாட்பின் கண் எஞ்சி எதிர் நின்ற இகல் முனையில் வேலுழவர் தஞ்சிரமும் தோளுரமும் தாளும் விழத் துணித்தார். 26 தலைப்பட்டார் எல்லாரும் தனி வீரர் வாளில் கொலைப் பட்டார் முட்டாதார் கொல் களத்தை விட்டு நிலைப்பட்ட மெய் உணர்வு நேர் பட்ட போதில் அலைப்பட்ட ஆர்வமுதல் குற்றம் போல் ஆயினார். 27 இந் நிலைய வெங்களத்தில் ஏற்றழிந்த மானத்தால் தன்னுடைய பல் படைஞர் மீண்டார் தமைக் கொண்டு மின்னொளி வாள் வீசி விறல் வீரர் வெம் புலி யேறு அன்னவர் தம் முன் சென்று . அதி சூரன் நேர் அடர்ந்தான். 28 மற்றவர் தம் செய்கை வடி வாள் ஒளி காணச் சுற்றி வரும் வட்ட அணையில் தோன்றா வகை கலந்து பற்றி அடர்க்கும் பொழுதில் தானும் படை பிழைத்துப் பொற்றடந் தோள் வீரர்க்கு உடைந்து புறகிட்டான். 29 போன அதிசூரன் போரில் அவர்க் கழிந்த மான மிக மீதூர மண் படுவான் கண் படான் ஆன செயல் ஓர் இரவும் சிந்தித்து அலமருவான் ஈன மிகு வஞ்சனையால் வெல்வன் என எண்ணினான். 30 சேட்டாரும் கங்குல் புலர்காலைத் தீயோனும் நாட்டாரைக் கொல்லாதே நாம் இருவேம் வேறு இடத்து வாட்டாயங் கொள் போர் மலைக்க வருக எனத் தோட்டார் பூந்தாரார்க்குச் சொல்லிச் செலவிட்டான். 31 இவ்வாறு கேட்டலுமே ஏனாதி நாதனார் அவ்வாறு செய்தல் அழகிதென அமைந்து கை வாள் அமர் விளைக்கத் தான் கருதும் அக் களத்தில் வெவ்வாள் உரவோன் வருக என மேற் கொள்வார். 32 சுற்றத்தார் யாரும் அறியா வகை சுடர் வாள் பொற் பலகையும் தாமே கொண்டு புறம் போந்து மற்றவன் முன் சொல்லி வரக்குறித்த அக் களத்தே பற்றலனை முன் வரவு பார்த்துத் தனி நின்றார். 33 தீங்கு குறித்து அழைத்த தீயோன் திரு நீறு 1 தாங்கிய நெற்றியினார் தங்களையே எவ்விடத்தும் 2 ஆங்கு அவரும் தீங்கு இழையார் என்பது அறிந்தானாய்ப் பாங்கில் திரு நீறு பண்டு பயிலாதான். 34 வெண்ணீறு நெற்றி விரவப் புறம் பூசி உள் நெஞ்சில் வஞ்சக் கறுப்பும் உடன் கொண்டு வண்ணச் சுடர் வாள் மணிப் பலகை கைக் கொண்டு புண்ணியப் போர் வீரர்க்குச் சொன்ன இடம் புகுந்தான். 35 வென்றி மடங்கல் விடக்கு வர முன் பார்த்து நின்றாற் போல் நின்ற நிலை கண்டு தன் நெற்றி சென்று கிடப்பளவுந் திண் பலகையான் மறைத்தே முன் தன் வீரர்க்கு எதிரே மூண்டான் மறம் பூண்டான். 36 அடல் விடையேறு என்ன அடர்த்தவனைக் கொல்லும் இடை தெரிந்து தாள் பெயர்க்கும் ஏனாதி நாதர் புடை பெயர்ந்த மாற்றான் பலகை புறம் போக்கக் கடையவன் தன் நெற்றியின் மேல் வெண்ணீறு தாம் கண்டார். 37 கண்ட பொழுதே கெட்டேன் முன்பு இவர் மேல் காணாத வெண் திரு நீற்றின் பொலிவு மேற்கண்டேன் வேறு இனி என் அண்டர் பிரான் சீர் அடியார் ஆயினார் என்று மனம் கொண்டு இவர் தம் கொள்கைக் குறி வழி நிற்பேன் என்று. 38 கை வாளுடன் பலகை நீக்கக் கருதியது செய்யார் நிராயுதரைக் கொன்றார் எனும் தீமை எய்தாமை வேண்டும் இவர்க்கு என்று இரும் பலகை நெய் வாளுடன் அடர்த்து நேர்வார் போல் நின்றார். 39 அந்நின்ற தொண்டர் திரு உள்ளம் ஆர் அறிவார் முன் நின்ற பாதகனும் தன் கருத்தே முற்று வித்தான் இந் நின்ற தன்மை அறிவார் அவர்க்கு அருள மின்னின்ற செஞ்சடையார் தாமே வெளி நின்றார். 40 மற்றினி நாம் போற்றுவது என் வானோர் பிரான் அருளைப் பற்றலர் தம் கை வாளால் பாசம் அறுத்து அருளி உற்றவரை என்றும் உடன் பிரியா அன்பு அருளிப் பொற்றொடியாள் பாகனார் பொன்னம்பலம் அணைந்தார். 41 தம் பெருமான் சாத்தும் திரு நீற்றுச் சார்புடைய எம் பெருமான் ஏனாதி நாதர் கழல் இறைஞ்சி உம்பர் பிரான் காளத்தி உத்தமர்க்குக் கண்ணப்பும் நம் பெருமான் செய்த பணி நாம் தெரிந்தவாறு உரைப்பாம். 42 *"ஏனாதி நாதன் தன் அடியார்க்கும் அடியேன்"* திருச்சிற்றம்பலம் 🕉️🙏 ஓம் நமசிவாயம் 🕉️🙏 சிவாய நம ஓம் 🕉️🙏 நற்றுணையாவது நாதன் நாமம் நமச்சிவாயவே🕉️ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

1K views • 20 days ago
00:00
01:07

#🙏ஆன்மீகம்

504 views • 4 hours ago
00:00
01:01