கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஏழாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 26.02.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
.
அகிலம்
=======
வாக்குரைக்க கன்னியர்கள் மனமகிழ்ந்து கொண்டாடி
நாக்குரைப்பார் பின்னும் நாரா யணரோடு
நாங்கள்போய்ப் பிறந்தால் நம்முடைய நாயகமே
தாங்கள்வரு மென்றதற்குத் தருணமே தென்றுரைத்தார்
அப்பொழுது அய்யா நாராய ணருரைப்பார்
செப்புகிறார் கன்னியர்க்குச் சிறந்த தருணமது
ஆயிரத்தெட் டம்பலமும ஆன திருப்பதியில்
வாயிதமோ ரம்பலமும் வளர்பதியி லொன்றதுவும்
கெங்கையுட கண்ணும் கேள்விமன்னர் தஞ்சாவும்
சங்கை யழிந்து தலையழிந்த தவ்வாண்டு
வருவேன் தென்சுவர்க்க வடமேற்கு மூலையிலே
லிங்கமொன்றி லேமூன்று இணையாகத் தோன்றினவென்(று)
எங்கும் பிரகாசம் இட்டவ்வாண் டேவருவோம்
கண்டிடநீர் நான்வருகக் காரண மநேகமுண்டு
விண்டுரைக்கக் கூடாது மெல்லியரே யித்தருணம்
சொன்னத் தருணம் செவிகேட்டு நீங்களெல்லாம்
என்னை நினைந்து இருங்கோ வொருநினைவாய்
.
விளக்கம்
========
மகாவிஷ்ணுவின் உறுதி மொழியை உள்வாங்கிக்கொண்ட சப்தமாதர்கள் மீண்டும் மகாவிஷ்ணுவை நோக்கி, எங்களுடைய நாயகமே ! நாங்கள் பூலோகத்தில் போய்ப் பிறந்தால், எங்களை உங்கள் மனைவியர்களாக ஏற்பதற்குத் தாங்கள் எப்போது வருவீர்கள்? அந்தத் தருணத்தை எங்களுக்கு தெரியப் படுத்துங்கள் என்று வேண்டினார்கள்.
.
உடனே மகாவிஷ்ணு அதற்குரிய அருமையான தருணத்தை அன்போடு சொல்லுகிறார். சப்தமாதர்களே ! நீங்கள் பூலோகத்தில் வாழும்போது ஆக்ஞா, விசுத்தி, அநாதகம், மணிபூரகம், சுவாதிஷ்டானம், மூலாதாரம் ஆகிய ஆறு ஆதாரங்களையும் சூரியகலை, சந்திரகலை, சுழிமுனை எனப்படும் பிராணயாகப் பயிற்சி மூலம் தன்வயமாக்கி, கொண்டை அமுது ஊறுகின்ற சகஸ்ராரப் பகுதியில் ஞானப் பார்வை பெற்று, கண், காது தோல், நாக்கு, மூக்கு ஆகிய பஞ்சேந்திரியங்களின் சுய இயக்கத்தைக் கொன்றொழித்து, அந்த ஐம்பொறிகளையும் உங்களுடைய கட்டுப்பாட்டிலாக்கி வைத்துக்கொண்டிருக்க வேண்டும். அப்படி நீங்கள் இருக்கும் காலத்தில் உங்களுடைய சந்திரகலையில் எமது வருகையை உணரும் நிலை உண்டாகும்.
.
எம்முடைய பூலோக வருகை எத்தகையதாய் இருக்குமென்றால் சகல வடிவ பரமாத்ம ஜோதியில், சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மும் மூர்த்திகளும் ஐக்கியமாகி அண்ட சராசர ஐஸ்வர்யமாக வருவோம்.
எமது பூலோக வருகை உங்கள் ஏழு பேரையும் ஆட்கொள்வதற்காக மட்டுமல்ல. இன்னும் ஏராளமான காரண காரியங்கள் உண்டு. அவற்றை நான் பூலோகத்திற்கு வந்த பின்பு நீங்களே கண்டு உணர்வீர்கள்.
.
அந்தக் காரணங்களைச் சொற்களால் விளக்க முடியாது. உணர்வால் மட்டுமே உட்கொள்ளமுடியும். நான் இப்போது உங்களிடம் உரைத்தவை யாவையும் செவிமடுத்து அனுசரித்து, ஒரே நினைவாக என்னையே நினைத்துக் கொண்டு இருங்கள்.
.
.
அகிலம்
=======
இத்தருணங் கேட்ட இப்பொழு தேமுதலாய்
வடமேற்கு மேற்கும் வடக்குங்கால் நீட்டாதுங்கோ
என்று தருணம் இதுவுரைத்தார் கன்னிகட்கு
அன்று மடவார் அகமகிழ்ந்து கொண்டாடி
நல்லதுகா ணெங்களையும் நாயகமே நீர்படையும்
வல்லப் பொருளே மறைமுதலே யென்றுரைத்தார்
உடனையா நாதன் ஓவியத்தா ரேழ்வரையும்
திடமான பூமியிலே செய்தர்ம அவ்வழியில்
பிறவிசெய்தார் மூவர் பிறந்தார்கள் கன்னியர்கள்
திறவி யொளிமாதர் தேசம தில்பிறக்க
நாரா யணரும் நல்லசிவ னுமையும்
சீராரும் நல்ல தெய்வத் திருமாதும்
கயிலை தனிலேகிக் கட்டான மண்டபத்தில்
ஒயிலாகக் கூடி உவந்திருக்கு மப்போது
.
விளக்கம்
========
என்னுடைய போதனைகளைக் கேட்ட இந்த தருணத்திலிருந்து, நீங்கள் பூலோகத்தில் பெண் மனுவாகப் பிறப்பெடுக்கும் சமயம் வரை, சந்திர கலை, சூரிய கலை, சுழு முனை ஆகிய ஆகிய சுவாச அசைவுகளில் நாட்டமற்று இருங்கள் என்று சப்தமாதர்களுக்கு மகாவிஷ்ணு எடுத்துக் கூறினார்.
அதைக் கேட்ட சப்த மாதர்கள், அளவற்ற ஆனந்தத்தோடு மகாவிஷ்ணுவைப் பார்த்து, எங்களுடைய நாயகரே நீங்கள் சொன்னபடியே எங்களைப் பூலோகத்தில் பிறவி செய்யுங்கள் என்றார்கள்.
.
உடனே, மகாவிஷ்ணுவும், சிவபெருமானும், பிரம்மதேவனும் பூலோகத்தில் சப்தமாதர்கள் பெற்ற பிள்ளைகளின் வழிக்குலத்தில் சப்தமாதர்களைப் பிறவி செய்வதற்கான ஏற்பாட்டினைச் செய்யலானார்கள், அதன்படியே சப்த மாதர்கள் பூலோகத்தில் பிறவியாயினர்.
.
இவ்வண்ணமாக சப்த மாதர்களைப் பூலோகத்தில், பிறவி செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்துவிட்டு, மகாவிஷ்ணுவும் சிவபெருமானும், உமையவளும், மகாலட்சுமியும் கயிலையங்கிரிக்குச் சென்று அவர்களுக்கான அலங்கார மண்டபத்தில் ஒய்யாரமாக எல்லாரும் மகிழ்ச்சியுடன் இருந்தனர்.
.
.
தொடரும்…. அய்யா உண்டு.
#அய்யா வைகுண்டர் #🚩அய்யா வைகுண்டர் 🚩 #💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர் {1008} #Ayya Vaikundar