"நான் தூங்க போகிறேன்"...
மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்ட பிறகும் மது அருந்தியதால், சந்திரபாபுவின் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டது. 1974, மார்ச் ஏழாம் தேதி இரவு, சந்திரபாபுவின் உடல்நிலை மிகவும் மோசமானது. ரத்த வாந்தி எடுத்தார். அவர் உதவியாளர் சுத்தம் செய்தார். "நான் தூங்க போகிறேன். நீ கவலைப்படாமல் போய் படு" என உதவியாளரிடம் கூறிவிட்டு உறங்க சென்ற சந்திர பாபு, மீண்டும் எழுந்திருக்கவே இல்லை. 1974, மார்ச் எட்டாம் தேதி அதிகாலை நேரத்தில் அவர் உயிர் பிரிந்தது. அப்போது அவருக்கு வயது 46.
அதிகாலையில் எம்.எஸ். விஸ்வநாதன் வீட்டில் தொலைபேசி ஒலித்தது.
"அண்ணே, சந்திரபாபு இறந்துட்டாருண்ணே" அவரது குரல் நடுங்கியது. எம்.எஸ்.வி. உடைந்து போய் உட்கார்ந்தார்.
சந்திரபாபுவின் வீட்டுக்கு எம்.எஸ்.வியும், அவர் மனைவியும் விரைந்தனர். "அண்ணே, சந்திரபாபு சாகறப்போ உங்களைத்தான் நினைச்சுட்டு இருந்தாரண்ணே, செத்து போறதுக்கு முன்னாடி, "நான் செத்ததை யார்கிட்டயும் சொல்லக்கூடாது முதல்ல விஸ்வநாதன் கிட்டே தான் சொல்லணும் அவன் தான் என் உடலை எடுத்துட்டு போய் அடக்கம் பண்ணனும்னு" சொன்னார் அண்ணே"என்று கதறினார் உதவியாளர் கிருஷ்ணமூர்த்தி. தகவல் பரவியது.
அப்போது நடிகர் சங்கத் தலைவராக இருந்த சிவாஜி கணேசன், நடிகர் சங்கத்தில் சந்திரபாபு உடலை இறுதி மரியாதைக்கு வைக்க ஏற்பாடு செய்தார். அவர் கிறிஸ்தவர் என்பதால், அவர் தலை அருகே சிலுவை அடையாளம் வைக்கப்பட்டிருந்தது.
இருபுறங்களிலும் மெழுகுவர்த்திகள் ஏற்றி வைக்கப்பட்டு இருந்தது. நடிகர் - நடிகைகள் பெரும் திரளாக வந்த அஞ்சலி செலுத்தினர்.
வாலாஜாபாத்தில் இருந்த சந்திரபாபுவின் தந்தையும் தாயும், சென்னைக்கு வந்து தன் மகனின் உடலை பார்த்து கண்ணீர் விட்டனர். சந்திரபாபுவின் மரணத்திற்கு அனுதாபம் தெரிவித்து அவரது தந்தைக்கு முதல்வர் கருணாநிதி செய்தி அனுப்பினார். பெருந்தலைவர் காமராஜர் நேரில் வந்து, சந்திரபாபுவின் உடலுக்கு மரியாதை செய்தார்.
சந்திரபாபு எப்போதும் உபயோகிக்கும் சேனல் 5 பெர்ஃப்யூமை வாங்கிக் கொண்டு வந்து அவர் உடலில் போட்டு விட்டு அழுதார் சிவாஜி. அச்சமயம் மொரீஷியசில் இருந்த எம்ஜிஆர், சந்திரபாபு மறைவுக்கு அஞ்சலி செலுத்த வரவில்லை. இரங்கல் செய்தி எதுவும் சொன்னதாகவும் தெரியவில்லை.
சந்திரபாபுவின் உடல், சாந்தோம் சர்ச்சுக்கு கொண்டு செல்லப்பட்டது. சடங்குகளுக்கு பிறகு, சந்திரபாபுவின் உடல், அவரது ஆரூயிர் நண்பர் விஸ்வநாதனின் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. பிறகு, பட்டினப்பாக்கம் கல்லறை தோட்டத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
சந்திரபாபுவின் திருமணத்தை நடத்தி வைத்த ஆர்ச் பிஸ்அப் அடைக்கலமே, இறுதியில் சந்திரபாபுவின் இறுதிச்சடங்கையும் செய்ய வேண்டியதாயிற்று. சந்திரபாபு இறந்த பொழுது, அந்த பிஷப் அழுததை பார்த்து பலரும் கலங்கி போயினர் அந்த பிஷப், கல்லறைத் தோட்டத்தில் தனக்காக ஒதுக்கி வைத்திருந்த இடத்தை சந்திரபாபுக்காக விட்டுக் கொடுத்தார். புதைக்கும் முன்பு சந்திரபாபுவின் உடல் மீது மாதாவின் படம், சிலுவை, பைபிள் ஆகியவற்றை வைத்தே புதைத்தனர்.
சந்திரபாபு அடிக்கடி சொல்வது இதுதான்...
"என்னை புரிந்து கொண்டவர்கள், முற்றிலும் புரிந்து கொண்டவர்கள் யாரும் இல்லை. ஏன், என் பெற்றோர்கள் கூட என்னை சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்றுதான் சொல்லுவேன். ஆகவே, மற்றவர்கள் யாராவது என்னை புரிந்து கொண்டதாகச் சொன்னால் என்னால் நம்புவதற்குக் கடினமாகத்தான் இருக்கிறது. அதே சமயம் சிரிப்பை அடக்குவதற்கும் கஷ்டமாகத்தான் இருக்கிறது"
"ஓ ஜீசஸ்" என பெருமூச்சு விட்டபடி, அமெரிக்க பாணியில் அடிக்கடி உச்சரிப்பார்.
வெகு நேரம் மௌனமாக வேறு எங்கேயோ பார்ப்பது போல் இருந்துவிட்டு, தன் முன் உள்ள நபரை சட்டென்று திரும்பிப் பார்த்து குழந்தை போல் புன்னகைப்பார்.
யாரையும் 'சார்' போட்டு அழைக்க மாட்டார் சந்திரபாபு.
எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும் பெயருக்கு முன்னால் 'மிஸ்டர்' 'மிஸ்' 'மிஸஸ்' சேர்த்து அழைப்பது தான் சந்திரபாபுவின் வழக்கம். எம்ஜிஆரை கூட மிஸ்டர் ராமச்சந்திரன் என்று தான் அழைப்பார். 1958 இல் சந்திரபாபுவுக்கு 'நடிகமணி' என்ற ஒரு பட்டம் கொடுக்கப்பட்டது.
ஒருகாலத்தில் படுக்கையறை வரை கார் செல்லும் படியான பங்களா கட்டி வசதியாக வளமாக இருந்தவர் பின்னாளில் தன் ஃபேவரிட் பிராண்ட் சிகரெட் வாங்க கூட காசு இல்லாமல் கவிஞர் வாலியிடம் வாங்கி வர சொன்ன சோகமும் நடந்தது .
'குங்குமப்பூவே' பாடல் சபாஷ் மீனா படத்துக்காக உருவாக்கப்பட்டது. தயாரிப்பாளர் பி.ஆர். பந்தலுவை விட்டு விலகிய சந்திரபாபு, அந்தப் பாடலை மரகதம் படத்துக்காகப் பாடிவிட்டார்.
பாக்யராஜின் மிகச்சிறந்த திரைக்கதை அம்சம் உள்ள படமான 'அந்த ஏழு நாட்கள்' சந்திரபாபுவின் நிஜ வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட படம் என்ற பேச்சு அந்த சமயத்தில் வந்தது.
நிஜம் மட்டும் பேசக் தெரிந்த நிஜக் கலைஞனின், தன் சொந்த வாழ்க்கையின் தீரா சோகங்களுக்குத் திரையிட்டுக் கொண்டு, திரை முன்னிருத்தும் மக்களை மகிழ வைத்த மகத்தான நடிகரான சந்திரபாபு .
#சினிக்கூத்து #ரெங்கா! #renga-vamba! நடிகர் சந்திரபாபு பற்றி தெரிந்து கொள்வோம்.நன்றி : Paranji சங்கர் FB