கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஆறாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 08.02.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
அகிலம்
=======
ஐம்பத்து ஐந்து ரிசிமார்களின் அடையாளம் கூறுதல்
====================
மான்தோ லிலேயிருப்பான் வானமதைத் தான்பார்த்துத்
தீன்சோ றருந்தாமல் செலங்குடித்து நாடோறும்
கற்பமுண்டோ மென்று கலியில்மிகப் பட்டுழன்று
அற்பமுடன் கொஞ்சி அவன்சிலநாள் தானிருந்து
பிரம்ம வைகுண்டம் பிறப்பெடுத்து நான்தானும்
வரம்வைத் தவனை வதைத்துப்பின் னுன்னினத்தில்
படைத்துத் தருவேன் பார்த்துக்கோ லெக்கெனவே
அடர்த்தியா யைம்பத்து ஐந்து இருஷிகளும்
ஆளுக் கொருவிதமாய் அருந்துவ துமிருப்பும்
நாளு முறையாய் நடத்துவதும் நீகேளு
ஒக்க விபரமதாய் உரைக்கநே ரம்பெருகும்
மிக்கத் திரட்டாய் விடுகிறேன் நீகேளு
.
விளக்கம்
=========
பிரமலோக வாசிகளான ரிசிமார்களே, அந்த ஐம்பத்து ஐந்து ரிசிமார்களில் சிலர் மான்தோலில் அமர்ந்து வானத்தையே பார்த்த வண்ணம் இருப்பர்.
.
ஒருநாளும் ஒருவேளை கூட உணவிற்காக சாதத்தை அருந்தாமல், தண்ணீரைக் குடித்துவிட்டு, வேதங்களால் விதிக்கப்பட்ட கர்மங்களை கடைப்பிடிக்கும் முறைமையை நான் உணவாக உட்கொள்ளுகிறேன் என்பர்.
.
அதனால் கலிமாய்கையுடையோரால் பல விதமான இன்னல்களை அனுபவித்து ஒளி சற்றும் இல்லாத குழந்தைகளைப் போல் இருப்பார்.
.
அப்போது நான் பரப்பிரம வைகுண்டமாக அவதரித்து பூலோகத்தில் வந்து இந்த ஐம்பத்து ஐந்து ரிசிகளையும் எம்மிடம் வரவைத்து, அவர்களின் அந்தப் பிறவியை நிறைவு செய்து மீண்டும் உங்கள் இனத்திலே அவர்களைப் பிறவி செய்து உங்களோடு வாழ வழி வகுப்பேன். இதுவே அவர்களுக்கான அறிகுறிகளாகும்.
.
இப்படி அந்த ஐம்பத்து ஐந்து ரிசிகளும் ஆளுக்கு ஒரு விதமாக இருந்து கொண்டு, வித்தியாசமான உணவு வகைகளை உண்ணுவதைப் பற்றியும், வேறுபாடான நடவடிக்கைகளைப் பற்றியும் கவனமாகக் கேட்டுக் கொள்ளுங்கள்.
.
அதுபற்றி வவரங்களைத் தெள்ளத் தெளிவாகச் சொல்லி விளக்க முனைந்தால் நேரம் மிகவாகும். ஆகவே இரத்தின சுருக்கமாகத் திரட்டித் தருகிறேன் மனதில் ஏற்றிக் கொள்ளுங்கள்.
.
.
அகிலம்
=======
நல்ல மிளகுதின்று நவகண்டி தான்பூண்டு
கொல்ல மிளகுதின்று குப்பைமே லேபுனைந்து
வெள்ளித் தடுக்கில் வீற்றிருப்பா ரேசிலர்கள்
ஆனைத்தோ லிட்டு அருந்தாமல் நாடோறும்
கானகத்தில் வாழ்ந்து கண்மூ டாரேசிலர்கள்
மரத்தைமிகக் காலிலிட்டு வார்சிலந்திக் கோர்வையிட்டுச்
சரத்தையுள்ளே கொண்டு தானிருப்பா ரேசிலர்கள்
மீட்டைக் கொடியும் மிளகுவெற்றி லைக்கொடியும்
இட்டமுடன் நிஷ்டை இருப்பார் சிலபேர்கள்
உப்பில்லா தன்னம் ஒருபோது தான்குடித்து
அப்பிலிட்டுத் தின்று அக்கினியி லேகாய்ந்து
இருப்பார் சிலபேர் இன்னமும்நன் றாய்க்கேளு
.
விளக்கம்
=========
அந்த ஐம்பத்து ஐந்து ரிஷிகளில் சிலர் குரு மிளகை உணவாக உண்டு கொண்டு ஒன்பது விதமான ஆபரணங்களை அணிந்திருப்பர். சிலர் பச்சை மிளகாயை உணவாகக் கொண்டு சாம்பலை உடலெல்லாம் பூசிகொண்டு, வெள்ளியினால் செய்யப்பட்ட தகடை தடுக்காகப் பயன்படுத்தி அதன்மேல் அமர்ந்திருப்பர்.
.
சிலர் யானைத் தோலை ஆடையாகப் போர்த்திக் கொண்டு எவ்வித உணவையும் அருந்தாமல் பல்வேறு நாடுகளிலுமுள்ள காடுகளில் கண் இமைக்காமலே வாழ்ந்து கொண்டிருப்பர்.
.
சிலர் தம் சுவாசத்தை தம்முள் அடக்கிய வண்ணம், தம்மீது சிலந்தி வலை பின்னுவதைக் கூட உணராத நிலையில் ஏதேனும் ஓர் மரக்கட்டையின் மேல் மரம்போல் நிற்பர்.
.
சிலர், புங்கமரத்துக் கொடியையும், மிளகு வெற்றிலைக் கொடியையும் மிக விருப்பத்துடன் மென்று தின்ற வண்ணமாகத் தவமிருப்பர்.
.
சிலர் சாதத்தில் தண்ணீர் ஊற்றிக் கரைத்து அதில் உப்பு சேர்க்காமல் ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டும் குடித்துக் கொண்டு நெருப்பை வளர்த்து அதில் குளிர்காய்ந்து கொண்டிருப்பர்.
.
.
அகிலம்
========
பொருப்பி லிருப்பார் பூமியில் வரோமென்பார்
கள்ளிப்பா லுண்டு கவிழ்ந்திருப்பா ரேசிலபேர்
கொள்ளித் தழலும் கொள்ளைகொண்டக் கஞ்சாவும்
உண்டோங்காண் லோகமதை விழுங்குவோ மென்பார்சிலர்
புல்லை யருந்திப் புலித்தோலின் மேலிருந்து
தில்லைப்பா லுண்டு திரிவோமென் பார்சிலபேர்
புகையிலைச் சாறு புகட்டுவோ மென்பார்சிலர்
தகையில்லாக் கற்பம் தானுண்டோ மென்பார்சிலர்
பூவில் படுப்போம் புகட்டுவோ மாவின்பால்
காவி லுறைந்து கலைதரி யாதிருப்பார்
உடையுடா தேகழுத்தில் உத்திராட்ச மேபுனைந்து
நடையொற்றைக் காலால் நடப்பார் சிலபேர்கள்
இப்படியே நன்றாய் இவரிவர்க் கோர்விதமாய்
அப்படியே தேசமைம்பத் தாறதி லுந்திரிவார்
.
விளக்கம்
==========
மலைகளின் மீது வாழ்ந்து கொண்டிருக்கும் சில ரிசிகள், கிராமங்களிலும், நகரங்களிலும் வாழ ஆசைகொண்டு அப்பகுதிகளுக்கு வரப்போகிறேன் என்பர். சிலர் கள்ளிச் செடியிலுள்ள பாலைக் குடித்துக் கொண்டு தலை நிமிர்ந்து பாராமல் இருப்பர்.
.
சிலர், பற்றி எரியும் விறகிலுள்ள நெருப்புத் தழலையும், சுய உணர்வுகளை மயக்கம் அடையச் செய்கின்ற கஞ்சா இலையையும் உணவுக்கு பதிலாகச் சாப்பிட்டுவிட்டு அந்த மயக்கத்தில், இந்த உலகத்தையே விழுங்கிவிடுவோம் என்பர்.
.
சிலர் உணவாகப் புல்லைத் தின்றுவிட்டு புலித்தோலில் அமர்ந்து இருந்து கொண்டு இனிமேல் எங்களுக்குத் தில்லை மரத்துப் பால் தான் உணவு என்பர்.
.
சிலர் புகையிலைச் சாறு குடித்து வாழ்வோம் என்றும், சிலர் நாங்கள் இந்த உலகம் முடியும் காலம் வரை பசி வராத உணவை உட்கொண்டுள்ளோம் என்பர்.
.
சிலர், நாங்கள் மலர்களின் மேல்தான் படுத்து உறங்குவோம், பசும்பாலைத்தான் அருந்துவோம் என்று சொல்லிக்கொண்டே சோலைப் பகுதிகளில் ஆடை அணியாமல் வாழ்வர்.
.
சிலர், ஆடை எதுவும் இணியாமல் கழுத்து நிரம்ப ருத்திராட்ச மாலைகளை அணிந்து கொண்டு, இரண்டு கால்கள் இருந்தும் ஒற்றைக் காலால் குதித்துக் குதித்து நடப்பர். இவ்விதமாக இந்த ஐம்பத்து ஐந்து ரிசிகளும் ஆளுக்கொரு விதமாக ஐம்பத்துதாறு தேசங்களிலும் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.
.
.
தொடரும்... அய்யா உண்டு.
#அய்யா வைகுண்டர் #💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர் {1008} #🚩அய்யா வைகுண்டர் 🚩 #Ayya Vaikundar