ஃபாரடேக்கு முன்பு, ஆய்வகங்களில் மின்சாரத்தை உருவாக்க இயந்திர உராய்வு (friction) மட்டுமே ஒரே வழியாக இருந்தது.
18-ஆம் நூற்றாண்டில் விஞ்ஞானிகள் பெரிய கண்ணாடி உருண்டைகள் அல்லது தட்டுகளைப் பயன்படுத்தி பயன்படுத்தி உராய்வு மூலம் மின்சாரத்தை தயாரித்தனர்
ஆனால் இப்படி உருவாக்கும் மின்சாரத்தை சேமிக்க வழியில்லாமல் இருந்தது. அதை வைத்து என்ன செய்வது எனவும் தெரியவில்லை.அதை வைத்து ஷாக் கொடுக்கவும், வேடிக்கை காட்டவும் பயன்படுத்தினார்கள்
1745-ஆம் ஆண்டு நெதர்லாந்தின் லெயிடென் (Leyden) பல்கலைக்கழகத்தில் பிட்டர் வான் முஸ்சென்ப்ரோக் என்பவரால் லேடன் ஜார் எனப்படும் பேட்டரி கண்டுபிடிக்கப்ட்டது
லெயிடென் ஜார் என்பது ஒரு கண்ணாடி ஜாடியின் உட்புறமும் வெளிப்புறமும் உலோகத் தகடுகளைக் கொண்டு மூடி, உராய்வு மூலம் உருவாக்கப்பட்ட நிலை மின்சாரத்தை ஒரு கம்பி வழியாக உள்ளே செலுத்தி தற்காலிகமாகச் சேமித்து வைக்கும் ஒரு மின்தேக்கி ஆகும்.
இந்த லெயிடென் ஜார் கண்டுபிடிக்கப்பட்ட பிறகுதான், மின்சாரத்தை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்ல முடியும் என்ற நம்பிக்கை பிறந்தது.அடுத்து மின்சாரத்தை லேய்டன் ஜாரில் இருந்து கம்பிமூலம் கடத்தலாம் என கண்டறிந்தார்கள். உலோகக் கம்பிகள் மின்சாரத்தை மிகச் சிறப்பாகக் கடத்தும் என்பதை அறிந்த விஞ்ஞானிகள், லெயிடென் ஜாரில் ஒரு கம்பியைத் தொட்டு அதை நீண்ட தூரத்திற்கு நீட்டிப்பதன் மூலம், சேமிக்கப்பட்ட மின்சாரத்தை ஒரு முனையிலிருந்து மறுமுனைக்கு உடனடியாகக் கொண்டு செல்ல முடிந்தது.
ஆனால் மின்சாரம் பாயும் வேகம் என்ன என யாராலும் சரியாக கணிக்க முடியவில்லை. எத்தனை பெரிய கம்பிகளை போட்டாலும் மின்சாரம் அதில் படுவேகமாக பாய்ந்தது. கடிகாரத்தில் ஒரு செகண்டு கழிவதற்குள் அந்த பொல்லாத மின்சாரம் எத்தனை தூரம் வேண்டுமானாலும் போகும் போல இருந்தது
இதன்பின் மின்சாரத்தின் வேகத்தை கண்டறிய 1746-ல் அபே நோலெட் 200 துறவிகளைக் கம்பிகள் மூலம் இணைத்துச் சோதித்தார்.
அதாவது சுமார் 1.6 கிமி (ஒரு மைல்) தொலைவுக்கு செல்லும் கம்பியை உருவாக்கினார். 200 அப்பாவி பாதிரியார்களை பிடித்து வந்தார். அவர்கள் வெறும் கையால் கம்பியை பிடித்தபடி ஒரு மைல் தொலைவுக்கும் பரவி நின்றார்கள்
ஒவ்வொரு துறவியின் அருகேயும் ஒருவர் வாட்சுடன் நின்றார். மின்சாரம் பாய்கையில் துறவி "அய்யோ, அம்மா" என கத்தி கம்பியை கீழே போடுவார். அப்போது நேரம் என்ன என சரியாக குறிப்பெடுக்க வேண்டும். ஒரு மைல் தொலைவு செல்ல மின்சாரத்துக்கு ஒரு ஐந்து, பத்து நிமிடம் ஆகாதா என்ன? கடிகாரங்களை வைத்து மின்சாரம் பயணிக்கும் வேகத்தை அறிந்து கொள்ளலாம் அல்லவா?
இந்தச் சோதனையைச் செய்ய 200 பேர் மிக நீண்ட தூரம் (சுமார் 1.6 கி.மீ) ஒரு குறிப்பிட்ட வரிசையில் அசையாமல் நிற்க வேண்டும். சாதாரண மக்கள் கலைந்து போக வாய்ப்புள்ளது, ஆனால் துறவிகள் தங்கள் மதகுருவின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து அமைதியாக நிற்பார்கள்.
இது ஒரு அறிவியல் ஆய்வு என்பதால், முடிவுகள் துல்லியமாக இருக்க வேண்டும். துறவிகள் பொய் சொல்ல மாட்டார்கள் என்றும், அவர்கள் உணர்வதை அப்படியே சரியாகப் பிரதிபலிப்பார்கள் என்றும் நோலெட் நம்பினார். மேலும் பாரிசில் ஒரு மைல் இடம் ஒரு மடாலயத்துக்கு சொந்தமாக இருந்தது. அவர்களும் அறிவியலில் பங்கெடுக்க ஆர்வமாக இருந்தார்கள்.
துறவிகளுக்கு ஏதோ ஒன்று நடக்கப்போகிறது என்று தெரியும், ஆனால் அதன் வீரியம் அவர்களுக்குத் தெரியாது. மின்சாரம் என்பது அப்போது புதிய கண்டுபிடிப்பு என்பதால், அது உடலில் பாயும்போது எவ்வளவு வலியை அல்லது அதிர்ச்சியைத் தரும் என்று யாருக்கும் (நோலெட் உட்பட) துல்லியமாகத் தெரியாது.
அதன்பின் லேய்டன் ஜாரில் மின்சாரத்தை நிரப்பி தூக்கி வந்தார்கள்.
1, 2, 3... படார்!
நோலெட் சிக்னல் கொடுத்தார். லெயிடென் ஜாடியில் இருந்த மின்சாரம் கம்பியில் பாய்ச்சப்பட்டது. நோலெட் நினைத்தது என்னவோ, "முதல் துறவி துள்ளுவார், அப்புறம் கொஞ்சம் கேப் விட்டு இரண்டாவது துறவி கத்துவார், அப்படியே மெல்ல மெல்ல ஒரு மைல் தாண்டி கடைசி ஆளுக்குப் போகும்" என்பதுதான்.
ஆனால் நடந்தது வேறு!
200 துறவிகளும் ரோபோட் போல ஒரே செகண்டில் "அய்யோ!" என்று கத்தி மேலே குதித்தார்கள்.
பக்கத்தில் வாட்ச் கட்டிக்கொண்டு நின்ற உதவியாளர்களுக்குப் பெரிய ஏமாற்றம். அவர்கள் நேரத்தைக் குறிக்கும் முன்பே, மின்சாரம் தன் வேலையை முடித்துவிட்டது. ஒரு மைல் தூரத்தை அது ஒரு கண்ணிமைக்கும் நேரத்தில் கடந்துவிட்டது!
இந்த "அதிரடி" சோதனைக்குப் பிறகு நோலெட் ஒரு முக்கியமான முடிவுக்கு வந்தார்:
"மின்சாரம் என்பது ஒரு ஆமை கிடையாது, அது ஒரு சிறுத்தை! அதன் வேகத்தை அளவிடவே முடியாது. அது 'மின்னல் வேகம்' கொண்டது!"
இந்தச் செய்தி காட்டுத்தீ போல பரவி, பிரான்ஸ் நாட்டு மன்னர் பதினைந்தாம் லூயி (King Louis XV) காதுக்குச் சென்றது. மன்னருக்கு ஒரே குஷி! "என்னது? 200 பேர் ஒரே நேரத்துல குதிச்சாங்களா? எனக்கு இதை நேரடியா பாக்கணும்!" என்று ஆர்டர் போட்டார்.
ஆனால் இந்த முறை அவர் துறவிகளைப் பயன்படுத்தவில்லை. தனது கம்பீரமான 180 அரச பாதுகாவலர்களை (Royal Guards) வரிசையாக நிக்க வைத்தார். அவர்கள் போர்க்களத்தில் கூட அசையாதவர்கள்.பிரான்ஸ் மன்னர் பதினைந்தாம் லூயி (King Louis XV) முன்னிலையில் அந்தப் பிரம்மாண்டமான வெர்சாய்ஸ் (Versailles) அரண்மனையில் சோதனை தொடங்கியது.
போர்க்களத்தில் வீரத்திற்குப் பெயர் போன 180 ராயல் கார்டுகள் (Royal Guards), கைகோர்த்து ஒரு நீண்ட சங்கிலித் தொடராக நின்றார்கள். "நாங்கள் எத்தனையோ பீரங்கிச் சத்தங்களைக் கேட்டவர்கள், இந்த ஒரு சிறிய மின்சாரம் எங்களை என்ன செய்துவிடப் போகிறது?" என்ற மிதப்பு அவர்கள் முகத்தில் இருந்தது.
மன்னர் லூயி மற்றும் அவரது அரசவை பிரமுகர்கள் அனைவரும் ஆவலுடன் பார்த்துக்கொண்டிருந்தனர். நோலெட் தனது லெயிடென் ஜாடியை முதல் வீரரிடம் இணைத்தார்.
மின்சாரம் பாய்ந்த அடுத்த மைக்ரோ விநாடி... அந்த 180 வீரர்களும் போர்க்களத்தில் கூட அலறாதவர்கள், இப்போது ஒரே நேரத்தில் "அய்யோ, அம்மா" என கத்தினார்கள்
தன் கண் முன்னே 180 வீரர்கள் ஒரே சீராக, ஒரே நொடியில் துள்ளிக்குதித்ததைக் கண்ட மன்னர் திகைத்துப் போனார். "இது என்ன மந்திரமா? அல்லது பேயா?" என்று வியந்தார்.
1.6 கி.மீ தூரத்திற்கு ஒரு தகவலை அனுப்ப அந்த காலத்தில் குதிரையில் சென்றால் கூட சில நிமிடங்கள் ஆகும். ஆனால், மின்சாரம் அந்தத் தூரத்தை ஒரு நொடிக்கும் குறைவாகக் கடக்கிறது என்பதால், எதிர்காலத்தில் மின்சாரம் மூலம் தந்தி (Telegraph) அனுப்பலாம் என்ற யோசனைக்கு இதுவே வித்தாக அமைந்தது.
ஆனால் இதை தெரிந்துகொள்ள 200 பாதிரியார்களுக்கும், 180 வீரர்களுக்கும் எலெக்ட்ரிக் ஷாக் கொடுக்க வேண்டி இருந்தது
*அறிவியல் சில சமயம் காமடிதான்.*
*~ நியாண்டர் செல்வன்*
#கதை சொள்ளரோம் #உற்சாக பானம்# #உற்சாக பானம் #பொழுது போக்கு #👪 cute family members 👪