#🚩அய்யா வைகுண்டர் 🚩 கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை எட்டாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 12.03.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
அகிலம்
=======
நடந்து மறையோர் நல்ல மலைபார்த்துச்
சடம் வீற்றிருந்த தங்கமலை மீதில்வந்தார்
மலைமீதில் வந்து மலைப்புதுமை தான் பார்த்து
அலைமீதில் வாழ்துவரா ஆனபதி தன்னுடைய
வடவாசல் நேரே வாழு மலையிதுதான்
தடவரை யிம்மலையில் தானிருக்கும் நதிகள்
தங்கக்கிணர் வங்கக்கிணர் தாம்பிரக் கிணறுடனே
சங்கமகி ழிம்மலையின் தடாகமிது நன்றெனவே
கரைகாணாத் தேவர் காட்சியிடு மிம்மலைதான்
விரைவான மாமுனிவர் வீற்றிருக்கு மிம்மலைதான்
மரித்தோரைத் தானெழுப்பும் வாய்த்தசஞ்சீ விவளரும்
பதித்தான மிம்மலையின் பகுத்துரைக்கக் கூடாது
என்றுசொல்லித் தேவர் ஏற்றமலைக் குள்ளேகி
நன்றுநன் றென்று நாடியவர் பார்க்குகையில்
கண்டாரே காயாம்பூ கண்ணர்முக் கூடதையும்
கொண்டாடிக் கூடதையும் குளிர்ந்தரத மீதேற்றி
நடந்தார் கயிலை நாதர்திருக் கூட்டமதில்
.
விளக்கம்
========
மகாவிஷ்ணுவின் கட்டளையை ஏற்று விரைந்து சென்ற மறையோர், கிருஷ்ண சரீரம் தனித்து இருந்துகொண்டிருக்கும் தங்கமலை எனப் போற்றப்படுகின்ற மேரு மலைமீது வந்து சேர்ந்தனர்.
.
மலைமீதுள்ள இயற்கை வளங்களை எல்லாம் வகைவகையாகக் கண்டு ரசித்த மறையோர், தென்பாற்கடலுக்குள் இருக்கின்ற துவரயம்பதிக்கு நேராக இருக்கும் மலை இது தான்.
.
தங்கக் கேணிகளும், வெள்ளிக் கேணிகளும், முத்துக் கேணிகளும். ஏனைய அழகினாலும் மகிழ்விக்கும் இந்த மலையில் நல்ல நல்ல தடாகங்களும் சிறப்பாக அமைந்திருக்கின்றன. எண்ணிலடங்காத தேவர்களெல்லாம் கண்டு களிப்புறுவது இந்த மலையைத் தான். வேகமாக தவமுக்தி பெறும் மாமுனிவர்களின் இன்பமான இருப்பிடமே இந்த மலை தான். தலைமை ஸ்தானம் உடைய இந்த மலையின் சிறப்புகளைப்பற்றி எடுத்து கூறுவதென்பது யாராலும் இயலாத காரியம் என்றெல்லாம் அந்த அழகிய மலையின் பெருமைகளைப் போற்றிப் புகழ்ந்த வண்ணமாக மறையோர்களெல்லாம் மலைமீது ஏறி மகாவிஷ்ணுவின் கிருஷ்ண அவதாரக் கூட்டைத் தேடினார்கள்.
.
தேடித் திரிந்த மறையோர் திடீரெனக் கிருஷ்ண பரமாத்மாவின் காயாம்பூமேனியைக் கண்டனர். கொண்டாடிக் குதூகலித்தனர். மகாவிஷ்ணுவின் அந்த உபாய மாய உடலைக் குளிச்சி மிகுந்த ரதத்தில் ஏற்றிக்கொண்டு சிவபெருமான் வீற்றிருக்கும் திருச்சபைக்கு வந்து சேர்ந்தனர்.
.
.
அகிலம்
=======
வடந்தார மார்பன் வாய்த்த அரிநாரணரும்
பார்த்துச் சடலமதைப் பதிந்தமுகத் தோடணைத்துத்
தேற்றி உயிர்க்கொடுத்துச் செப்புவார் கூடுடனே
எடுத்த பிறப்புக்கு எல்லாமெனைச் சுமந்து
அடுத்து மூவுலகும் அங்கங்கே கொண்டேகிப்
பூமி கடலும் பொருப்புப்பூ லோகமெல்லாம்
நேமித் தெனைச்சுமந்து நேட்டமுடன் திரிந்தாய்
நீசெய்த நன்றி நினக்குரைக்கக் கூடாது
நானுனக்குச் செய்யும் நன்றி மிகக்கேளு
இத்தனை நாளும் எனைச்சுமந்து பாடுபட்டாய்
புத்திரனாய் நீயெனக்குப் பெரியதெய்வ உயிரில்
பிறந்து புவிமீதில் பின்னுஞ்சில நாட்கழித்துச்
சிறந்த முகூர்த்தமதில் சேர்த்தே உனையெடுத்து
உன்றனக்குப் புத்தி உபதேசங் களுரைத்து
என்றன் துயரமாற்ற யுகசோதனைக் கனுப்பி
உன்றன்துயர மாற்றி உகத்துயர மும்மாற்றி
என்றன்துயர மாற்றி ஈசர்துயரம் மாற்றி
கலியை யறுத்துக் கனாப்பயங்கள் தானறுத்துச்
சலிவில்லாத் தர்ம தங்கநவ ரத்னபதி
முத்துநவ ரத்தின முடியுனக்கு நானருளி
எத்திசையு மெய்க்க ஏற்றமனு அன்போர்கள்
கட்டியங் கூறிக் காட்சியிட்டு வுன்றனக்கு
எட்டுத்திக்கும் நின்றேத்த ஏற்றகுடை யொன்றுதந்து
அரசாண்டு நீயும் அழியாத் திருவுளம்போல்
வீரசான்றோர் சூழ வீரக் கொடிநிறுத்திச்
செங்கோற்கு தர்ம சிவசெங்கோ லுமருளி
எங்கோ லரசு என்நாமச் சக்கரத்தால்
சீமையைம்பத் தாறுமுன் சொல்லொன்றுக் குள்ளாக்கிப்
பூமுகச்சிங் காசனமும் பொன்முகச்சிங் காசனமும்
கோமுகச்சிங் காசனமும் குணமுகச்சிங் காசனமும்
மாமுகச்சிங் காசனமும் மயில்முகச்சிங் காசனமும்
அன்னமுகச் சிங்கா சனமீதோ டாகவேதான்
பொன்னம் பலம்போல் பெரியசிங் காசனந்தான்
முப்பத்தி ரண்டும் முழுது முனக்கருளி
செப்பொத்த மாணாக்கர் சேவிக்க வுன்றனக்குத்
தருவேனா னுன்னுடைய தாயார்பே ராணையதாய்
என்றையா நாதன் எடுத்தவர்க் கேவுரைக்க
.
விளக்கம்
=========
மறையவர்கள் கொண்டுவந்த கிருஷ்ண அவதாரக் கூட்டைக் கண்ட மகாவிஷ்ணு மட்டிலா மகிழ்ச்சி பொங்க, தம் முகத்தோடு அந்த உபாய மாய உடலை அணைத்து, அவ்வுடலைத் தேற்றி தம் உபதேசத்தை அவ்வுடல் உணருவதற்கு உகந்தாற்போல் உயிர் கொடுத்து, அந்த உடலிடம் சொல்லுகிறார். ஊன் உடலே, நான் எடுத்த எல்லாப் பிறப்பிலும் என்னை உன் அகம் வைத்துச் சுமந்து மேலோகம், பூலோகம், பாதாளலோகம் ஆகிய அனைத்து உலகங்களுக்கும் என்னைக் கொண்டு அலைந்தாய்.
.
கடலும், மலையும் அடங்கலாகப் பூலோகமெல்லாம் என்னைச் சுமப்பதையே வேண்டுதலாகக் கொண்டு விருப்பத்தோடு திரிந்தாய். நீ எனக்குச் செய்த நன்றியை உன்னிடமே சொல்லதென்பது முடியாத காரியம். நான் உனக்கு மிகவும் நன்றிக் கடன்பட்டுள்ளேன். ஆதலால், நான் உனக்குச் செய்யப்போகும் நன்றியைப் பற்றி கவனமாகக் கேட்டுக்கொள்.
.
இத்தனை காலமும் என்னைச் சுமந்து பாடுபட்ட நீ. இப்போது பூலோகத்தில் என் மகவாகப் பிறந்திருக்கும் தெய்வ லோகத்தாரின் வம்சாவழியில், சம்பூரணத்தேவனின் உயிரோடு பிறக்க வேண்டம்.
.
நீ பூலோகத்தில் பிறந்து சில காலம் கழிந்ததும் சிறந்த சுபவேளையில் உன்னை என்னோடு சேர்த்தெடுத்து, உனக்கு புத்தி உபதேசங்கள் சொல்லி, உன்னுடைய துயரங்கள் யாவையும் மாற்றுவதற்காக உன்னை யுகச்சோதனைக்கு அனுப்பி, உன்னுடைய துயரத்தையும், இந்த கலியுகத்தின் துயரத்தையும் மாற்றி, என்னுடைய துயரத்தையும், சிவபெருமானின் துயரத்தையும் மாற்றி, கலியுகத்தை முடித்து, அந்தக் கலியில் இருந்து விடுபடும்பொது, தொய்வே இல்லாத தர்மம் தழைத்திருக்கும், தங்க நவரத்தினத்தால் உண்டான தர்மபதியையும், அதை ஆளுவதற்கான முத்து நவரத்தினத் திருமுடியையும் உனக்கு நான் அருளுவேன்.
.
அது மட்டுமல்ல, எந்தத் திசையில் உள்ள தேசத்தாரும், மொழியாரும் மெச்சுகின்ற அளவில், ஏற்புடைய மாந்தர்களில் அன்புள்ளோர்கள் எல்லாம் உன் புகழைப் போற்றுகின்ற வகையில் பற்பல காட்சிகளை நடத்துவிப்பேன்.
.
அத்துடன், எட்டுத்திசையில் வாழுகின்ற மக்களும் உன்னைப் பொற்றுவதற்கு உகந்த ஒற்றைக் குடையை நான் உனக்கு அருள்வென். ஒற்றைக் குடையின் கீழ் உலகை அரசாண்டு என்றும் அழியாத இறைவனைப் பொல் வீரம் மிகுந்த ஒழுக்கசீலர்கள் எல்லாரும் உன்னைச் சூழ்ந்திருக்க நீ வீரக் கொடியை நிலைநிறுத்திச் செங்கோல் செலுத்துவதற்காகத் தர்மச் சிவ செங்கோலும் அருள்வேன்.
.
அதோடு, என்னுடைய அருளாட்சியையும், என்னுடைய நாச்சக்கதரத்தின் மூலமாக ஐம்பத்தாறு சீமையையும் உன்னுடைய சொல் ஒன்றுக்குள்ளாக்கி, பூமுகச் சிங்காசனமும், பொன் முகச் சிங்காசனமும், கோமுகச் சிங்காசனமும், குணமுகச் சிங்காசனமும், மாமுகச் சிங்காசனமும் இவை அனைத்தோடும் சேர்த்து பொன்னம்பலம் போன்ற பெரிய சிங்காசனமும், முப்பத்து இரண்டு தர்மங்களையும் முழுமையாக உனக்கே அருளிச் செய்து, உன்னுடைய உத்தரவிற்கேற்ப செயல்படும் சீடர்களை உனக்குப் பணிவிடை புரிவதற்காகப் பணிப்பேன். இவை யாவும் உன் அன்னையின் மீது சத்தியம் என்று மகாவிஷ்ணு தம் முன் அவதாரங்களுக்குப் பயன்படுத்திய உபாயமாய உடலிடம் உறுதியளித்தார்.
.
.
தொடரும்... அய்யா உண்டு.
#அய்யா வைகுண்டர் #அய்யா வைகுண்டர் {1008} #💚Ayya 💗 Vaikundar💚 #Ayya Vaikundar