கோழிக்கோடு மாவட்டம் எலத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் வைசாக் (35). இவருக்கும், இவரது உறவினரான ஒரு இளம்பெண்ணுக்கும் இடையே நீண்டகாலமாக காதல் இருந்து வந்தது. இதற்கிடையே, வைசாக் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். இருப்பினும், அவர் தனது காதலியுடன் தொடர்ந்து நெருங்கிப் பழகி வந்துள்ளார்.
இந்நிலையில், தன்னை முறைப்படி திருமணம் செய்து கொள்ளுமாறு அந்த இளம்பெண் வற்புறுத்தியுள்ளார். இதற்கு வைசாக் மறுப்பு தெரிவித்ததால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் தற்கொலை செய்து கொள்ளலாம் என அந்தப் பெண் கூறியதைச் சாதகமாகப் பயன்படுத்திய வைசாக், அவரைக் கொலை செய்யத் திட்டமிட்டார்.
கடந்த 24-ஆம் தேதி அந்தப் பெண்ணை வரவழைத்த வைசாக், இருவரும் சேர்ந்து தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொள்ளலாம் என நம்ப வைத்துள்ளார். இதற்காக இரண்டு கயிறுகள் தயார் செய்யப்பட்டு, இருக்கைகள் மீது இருவரும் ஏறி நின்றனர். அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக, வைசாக் கீழே இறங்கி இளம்பெண் நின்றிருந்த இருக்கையை எட்டி உதைத்தார். இதில் அந்த இளம்பெண் துடிதுடித்து உயிரிழந்தார்.
பெண் உயிரிழந்ததை உறுதி செய்த பின், அவரது உடலை வைசாக் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் தனது மனைவிக்கு போன் செய்த வைசாக், இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறி, இருவருமாகச் சேர்ந்து உடலை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். சிசிடிவி கேமரா பதிவுகள் மற்றும் பிரேதப் பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், அது தற்கொலை அல்ல, திட்டமிட்ட கொலை என்பது உறுதியானது. இதையடுத்து வைசாக்கை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
#📢ஜனவரி 29 முக்கிய தகவல் 🫠 #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔