அப்பாவ காணோம் என்பதோ? கணவனை காணோம் என்பதோ அல்ல இப்போது தமிழ்நாட்டின் பிரச்சனை. நாளை தமிழ்நாட்டின் கடற்கரையை காணோம் என்று சொல்லுகிற நிலைமை வந்துவிடக்கூடாது என்பது தான் முதன்மை பிரச்சனை?
இன்று தமிழ்நாட்டில் அரசியல் விவாதங்கள் எதைச் சுற்றி நடக்கின்றன? நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் யார் வென்றார்கள்? யார் தோற்றார்கள்? எந்தக் கட்சிக்கு எவ்வளவு வாக்கு கிடைத்தது? யார் கூட்டணி அமைப்பார்கள்? என்பதைத்தான் பெரும்பாலான அரசியல் விவாதங்கள் ஆக்கிரமித்துள்ளன.
ஒரு தரப்பு, ஒரு கட்சியின் தோல்வியை தமிழ்நாட்டின் தோல்வியாகக் கொண்டாடுகிறது. இன்னொரு தரப்பு, ஒரு கட்சியின் வெற்றியை தமிழ்நாட்டின் வரலாற்று முன்னேற்றமாகச் சித்தரிக்கிறது.
ஆனால் இந்த அரசியல் சத்தங்களுக்கு நடுவே, தமிழ்நாட்டின் எதிர்காலத்தையே தீர்மானிக்கக்கூடிய ஒரு மிகப்பெரிய பிரச்சினை கவனத்திற்கு வராமல் திட்டமிட்டு முன்னேறிக் கொண்டிருக்கிறது.
அது தமிழகத்தின் 1,068 கிலோமீட்டர் நீளமான கடற்கரையும், அதனை ஒட்டியுள்ள 14 கடலோர மாவட்டங்களின் இயற்கை வளங்களும் குறித்த பிரச்சினை.
இந்தியா–அமெரிக்கா இடையே 2026 மே 26 அன்று "Critical Minerals and Rare Earths Framework" என்ற மிக முக்கியமான ஒரு ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. இந்த ஒப்பந்ததின் முக்கிய நோக்கம் அரிய கனிமங்களான (Rare Earths) லித்தியம், கோபால்ட் போன்ற மூலப்பொருட்களின் விநியோகச் சங்கிலியை பாதுகாப்பதாகும். இவை EV பேட்டரிகள், செமிகண்டக்டர்கள், பாதுகாப்புத் துறை, ஏவுகணைகள், காற்றாலை, சோலார் தொழில்நுட்பம் போன்றவற்றிற்கு அவசியமானவை.
ஒன்றிய அரசு இதை "இந்தியாவின் தொழில்நுட்ப எதிர்காலத்திற்கான அவசியமான ஒப்பந்தம்" எனக் கூறுகிறது. ஆனால் இந்த ஒப்பந்தம் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களை நீர்மூலமாக்கும். ஏனென்றால் இந்தியாவில் மோனசைட் (Monazite) உள்ளிட்ட அரிய கனிம வளங்கள் அதிகம் காணப்படும் மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகப்பட்டினம் உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகளில் இல்மனைட், ருடைல், கார்னெட், மோனசைட் போன்ற கனிம வளங்கள் உள்ளன.
இப்போது கையெழுத்தான ஒப்பந்தத்தில் "Mining, Processing, Recycling, Investments" என முழு செயல்பாடுகளும் சேர்க்கப்பட்டுள்ளது. அதாவது வெறும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு அல்ல; முதலீடு, அகழ்வு, சுத்திகரிப்பு அனைத்தும் இதில் அடங்குகின்றன.
இதனால் அமெரிக்கா உள்ளிட்ட குவாட் அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகள் ( இப்போதைக்கு) தமிழக கடற்கரையில் இருக்கும் வளங்களை தோண்டும், சுத்திகரிக்கும், எந்தவித தடங்கலும் இல்லாமல் அதானி துறைமுகம் மூலம் எடுத்துச் செல்லும்.
இதெல்லாம் இனி தான் நடக்கபோகின்றது என்று நினைக்க வேண்டாம். ஏற்கனவே இதற்கான வேலைகள் தொடங்கியாயிற்று. கன்னியாகுமரியை சுற்றியுள்ள கடற்கரை பகுதியில் இருக்கும் கனிமங்களை தோண்டி எடுக்கும் வேலையை இந்திய அரசின் நிறுவனமான IREL (Indian Rare Rarth Limited) தொடங்கிவிட்டது. இதில் சிறப்பு என்னவென்றால் தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருந்த நேரம் தான் இந்த வேலையை ஒன்றிய அரசு செய்தது.
இதற்கான சட்ட மசோதா 2025 இல் போடப்பட்டு 2026இல் சட்டமாகவே மாற்றப்பட்டுவிட்டது. இதன்படி
1. ஒரு நிறுவனத்திற்கு சுரங்க உரிமை இருந்தால், அதே அனுமதியில் லித்தியம், கிராபைட், நிக்கல், கோபால்ட் போன்ற Critical Minerals-ஐ கூடுதல் கட்டணமின்றி எடுக்க அனுமதி வழங்கப்படுகிறது.
2. சுரங்கப்பரப்பு -ஆழமான (deep-seated) கனிமங்கள் கிடைத்தால்:
Mining Lease-ஐ 10% வரை,
Composite Licence-ஐ 30% வரை
விரிவுபடுத்த புதிய கட்டணமின்றி அனுமதி.
3. ஒரு நிறுவனம் மாநில அரசிடம் அனுமதி கேட்டால் அதிகபட்சம் 30நாட்களுக்குள் அனுமதி கொடுப்பது கட்டாயம்.
4. சுரங்கம் தோண்ட பொதுமக்களிடம் கருத்து கேட்க அவசியமில்லை.
5. சுரங்க நிறுவனத்தில் ஏற்படும் பிரச்சனைக்கு இழப்பீடு சம்பந்தப்பட்ட நிறுவனம் தர வேண்டியதில்லை என ஏற்கனவே வெளிநாட்டு நிறுவனங்களுக்காக பல திருத்தங்கள் செய்யப்பட்டு சட்டமாக்கிவிட்டார்கள்.
இன்று நாம் யார் வென்றார்கள்? யார் தோற்றார்கள்? என்று சண்டையிட்டுக் கொண்டிருக்கலாம்.
ஆனால் நாளை,
நம் கடற்கரை கிராமங்கள் அழிக்கப்பட்டு, மீனவர்களின் வாழ்க்கை சீரழிந்தால், அப்போதும் இப்படி சண்டையிட்டுகொண்டிருந்தால் எப்படி? ஒருவேளை தமிழ்நாட்டின் இயற்கை வளங்களை கொள்ளையடிக்கத்தான் தமிழ்நாட்டில் அரசியல் நிலையற்ற தன்மை திட்டமிட்டு உருவாக்கப்படுகிறதோ என்னவோ? ஆனால் இதுவெல்லாம் ஒருநாளும் ஒரு பயனையும் தராது.
தமிழ்நாட்டின் எதிர்காலம் என்பது வெறும் ஆட்சிமாற்றம் அல்ல.
அது நிலம், கடல், இயற்கை வளங்கள், மாநில உரிமைகள் மற்றும் மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதில்தான் இருக்கிறது.
நாளை "அப்பாவைக் காணோம்", "கணவனைக் காணோம்" என்று சண்டையிடும் நிலை மட்டுமல்ல; "தமிழ்நாட்டின் கடற்கரையைக் காணோம்" என்று தேடும் நிலை வராமல் தடுப்பதே இன்று நமக்கு முன் நிற்கும் மிகப்பெரிய அரசியல் பொறுப்பாகும்.
#geopolitics #புவிசார் அரசியல் #🚨கற்றது அரசியல் ✌️ #தமிழ்நாடு