அரசியலமைப்பின் கொள்கைகளை நடைமுறைப்படுத்தவும், ஜனநாயகத்தை வலுப்படுத்தவும் ஒன்றிணைந்து உறுதியேற்போம்!
SDPI மாநில தலைவரின் 77வது இந்திய குடியரசுதின வாழ்த்துச் செய்தி!
இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
நாட்டு மக்கள் அனைவருக்கும் 77வது இந்திய குடியரசு தினத்தின் சிறப்பு நிகழ்வில், உள்ளார்ந்த மகிழ்ச்சியுடன் இதயம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உலகின் மிகச் சிறந்த அரசியலமைப்புச் சட்டங்களில் ஒன்றாகப் போற்றப்படும் நமது இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட சிறப்பு நாளே குடியரசு தினமாகும். டாக்டர். பாபாசாகேப் அம்பேத்கர் தலைமையிலான அரசியலமைப்பு சபை உருவாக்கிய இந்தப் புனிதமான ஆவணம், ஜனநாயகம், சமத்துவம், சுதந்திரம், நீதி, சகோதரத்துவம், மதச்சார்பின்மை, பன்முகத்தன்மை ஆகிய உன்னதக் கொள்கைகளை அடித்தளமாகக் கொண்டு, நமது நாட்டின் ஆன்மாவாக விளங்குகிறது.
சாதி, மதம், மொழி, பிராந்தியம், பால், பொருளாதார நிலை ஆகிய எதனாலும் பாகுபாடு காட்டாமல், அனைவருக்கும் சம உரிமைகளையும் சம வாய்ப்புகளையும் உறுதி செய்யும் இந்த அரசியலமைப்பு, ஒரு முற்போக்கான, நியாயமான, சமத்துவ சமூகத்தை உருவாக்குவதையே தன் இலட்சியமாகக் கொண்டுள்ளது. "சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவம்" என்ற மூன்று பெருங் கோட்பாடுகளை மையமாகக் கொண்டு, அனைத்து இந்தியர்களும் ஒரே குடிமக்களாக இணக்கமாக வாழும் சமூகத்தை கனவு காண்கிறது.
ஆனால், துரதிர்ஷ்டவசமாக இன்றைய சூழலில் இந்த அடிப்படை மதிப்புகள் பல்வேறு வகையில் சவால் விடப்படுகின்றன. பன்முகத்தன்மைக்கும் மதச்சார்பின்மைக்கும் எதிரான போக்குகள் வலுப்பெறுகின்றன. கூட்டாட்சி தத்துவம் சீரழிக்கப்பட்டு வருகின்றது. அரசியலமைப்பால் உத்தரவாதம் செய்யப்பட்ட மத சுதந்திரம், கல்வி உரிமை, சம உரிமை, பாதுகாப்பு உரிமை போன்ற அடிப்படை உரிமைகள் பல்வேறு கொள்கைகள், சட்டங்கள் மற்றும் நடைமுறைகள் மூலம் பாதிக்கப்படுகின்றன. இது நமது ஜனநாயக அமைப்பின் அடித்தளத்தையே ஆட்டம் காணச் செய்கிறது.
அரசியலமைப்பின் ஆன்மாவுக்கு எதிரான ஜனநாயக விரோத, மதவாத, பாகுபாடான நடவடிக்கைகளை நாம் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. குடிமக்கள் ஒன்றிணைந்து இந்த அரசியலமைப்பைப் பாதுகாக்க வேண்டிய காலம் இது.
ஆகவே, இந்த 77வது குடியரசு தினத்தில், நமது முன்னோர்கள் நம்மிடம் ஒப்படைத்த இந்த அரசியலமைப்பின் புனிதமான விழுமியங்களைப் பாதுகாக்கவும், அதன் கொள்கைகளை நடைமுறைப்படுத்தவும், ஜனநாயகத்தை வலுப்படுத்தவும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து உறுதியேற்போம்! ஜெய்ஹிந்த்!
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
#📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺அரசியல் 360🔴 #📺வைரல் தகவல்🤩 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📷வாட்ஸப் DP