innraya SINTHANAY

saravanan.
556 views
9 hours ago
#innraya SINTHANAY 🙏🏻 🌺🌺🌺 *இன்றைய சிந்தனை* ( 10.08.2026 ) ................................................... *குறள் சொல்லும் நீதி...!* …………………………………............ குறள் 423: *( உண்மை தெரியாமல் நம்பாதீர்கள்...!)* .................................................... எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு. விளக்கம்... ....................... எந்தவொரு பொருள் குறித்து எவர் எதைச் சொன்னாலும், அதை அப்படியே நம்பி ஏற்றுக் கொள்ளாமல், உண்மை எது...? என்பதை ஆராய்ந்து தெளிவது தான் அறிவுடைமையாகும்... ஆம்.!, கருத்துக் கூறுவோர் எவராக இருந்தாலும், அவர் மீது கொண்ட பற்றின் காரணமாகவோ, மதிப்பின் காரணமாகவோ, புகழ் பெற்றவர், செல்வாக்கு கொண்டவர், உயர்நிலையில் இருப்போர் என்பதற்காகவோ அவர் சொல்வதை எல்லாம் அப்படியே ஏற்கக் கூடாது... நெருங்கிய நண்பராயிருப்பவர் ஒருவர், தாழ்ந்த பொருளைக் கூறினும், நட்பு கருதி அதை ஏற்கக் கூடாது... அதுபோல் பகைவரேயானாலும் சிறப்பான உயர்ந்த பொருளைக் கூறின், அவர்களிடம் உள்ள வெறுப்பால், அதைத் தள்ளி விடாது ஏற்க வேண்டும்...! சொல்பவர் தரம் நோக்காது உண்மைத் தன்மையை உணர வேண்டும்...! எத்தகைய செய்தியாக இருந்தாலும், அதனை யார் சொல்லி இருந்தாலும், அதை அப்படியே ஏற்றுக் கொள்ளாமல் அல்லது இகழ்ந்து தள்ளாமல், அதன் உண்மைப் பொருளை ஆராய்வதே அறிவாகும்... உலகத்தில் ஒட்டி வாழ்ந்தாலும் உண்மைத் தன்மையுடன் இருப்பதே அறிவு...! *ஆம் நண்பர்களே...!* நூலறிவாலும் கேள்வியறிவாலும் பெற்றதை நுணுகிப் பார்த்து உண்மையை அல்லது சரியானது எது என்று பகுத்து அறிந்து கொள்ள வேண்டும்...! எவரையும் எல்லாம் அறிந்தவராகக் கருதி அவர் சொல்வனவற்றிற்கெல்லாம் அடிமையாகாமல், அவர் கூறும் ஒவ்வொரு கருத்தையும் சீர்தூக்கிப் பார்த்து மெய்ப்பொருள் காண வேண்டும்...!! -உடுமலை சு. தண்டபாணி ✒️ 💐💐💐🌺🌺🌺 🙏🏻 🌺🌺🌺
saravanan.
553 views
2 days ago
#innraya SINTHANAY *இன்றைய சிந்தனை* ( 08.08.2026 ) ............................................................ *குறள் சொல்லும் நீதி...!* …………………………………............ குறள் - 151: ...................... அகழ்வாரைத் தாங்கும் நிலம் போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை. விளக்கம்... ....................... தன்னையே தோண்டினாலும், தோண்டுபவர் விழுந்து விடாதபடி தாங்கும் நிலம் போல, தன்னை வார்த்தைகளால் அவமதிப்பவரையும் மதித்துப் பொறுப்பது முதன்மை அறம். நிலமானது நமக்கு இருக்க இடம், நாம் உண்ண காய் கனிகள் வளர்வதற்கு தோட்டம் என்று எல்லாம் தருகிறது... அதைக் கடப்பாரை கொண்டு காயப்படுத்தினாலோ, மண்வெட்டி கொண்டு வெட்டினாலோ, குண்டு வைத்து தகர்த்தாலோ, அப்படிச் செய்பவர்களைக் கூட அது தண்டிப்பதில்லை. மாறாக அவர்களைத் தாங்குகிறது... நம்மைப் பற்றி தவறாக, இழிவாகப் பேசுபவர்களை, செய்பவர்களை பொறுத்தால் மட்டும் போதாது. அவர்களுக்கு தீங்கு வராமல் தாங்க வேண்டும். தீங்கு செய்பவர்களைத் தாங்கும் நிலம் போல. நன்மையானது தீமையை விடப் பலமும் மேலானதும், மிகவும் வல்லமை வாய்ந்ததுமாகும். தீமையானது நன்மைக்கு மேலாக ஒரு போதும் நீடித்த அதிகாரம் செலுத்த முடியாது. இந்த உலகம் கொடுமை நிறைந்ததும் கற்பனை செய்யவியலாத அளவிற்கு பகை நிறைந்தது என்று சிலர் சொல்வார்கள்... ஆனால்!, அன்பு பகையை,வெறுப்பை விட மேன்மையும் திறனும், வாய்ந்தது. இது ஒளியையும் இருளையும் போன்றது. இருள் ஒரு போதும் ஒளியை மேலோங்க, மேற்கொள்ள முடியாது. ஒளியில் மிளிரும் போது இருள் மறைந்து போகிறது... பெரும்பாலானோர் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்றால் ஒளிக்கு பதிலாக இருளைப் பற்றி அதிகமாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்... ஒளியே இருளிற்கு தீர்வாகும். அன்பு மாத்திரமே வெறுப்புக்கு தீர்வாகும். நன்மையே தீமைக்குத் தீர்வாகும்...! நாம் செய்ய வேண்டியது , தீங்கு செய்தவருக்கும் நன்மை செய்ய வேண்டும்.. அதனால் பகைமை விடுத்து மிகுந்த நேசத்தை ஏற்படுத்த முடியும்... எவராவது தீமை செய்து விட்டால், மிகப் பொறுமையாக நடந்து கொண்டு, பதிலுக்கு தீமை செய்யாமல், நன்மையைச் செய்யும் முடிவோடு காத்திருந்தால், மற்றொரு கட்டத்தில் மிகப் பல நன்மைகளுக்கு நாம் சொந்தக்காரன் ஆகலாம்...! *ஆம் நண்பர்களே...!* எவராக இருந்தாலும், எங்கே இருந்தாலும் அதிக தீமை செய்தால் நீங்கள் பதிலாக அதிக நன்மை செய்யுங்கள்...! நன்மை செய்வது உங்களை வெற்றியாளர்கள் ஆக்கும்...!! தீமை செய்பவர்கள் ஒருவரும் ஒருபோதும் வெற்றிவீரனாக ஆவதில்லை...!!! - உடுமலை சு. தண்டபாணி✒️ 💐💐💐🙏🏻🌺🌺🌺🌺🌺🌺🌺
saravanan.
737 views
3 days ago
#innraya SINTHANAY *இன்றைய சிந்தனை* ( 07.08.2026 ) ............................................................ *குறள் சொல்லும் நீதி...! ( ''அடக்கம்'')* ………………………………….................................. குறள் 121: .................... அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும். விளக்கம்... ..................... அடக்கம் அழியாத புகழைக் கொடுக்கும். அடங்காமை வாழ்வையே இருளாக்கி விடும். அடக்கம் என்பதை ஒரு ஒழுக்கமாக நம் முன்னவர்கள் கருதியிருக்கிறார்கள்... மனம் அடங்கினால் சிந்தனை ஒன்று படும். சிதறாத சிந்தனை அறிவை வளர்க்க உதவி செய்யும். அலைபாயாத மனம் இருந்தால் ஆசை தறிகெட்டு ஓடாது...! சொல்லாடலில் அடக்கம். தேவையற்ற பேச்சுக்கள் , புரட்டு, பொய், என்று சொற்குற்றங்கள் விலகிப் போகும். பேச்சில் அடக்கம் இருந்தால் கட்டுப்பாடு அற்று ஓடும் புலன்களை அடக்கினால் வாழ்வில் பல சிக்கல்கள் தவிர்க்கப்படும்... அளவுக்கு அதிகமான கொழுத்த உணவுகள், கட்டுபாடற்ற பணத்தாசை இவை எல்லாம் மனிதனை வீழ்த்தும்... புலன் அடக்கம் இருந்தால் வாழ்வில் வெற்றிகள் வந்து சேரும். சேர்ந்த வெற்றிகள் நிலைக்கும்.. அடக்கம் என்ற ஒரு குணம் அமைந்து விட்டால், ஓடுகின்ற ஆற்றில் மரக்கட்டையை எறிந்தால் அந்த ஆறு கட்டையை கடலில் கொண்டு சேர்த்து விடும். கட்டை ஒண்ணும் செய்ய வேண்டாம். அந்த ஆற்றில் கிடந்தால் போதும்... மிகுந்த கூட்ட நெரிசல் உள்ள ஒரு புகைவண்டி நிலையத்தில், வண்டியை விட்டு இறங்கினால், அந்தக் கூட்டமே நம்மை வாசல் வரை கொண்டு சேர்த்து விடும்... ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊருக்குப் போக வேண்டும் என்றால், சரியான வண்டியில் ஏறி அமர்ந்து விட்டால் போதும், அந்த வண்டி நம்மை சேர வேண்டிய இடத்தில் சேர்த்து விடும்... ஆனால்!, அடக்கமின்மை இருளுள் தள்ளி விடும். எங்கே இருக்கிறோம் என்று தெரியாது, என்ன இருக்கிறது என்று தெரியாது, எங்கே போகிறோம் என்றும் தெரியாது. கண் தெரியாத இருட்டு... புலன் அடக்கம் இல்லாதவரைப் பார்த்தால் தெரியும் , ஏதோ கண் தெரியாதவரைப் போல தவறான பாதையில் அவர்கள் செல்வது தெரியும்... இருட்டில் இருப்பவருக்கு பக்கத்தில் என்ன இருக்கிறது என்று தெரியாது... அழகான மனைவி, அன்பான பிள்ளைகள், சொத்து சுகம் இவற்றையெல்லாம் கவனிக்காமல், வேறொன்றின் பின் செல்வார்கள், அருகில் உள்ளது அவர்களுக்குத் தெரியாது... மருத்துவர் சொல்லி இருப்பார் புகை பிடிக்கக் கூடாது, மது அருந்தக் கூடாது என்று.., ஆனால்!, கேட்காமல் நேரே அந்தக் கடைக்குத் தான் அவர்கள் செல்வார்கள்... புலன் அடக்கம் இல்லாதவர் கண்டதின் பின் சென்று உடல் நலத்தையும் அழித்து, சொத்தையும் அழித்து, சுற்றத்தையும் இழப்பார்கள்... நன்கு ஆலோசித்துப் பாருங்கள், ''அடக்கம் எவ்வளவு உயர்ந்தது'' என்று. ''அடக்கமின்மை'' எத்தனை துன்பங்களுக்கு காரணம் என்று... *ஆம் நண்பர்களே...!* அடக்கம் உயர்வு தரும்; அதுவே வெற்றிக்கு வழி...! அடங்காமை துன்பத்தில் ஆழ்த்தி விடும்...!! தன் நிறை, குறைகளை அறிந்தவர்கள் அடக்கத்தில் சிறந்தவர்களாக இருப்பார்கள்...!!! சான்றோரின் உயர்பண்பு என்பது அடக்கம் தான், அடங்காமை அல்ல... -உடுமலை சு. தண்டபாணி✒️ 💐💐💐🙏🏻🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
saravanan.
485 views
7 days ago
#innraya SINTHANAY *இன்றைய சிந்தனை* ( 03.08.2026 ) ...................................................... *''அனைத்து சிக்கல்களுக்கும் தீர்வு உண்டு...!"* .......................................................... நமக்கு ஏற்பட்ட சிக்கல்களின் ஆரம்பமான இடத்தை விட்டு பல நேரங்களில் நாம் தீர்வுகளைத் எங்கோ தேடுகின்றோம்... ஆம்.!, சிக்கல்களுக்கான தீர்வை நம்மிடம் தேடுவதை விடுத்து வெளியில் தேடுகின்றோம். நாம் என்ன தவறு செய்தோம்...? எதனால் இந்த சிக்கல்கள் நேர்ந்தது...? என்று சிந்தித்து தெளிவு பெறுவதில்லை... சரி.!, நாம் தான் சிக்கல்களுக்கு கட்டியங்காரனாக இருந்து விட்டோம், சிக்கல்கள் நேர்ந்தவுடன் அதை உறுதியாக எதிர்கொள்கிறோமா...? - என்றால் அதுவும் இல்லை...! (கட்டியங்காரன் - சூத்திரதாரி) ஆனால்!, எல்லாவற்றுக்கும் தீர்வு ஒன்று இருக்கிறது, மாற்று வழிகள் பல உண்டு’ என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். தீர்வு இல்லாத சிக்கல் என்று எதுவுமில்லை... காலம் எதற்காகவும் எவருக்காகவும் காத்திருப்பது இல்லை. வாழ்க்கை ஒரு வட்டம் போல் முடிந்த இடத்தில் தொடருவதும் இல்லை... அச்சம், கவலை, வெறுப்பு, போன்ற குப்பைகளை நம் மன வீட்டிலிருந்து தூக்கி எறியாவிட்டால் வாழ்க்கை நிறைவு பெறாது... *ஆம் நண்பர்களே...!* எல்லா பூட்டுகளுக்கும் சாவி உண்டு, அனைத்து சிக்கல்களுக்கும் தீர்வு உண்டு...! வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்படுவது இயற்கையே. அதைக் கண்டு அஞ்சுவது அறிவுடைமை ஆகாது, அவற்றை எதிர்கொள்வதே சிறந்தது...! கவலையுறுவதால் மட்டுமே சிக்கல்களில் இருந்து விலக முடியாது, இன்னும் கூற வேண்டுமானால், கவலையுறும் பொழுது சிக்கல்கள் இன்னும் பெரிதாகி விடும்... தீர்க்கவியலாத துன்பம் வாழ்க்கையில் ஏதுமில்லை, ஆனால் அவற்றைத் தீர்க்க வழிமுறைகளை அறியாமல் தான் நாம் துன்பத்தைக் கண்டு அஞ்சுகிறோம்... திறக்க முடியாத பூட்டுகள் ஏதுமில்லை, அதற்கான சாவியைத் தேடிப்பிடித்தால் போதும்...! -உடுமலை சு. தண்டபாணி✒️ 🌹🌹🌹🙏🏻🌺🌺🌺🌺🌺🌺🌺
saravanan.
581 views
8 days ago
#innraya SINTHANAY *இன்றைய சிந்தனை* ( 02.08.2026 ) .......................................................... *நாவிருந்து புறப்படும் வார்த்தைகள்...!* ...................................................... நாக்கு வன்மையானது, இதனால் நாவின் உதவியோடு உருவாகி வெளிப்படும் வார்த்தை அதைவிட வன்மையானது... ஒருவர் எதைக் காத்திட முடியாவிட்டாலும் நாவையாவது அடக்கிக் காத்திட வேண்டும், இல்லையேல் அவர் சொன்ன சொல்லே அவர் துன்பத்திற்குக் காரணமாகி விடும்... நாம் அடக்கத்துடன் இருப்பது அவசியம். புலனடக்கம் என்பது ஐம்புலனுக்கும் உரியது தான். அவற்றில் மற்றவற்றைக் காக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. பேச்சில் அடக்கத்தைக் கடைப்பிடிப்பது மிகவும் அவசியம்... ஒவ்வொருவரின் நாவிருந்தும் புறப்படும் வார்த்தைகள் மற்றவருக்கு மகிழ்ச்சியைத் தரலாம், சிலருக்கு மனதை உடைத்தெறியலாம். நம்பிக்கையை உடைத்தெறியலாம். ஆறாத வடுவை ஏற்படுத்தலாம்... ஒருவரை சிந்தித்து வாழ வைக்கலாம். மற்றொருவரை சாகத் தூண்டலாம். ஒரு நொடிப்பொழுதில் நம்மை உயர்வடையவும் தாழ்வடையவும் செய்யலாம்... கூடியவரை கடுஞ்சொற்களை தவிர்த்து விடுவது நல்லது. சினத்தால் வெளிப்படும் சொற்கள் காயப்படுத்துவதை விட, ஏளனமாக, புறக்கணித்துப் பேசும் வார்த்தைகளே அதிக வலியினைத் தரும்... திருவள்ளுவர் சொல்கிறார்...! "தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு." - என்று... தீயால் சுட்ட புண்ணானது ஆறிவிடக் கூடியது, அதன் தழும்பு கூட மறைந்து விடக்கூடும். ஆனால், ஒருவரை நாம் கோபத்தால், வெறுப்பால், புறக்கணிப்பால் அல்லது அகந்தையால் நாவடக்கம் இன்றிப் பேசுவதால் அவர்கள் மனத்தில் உண்டாகும் காயம் ஆறவே ஆறாது... இதனை வலியுறுத்தவே, "யாகாவாராயினும் நாகாக்க" என்றும் கூறுகிறார் அவர். ஒவ்வொருவரிடம் ஒரு நல்ல குணம், ஒரு திறமை மறைந்து கிடக்கிறது. அதைப் பாராட்டி ஊக்குவிக்க வேண்டும், ஒருவரைப் புண்படுத்துவது, பூவால் வருடுவது இரண்டையும் செய்யும் வல்லமை படைத்தது நம் நாக்கு. ஒருவர் கூறும் நல்ல இனிமையான சொல், விரக்தியின் விளிம்பில் இருப்பவரைக் கூட மலர்ச்சியடையச் செய்கிறது. ஒருவர் வீசும் கடுஞ் சொல்லோ, நல்ல மனநிலையில் இருப்பவரைக் கூட வேதனைப்பட வைக்கிறது. இனிய கனியைத் தேர்ந்தெடுப்பதா...?, புளிக்கும் காயைத் தேர்ந்தெடுப்பதா...? - இரண்டும் நம் கையில் தான்... அல்ல. அல்ல. நம் நாவில் தான் இருக்கிறது... தயவுசெய்து (Please), மன்னிக்கவும் ( Sorry), நன்றி ( Thank you) இவற்றை தாராளமாகப் பேச்சினூடே பயன்படுத்த வேண்டும்... *ஆம் நண்பர்களே...!* நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் வலிமை உண்டு. அத்தகைய ஆற்றலும், சக்தியும் வாய்ந்த பேச்சு நம்மிடம் இருந்து வெளிப்பட வேண்டும்... நமது பேச்சுப் பிறரை மகிழ்ச்சியுறுவதற்காகவும், எவ்வகையிலும் பிறரைக் காயப்படுத்தாததாகவும் அமைய வேண்டும்... ஒருவரிடம் பேசும் பொழுது சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் சிந்தித்து சுயமாகப் பேச வேண்டும்... வாக்கினிலே இனிமை சேர்ந்தால் வாழ்வினிலும் இனிமையே கூடும் தானே...? - உடுமலை சு. தண்டபாணி ✒️ 💐💐💐🙏🏻🌺🌺🌺🌺🌺🌺🌺
saravanan.
602 views
9 days ago
#innraya SINTHANAY *இன்றைய சிந்தனை* ( 01.08.2026 ) .................................................. *''உதவிக் கரம் நீட்டுவோம்...!"* .................................................. ஒருவருக்கொருவர் உதவி செய்து வாழ்வது மனித இயல்பு, ஒருவருக்கொருவர் உதவி செய்து வாழும் இயல்பே குடும்ப வாழ்க்கையாக உருவாகியுள்ளது... இந்த உதவும் மனப்பான்மையானது குடும்ப வாழ்க்கையைக் கடந்து உலக மக்கள் அனைவருக்கும் உரியதாக நிலைத்திருக்க வேண்டும்... ஒருவருக்கு நாம் செய்யும் உதவியால் அவருக்கு மட்டுமல்ல, நமக்குமே மகிழ்ச்சி கிடைக்கும், மற்றவருக்கு உதவி செய்ததால் வாழ்க்கையில் கெட்டுப் போனவர் என்று எவருமேயில்லை... இதுதான் இயற்கை நமக்குக் கற்றுக் கொடுத்திருக்கும் முக்கியமான பாடம். பெறுவதை விட, கொடுப்பதே உயர்வான செயல்...! பிறருக்குத் தொந்தரவு தருவது, சீண்டிப் பார்ப்பதே சிலரின் வேலையாக இருக்கும். அவர்களுக்கு மகிழ்ச்சியின் மகத்துவம் புரிவதில்லை என்று தான் பொருள்... ஆனால்!, இன்றைய காலகட்டத்தில் ஒருசிலர் உதவ வேண்டிய நேரத்தில், சிலர் மனிதாபிமானம் இல்லாமல் பணத்தை மட்டுமே பெரிதாகப் பார்க்கிறார்கள்... இருந்தாலும், ஒரு சிலர் சகோதரத்துவத்தோடு உதவி செய்பவர்களால் தான் இன்னமும் மனித குலம் உயிரோடு வாழ்கிறது, மற்றவர்களுக்கு உதவி செய்வதில் நமக்குக் கிடைக்கும் மகிழ்ச்சியை விட ,வேறு எதிலும் அப்படியொரு மகிழ்ச்சி நமக்குக் கிடைக்காது... இல்லாதவர்களுக்கு நம்மால் இயன்ற உதவிகள் செய்ய வேண்டும், நம்மை நாடி வந்தவர்களுக்கு எவ்வித மறுப்பும் கூறாமல் உதவிகளைப் புரிய வேண்டும்... *ஆம் நண்பர்களே...!* நம்மை நாடி உதவி கேட்டு வருகிறவர்களுக்கு இயன்ற அளவு உதவி செய்து வாழ்வது தான் நல்ல வாழ்க்கை...! அதுதான் உங்கள் வாழ்வில் ஒளி ஏற்றி வைக்கும்!, அடுத்தவர் வாழ்விலும் ஒளி ஏற்றி வைக்கும்...!! இல்லாதவர்களுக்கு உதவிக் கரம் நீட்டுவோம்...! அவர்களின் கண்ணீர் துடைப்போம்...! அனைவரிடமும் அன்பு காட்டுவோம்...! -உடுமலை சு. தண்டபாணி✒️ 🌹🌹🌹🙏🏻💐💐💐🌺💐🌹💐
saravanan.
579 views
10 days ago
#innraya SINTHANAY *இன்றைய சிந்தனை* ( 31.07.2026 ) ....................................................... *''இது நமது வாழ்க்கை...!*" ............................................................. மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பர்கள் என்று, தேவையற்று நாமே நமக்குள் நினைத்துக் கொள்ளும் ஒரு கண்ணோட்டம் மிகவும் தவறானது... நம்மைப் பற்றிய நம் கண்ணோட்டத்தை விட, மற்றவர்கள் கண்ணோட்டத்திற்கு, நாம் பெரிதாக மதிப்பளிக்கத் தொடங்கும் போதே ,நாம் மனதளவில் நம்மை தாழ்த்திக் கொள்ளத் துவங்கி விடுகின்றோம்... நாம் செய்யும் செயல்களையும், அதன் விளைவுகளையும் மறந்து, அடுத்தவர்களின் எண்ணத்திற்கு அதிக மதிப்புக் கொடுப்பதால், நம் செயல்கள் முழுதாக நடைபெறாமல், அதனால் மனம் புழுங்குவது வழக்கமாகி விட்டது... முன்னேற நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியை இந்த எண்ணம் சாகடித்து விடும். முளையிலேயே முயற்சி சாகடிக்கப்படுவதால், முன்னேற்றம் எங்கிருந்து வரும்...? இந்த அச்சத்திலேயே பலர் மற்ற தகுதிகளை, திறமைகளை கைவிட்டு விடுகின்றனர்.இந்த அச்சம் இருந்தால், படைப்புத் திறனோ, முன்னேற வேண்டும் என்கிற உந்துதலோ இருக்காது... நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதே தெரியாது; புரியாது. முதலில், இந்த எண்ணத்திலிருந்து வெளியில் வர வேண்டும். இப்படிப்பட்ட எண்ணத்தில் இருப்பது, இருளில் இருப்பதற்குச் சமம்; வெளியில் வந்து விட வேண்டும் என்று முனைவது முதல் படி,. மற்ற தடைகளை வரிசையாகக் களைய வேண்டும்... மனதில் ஆழப் பதிந்துள்ள எதிர்மறை எண்ணம், தாழ்வு மனப்பான்மை, அச்சம், தயக்கம், ஒப்பீடு என்று அனைத்தில் இருந்தும் வெளிவர முயற்சி செய்ய வேண்டும்... வெற்றியை நோக்கி செல்லும் பயணத்தில், பிறர் கருத்துகளையும், மன நிறைவுகளையும் நிறைவுபடுத்தத் தெரிந்திருக்க வேண்டும்... பிறர் உங்களை குறை கூறும் போது, சோர்ந்து போகாதீர்கள்; பிறர் இப்படி இருக்கின்றனரே என்று, உள்ளுக்குள் பொறுமாதீர்கள். இருக்கும் நிலையை ஏற்றுக் கொள்ளுங்கள்; தீர்வு காணுங்கள்... *ஆம் இனிய நண்பர்களே...!* "இந்த உலகம் உங்களைப் பார்க்கிற பார்வை ஒவ்வொரு நாளும் மாறிக் கொண்டே தான் இருக்கும்...! சிலருக்கு, இன்று உங்களைப் பிடிக்கும். நாளையே அவர்களுக்கு உங்களைப் பிடிக்காமலும் போகலாம்...! மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று ஆலோசித்துக் கொண்டிருந்தால் நம்முடைய வாழ்க்கையை நாம் வாழ முடியாது...! -உடுமலை சு. தண்டபாணி✒️ 🌺🌺🌺🙏🏻🌹🌹🌹🌹🌹🌹🌹
saravanan.
665 views
21 days ago
#innraya SINTHANAY *இன்றைய சிந்தனை* ( 20.07.2026) ........................................................ *''இயற்கை கற்பிக்கும் பாடம்"* ................................................... இயற்கை நமக்கு எடுக்கிற வகுப்பு தான் இயற்கைச் சீற்றங்கள். இயற்கைச் சீற்றங்கள் வந்த போது நாம் அழிவினை மட்டுமே பார்க்கிறோம், ஆனால்!, எத்தனை மனிதர்களுக்கு இவ்வளவு தான் வாழ்க்கையா...? என்ற பேருண்மையை உணர்த்தி இருக்கிறது என்பதை நாம் பார்ப்பதில்லை... எத்தனை தொண்டு செய்யும் உள்ளங்களை ஒவ்வொரு இயற்கைப் பேரிடர்களும் இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தி இருக்கிறது என்பதை நாம் காண்பதில்லை... நமக்குத் தான் ஓடுவதற்கே நேரம் சரியாக இருக்கின்றதே...! கண்ணுக்குத் தெரியாத ஒரு தீநுண்மி இன்று உலகையே முடக்கி விட்டதே...! இப்படியொன்று நடக்குமா...? என எவரும் கணித்திருக்கவே முடியாது, ஆனால் நடந்திருக்கிறது... பெருஞ் செல்வந்தர்கள், ஆளுமைச் சமூகத்தினர் என எந்தவிதப் பாகுபாடும் இல்லை. ஏழைக்கு எட்டாத கேளிக்கை விடுதிகள், திரையரங்குகள் போன்றவை இன்று மூடப்பட்டிருக்கின்றன... காலம் காலமாக நம்பிய தெய்வங்கள் எல்லோரையும் கைவிட்டது, அனைத்து மத வழிபாட்டு தளங்களும் மூடப்பட்டு இருக்கிறது... இன்னும் சில மாதங்கள் நீடித்தால் இன்று செல்வந்தர் என நம்பிக் கொண்டிருக்கும் பலர் ஏழைகளாக மாறிப் போவார்கள்...! இந்தப் பதிவை எழுதிக் கொண்டிருக்கும் பொழுது 'கொரோனா' என்னும் தீநுண்மி பாதிப்பினால் உலகம் முழுவதும் அறுநூறாயிரத்திற்கும் மேல் இறந்திருக்கிறார்கள் என்று 'உலக சுகாதர நிறுவனம்' அறிவித்திருக்கிறது... எண்ணிக்கையாகக் காணும் போது இதன் வலிகளைப் பெரிதாக உணராமல் நமக்கென்ன என்று எண்ணிக் கொண்டு நம்மால் கடந்து செல்ல முடிகிறது... ஆனால்! இறந்த ஒவ்வொருவருக்கும் ஒரு குடும்பம் இருக்கிறது, அவர்களுக்குப் பின்னால் ஒரு கதை இருக்கிறது. அவை மட்டும் நமக்குத் தெரிந்தால் நாம் அனைவருமே மன நோயாளிகளாக மாறிப் போவோம்...! இதில் எவருமே இப்படியொரு நிலை வந்து இறந்து போவோம் என நினைத்திருக்கவே மாட்டார்கள். ஆனால்!, உறுதியற்றது தானே வாழ்க்கை... உறுதியற்ற இந்த வாழ்க்கையில் நாம் ஓடிக் கொண்டே இருப்பதை இனியாவது நிறுத்திக் கொள்வோம், ஓடி உயரங்களை அடைபவர்கள் வாழ்க்கையில் மகிழ்வாக இருக்கிறார்கள் எனக் கூறிடவியலாது... எத்தனை மாடமாளிகைகளில் இன்னல்களோடு இரவில் உறங்குகிறார்கள். மிகப்பெரிய மகிழுந்துகளில் எத்தனை பணம் படைத்தோர் மன அழுத்தத்தோடு பயணிக்கிறார்கள் என அவர்களுக்குத் தான் தெரியும்... ஆனால்!, உண்மையை நாம் உணராமல் அங்கே செல்ல முயற்சி செய்து கொண்டே இருக்கின்றோம், இங்கே பத்தாயிரம் ஊதியக்காரர்களும் வாழுகிறார்கள், நூறாயிரக் கணக்கில் ஊதியக்காரர்களும் வாழுகிறார்கள்.... ஆகவே!, பணம் எப்போதுமே பொருட்டல்ல, 'காலம்' அதுவே தலைமைப் பொருள்...! *ஆம் நண்பர்களே...!* மன வருத்தமின்றி வாழ்வதற்கு இது போதுமென உங்களுக்குத் தோன்றுகிற வரை ஓடுங்கள். பிறகு நின்று விடுங்கள், இருப்பதை வைத்துக் கொண்டு அமைதியாக வாழப் பழகுங்கள்...! ஆம்!, இவ்வளவு தான் வாழ்க்கை என்பதை முதலில் புரிவோம்...! - உடுமலை சு. தண்டபாணி 🌺🌺🌺🙏🏻💐💐💐💐💐💐💐💐
saravanan.
548 views
26 days ago
#innraya SINTHANAY *இன்றைய சிந்தனை* ( 15.07.2026) ................................................... *'' துணிவே துணை...!"* ................................................... நாம் ஒரு செயலை செய்யும் பொழுது "நாம் தவறேதும் இழைத்து விட்டால் என்ன நிகழுமோ" என ஆலோசித்துக் கொண்டிருப்பதை விட, துணிந்து முயற்சித்துப் பாருங்கள்.. கிடைத்தால் வெற்றி...! இல்லையேல் அனுபவம்...!! இரண்டுமே நமக்குத் தேவை தான்...!!! உண்மையைக் கூறினால் அனைவருக்குமே அப்படியொருவர் இருக்கத் தான் செய்கிறார்கள். அது வேறு யாரும் இல்லை, நமக்கு நாமே தான்...! ஒரு நிமிடம் ஆலோசித்துப் பாருங்கள், நீங்கள் உங்கள் வாழ்க்கையில் பல இன்னல்களான சூழ்நிலைகளைக் கடந்திருப்பீர்கள், அவற்றையெல்லாம் கடந்து அந்தப் பாடங்களை எல்லாம் மனதில் சுமந்து தான் இன்று இருக்கிறீர்கள்...! இப்பொழுது கூறுங்கள், எந்த ஒரு சூழ்நிலையிலும் உங்களுக்காக ஒருவர் இருக்கத் தானே செய்கிறார். யார் அவர்...? ஆம்..! அவர் நீங்கள் தான்...! என்ன நிகழ்ந்தாலும், எவற்றை இழந்தாலும் சோர்ந்து விட மாட்டேன். காரணம் நான் நூறு வெற்றிகளைக் கண்டவன் அல்ல, நான் ஆயிரம் தோல்விகளைக் கண்டவன் என்றார் 'தாமஸ் ஆல்வா எடிசன்' அவர்கள்... ஒரு செயலில் நல்லது நடந்தால் பெருமை கொள்ளுங்கள். இல்லையா...? அதைவிட பெருமை கொள்ளுங்கள், அடுத்தமுறை சற்று விழிப்புணர்வுடன் செயல்பட்டால் இதைவிட சிறப்பான ஒன்று கூட நாளை உங்களுக்குக் கிடைக்கலாம்... அதனால் தான் நம் செயலில் வெற்றி ஈட்டினாலும் சரி, தோல்வியாக இருந்தாலும் சரி, அவற்றை எந்தவித நடுக்கமும் இல்லாமல் மனதை அமைதியாக நடுநிலையில் நின்று ஏற்றுக் கொள்ள வேண்டும்... எது நடந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளும் மனநிலை மட்டும் உங்களுக்கு இருந்து விட்டால், வாழ்க்கையில் பல துயரங்கள் உங்களை விட்டு நீங்கி விடும்... *ஆம் நண்பர்களே...!* என்ன நிகழ்ந்தாலும் எனக்கு துயரமில்லை என்று துணிந்தவர்கள் எவரோ, அவர்களே வாழ்க்கையில் வெற்றி பெறுகின்றார்கள்...! - உடுமலை சு. தண்டபாணி 🌷🌷🌷💐🙏🏻🌹🌹🌹🌹🌹
saravanan.
586 views
27 days ago
#innraya SINTHANAY *இன்றைய சிந்தனை* ( 14.07.2026) ............................................................ *நம்பிக்கையே வாழ்வின் மூலதனம்...!"* ............................................................ உங்கள் வாழ்க்கைக் கனவின் மீது எப்போதும் ஒரு கண் வைத்துக் கொண்டிருங்கள். அதே வேளையில் அவற்றைச் சிறு குறிக்கோள்களாக பிரித்துக் கையாளுங்கள்... இதன் மூலம் சிறந்த முறையில் உங்கள் வாழ்க்கையின் பயணம் தேக்கமின்றி நடக்கும். ஒவ்வொரு நாட்களையும் நீங்கள் கணக்கில் கொள்ள வேண்டும்... மற்றவர்களை முறையாகக் கையாளுவது எப்படி என்பதை அறிந்து வைத்துக் கொள்ளுங்கள். உறவுகளில் சிக்கல்களைத் தீர்த்து அவை சண்டையாக மாறாத வண்ணம் பார்த்துக் கொள்ளுங்கள்... மற்றவர்களுடன் உள்ள கருத்து வேறுபாடுகளை சொற்பூசல்களைக் களைந்து நல்ல பழக்கங்களை ஏற்படுத்திக் கொள்ள முயலுங்கள். இதன் மூலம் உறவுகள் நீடிக்கும்... உங்கள் பயணத்தின் ஒரே துணை நீங்கள் தான். உடன் பயணிப்பவர்கள் அனைவரும் துணை செய்தாலும், செய்யாவிட்டாலும், பயணம் உங்களுடையது... அவரை மலை போல் நம்பினேன், எமது நம்பிக்கையைக் களைந்து விட்டார். இவரை முழுமையாக எதிர்பார்த்தேன் ஏமாற்றி விட்டார் என்ற வெற்றுப் புலம்பல்கள், தன்னிரக்கத்தைத் தவிர எதையும் கொடுக்காது... உங்கள் பாதையில் உதவியவர்களுக்கு, மிகுந்த நன்றியுடன் இருங்கள். ஆனால் உதவி புரியாதவர்கள் பற்றிய வெறுப்பை வளர்த்துக் கொள்ளாதீர்கள்...! உங்கள் முயற்சிகள் மற்றும் உங்கள் பணிகளில் நீங்கள் காட்டும் பணிவு அல்லது அடக்கம் உங்களின் வெற்றிகளைப் பார்த்து மற்றவர்களை மேலும் மேலும் உங்களைப் பற்றிப் பேச வைக்கும்... அதிகம் கவனியுங்கள் குறைவாகப் பேசுங்கள், குறைவாக நீங்கள் பேசுவதால், தவறான கருத்துக்களை நீங்கள் தவிர்க்க முடியும்... அது உங்களை ஒரு நல்ல திறமை வாய்ந்த மனிதராக மாற்றும். நீங்கள் என்ன உரையாடப் போகிறீர்கள் என மற்றவர்கள் எதிர்பார்க்கும் வண்ணம் உங்களது சொல்லாட்சி நிலையாக இருக்க வேண்டும்... உங்களுக்கு மற்றவர்கள் உதவினால் மகிழ்ச்சி. இல்லையென்றாலும் முயற்சி எனத் தொடர்ந்தால் வளர்ச்சி... இயன்ற உயரங்களை எட்ட முயல்வதே திறமை. அதற்கு வேண்டியது மலையளவு மன உறுதி... வாழ்க்கை முன் வைக்கும் ஒவ்வொரு பேராட்டங்களும், உங்களை முன்பை விட, இன்னும் வலிமையாய் செதுக்கித் தரும்... *ஆம் நண்பர்களே...!* பேராட்டங்களை விரும்பி எதிர்கொள்ளுங்கள். அவை இனிமையானவை...! மற்றவர்கள் செய்ய இயலாத அல்லது செய்திராத செயலைச் செய்யவும் முயற்சி செய்யுங்கள்... இந்த உலகம் இதுவரை கண்டிராத ஒன்றை நீங்கள் காட்சிப்படுத்த அல்லது செயல்பட முயற்சியுங்கள்... இதன் மூலம் நீங்கள் ஒரு உண்மையான நாயகனாக வலம் வரலாம். - உடுமலை சு. தண்டபாணி ✒️ 💐💐💐🙏🏻🌺🌺🌺