மாலையில் வந்த சூறாவளி
தூத்துக்குடியை நேற்று கருமேகங்கள் சூழ்ந்தன. அந்த கருமேகங்களில் இருந்து மெல்லிய மற்றும் துவைத்த துணிகளை முறுக்கியது போன்ற வடிவத்தில் மேகக்கூட்டம் கீழே இறங்கி, தரையில் புழுதியைக் கிளப்பி, சட்டென ஒரு சூறாவளியாக உருவெடுத்தது. தென்னிந்திய பகுதிகளில் இதுபோல் சூறாவளி ஏற்படுவது என்பது மிக மிக அரிதானவை.
தூத்துக்குடியின் புதுக்கோட்டை மற்றும் வாகைக்குளம் பகுதியில் நேற்று மாலை 5 மணியளவில் இந்த சூறாவளி ஏற்பட்டுள்ளது. பகலில் நன்கு வெப்பமாக இருந்த தூத்துக்குடியில் திடீரென வாகைக்குளம் - புதுக்கோட்டை பகுதியில் இடியுடன் மழை பெய்தது.
6 பேருக்கு காயம்
சூறாவளி காரணமாக வாகைக்குளம் டோல்கேட் பக்கத்தில் உள்ள மினி தீம் பார்க்கில் கூரைகள் பறந்தன. கூரைகள் பறந்து தீம் பார்கில் உள்ள செயற்கை அருவிகளில் குளித்துக்கொண்டிருந்தவர்களின் மீது விழுந்தது. இதனால் 6 பேருக்கு காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு சிறு எலும்பு முறிவு ஏற்பட்டது. தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
தூத்துக்குடி - பாளையங்கோட்டை டோல்கேட் கூரையையும் சூறாவளி விட்டுவைக்கவில்லை. அந்த கூரைகள் அருகில் இருந்து மின்சார கேபிள்களில் பட்டு மின்தடையை ஏற்படுத்தியது. 30 நிமிடங்கள் வரை நீடித்த சூறாவளி வலுவிழந்த பின்னர் தூத்துக்குடி இயல்பு நிலைக்கு திரும்பியது.
| திருவள்ளூரில் அமோனியா வாயு கசிவு: 7 தொழிலாளர்கள் பலி.. என்ன நடந்தது?
வானிலை ஆய்வாளர்கள் சொல்வது என்ன?
தூத்துக்குடியில் ஏற்பட்ட இந்த திடீர் சூறாவளியால், நல்வாய்ப்பாக உயிர் சேதங்கள் ஏதும் நிகழவில்லை. பொருட் சேதமும் பெரியவில் இல்லை. அதேநேரத்தில் பலவீனமான சூறாவளியாக இருந்தாலும் அவை நிச்சயம் கவனிக்கப்பட வேண்டியவை என்றும் வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் உள்பட பலராலும் தூத்துக்குடி சூறாவாளி உறுதிசெய்யப்பட்டன. அதேவேளையில் அதன புகைப்படங்களும், வீடியோக்களும் பதிவிடப்பட்டன. இதுகுறித்து பிரதீப் ஜான் அவரது X பதிவில் மூன்று வீடியோக்களை வெளியிட்டு, "தூத்துக்குடியில் அபூர்வமாக சூறாவளி ஏற்பட்டது. இது அரிதிலும் அரிதானது" என பதிவிட்டிருந்தார்....
வானிலை ஆய்வாளர் நவதீப் தஹியாவும் பல வீடியோக்களை சரிபார்த்து உறுதிசெய்தார் என செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. அந்த வீடியோக்களை பார்க்கும்போது, மெல்லிய புனல் வடிவத்தில் சூறாவளி தரையில் சுற்றிச் சுழன்றது தெரிந்தது. இருப்பினும் அது சிறிதாகவும் பலவீனமாகவும் தென்பட்டது.
ஏன் சூறாவளி அரிதானது?
தமிழ்நாட்டை பொருத்தவரை இதுபோன்ற சூறாவளி என்பது அரிதானது.
கதைகளிலும், திரைப்படங்களிலும் சூறாவளி குறித்து அதிகம் பேசப்பட்டிருக்கும், பலரும் கேள்விப்பட்டிருப்பார்கள்.
ஆனால் பெரியளவில் சூறாவளியை கண்களால் பார்த்திருக்க மாட்டார்கள், அந்த அனுபவம் இருக்காது.
குறிப்பாக, பெரும்பாலான இந்தியச் சூறாவளிகள், மார்ச் முதல் மே வரை கடுமையான பருவமழைக்கு முந்தைய சூறாவளிகளாகும்.
அவை மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசா வழியாக கிழக்கு பகுதியை வழக்கமாக தாக்கும்.
அதேவேளையில் வடகிழக்கு பகுதியில்தான் சுமார் 72 சதவீத சூறாவளிகள் நிகழ்கின்றன.
தமிழ்நாட்டின் பருவமழை மேகங்கள், அமெரிக்காவின் புகழ்பெற்ற Tornado Alley போல் அரிதாகவே அமைகிறது.
எனவே, தமிழ்நாட்டில் ஒரு தரை சூறாவளி ஏற்படுவது அரிதிலும் அரிது. இதுவரை சில மட்டுமே பதிவாகி உள்ளன.
சூறாவளி என்றால் என்ன?
சூறாவளி என்பது இடிமேகங்களையும், தரையையும் ஒரே நேரத்தில் தொடும், கடுமையாக சுழலும் ஒரு காற்று தூம் என சொல்லலாம்.
புனல் போன்ற வடிவத்தின் உள்ளே இருக்கும் ஈரப்பதம் குளிர்ந்து கண்ணுக்கு தெரியும் நீர்த்துளியாக மாற்றமடைவதாலும், சூறாவளியின் அடிப்பகுதியைச் சுற்றி தூசியும் சிதிலங்களும் சுழன்று வருவது அனைவராலும் காண முடியும்.
சூறாவளிக்கு தேவையான 3 விஷயங்கள்
முதலில், வளிமண்டலத்தில் அதிகப்படியான வெப்பமும் ஈரப்பதமும் இருக்க வேண்டும். வங்காள விரிகுடாவில், நடப்பு பருவமழைக்காலத்தில் இந்த வெதுவெதுப்பான ஈரக்காற்றை தாராளமாக வாரி வழங்கும்
அடுத்தது, ஒரு பலத்த காற்றோட்டம் (Updraught) மேல்நோக்கி எழும்ப வேண்டும். சூடான காற்று லேசாகி மேலே போகும் அல்லவா?, அப்படி ஒரு புயலை உருவாக்கத் தேவையான காற்றை மேல்நோக்கி வேகமாக இழுக்கும் ஒரு 'இழுவை விசை'இரண்டாவது தேவை.
கடைசியாக, தரைமட்டத்திற்கு அருகில் ஒரு சிறிய சுழற்சி இருக்க வேண்டும். மேலே எழும்பும் அந்த பலமான காற்று, இந்தச் சிறிய சுழலை அப்படியே மேல்நோக்கி இழுத்து நீளமாக்குகிறது.
உதாரணமாக, பனிச்சறுக்கு விளையாடுபவர்கள் வேகமாகச் சுழலும் போது, தங்களுடைய கைகளை உடம்போடு ஒட்டி வைத்துக்கொள்வார்கள். அப்படி, கைகளை உள்ளே இழுத்துக் கொள்ளும்போது அவர்களால் இன்னும் அதிவேகமாகச் சுழல முடியும். அதே போன்ற ஒரு சுழற்சி வேகத்தைத்தான் இந்த மேல்நோக்கிய காற்று சூறாவளிக்கு கொடுக்கிறது. இந்த மூன்றும் சரியான விகிதத்தில் இணையும் போதுதான் ஒரு பயங்கரமான சூறாவளி உருவாகிறது....
#இன்றைய ட்ரெண்டிங் நியூஸ் #📰ஜூன் 22 முக்கிய தகவல்📢