saravanan.
674 views 5 months ago
#theiveega kathay. பசியைப் போக்கிய சூரிய பகவான்.... அட்சயம் என்றால் வளருதல். முன்னோர்களின் ஆசீர்வாதங்கள் அளிக்கும் போது கூறப்படும் நல்ல வார்த்தை என்னவென்றால், நீ தொட்டதெல்லாம் அட்சயப் பாத்திரம் போல் வெற்றி பெறவேண்டும் என்பர். அட்சய பாத்திரம் அல்லது அமுதசுரபி எனப்படும் இந்த பாத்திரத்தில் உணவு இருந்து கொண்டே இருக்கும். இது நாம் அறிந்ததே. மகாபாரதத்தின் படி அட்சய பாத்திரம் தர்மனுக்கு சூரிய பகவான் தந்ததாகும். இந்தப் பாத்திரத்தில் உணவு இட்டால் எடுக்க எடுக்க கொடுக்கும் தன்மை உடையது. இந்த அட்சயப் பாத்திரம் முதன் முதலில் யாரிடம் இருந்து யாருக்கு வழங்கப்பட்டது என்பதைப் பார்ப்போம். இந்த அட்சயப் பாத்திரத்திற்கு பல கதைகள் உண்டு. அதில் முக்கியமானது பாண்டவர்களின் கதை. மகாபாரதத்தில் பிரபலமானது சூதாட்டம் தான். பாண்டவர்கள் ஏமாந்து நின்ற தருணம் அது. இப்படி சூதாட்டத்தில் நாட்டை இழந்துவிட்ட பாண்டவர்கள் திரௌபதியுடன் வனவாசத்திற்கு புறப்பட்டனர். பாண்டவர்களுடன் சில அந்தணர்களும், அவர்களது பத்தினிகளும் சென்றனர். அன்று இரவு கங்கை கரையில் இருந்த ஒரு ஆலமரத்தடியில் அனைவரும் தங்கினர். அப்போது தர்மர் மட்டும் மிகுந்த வேதனையுடன் இருந்தார். காரணம் அவர்களை நம்பி இத்தனை நபர்கள் இருக்க, அனைவரும் பட்டினியுடன் இருக்கின்றனரே என்ற கவலை அவருக்கு. தர்மர் கூறினார், அந்தணர்களே! செல்வத்தை இழந்த நாங்கள், காட்டில் கிடைக்கும் காய்கனி வகைகளை தான் சாப்பிட்டு வாழ போகிறோம். ஆனால் விலங்குகளும் அரக்கர்களும் வாழும் வனப்பகுதியில் உங்களால் எப்படி வாழ முடியும்? உங்களால் இங்கு வாழவே முடியாது. தயவு செய்து நாட்டுக்கு திரும்பி விடுங்கள், என்று பணிவுடன் வேண்டிக் கொண்டார். அதற்கு அந்தணர்கள், தர்மரே! எங்களுக்காக நீங்கள் மனம் வருந்த வேண்டாம். உங்களுக்கு பாரமாக நாங்கள் ஒருபோதும் இருக்க மாட்டோம். தங்களின் நன்மைக்காக ஜெபம் மற்றும் தவம் செய்திடுவோம். எங்களுக்கு தேவையான உணவை நாங்களே தேடிக் கொள்வோம். மனதிற்கு இனிமை தரும் நல்ல விஷயங்களையும் கதைகளையும் பேசிக்கொண்டு பொழுதை நல்ல முறையில் உங்களுடன் கழிப்போம். அந்தணர்கள் இவ்வாறு கூறியவுடன், அவர்களின் அன்பை கண்டு மனம் நெகிழ்ந்தார் தருமர். நாளாக நாளாக அவர்கள் மிகுந்த வறுமையில் இருந்தனர். சரியான உணவு இல்லாமல் தவித்து வந்தனர். இவர்களின் வறுமையை கண்ட கிருஷ்ணர், அவர்களது பசியை போக்க எண்ணினார். பாண்டவர்களுக்கும் திரௌபதிக்கும் அட்சயப் பாத்திரத்தின் மகிமையையும், அது பெறுவதற்கு உண்டான வழிமுறைகளையும் போதித்தார். இராமாயணத்தில் அகத்திய முனிவர், சூரிய உபாசனை செய்யும் ஆதித்ய ஹ்ருதய மந்திரத்தை ஸ்ரீராமனுக்கு உபதேசிப்பார். அதுபோல் சூரிய பகவானை நினைத்து ஆதித்ய ஹ்ருதய மந்திரத்தை சொல்லுங்கள் என்று கிருஷ்ணர் பஞ்சபாண்டவர்களிடம் கூறினார். பஞ்சபாண்டவர்களும் பகவான் கிருஷ்ணரின் உபதேசத்தின் படி சூரிய பகவானை நினைத்து ஆதித்ய இருதயம் மந்திரத்தை உச்சரித்து கடும் தவம் புரிந்தனர். இவர்களது தவத்தை மெச்சிய சூரிய பகவான் அவர்கள் முன்பு தோன்றினார். அட்சயப் பாத்திரத்தை கொடுத்தார். அட்சய பாத்திரத்தின் மகிமையையும் சொன்னார். இந்த பாத்திரத்தில் அன்னம், வேறு உணவு பதார்த்தங்களை நிரப்பினால் அப்பாத்திரம் அள்ள அள்ளக் குறையாமல் சுரந்து கொண்டே இருக்கும். உணவருந்திய பின்னர், எஞ்சியதை சூர்யார்ப்பணம் செய்து அட்சய பாத்திரத்தை கழுவி வைத்து விட வேண்டும். மறுநாள் சூரிய உதயத்துக்கு பிறகு தான் அது மீண்டும் உணவு அளிக்கும் என்று அதன் பலனை சொல்லி மறைந்தார் சூரிய பகவான். இதையடுத்து, தர்மர் திரௌபதியிடம் அதைக் கொடுத்தார். அதன் மூலம் அவள் அனைவருக்கும் உணவு பரிமாறினாள். அட்சய பாத்திரம் அள்ள அள்ள குறையாதது போல் உங்கள் வாழ்க்கையிலும் செல்வங்களும் வளமும் சேரட்டும். இந்த ஆசீர்வாதத்தை எல்லோருக்கும் கொடுங்கள். உங்கள் வாழ்வும் மகிழ்ச்சி என்றும் மலர்ச்சியோடு இருக்கட்டும். சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் 🙏🏻
10 likes
10 shares

More like this