#இன்றைய வேத வசனம் #இன்றைய இறைவார்த்தை #இன்றைய வசனம் காலை ஜெபம்* "தூயகத்தில் இறைவனைப் போற்றுங்கள்! வலிமைமிகு விண்விரிவில் அவரைப் போற்றுங்கள்! அவர்தம் வல்ல செயல்களுக்காய் அவரைப் போற்றுங்கள்! அவர்தம் எல்லையிலா மாண்பினைக் குறித்து அவரைப் போற்றுங்கள்! எக்காளம் முழங்கியே அவரைப் போற்றுங்கள்! வீணையுடன் யாழிசைத்து அவரைப் போற்றுங்கள். மத்தளம் கொட்டி நர்த்தனம் செய்து அவரைப் போற்றுங்கள்! யாழினை மீட்டி, குழலினை ஊதி அவரைப் போற்றுங்கள்! சிலம்பிடும் சதங்கையுடன் அவரைப் போற்றுங்கள். ‘கலீர்’ எனும் தாளத்துடன் அவரைப் போற்றுங்கள்! அனைத்து உயிர்களே, ஆண்டவரைப் புகழ்ந்திடுக"! (திருப்பாடல் 150 : 1-6) தூயவர், தூயவர், தூயவர், தூயவராம் எங்கள் ஆண்டவர் போற்றி.. தூய்மைமிகு மூவொரு இறைவா போற்றி.. வாய்மையின் வேந்தரே போற்றி.. தாய்மையின் பிறப்பிடமே போற்றி... உண்மையின் உறைவிடமே போற்றி! அகில உலகையும் படைத்த எம் இறைவா! இந்த அதிகாலை வேளையில் உம்மை போற்றுகின்றேன், புகழ்கின்றேன், வாழ்த்துகின்றேன், உமக்கு நன்றி கூறுகின்றேன். இறைவா! உம் பிள்ளைகளாகிய எங்களை நம்பி, ஒவ்வொருவருக்கும் நீர் ஒவ்வொருவிதமான பொறுப்புகளை ஒப்படைத்திருக்கின்றீர். நன்றி இறைவா. அதற்கெல்லாம் நாங்கள் நம்பிக்கைக்குரியவர்களாக இருந்து, கொடுத்த பொறுப்பில் உண்மையுள்ளவர்களாக நாங்கள் இருக்க அருள் புரிவீராக. நீர் தந்த தாலந்துகளை, மினாக்களை உமது மாட்சிக்காகவே நான் பயன்படுத்துவேன். ஆண்டவரே! நாங்கள் நீதியை மார்புக் கவசமாகவும், உண்மையை இடைக்கச்சையாகவும், நம்பிக்கையை கேடயமாகவும், மீட்பை தலை சீராகவும், உமது இறைவார்த்தையை தூய ஆவி அருளும் போர் வாளாகவும் கொண்ட படைக்கலன்களை, நாங்கள் அணிந்துகொண்டு அலகைக்கு எதிரான போரில் நாங்கள் துணிவுடனும், வல்லமையுடனும் போராட எங்களுக்குத் துணை புரிவீராக. எங்கள் கற்பாறையும், கோட்டையுமான ஆண்டவரே, நீரே எங்களுக்குத் துணை. எங்களுக்கு பாதுகாப்பாளரும், மீட்பருமான நீரே எங்கள் அரண். இறைவா! இந்த நாளை உமது பெயரால் துவக்குகின்றேன். ஆசீர்வதித்து வழிநடத்துவீராக. இயேசு, மரி, சூசை என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன். *ஆமென்.* விண்ணுலகில்... (1) அருள் நிறைந்த... (3) பிதாவுக்கும், சுதனுக்கும்... (1) *ஆமென்.*
27 shares

More like this