D Muthu Prakash, Kanchipuram 💐
587 views • 15 hours ago
#🚩அய்யா வைகுண்டர் 🚩 #💚Ayya 💗 Vaikundar💚 #Ayya Vaikundar #அய்யா வைகுண்டர் #அய்யா வைகுண்டர் {1008} கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை 14ஆம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 10.08.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
அகிலம்:
------------
என்னைத் தவத்துக்(கு) இருத்தியிது நாள்வரையும்
இன்ன மிரங்கலையோ என்தவசு காணலையோ
அன்றருளித் தந்த ஆண்டு திகையலையோ
இன்று முதற்கலியில் யான்போக வில்லையையா
நம்மாற் கலியில் நனின்றிருக்கக் கூடாது
சும்மா எனைநீங்கள் சோலிபண்ணக் கூடாது
.
விளக்கம்:
==========
தந்தையே, என்னை இதுநாள்வரையும் தவத்துக்காக இருத்தி விட்டு வந்த உம்முடைய மனம் இன்னும் இரங்கவில்லையா? என்னுடைய தவத்தின் உண்மையை நீர் காணவில்லையா? அன்றைக்கு உபதேசித்த ஆறு ஆண்டுகள் இன்னும் முடியவில்லையா? இன்று முதல் அந்த கலி சேதத்திற்கு என்னால் போக முடியாது. என்னால் கலியில் வாழ்ந்து கொண்டிருக்க முடியாது. மீண்டும் மீண்டும் என்னை வேலை வாங்க வேண்டாம்.
.
.
அகிலம்:
========
நன்றிசற்று மில்லா நாற வெறுங்கலியில்
கொண்டென்னை வைத்துக் கோலமது பாராதேயும்
இனியென்னாற் கூடாது இக்கலியி லேயிருக்கப்
பனிதவழு மாயவரே பகர்ந்தமொழி மாறாமல்
ஆறு வருசம் அவனித் தவசிருந்தேன்
தாறுமா றுண்டானால் சாட்சியோ டேகேளும்
என்று வைகுண்டர் இத்தனையுஞ் சொல்லிடவே
நன்றினிய மகனை நல்லமுகத் தோடணைத்து
.
விளக்கம்:
=========
நன்றி சிறிதும் இல்லாத மோசமான கலி வாழும் தேசத்தில் என்னை வைத்துவிட்டு என்னுடைய துன்பக் கோலத்தைத் தாங்கள் பார்த்து கொண்டிருக்க வேண்டாம். இனி என்னால் இக்கலியில் வாழ்ந்து கொண்டிருக்க முடியாது. குளுமையான மாயவரே தாங்கள் உபதேசித்த உபதேசம் சிறிதுகூட மாறாமல் ஆறு வருடங்களாக கலி தேசத்தில் தவம் இருந்தேன். நான் ஏதாவது குற்றம் குறைகள் செய்திருந்தால் இந்த சாட்சிகளான முனிவர்களிடம் கேட்பீராக. என்று வைகுண்டர் இவ்வளவையும் சொல்லி முடித்தார். இவற்றை அமைதியாக கேட்ட நாராயணர், நல்ல இனிய மகனாகிய வைகுண்டரைத் தம்முடைய அழகான முகத்தோடு அணைத்து வைகுண்டரிடம் பேசலானார்.
.
.
அகிலம்:
========
கண்ணே மணியே கருவூலமே கனக மணியே ரத்தினமே
விண்ணே வொளியே கற்பகமே வேதச் சுடரே விளக்கொளியே
மண்ணே ழளந்த மலர்பதத்தில் வந்தே குதித்த மலர்க்கொழுந்தே
இண்ணே முதலா யுனக்குநல்ல இயல்பே யாகு தென்மகனே
.
விளக்கம்:
=========
என் கண் போன்றவனே, வைகுண்டமணியே, எல்லாவற்றுக்கும் கருப்பொருளே, உயர்வான கனகமணியே, இரத்தினமே, ஆகாயமயம் ஆனவனே, ஜோதிவடிவே, கற்பகமே, வேதச் சுடரே, விளக்கு ஒளியே, இவ்வுலகை அளந்த திருமால் ஆகிய என் இலட்சுமிதேவின் வயிற்றில் வந்துதித்த மலர்க் கொழுந்தே, இன்று முதலாய் உனக்கு நல்ல நிலைகள் உருவாகும்.
.
.
அகிலம்:
மகனே தவத்துள் ளிருக்கையிலே வருமோ செல்வ மாரார்க்கும்
செகமே ழறியத் தவமுடித்துச் சென்றால் சிவனுக் ககமகிழ்ந்து
தவமே முடித்த நினைவதுபோல் சகல கருமங் கைகூடும்
அகமே யுனக்கு அருளினது அனுப்போல் தவறா தருள்மகனே
.
விளக்கம்:
==========
மகனே, கடினமான தவத்தினுள் இருக்கின்றபொழுது யாருக்காவது உயர்ந்த செல்வமாகிய பேறு வந்து கிடைக்குமா? இந்த உலகம் ஏழும் அறியும்படியாக நீ தவத்தை முடித்துக் கொண்டு சிவனிடம் சென்றால் சிவன் அகம் மகிழ்ந்து தவத்தில் நீ நினைத்த காரியங்கள் எல்லாம் நினைத்தபடி கைக்கூடி வரும்படி செய்வார். என் மனம் அறியும்படியாக நான் கூறுகின்றவை சிறு அணு அளவுகூட தவறாமல் நடந்து வரும்.
.
.
அகிலம்:
=======
செல்ல மகனே சீமானே நீகேளு
நல்ல மகனே நாரணா நீகேளு
தவவேடம் பூண்டு தவமா யிருக்கையிலே
சிவஞான மல்லால் செல்வம்போல் காணாது
தவசு நிறைவேறித் தமோதரர்க் கேற்று
பவிசு மிகவேண்டிப் பலன்பெற்று வாழ்வார்கள்
.
விளக்கம்:
=========
என் மகனே, சீமானே, நாராயணனே, நான் இன்னும் சொல்லுபவற்றைக் கேட்பாயாக. நீ தவவேடம் பூண்டு தவத்தில் இருக்கின்ற சமயத்தில் சிவ ஞானம்தான் மேன்மையாக நிற்குமே அல்லாது, வேறு எந்தவகையான செல்வமும் உனக்குச் சித்தி ஆகாது. உன்னுடைய தவமானது நிறைவேறி வெற்றி பெற்று அது தாமோதரனார் ஏற்கும்படியாக அமையுமானால் எல்லா வகையான செல்வங்களும் பெற்று எல்லாப் பலன்களையும் அனுபவித்து, நிலைத்து வாழ்வாய் மகனே.
.
.
அகிலம்:
========
மகனே நீயிருந்த மகாதவத் தின்பெருமை
செகமீதே சொல்லத் தொலையுமோ என்மகனே
கள்ள யுகத்தைக் காணாம லேயறுத்து
உள்ள நடுஞாயம் உகத்தீர்ப்புச் செய்துமிக
ஆகாத்த தெல்லாம் அழித்து நரகிலிட்டு
வாகாய்க் குழிமூடி வாசல் தனைப்பூட்டி
மாறிய தில்லாமல் வங்கிஷமுந் தானொழித்து
வேறுவகை செய்து மேலுமொரு நல்லுகமாய்த்
தரும யுகமாய்த் தாரணிக்க மாயருளிப்
.
விளக்கம்:
=========
நீ இருந்த பெரிய தவத்தின் பெருமையைப் பற்றி எடுத்துச் சொல்ல முயன்றால் இவ்வுலகில் அதைச் சொல்லித் தீர்ப்பது முடியுமா? இந்தக் கள்ளத் தன்மையுள்ள கலியுகத்தைக் காண முடியாவண்ணம் வெற்றியோடு அழிக்கவும், கலியுகத்தின் முடிவில் நடுத்தீர்ப்பு செய்யவும் தகுதி இல்லாதவரை எல்லாம் அழித்து நரகில் போட்டு நரகக் குழியை மூடி, அதன் வாசலைப் பூட்டவும், அது மட்டுமல்லாமல் துன்பங்களை எல்லாம் ஒழித்து வேறு வழிமுறைகள் செய்து, நல்ல தருமயுகத்தை உருவாக்கவும்,
.
.
அகிலம்:
========
பொறுமை மனுவாய்ப் பெரியசான் றோர்வழியை
அன்பாக வைத்து ஆள முடிசூடிப்
பண்பாக வேண்டும் பவிசு மிகவாகச்
சாகா வுலகத் தர்ம பதியாள
வாகாய்த் தவசு வகுத்து முடிக்கையிலே
ஆங்கார மாமோ ஆணுவங்க ளங்காமோ
ஓங்கார மாமோ உற்ற தவசதுக்கு
தவசு நிறைவேறி தான்வந்த தாலேயினி
பவிசு வுனக்குப் பகருகிறேன் கேளெனவே
.
விளக்கம்:
==========
பொறுமைக் குலம் ஆகிய உயர்வான சான்றோர் குலத்தை ஆள முடி சூட்டவும் அவர்களுக்குச் சிறந்த பண்புகளையும் செல்வச் செழிப்புகளையும் கொடுக்கவும், சாகாத நிலையில் உள்ளோர் வாழும் உலகமாகிய தருமபதி ஆளவும், நீ பக்குவமாகத் தவத்தை முடித்து உள்ளாய். இச்சமயம் உனக்கு இந்த அகங்காரம் என்னும் ஆணவம் உருவாகலாமா? இந்தத் தவம் முடித்த பிறகு ஓங்காரமாகச் சத்தம் இடலாமா? எனவே, அமைதியாய் இரு, நீ தவம் நிறைவேறி வந்த காரணத்தால், இனி உனக்கு வரப் போகின்ற செல்வச் செழிப்பான வாழ்வைப் பற்றிக் கூறுகிறேன் கேட்பாயாக.
.
.
தொடரும்... அய்யா உண்டு.
7 likes
20 shares