*புறநானூறு 206* அதியமான் நெடுமான் அஞ்சி ஔவையார் அதியமானிடம் பரிசில் வேண்டி அவனது அரண்மனைக்குச் சென்றார். வாயில்-காவலன் தடுத்தான். எனக்கு உள்ளே நுழையும் உரிமை உண்டு. தடுக்காதே எனக் கூறும் பாடல் இது. [அ] வாயிலோயே, வாயிலோயே, பரிசிலர் நாங்கள். வள்ளல்களின் காதில் தெளிவான மொழியை விதைத்து எண்ணிவந்த செயலை முடித்துக்கொள்ளும் உறுதி கொண்ட நெஞ்சம் உடையவர்கள். சீர்வரிசை பெறுவதற்காக வருந்தும் வாழ்க்கை இது. அரசன் நெடுமான் அஞ்சி பரிசிலர்க்கு அடைக்காத வாயிலை உடையவன். (நீ தடுக்காதே) [ஆ) அதியமான் நெடுமான் அஞ்சி காக்கும்-மன்னர்களின் (கடுமான், கடி – உரிச்சொல், பொருள் காப்பு) வழித்தோன்றல். இப்படிப்பட்ட தன்னை அவன் அறியவில்லையா? அல்லது என் புலமையை அறியவில்லையா? (விளங்கவில்லை). [இ] அறிவும் புகழும் உடையவர்கள் மாண்டுபோயினர் என்று இந்த உலகம் பாழ்பட்டுப் போகவில்லை. (அறிவும் புகழும் கொண்ட வேறுபலர் இருக்கிறார்கள்). அதனால் என் யாழைக் காப்பாற்றிக்கொள்கிறேன். அதனை என் பையில் (கலம் என்னும் யாழ் வைக்கும் பை கலப்பை) வைத்துக்கொள்கிறேன். [ஈ] விறகு வெட்டிப் பிழைக்கும் கை வலிமை கொண்ட சிறுவர்கள் கையில் கோடாரியும் இருக்கிறது. காடும் இருக்கிறது. அதைப்போல பரிசிலராகிய நாங்களும் எந்தப் பக்கம் சென்றாலும் சோறு பெறுவோம். பாடல் [அகரப் பகுப்பு செருகல்] [அ] வாயிலோயே! வாயிலோயே! வள்ளியோர் செவிமுதல் வயங்குமொழி வித்தி, தாம் உள்ளியது முடிக்கும் உரனுடை உள்ளத்து வரிசைக்கு வருந்தும் இப் பரிசில் வாழ்க்கைப் பரிசிலர்க்கு அடையா வாயிலோயே! [ஆ] கடுமான் தோன்றல் நெடுமான் அஞ்சி தன் அறியலன்கொல்? என் அறியலன்கொல்? [இ] அறிவும் புகழும் உடையோர் மாய்ந்தென, வறுந் தலை உலகமும் அன்றே; அதனால், காவினெம் கலனே; சுருக்கினெம் கலப்பை; [ஈ] மரம் கொல் தச்சன் கை வல் சிறாஅர் மழுவுடைக் காட்டகத்து அற்றே எத் திசைச் செலினும், அத் திசைச் சோறே. திணை பாடாண் திணை; துறை பரிசில் துறை. அதியமான் நெடுமான் அஞ்சி பரிசில் நீட்டித்தானை ஒளவையார் பாடியது. #உண்மையை அறிவோம்
12 shares

More like this