D Muthu Prakash, Kanchipuram 💐
700 views • 7 days ago
#அய்யா வைகுண்டர் {1008} #அய்யா வைகுண்டர் #Ayya Vaikundar #💚Ayya 💗 Vaikundar💚 #🚩அய்யா வைகுண்டர் 🚩 கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை 14ஆம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 09.08.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
அகிலம்:
------------
வரம்வேண்டி நம்மிடத்தில் வைத்தந்தப் பேய்களையும்
குரமாய் மலையில் கொண்டு எரியவைத்தேன்
ஆயிரத் தெட்டு ஆன திருப்பதியில்
வாயிதமாய் வாழும் வாய்த்ததே வர்தமக்கு
ஞாயமில்லை பூசை நல்லாடு தீபவெலி
.
விளக்கம்:
=========
வாழுவதற்காக என்னிடம் வரம் வேண்டி வந்த பேய்களை எல்லாம் சேர்த்து மலையில் அனுப்பி ஓலம் இடும்படி எரிந்து அழியச் செய்தேன். ஆயிரத்து எட்டாம் ஆண்டு திருச்செந்தூர்க் கடலில் விஞ்சை பெற்று வைகுண்டராகி தாமரைப்பதியில் இதமான வாழ்வைப் பெற்ற வைகுண்ட சுவாமிக்கு இனிமேல் பூசை, நல்ல ஆடு, கிடா, போன்ற உயிர்பலி தீபாராதனை போன்றவை தேவை இல்லை.
.
.
அகிலம் :
=========
தேயமதி லுங்களுக்குத் தேரோட்டமு முதலாய்
ஏற்கப் படாதினிமேல் இராச்சியத்தி லுள்ளவர்தாம்
மார்க்க வைகுண்ட வல்லாத்தான் வந்ததினால்
பூசை படைப்புப் பெலிதீப மேராமல்
வாச முடனே மறைந்திருங்கோ நீங்களெனச்
சட்டமிட்டு வைத்தேன் தரணிபுற் பூண்டுவரை
.
விளக்கம்:
==========
எனவே, இத்தேசத்தில் உள்ள தெய்வங்களும், தேரோட்டம் முதல் பூசைகளும், பலிகளும் ஏற்கக்கூடாது. இனிமேல் இவ்வுலகில் உள்ளவர்களும் சான்றோருக்கு என ஒரு நல்ல வழியைப் ஏற்படுத்த வலிமை பொருந்திய வைகுண்டர் பிறந்து வந்ததனால், பூசை, படைப்புகள், பலி, தீபாராதனை போன்ற காரியங்களை ஏற்றுக் கொள்ளாமல் புகழோடு மறைந்திருந்து வாழ்ந்து வாருங்கள் என்று சிறப்பான சட்டங்களைக் கொடுத்து வந்தேன்.
.
.
அகிலம்:
========
மட்டை மருந்திலையும் மலைகடலும் வாசுகியும்
வையகத்தை யாளும் மாநீச னுமறிய
மெய்யாய் விரித்து விளம்பிமிகச் சட்டமிட்டேன்
இத்தனை சட்டம் இட்டவர்த்த மானமெல்லாம்
மத்திய மாய்வைத்த மாமுனியோ டேகேளும்
.
விளக்கம்:
==========
இவ்வுலகில் இச்சட்டங்களைப் புல் பூண்டுவரையும் மட்டை மருந்து இலைகளும் மலை கடல், வாசுகிப் பாம்பு போன்றவையும் கலியுகத்தை ஆளுகின்ற பெரிய நீசனும் அறியும்படி உண்மையாகத் தெளிவுடன் சொல்லி விரைவாகச் சட்டங்கள் செய்து வைத்தேன். இவ்வாறாக நான் இட்ட சட்டங்களைப் பற்றி நம் இருவருக்கும் நடு நாயகச் சாட்சியாய் நிற்கும் முனிகள் மூலம் கேட்டுப் பார்ப்பீராக.
.
.
அகிலம்:
========
அல்லாமற் பூமிதனில் அவர்களறி யாதபடி
வல்லாமை யாய்க்காசி வழங்குமிலை பாக்குவரை
நானாசை கொண்டு நருட்களிடம் வாங்கினதை
வானாசை யுள்ள மாமுனியோ டேகேளும்
.
விளக்கம்:
==========
அதுமட்டுமல்லாது இவ்வுலகில் மக்கள் எல்லாரும் அறியாதபடி என்னுடைய சிறந்த திறமைக்காக வழங்கிய காசு, பணம் போன்றவற்றையும், வெற்றிலை, பாக்கு போன்றவற்றையும் கூட நான் ஆசைகொண்டு அவர்களிடம் வாங்கியது உண்டா? என்பதைப் பற்றியும் வேத லோகத்தின் மேல் ஆசையுள்ள அந்த மாமுனிவர்களிடம் கேட்பீராக.
.
.
அகிலம்:
========
சதுராய் நருளறிய நல்லவெகு அற்புதங்கள்
இதுக்காய் கிணற்றில் ஏகாச்சிலை யுங்காட்டி
இருந்தேன் தவசாய் என்னுடைய நாயகமே
பொருந்தாத காரியங்கள் புத்திக் குளறிமிகச்
செய்துமிகக் காணாது செய்ய மணிவிளக்கே
நிசமிதுவோ என்று நீரவரோ டேகேளும்
.
விளக்கம்:
=========
நான்கு திசைகளிலுள்ள மக்கள் அறியும்படியாகச் சிறப்பான பல அற்புதங்களை முத்திரிக் கிணற்றினுள் ஒப்பற்ற சிலை உருவாக எடுத்துக் காட்டி நான் அங்கே தவத்தில் இருந்து வந்தேன். என்னுடைய தலைவனே, நான் ஏதாவது தாங்கள் ஏற்றுக் கொள்ளாத செயல்களை அறிவு மயங்கிச் செய்ததாக நீர் நினைப்பீர் என்றால் அது உண்மை தானா? என்று இந்த முனிவர்களிடம் நீர் கேட்டுப் பார்ப்பீராக.
.
.
அகிலம்:
========
இத்தனையுந் தர்மமதாய் யான்செய் திருக்கையிலே
புத்திகெட்ட நீசன் பொல்லாதான் வந்தெனையும்
கட்டி யடித்துக் கைவெடி யாலிடித்து
இட்டிறுக்கி வைத்தான் இரும்பு விலங்கதிலே
நஞ்சிட்டுத் தந்தான் நாடுஞ்சா ராயமதில்
கொஞ்சுங் கடுவாய்க் கூட்டி லடைக்கவென்றான்
.
விளக்கம்:
==========
நான் செய்தவை எல்லாம் மக்களுக்குத் தருமமாகச் செய்து கொண்டிருந்தேன். அப்பொழுது அறிவுகெட்ட நீசன், பொல்லாத கலியரசன் அங்கே வந்து என்னைக் கட்டி இழுத்து அடித்துத் துப்பாக்கியினால் இடித்து, இறுக்கி கட்டி வைத்தான். இரும்பு விலங்கினில் என்னை இணைத்துச் சாராயத்தில் நஞ்சினை இட்டுத் தந்தான். என்னைச் சிறிதுநேரம் கடுவாய்க் கூட்டினுள் அடைக்க செய்தான்.
.
.
அகிலம்:
=========
நீச னவன்சாதி நிசமாகத் தான்கூடி
ஏசி யெனைப்பழித்த இடறுசொல்லக் கூடாது
ஐயோ அவர்கள் அடித்த அடிகளெல்லாம்
வையம் பொறுக்காதே மாநீசன் செய்தவினை
மாந்திர தந்திரத்தால் வஞ்சனைகள் செய்தெனையும்
கோந்திர மாகக் கொல்லவகை செய்தார்கள்
பாவிகள் செய்த பலவினைகள் சொல்லவென்றால்
தாவு முலகில் தாலமதி லோலையில்லை
.
விளக்கம்:
==========
உண்மையாகவே நீசனாகிய அவனுடைய சாதியினர் எல்லாரும்கூடி என்னைப் பழித்து ஏசி செய்த துன்பங்கள் எல்லாம் சொல்லித் தீரா. அய்யோ, அவன் என்னை அடித்த அடிகளையும் இன்னும் அவன் செய்த துன்பமான செயல்களையும், இந்த உலக மக்கள் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள்.
.
அந்த நீசர்கள் தம்முடைய மந்திரத்தாலும், தந்திரத்தாலும் வஞ்சனைகள் செய்து என்னை அவற்றுக்கு நடுவே அகப்படச் செய்து கொல்வதற்கு வழி முறைகள் செய்தார்கள். அந்த பாவிகள் செய்த செயல்களை எல்லாம் நான் சொல்லி எழுத வேண்டும் என்றால், நாம் நடமாடி கொண்டிருக்கின்ற இவ்வுலகில் உள்ள பனை மரங்களின் ஓலைகள் அத்தனையும் போதா.
.
.
தொடரும்... அய்யா உண்டு.
12 likes
15 shares