D Muthu Prakash, Kanchipuram 💐
1K views 1 months ago
#Ayya Vaikundar #அய்யா வைகுண்டர் #💚Ayya 💗 Vaikundar💚 #🚩அய்யா வைகுண்டர் 🚩 #அய்யா வைகுண்டர் {1008} கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை 12ஆம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 26.06.2026. அய்யா துணை தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர். . அகிலம்: ======== மந்திரவாதிகளின் விசையடக்குதல் ===================================== மந்திர தந்திர மாமுனிவன் சாத்திரங்கள் விந்தைசெய்யு மாய்மால விசையடக்க வேணுமென்று நினைத்த வுடனே நெடுமலையில் தான்வாழும் அனர்த்த மிடும்மிருகம் ஆனை புலிகடுவாய் கடுகிக் கரடி கனத்தமந் திக்குரங்கும் முடுகி யெழுந்து மூச்சுவிட் டேவிரைவாய்ச் சீறி யெழுந்து சென்றுமலை யில்வாழும் கூறித் தொழில்கடிய குன்றரசர் தங்களையும் விரட்டத் தொடுத்ததுகாண் மிருக மிகக்கூடி . விளக்கம்: ========= மந்திரம் தந்திரம் அடங்கிய மாமுனிவர்களின் சாத்திரங்கள் அற்புதங்கள் செய்யும் மாயா ஜாலங்கள் ஆகியவற்றின் சக்திகளை அழிக்க வேண்டும் என்று வைகுண்டர் நினைத்த மாத்திரத்திலேயே உயர்ந்த மலைகளில் வாழும் பொல்லாத மிருகங்கள், ஆனைகள், புலிகள், கடுவாய்கள், கரடிகள், பெரிய மந்திக் குரங்குகள் ஆகிய மிருகங்கள் சீறி எழுந்து நீண்ட மூச்சு விட்டபடி மிகவும் விரைவாகச் சென்று மலையில் மந்திரம் கூறித் தொழில் புரிந்து வாழும் மலையரசர்களை அங்கிருந்து விரட்டுவதற்காகக் சேர்ந்து கூடின. . . அகிலம்: ======== அதட்டுப் பொறுக்காமல் அந்த மலையரசர் ஓமந் தனைவளர்த்து ஒருகோடி பூச்சொரிந்து ஆமா அரியெனவே அட்சரங்கள் தானெழுதி புவனைவலிச் சக்கரங்கள் பீட மதில்நிறுத்தி நமனை யழைக்கும் நல்லவலுச் சக்கரமும் சத்தி நிறுத்தி சதாகோடிப் பீடமிட்டு . விளக்கம்: ========= இந்த மிருகங்களின் பயமுறுத்தலைப் பொறுக்க முடியாமல் மலையரசர்கள் பெரிய ஓமம் ஒன்று வளர்த்து, ஒரு கோடிப் பூக்களை அதில் சொரிந்து ஆ மா அரி என்னும் அச்சரங்களை எழுதி இவ்வுலகில் வலிமையான சக்கரங்களை ஓமப் பீடத்தில் வரைந்து எமனை அழைக்கின்ற நல்ல வலிமையான சக்கரமும், சக்தியை வரவழைக்கும் சக்கரமும் அங்கே வரைந்து பல நூறு கோடி பீடங்கள் இட்டனர். . . அகிலம்: ======== சுற்றிவர வோமம் சுழலக் கனலெழுப்பி வேண்டும் படைப்பு விதம்விதமாய்த் தான்படைத்துக் கூண்டு மலையரசன் குறளிகளைத் தான்வருத்தச் சேவித்தான் மூன்று நாளாக மந்திரங்கள் கோபித்துப் பார்த்தான் குறளிகள் தன்பேரில் சற்றும் பலிக்காமல் சடைத்துமந்தி ரத்தோனும் கற்றத் தொழிலும் கருவுங் கலைகலைந்து என்ன விதமோ என்று மிகக்குளறி மன்னன் மலையரசன் மார்கள் மிகநடுங்கி எங்கே யினிப்போவோம் என்று மனம்பதறி சங்கை யழிந்து சருவில் மிகஇறங்கி தட்டழிந்து வாடி தவித்துநின் றேதுரைப்பார் . விளக்கம்: ========= ஓம குண்டம் சுழலும் வண்ணம் அதனுள் அக்கினியை உண்டாக்கி உணவு வகைகள் பூவகைகள், பழ வகைகள் போன்ற தேவையான படையல்களைப் படைத்தனர். இவ்வாறாக மலைகளுக்கெல்லாம் அரசராக இருக்கும் மலையரசர்கள் குறளிப் பேய்களை அங்கே வரவழைக்க மூன்று நாள்களாக மந்திரங்கள் உச்சரித்தனர். ஒரு பலனும் இல்லாமையால் குறளிகளைப் பயமுறுத்த கோபங்கொண்டு பேசினர். அப்படியும் பலன் இல்லை. மனம் சடைந்து மந்திரவாதிகள் தாம் கற்ற தொழிலும் அங்குள்ள கருமருந்துகளும் சகல மந்திர மாய ஜால கலைகளும் பயனற்றுப் போன காரணம் என்ன? என்று மனம் கலங்கினர். இப்படியே எல்லா மலையரசர்களும் மனம் நடுங்கி நாம் இனி எங்கே போவோம்? என்று கூறிக் கொண்டு கூட்டம் கலைந்து மலைச் சரிவில் இறங்கிக் கீழே வந்து மன உறுகி அழிந்து முகம் வாடித் தவித்துப் புலம்பினார்கள். . . அகிலம்: ======== குறத்தி வருதல் ================ பட்டபா டேதெனவே பண்பாகக் கேட்பதற்குக் குறத்தியொன்று காண்கிலமே குறிகேட்டுப் பார்ப்பதற்கு உரைத்து அவரிருக்க உடையவ னாரருளால் குறத்தி யொருத்தி குறப்பெட்டி யுமிடுக்கி விறைத்துரைத்து வந்தாள் விசாரமிடு வோர்கள்முன்னே கண்டார் குறத்தியையும் கலிதீர்ந்தோ மென்றுசொல்லி வண்டாடுஞ் சோலை வனத்தில்வா என்றழைத்து அருகி லிருத்தி அவளைமிக ஆதரித்துச் சரிவிலுள்ள மாங்கனிதேன் தகையாற வேகொடுத்து பசிதீர்ந்து குறத்தி பகர்வா ளொருவசனம் . விளக்கம்: ========= மலையரசர்கள் இந்தத் துன்பத்திற்கெல்லாம் காரணம் என்ன? என்று தெளிவாகத் தெரிந்து கொள்ள குறி சாத்திரம் கேட்க குறத்தி ஒருவரையும் காண முடியவில்லையே என்று கூறி மந்திரவாதிகள் சோர்ந்து அமர்ந்தனர். அச்சமயம் வைகுண்டர் அருளினால் ஒரு குறத்தி தனது குறி கூறும் பொருள்கள் அடங்கிய பெட்டியைக் கைகளில் வைத்துக் கொண்டு குறி பார்க்கலையோ குறி என்று சத்தமாகக் கூறி மனம் வருத்தமுற்ற மந்திரவாதிகள் பக்கத்தில் வந்தாள். மந்திரவாதிகளான மலையரசர்கள் அவளைக் கண்டு நம்முடைய துன்பம் தீர்ந்தது என்று சொல்லிக் கொண்டு அவளை நோக்கி, குறத்தியே, வண்டுகள் சுற்றிக் கொண்டிருக்கும் எங்கள் சோலைக்கு நீ குறி சொல்ல வர வேண்டும் என்று அழைத்துச் சென்று, அருகில் இருத்தி உபசரித்து, மலைசரிவில் உள்ள மாங்கனி, தேன், தினைமாவு போன்றவற்றை அவளுக்குப் பசி தீரும் அளவு கொடுத்தனர். இவ்வாறு தனது பசி தீர்ந்ததும் குறத்தி அவர்களை நோக்கி சொல்லளானால். . . அகிலம்: ======== விசியா யெனதுடைய பசிவிசா ரந்தீர்த்தீர் உங்க ளுடதுயரம் ஓட வழிகேளீர் தங்களுக்கு மெங்களுக்கும் சகலவுயி ரானதுக்கும் நாயகமாய் வந்து நாட்டில் மிகஇருக்கார் வாச மணக்குதுகாண் வையகங்க ளீரேழும் பேரு வைகுண்டர் பெரிய திறவான்காண் . விளக்கம்: ========= மிகவும் விரைவாக என்னுடைய பசித் துன்பம் தீர்த்து விட்டீர். இனி உங்கள் துன்பங்களை விரட்ட வழிகளைக் கூறுகிறேன் கவனமாகக் கேளுங்கள். உங்களுக்கும் எங்களுக்கும் சகல உயிர்களுக்கும் தலைவராக வைகுண்டர் என்னும் பெயரோடு ஒருவர் பிறந்து வந்து தாமரைப்பதியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவருடைய புகழ் பதினான்கு உலகங்களும் பரந்துள்ளது என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். . . அகிலம்: ======== நேரா யிருப்பவர்க்கு நிச்சமாய்க் கைகொடுப்பார் அவரைநீங் கள்கண்டு ஆனதுய ரமுரைத்தால் தவிருந் துயரமெல்லாம் சுவாமியவர் தன்னருளால் என்று குறத்தி ஈதுரைக்க நாகரசர் நன்று குறத்தியுடன் நம்துயரஞ் சொன்னோமோ சொல்லா திருந்திடினும் சொன்னாளே நம்துயரம் எல்லாத் துயரமதும் இதினாலே தீருமென்று சந்தோசங் கொண்டு சற்குறத்தி யையனுப்பி வந்தார்கள் தெச்சணத்தில் வைகுண்டர் வாழ்பதியில் கண்டுவை குண்டரையும் கரங்குவித் தேபணிந்து பண்டுபட்ட பாட்டைப் பகர்ந்தா ரவருடனே கேட்டு வைகுண்டர் கிருபையுட னேதுரைப்பார் . விளக்கம்: ========= மலையரசர்களே அவரை நீங்கள் கண்டு உங்களுக்குரிய துயரங்களை அவரிடம் கூறினால் உங்கள் துன்பங்கள் நீக்கப்பட்டு நிம்மதி அடைவீர் என்று குறத்தி குறி கூறினாள். உடனே, நாகங்களுக்கு ராஜாவான மலையரசர்கள் குறத்தியைப் பாராட்டி மிகவும் நல்லது. குறத்தியிடம் நமது துன்பத்தைச் சொல்லவில்லையே. நமது துயரத்தைக் குறத்தியிடம் சொல்லாதிருந்தும் அவள் நமது துயரத்தைக் கூறி எல்லாம் வைகுண்டரால் தீரும் என்றும் கூறி விட்டாளே என்று மகிழ்ந்து அளிவுள்ள அக்குறத்தியை அனுப்பி விட்டுத் தெச்சாணாபூமிக்கு வந்து அங்கு இருக்கும் தாமரைப்பதியை அடைந்தனர். அங்கு வைகுண்டரைப் பார்த்து பணிந்து வணங்கி, தாம் ஏற்கெனவே மிருகத்தால் பட்ட துன்பங்களை எடுத்துரைத்தனர். . . அகிலம்: ======== நாட்டுக் குடைய நாராயணர் பாலன் பிறந்து வைகுண்டம் பெரிய யுகமாளச் சிறந்து தவசு செய்யு முறைமையினால் துக்கக் களையறுத்துச் சுத்தமரை யாளாக்கிப் பக்கக் களையறுத்துப் பகைஞரொன் றில்லாமல் ஒருசொல்லுக் குள்ளே யுகமழித் துகமெழுப்பி இருசொல்லுக் குள்ளே இராச்சியத்தை யாளுதற்குப் பிறந்துகொண் டிருக்கும் பெருமைக் கடையாளம் இறந்ததுகாண் பேய்கள் இப்போது தந்திரமும் போக நினைத்தேன் பெரியதெய்வ முந்தனைத்தான் வேகந் தனிலே விடுத்ததுகா ணென்றன்முன்னே நல்லது கைவாய்த்து நமக்குவிதி தானாச்சு பொல்லாத தெல்லாம் போக விதியாச்சு உந்தன் துயரம் ஒக்கஇப்போ தீரவென்றால் எந்தன் மொழிகேட்டு இடைவீரோ நீங்களெல்லாம் . விளக்கம்: ========= இதைக் கேட்ட வைகுண்டர் மிகுந்த கருணையுடன் அவர்களை நோக்கி, நாட்டுக்குடைய நாராயணரின் பாலன் கடலில் பிறந்து வைகுண்டர் என்னும் பெயரோடு தருமயுகம் அளுவதற்காகச் சிறந்த திறமையினால் தவசு செய்ததன் மூலமாகத் தீயோர்களை அழித்து, அவர்கள் குலத்தையும் அடக்கி பகைவர்கள் இல்லாதவாறு களை அறுத்து கலியுகத்தை அழித்து ஒரு சொல்லுக்குக் கீழ்த் தருமயுகத்தை உண்டாக்கி ஆட்சி புரிவார். இரண்டு சொல்லாகிய சந்தேக வார்த்தையும் எதிர் வார்த்தையும் கூறும் மக்கள் வாழ்ந்து வரும் இச்சயமத்தில் தருமயுக இராச்சியம் உருவாகி அதை ஆளப் போவதற்கு வைகுண்டம் பிறந்துள்ள பெருமைக்கு அடையாளம் என்ன என்றால் பேய்கள் இறந்து ஒழிந்தன என்பதை அறிந்து கொள்ளுங்கள். இனிமேல் மந்திரம் தந்திரம் போன்ற ஆகாதவற்றை அழிக்க நினைத்து உள்ளேன். மலையரசர்களே, எனக்கும் பெரிய கடவுள் நாராயணர் உங்களை மிகவும் விரைவாக என் முன்னால் அனுப்பியுள்ளதைக் காண்பீர்களாக. நீங்கள் என்னிடம் அகப்பட்டுக் கொண்டது எனக்கு நல்ல நேரம் ஆகும். பொல்லாதவை எல்லாம் அழிகின்ற சமயமாகி விட்டது. உங்களுடைய துன்பம் தீர வேண்டும் என்றால் எமது சொல்லை மீறாமல் எனக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும். அதற்கு நீங்கள் சம்மதித்து நடப்பீர்களா? என்று வினவினார் . . தொடரும்... அய்யா உண்டு.
32 likes
1 comment 24 shares

More like this