D Muthu Prakash, Kanchipuram 💐
950 views • 26 days ago
கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை 12ஆம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 08.07.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
அகிலம்:
========
இந்தநே ரந்தனிலே ஏகியந்தச் சாணானை
குந்தமது கொண்டிடித்துக் குண்டிக் கயிறிறுக்கி
இங்கேகொடு வாறேன் என்று கௌடனுமே
துங்க விருதுபெற்றுச் சூழப் படைவகுத்து
ஆயுத மம்பு அணியீட்டி தான்பிடித்து
வாயுதக் கணைகள் வகைவகை யாயெடுத்துப்
பரியை விதானமிட்டுப் பாய்ந்துக் கௌடனுமே
கரியைக்சூ ழநிறுத்தி கனபடைகள் பின்னிறுத்தி
.
விளக்கம்:
=========
இப்பொழுதே சென்று அந்தச் சாணானைச் சூலாயுத்தை வைத்துக் குண்டியில் இடித்து கயிறு கொண்டு சுற்றிக் கட்டி, உங்கள் முன்னால் கொண்டு வருகிறேன் என்று கௌடன் கலியரசனிடம் சபதம் இட்டு அனுமதி பெற்று அணி வகுக்கப்பட்ட படைகள் சூழ வந்து கொண்டிருந்தான். அப்படைகள் ஆயுதங்களும், அம்புகளும், கூர்மையான ஈட்டிகளும், கணை ஆயுதங்களும் வகை வகையாகத் தாங்கி வந்தன. காலாட்படைகளைச் சுற்றிப் பாதுகாப்பாக் குதிரைப் படைகளைச் செல்ல வைத்து, தன்னைச் சுற்றி யானைப் படைகளை நிறுத்தி அதன் பின்னால் மிக அதிக அளவாக அமைக்கப்பட்ட இதரவகைப் படைகளை நிறுத்தி வந்து கொண்டிருந்தான்.
.
.
அகிலம்:
========
நீசன் விடைவேண்டி நீணில முமறிய
பாசக் கயிறுடனே பாவியந் தக்கௌடன்
வாற விதமதையும் வைந்தப் பொருளறிந்து
காரணிக்க மொன்று கருத்தில் மிகநினைத்து
.
விளக்கம்:
=========
கலி நீச அரசனுடைய கட்டளைக்கு தேவையானவற்றைச் செய்து முடிக்க வேண்டி அத்தேசம் முழுவதும் அறியும்படியாகப் பாசக் கயிற்றைக் கையில் பிடித்து அந்தப் பாவியாகிய கௌடன் வருகின்ற விதத்தையும் பின்னால் நடக்கப் போகின்ற ஒரு சரித்திரத்தையும் தமது ஞானக்கண்ணால் வைகுண்டசுவாமி கண்டு மிகழ்ந்தார்.
.
.
அகிலம்:
========
இப்போ பதறி எழுந்திருந்து வோடவென்று
அப்போது மாயன் அறிந்தேகும் வேளையிலே
நன்மையாய்ச் சொல்லி நாடுவது மெச்சாதி
தின்மையாய்ச் சொல்லிச் சிரிப்பதுவு மெச்சாதி
என்றுநாம் பார்ப்போம் என்று மனதிலுற்றுப்
.
விளக்கம்:
=========
இப்பொழுது நாம் பதறி எழுந்து ஓட வேண்டும் என்று தமது உள்ளத்தில் நினைத்துக் கொண்டு அந்த நாடகத்தைத் தொடங்க நினைத்தார். வைகுண்டர் தம் ஞானத்தால் அறிந்தவுடன் நம்மை உண்மையாக விரும்புகின்ற சாதி எது? என்றும் மிகவும் திடமாகப் பல நல்ல வார்த்தைகளை புகழ்ந்து பேசி விட்டு வெளியே சென்று கேலி பேசிச் சிரித்து மகிழும் சாதி எது என்றும் நாம் பரிசோதிக்க வேண்டும் என்று மனதில் எண்ணினார்.
.
.
அகிலம்:
========
பண்டுதாம் பிறந்த பாற்கட லைநோக்கி
ஓடத் துணிந்தார் ஒருவேச மும்போட்டு
ஆடத் துணிந்தார் ஆகாசத் தேதேவர்
ஆடையணியாமல் அரைக்கயிறு மில்லாமல்
நாடைக் கெணியாமல் நடந்தார் கடல்நோக்கி
.
விளக்கம்:
=========
பிறகு ஏற்கெனவே தாம் பிறந்த பாற்கடலை நோக்கி, வைகுண்டசுவாமி ஓட நினைத்தார். அதற்காக ஒரு வேடம் இட்டு அந்த நாடகத்தை நிறைவேற்ற எண்ணினார். அதன்படி வைகுண்ட சுவாமி தமது உடம்பில் எந்தவித ஆடையுமின்றி அரைஞாண் கயிறு கூட இல்லாமல் இந்த நாட்டு மக்களைப் பற்றி எந்தவிதச் சிந்தனையுமின்றிப் பாற்கடலை நோக்கி விரைவாக நடந்தார்.
.
.
அகிலம்:
========
நல்ல மனுச்சாதி நாரா யணாவெனவே
செல்ல மக்களெல்லாம் சிவசிவா என்றுசொல்லிக்
கூடத் தொடர்ந்துக் குவித்துப் பதம்போற்றித்
தேடரிய நல்லோர் சேவித்துப் பின்வரவே
ஆகாத நீச அநியாயச் சாதியெல்லாம்
வாயாரப் பேசி வம்புரைத் தேநகைத்தார்
.
விளக்கம்:
=========
நல்ல குலத்தைச் சார்ந்த மனிதர்கள் எல்லாரும் நாராயணா நாராயணா என்றும், சிவசிவா என்றும் சொல்லிக் கொண்டு தொடர்ந்து கைகளைக் குவித்தவண்ணம் அவருடைய பாதங்களைப் போற்றி துதித்துச் சென்றனர். இவ்வாறு தேடியும் கிடைப்பதற்கு அரிய நல்ல குலமக்கள் எல்லாரும் அவரைப் போற்றிப் பின்னால் வந்து கொண்டிருக்க இவ்வுலகுக்கு ஆகாத தீயகுல நீசர்கள் எல்லாரும் வம்புகளை வாயாரப் பேசி நகைத்தனர்.
.
.
அகிலம்:
========
பதறி யிவன்போறான் படைவருகு தென்றுசொல்லிக்
கதறிமிக ஓடுகிறான் கள்ளச்சுவா மியிவனும்
சாமியென்றால் நருட்குத் தோற்றுமிக ஓடுவானோ
நாமிவனை நம்பி நடந்ததுவும் வீணாச்சே
பேயனுட பேச்சைப் பிரமாண மாய்க்கேட்டு
ஞாயமது கெட்டோம் நாமெல்லா மென்றுசொல்லி
நீசக் குலத்தோர் நெடுந்தூரம் வைத்தார்காண்
தேசமதை யாளும் செல்லவைந்தார் சூட்சமதை
அறியாமல் நீசரெல்லாம் அப்போநன்றி யுமறந்து
வெறிகொண்ட பேயனென மேதினியில் பேசினர்காண்
.
விளக்கம்:
=========
அந்த நீசர்கள் அரசனின் படைகள் தன்னை நோக்கி வருகிறதைத் தெரிந்ததும், பதட்டம் அடைந்தும் கதறிக் கொண்டும் இவன் தப்பி ஓடுகின்றான். இவன் கள்ள சுவாமி ஆவான். சுவாமி என்று சொன்னால் அவன் ஒரு மனிதனுக்கு தோற்றுக் கொண்டு புறமுதுகு காட்டி ஓடுவானோ? நாம் இவனை நம்பிக் கொண்டு இவனை நோக்கி நடந்த நடைகள் எல்லாம் வீணாகி விட்டனவே. இந்தப் பேயனின் பேச்சை மெய்யான உபதேசம் எனக் கேட்டு நமது உண்மை வழியினைப் பின்பற்றாதவாறு கெட்டுவிட்டோமே? என்று கூறித் தொடர்ந்து வந்த நீசக்குலத்தோர் வம்பான மொழிகளை உரைத்தனர். இத்தேசத்தை ஆளும் வைகுண்டரின் இரகசியத்தை அறியாத நீசக் குல மக்கள் எல்லாரும் அக்கணத்தில் அவர் செய்த நன்றியை மறந்துவிட்டு இவன் வெறி கொண்ட பேயன் என்று பேசினர்.
.
.
தொடரும்... அய்யா உண்டு. #அய்யா வைகுண்டர் #Ayya Vaikundar #💚Ayya 💗 Vaikundar💚 #🚩அய்யா வைகுண்டர் 🚩 #அய்யா வைகுண்டர் {1008}
16 likes
16 shares