D Muthu Prakash, Kanchipuram 💐
887 views 20 days ago
கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை 12ஆம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 03.07.2026. அய்யா துணை தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர். . அகிலம்: ======== தேர்ந்துநின்று மந்திரியும் தீநீசக் குலமதினால் பொல்லாத சூத்திரப் பிசாசுக் குலமதினால் கல்லாதான் கூடிக் கண்டுதேர்ந் தேதுரைப்பான் வேறொரு வரையும் மேதினியில் நாம்காணோம் வாறோர் ஞாயமாற்றம் வையகத்தில் காணுதிப்போ நமக்கு இறையிறுத்து நாடூழியங் கள்செய்யும் குமுக்கா யினம்பெருத்த கூண்டசா ணாரினத்தில் வைகுண்ட மாக வந்து பிறந்தோமென்று மெய்கொண்ட பூமியெல்லாம் வேறொருவ ராளாமல் நான்தான் முடிசூடி நாடுகெட்டி ஆள்வேனெனத் தான்தா னுரைபகர்ந்து சாதிபல தும்வருத்தி ஒருதலத்தி லூட்டுவித்தான் உற்றநீ ரானதையும் அருகிருக்குஞ் சாணார்க்கு அதிகவிதி தோணுதுகாண் . விளக்கம்: ========= இந்நாட்டில் நம் மானத் தன்மையை அழிக்கும்வண்ணம் எவன் ஒருவன் எதிரியாக இருந்தாலும் அவனை விசாரித்து ஆராய்ந்து எனக்குச் சொல்லுங்கள் என்று நீசன் கட்டளை இட்டான். . இவற்றை எல்லாம் கவனமாகக் கேட்ட மந்திரி தான் தீமை பொருந்திய நீசக் குலத்தில் பிறந்த காரணத்தாலும் பொல்லாத குணமுள்ள சூத்திர பிசாசு குலம் ஆனதாலும் கல்வி அறிவு இல்லாத இதர மந்திரிகள் பலரைக் கூடி ஆய்வு செய்தான். பிறகு மன்னவனை நோக்கி, மன்னவனே, உங்களுக்கு எதிரியாக எவரையும் இப்பூமியில் நான் பார்க்கவில்லை. ஆனால் வேறொரு வழியில் சட்டத்தை மாற்றம் செய்வதற்காக இவ்வுலகில் ஒருவன் துணிந்து இருப்பதாக அறிகிறேன். நமக்கு வரிகளைக் கொடுத்து நமது நாட்டு தொண்டுகளைச் செய்து வரும் ஒரு கூட்டத்தில் ஓர் இனம் பெருத்து உள்ளது. அந்தக் கூட்டமாகிய சாணார் இனத்தில் நான் வைகுண்டமாக வந்து பிறந்தேன் என்றும், இப்பூமியில் உடம்பெடுத்த மக்கள் எல்லாரையும் வேறு எவரும் ஆட்சி புரிய முடியாமல் நானே முடிசூட்டி இந்த நாடு முழுவதும் கட்டிக் காத்து ஆட்சி புரிவேன் என்றும் சொல்லிப் பல ஜாதி மக்களையும் தம்மிடம் வருத்தித் தாமரைப்பதியில் ஓர் இடத்தில் அவர்களுக்கு உணவிட்டுத் தண்ணீரும் அருந்தச் செய்து சாணார் இனத்தவருக்கு நல்ல காலம் வரப் போகிறது என்றும் . . அகிலம்: ======== ஆகாத்தப் பொல்லாரை அழித்துப்போடு வேனென்றும் சாகா வரங்கள் சாணாருக் கீவேனென்றும் சொல்லி யிருக்கிறான் சுவாமிவை குண்டமென்று தொல்லுலகி லிந்தச் சொற்கேட்டு ராசாவே என்றவன் மந்திரிகள் இத்தனையுஞ் சொன்னவுடன் ஒன்றுமுரை யாடாது உட்கார்ந் தயர்ந்துரைப்பான் . விளக்கம்: ========= தனக்கு ஆகாத பொல்லாதவரை நான் அழித்து விடுவேன் என்றும் சாணார் இனத்தவருக்குச் சாகாதவரங்கள் கொடுப்பேன் என்று சொல்லுகிறான். அந்தச் சுவாமியை வைகுண்டம் என்று கூறுகிறார்கள். பழமை பொருந்திய இந்த உலகில் இத்தகைய செய்தி வந்து கொண்டிருக்கிறது என்றான். அவனுடைய பிற மந்திரிகளும் இவ்வளவு செய்திகளையும் ஒத்துக் கொண்டார்கள். உடனே, அரசன் அவர்களோடு எந்த உரையும் கூறாமல் அமர்ந்த இடத்திலேயே அமர்ந்தான். . . அகிலம்: ======== ஏதுகாண் மாயம் இதுஞாயம் வந்ததென்ன வாதுக் கொருவர் வருவாரைக் காணோமென்று நினைத்ததற்கோ இந்த நேருசொல் வந்ததுகாண் மனதயர்ந்து பார்த்து மந்திரியைத் தானோக்கி ஏதுகாண் மந்திரியே எல்லாரிலு மெளியச் சாதியிலே வுள்ளவன்தான் சாற்றுவனோ இந்தமொழி ஏதோவொரு சூட்சம் இருக்குதுகா ணிம்மொழியில் ஆராய்ந்து பார்ப்போம் எல்லோருங் கூடிருந்து பாராய்நீ மந்திரியே பாரிலொரு சாஸ்திரியை என்றந்தப் பேர்கள் எல்லோரும் சம்மதித்து அன்றந்த சாஸ்திரியை அவன்வருத்திக் கேட்கலுற்றான் . விளக்கம்: ========= மனம் சொர்ந்து இது என்ன மாயம்? இத்தகைய நியாய வழி இவனுக்கு உண்டாகியதற்குரிய காரணம் என்ன? தன்னோடு வாதிட வருவதற்கு யாரும் இலர் என்று நினைத்தவற்காக இப்படி ஒரு சொல் கேட்கக் கூடிய நிலை வந்ததோ? என்று எண்ணி மனம் சோர்ந்தான். பிறகு கலியரசன் மந்திரியைப் பார்த்து மந்திரியே எல்லாச் சாதியிலும் கீழ்ச் சாதியிலே பிறந்த ஒருவன் இத்தகைய மொழிகளைச் சொல்ல முடியுமா? இவனுடைய உபதேச மொழியில் ஏதோ ஒர் இரகசியம் அடங்கி இருக்கிறது. எனவே, இதை மிகவும் ஆழமாக ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்று கூறினான். உடனே எல்லாரும் அவன் கூறியதைச் சம்மதித்து அங்கு கூடி அமர்ந்து ஆலோசித்தனர். பிறகு அவர்கள் ஆலோசனைப்படி ஒரு சோதிடனை அழைத்து இது பற்றிக் கேட்கலானான். . . அகிலம்: ======== சாஸ்திரியே யிந்தத் தர்மராட்சி யந்தனிலே வேற்றொருவ ரென்றனக்கு வீறிட்ட துண்டோகாண் எதிரியுண்டோ பாரு என்னுடையச் சோதிரியே கருதி மிகப்பார்த்து கடியச்சோ திரிபுகல்வான் தர்ம முடிவேந்தே சாற்றக்கே ளுமரசே கர்மக் கலிதோசம் கமண்டலங்க ளேழ்வரையும் சுற்றிப் பரந்ததுகாண் தோசத்தால் பூமியெல்லாம் கர்த்தனரி கிருஷ்ணர் கடியகோ பம்வெகுண்டு பூமியிலே வந்து பிறந்திந்தத் தோசமதை சாமிதர்மத் தாலே தோச மதையழித்து நற்பூ மியாக்கி நாடெங்கு மோர்குடைக்குள் சொல்லொன்றுக் குள்ளான சுவாமிமகா விட்டிணுவும் மனுவாய்ப் பிறந்து வைகுண்ட மென்றுசொல்லித் தனுவை யடக்கித் தவசு மிகஇருந்து நல்லோரை யெல்லாம் நாடி மிகஎடுத்து வல்லோராய்ச் சாகாமல் வரங்கள் மிகக்கொடுத்து ஆள வருவார் அவர்வருகும் நாளிதுதான் என்றுமிகச் சோதிரியும் இந்தக் குறியுரைக்க . விளக்கம்: ========= சோதிடனே, நான் ஏற்று இருக்கின்ற இந்தத் தருமம் பொருந்திய ஆட்சியில் எனக்கு எதிராக வேறொருவன் புரட்சி செய்ய முடியுமா? அத்தகைய எதிரி எனக்கு உளனா? என்பது பற்றி நீ ஆய்ந்து சொல்வாயாக என்றான். உடனே, சோதிடன் தனது சோதிடப் புத்தகங்களை ஆய்ந்து அரசனை நோக்கி, தரும முடி வேந்தே நான் கூறுவதை கருணை கூர்ந்து அன்புடன் கேட்பீராக. கலியின் தோசமானது ஏழு மண்டலங்களும் பரந்துவிட்டது. அத்தோசம் பூமி எல்லாம் பரந்து உள்ளது. எனவே, கர்த்தனுக்கும் கர்த்தனான திருமால் மிகுந்த கோபங்கொண்டு பூமியில் வந்து பிறந்து, அக்கலித் தோசத்தைத் தருமத்தின் மூலம் அழித்து சுத்தமான பூமியாக்கி, இந்தநாடு எங்கும் ஒரு குடைக்குள் ஒரு சொல்லுக்குக் கீழ் அரசாட்சி புரிவதற்காக மகாவிஷ்ணு மனிதனைப் போன்று பிறந்து வைகுண்டம் என்னும் பெயர் சூட்டித் தமது உடலை அடக்கி, தவசு இருந்து நல்லவர்கள் எல்லாரையும் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு வரிமை உள்ளவராக சாகாத வரங்களைக் கொடுத்து இவ்வுலகை ஆள வருவார். அவ்வாறு ஆட்சி புரிய வரும் காலம் இது என்பதைத் தாங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று சோதிடன் தெளிவாகச் சொன்னான். . . அகிலம்: ======== நன்று நன்றென்று இராசன் மிகமகிழ்ந்து சொல்லக்கேள் சோதிரியே சொன்னதெல் லாஞ்சரிதான் எல்லையுண்டோ அவர் வந்திருக்கு மினங்களென்ன சொல்லி விரிநீ சுத்தமுள்ளச் சோதிரியே நல்லியல்பு பெற்ற நற்குறியோ னுரைப்பான் . விளக்கம்: ========= இதைக் கேட்ட அரசன் மிகவும் நல்லது என்று கூறி மகிழ்ந்தான். பிறகு சோதிடனை நோக்கி, சோதிடனே நீ சொன்னது எல்லாம் சரிதான். விஷ்ணு வைகுண்டம் எனப் பிறந்து இருக்கின்ற இனம் எது? அதற்கு ஓர் எல்லை இல்லையா? என்று சுத்தமுள்ள சோதிடனாகிய நீ தெளிவுபட விரித்து உரைப்பாயாக என்றான். . . அகிலம்: ======== இன்னவகைச் சாதியிலே இவர்வரு வாரெனவே சொன்னக் குறியே சூதாய்த் தியங்குதுகாண் தருமங்கொண்டு சுவாமி தரணியில் வந்ததினால் பொறுமைக்குல மாயிருக்கும் பெரியவழி யாயிருக்கும் நம்மாலே சொல்லி நவிலக்கூ டாதிதுவே சும்மாஎனை நீங்கள் சோலிபண்ண வேண்டாமே என்றந்தச் சோதிரியும் இணங்கி வணங்கிநின்றான் . விளக்கம்: ========= உடனே சோதிடன் அரசே இந்த வகைச் சாதியில்தான் கடவுள் பிறப்பார் என்று சொல்வதற்குள்ள குறியைச் சொல்ல என் மனம் முயலுவதைச் சொல்லுகிறேன். கடவுள் பிறப்பு இவ்வுலகில் மக்களுக்குத் தருமம் செய்வதாக அமைவதோடு பொறுமைக் குணமுள்ள குலமாகவும் அது நீண்ட உயர்வான பாரம்பரியமுள்ள குலமாகவும் இருக்கும். இதை என்னால் வெளிப்படுத்திக் கூறமுடியவில்லை. அது சம்மந்தமாக என்னிடம் மீண்டும் மீண்டும் கேட்டு வேலை வாங்காமல் இத்துடன் விட்டு விடுங்கள் என்று கூறி அரசன் கேட்டது எல்லாம் சொல்லி வணங்கி நின்றான். . . அகிலம்: ======== மன்று தனையாளும் மன்னன்மறுத் தேபுகல்வான் அப்படித்தா னானால் ஆதிமகா விட்டிணுவும் இப்படியே வந்து இவர்பிறக்க வேணுமென்றால் போற்றி நம்பூரி பிராமணசூத் திரக்குலத்தில் ஏற்றிப் பிறக்க இயல்வில்லா மலிந்தப் பிறர்தீண்டாச் சாணார் குலத்தி லவதரித்துப் பிறக்க வருவாரோ பெரியநா ராயணரும் சும்மாயிருந் தச்சாணான் சுவாமி சமைந்ததெல்லாம் . விளக்கம்: ========= இதைக் கேட்ட இப்பூமியை ஆளும் மன்னன் அதை மறுத்துச் சொல்லலானான். சோதிடனே, அப்படித்தான் ஆதி மகாவிஷ்ணு இப்பூமியில் வந்து பிறக்க வேண்டும் என்றால் போத்தி நம்பூமி, பிராமணர், சூத்திரர் ஆகிய குலங்களில் உயர்வாக பிறக்க வழி இல்லாமல் இந்தப் பிறர் தீண்டாத சாணார்க் குலத்தில் வைகுண்ட சுவாமி எனக் கூறி அங்கே அமர்ந்திருப்பது முழு வெளிவேசமாகத்தான் எனக்குத் தோன்றுகின்றது என்று சொன்னான். . . அகிலம்: ======== பம்மாத்தாய்க் காணுதுகாண் பிராக்கிரம மந்திரியே இப்போ தொருநொடியில் இந்தச்சா ணான்தனையும் மெய்ப்பாகக் கொண்டு விடவேணு மென்றன்முன்னே என்றுமந் திரிமாரை ஏவுந் தறுவாயில் அன்று அருகிருந்த ஆவிடையர் தம்வழியில் ஒருவ னெழுந்து உற்றரசனை நோக்கிக் கருதனம்போல் புத்தி கற்பித்தா னம்மானை விளக்கம்: ========= பிறகு தீடீரென மந்திரியை நோக்கி, மந்திரியே இப்பொழுது இந்த வைகுண்ட சுவாமி என்னும் சாணானை எந்தத் தோல்வியும் வராவண்ணம் ஒரு நொடியில் என் முன்னால் கொண்டு வர வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தான். இவ்வாறு உத்தரவு பிறப்பித்து மந்திரிகள் எல்லாரையும் அனுப்பும் சமயத்தில் அங்கே அருகில் அமர்ந்திருந்த பசுக்களை மேய்க்கின்ற இடையர்க் குலத்தில் தோன்றிய ஒருவன் எழுந்து அவ்வரசனை நோக்கி பொன்னை போன்ற உயர்வான கருத்துக்களை எடுத்துக் கூறலானான். . . தொடரும்... அய்யா உண்டு. #அய்யா வைகுண்டர் {1008} #🚩அய்யா வைகுண்டர் 🚩 #Ayya Vaikundar #💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர்
14 likes
1 comment 19 shares

More like this