A Mohan Raj
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #ஆன்மீக #திருமுறை #பன்னிரு திருமுறை
*"திருமுறை ஓதாய் திருமுறையே தாய்"*
தினம் ஒரு திருமுறை அறிவோம் 🙏
*பன்னிரெண்டாம் திருமுறை*
*பெரியபுராணம் அல்லது திருத்தொண்டர் புராணம் என்பது சேக்கிழார் பெருமான் அவர்களால் பெருங்காப்பிய இலக்கணங்கள் பலவும் கொண்டதாக இயற்றப்பெற்ற சைவ காப்பியமாகும். சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டத் தொகை எனும் நூலை முதல் நூலாகக் கொண்டும். சுந்தரமூர்த்தி சுவாமிகளைக் காப்பிய தலைவராகக் கொண்டும், அவர் போற்றிய சைவ அடியார்களின் வாழ்க்கை வரலாற்றினையும் இந்நூலில் சேக்கிழார் பெருமான் விவரிக்கிறார்.*
*சுந்தரமூர்த்தி நாயனார் அருளிச் செய்த 11 பாடல்களைக் கொண்ட திருத்தொண்டத் தொகை, நம்பியாண்டார் நம்பி எழுதிய 90 பாடல்களைக் கொண்ட திருத்தொண்டர் திருவந்தாதி ஆகியவற்றை மூலநூல்களாகக் கொண்டும், இரண்டாம் குலோத்துங்க சோழனிடம் அமைச்சராக இருந்த சேக்கிழார் பெருமான் பல ஊர்களுக்கும் சென்று திரட்டிய தகவல்களைக் கொண்டும் பெரியபுராணம் எழுதப் பெற்றுள்ளது. இரண்டாம் குலோத்துங்க சோழனின் ஆணையின்படி தில்லைக்குச் சென்றவர், அங்கிருக்கும் இறைவனான நடராஜர் பெருமான் உலகெலாம் என்று அடியெடுத்துக் கொடுக்க சேக்கிழார் உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன் எனப் பெரியபுராணத்தினைத் தொடங்கினார்.*
*பெரியபுராணம் முதல் காண்டம், இரண்டாம் காண்டமென இரு காண்டமாகவும், முதல் காண்டத்தில் ஐந்து சருக்கங்களையும், இரண்டாம் காண்டத்தில் எட்டுச் சருக்கங்களையும் உடையதாக அமைக்கப்பெற்றுள்ளது. சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டத் தொகையில் இடம்பெற்றுள்ள பாடல்களின் முதல் வரியே சருக்கங்களின் பெயர்களாக உள்ளது.*
*காப்பிய தொகுப்பானது கயிலாயத்தில் தொடங்கப்பெற்றுச் சைவ அடியார்களின் வாழ்க்கையை விவரித்து, இறுதியாகக் கயிலாயத்தில் முடிகிறது.*
*முதற் காண்டத்தில்,
திருமலைச் சருக்கம்,
தில்லை வாழ் அந்தணர் சருக்கம்,
இலை மலிந்த சருக்கம்,
மும்மையால் உலகாண்ட சருக்கம்,
திருநின்ற சருக்கம்
என்ற ஐந்து சருக்கங்களும்,*
*இரண்டாம் காண்டத்தில்,
வம்பறா வரிவண்டுச் சருக்கம்,
வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்,
பொய்யடிமையில்லாத புலவர் சருக்கம்,
கறைக்கண்டன் சருக்கம்,
கடல்சூழ்ந்த சருக்கம்,
பத்தராய்ப் பணிவார் சருக்கம்,
மன்னிய சீர்ச் சருக்கம்,
வெள்ளானைச் சருக்கம்
என்னும் 8 சருக்கங்களும் அமைந்துள்ளன.*
*இடைக்கால இலக்கியத்தில் மக்களின் வாழ்க்கை பற்றி வரலாற்றுப் போக்கில் அறிவதற்கு இந்நூல் உதவுகிறது. நான்காயிரத்து இருநூற்று எண்பத்து ஆறு (4286) செய்யுள்களைக் கொண்ட இப்புராணத்தில் ஆளுடையபிள்ளை எனப்படும் திருஞானசம்பந்தரின் வரலாறு மட்டும் 1256 செய்யுட்களால் விரிவாகக் கூறப்பட்டுள்ளதால் "பிள்ளை பாதி; புராணம் பாதி" என்கிற பழமொழி ஏற்பட்டது.*
இறைவனின் திருநாமம் - சிற்சபை: ஆனந்தநடராஜ மூர்த்தி, மூலஸ்தானம்: ஸ்ரீ மூலநாதர்
இறைவி - சிற்சபை: சிவகாமசுந்தரி, மூலஸ்தானம்: உமாபார்வதி
அமைவிடம் : கோயில் (சிதம்பரம், தில்லை) சோழநாடு காவிரி வடகரைத் ஸ்தலம்
பதிகம் பற்றிய சுருக்கமான விளக்கம் :
*பன்னிரெண்டாம் திருமுறையில் இருந்து சேக்கிழார் பெருமான் அருளிய திருத்தொண்டர் புராணம் - முதற் காண்டம் - திருமலைச் சருக்கம் - திருநகரச் சிறப்பு*
*சேக்கிழார் பெருமான் அருளிய பெரியபுராணத்தின் (திருத்தொண்டர் புராணம்) முதற்காண்டத்தில் உள்ள திருமலைச் சருக்கத்தில் இடம்பெறும் நான்காவது பகுதி 'திருநகரச் சிறப்பு' ஆகும். இப்பகுதி சோழ நாட்டின் தலைசிறந்த, தொன்மைமிக்க ஆன்மீக நகரமான திருவாரூரின் மாண்பினையும் அதன் நீதிநெறியையும் மிக அழகாக விவரிக்கிறது.*
பாடல் வரிகள் :
*பன்னிரெண்டாம் திருமுறையில் இருந்து சேக்கிழார் பெருமான் அருளிய திருத்தொண்டர் புராணம் - முதற் காண்டம் - திருமலைச் சருக்கம் - திருநகரச் சிறப்பு*
கலிவிருத்தம்
சொன்ன நாட்டிடைத் தொன்மையில் மிக்கது
மன்னு மாமல ராள்வழி பட்டது
வன்னி யாறுமதி பொதிசெஞ் சடைச்
சென்னி யார்திரு வாரூர்த் திருநகர். 1
வேத ஓசையும் வீணையின் ஓசையும்
சோதி வானவர் தோத்திர ஓசையும்
மாதர் ஆடல் மணிமுழ வோசையும்
கீத ஓசையும் மாய்க் கிளர்உற்றவே. 2
பல்லி யங்கள் பரந்த ஒலியுடன்
செல்வ வீதிச் செழுமணித் தேரொலி
மல்லல் யானை ஒலியுடன் மாவொலி
எல்லை இன்றி எழுந்துள எங்கணும். 3
மாட மாளிகை சூளிகை மண்டபம்
கூட சாலைகள் கோபுரம் தெற்றிகள்
நீடு சாளர நீடரங்கு எங்கெணும்
ஆடல் மாதர் அணிசிலம் பார்ப்பன. 4
அங்குரைக் கென்ன அளவப் பதியிலார்
தங்கள் மாளிகையின் ஒன்று சம்புவின்
பங்கினாள் திருச்சேடி பரவை யாம்
மங்கையார் அவதாரஞ் செய் மாளிகை. 5
படர்ந்த பேரொளிப் பன்மணி வீதிபார்
இடந்த ஏனமும் அன்னமும் தேடுவார்
தொடர்ந்து கொண்டவன் தொண்டர்க்குத் தூதுபோய்
நடந்த செந்தா மரைஅடி நாறுமால். 6
செங்கண் மாதர் தெருவில் தெளித்தசெங்
குங்குமத்தின் குழம்பை அவர் குழல்
பொங்கு கோதையிற் பூந்துகள் வீழ்ந்துடன்
அங்கண் மேவி அளறு புலர்த்துமால். 7
உள்ளமார் உருகாதவர் ஊர் விடை
வள்ளலார் திருவாரூர் மருங் கெலாம்
தெள்ளும் ஓசைத் திருப்பதிகங்கள் பைங்
கிள்ளை பாடுவ கேட்பன பூவைகள். 8
விளக்கம் மிக்க கலன்கள் விரவலால்
துளக்கில் பேரொலியால் துன்னு பண்டங்கள்
வளத் தொடும் பலவாறு மடுத்தலால்
அளக்கர் போன்றன ஆவண வீதிகள். 9
ஆரணங்களே அல்ல மறுகிடை
வாரணங்களும் மாறி முழங்குமால்
சீரணங்கிய தேவர்களே அலால்
தோரணங்களில் தாமமும் சூழுமால். 10
தாழ்ந்த வேணியர் சைவர் தபோதனர்
வாழ்ந்த சிந்தை முனிவர் மறையவர்
வீழ்ந்த இன்பத் துறையுள் விரவுவார்
சூழ்ந்த பல்வேறு இடத்ததத் தொல்நகர். 11
நிலமகட்கு அழகார் திருநீள் நுதல்
திலகம் ஒப்பது செம்பியர் வாழ்பதி
மலர்மகட்கு வண்தா மரைபோல் மலர்ந்(து)
அலகில் சீர்த்திரு வாரூர் விளங்குமால். 12
அன்ன தொல்நகருக்கு அரசு ஆயினான்
துன்னு செங்கதிரோன் வழித் தோன்றினான்
மன்னு சீர்அநபாயன் வழி முதல்
மின்னும் மாமணிப் பூண்மனு வேந்தனே. 13
மண்ணில் வாழ்தரு மன்னுயிர்கட்கு எல்லாம்
கண்ணும் ஆவியும் ஆம்பெருங் காவலான்
விண்ணுளார் மகிழ்வு எய்திட வேள்விகள்
எண்ணிலாதன மாண இயற்றினான். 14
கொற்ற ஆழிகு வலயஞ் சூழ்ந்திடச்
சுற்று மன்னர் திறைகடை சூழ்ந்திடச்
செற்றம் நீக்கிய செம்மையின் மெய்ம்மனுப்
பெற்ற நீதியும் தன்பெயர் ஆக்கினான். 15
பொங்கு மாமறைப் புற்றிடங் கொண்டவர்
எங்கும் ஆகி இருந்தவர் பூசனைக்கு
அங்கண் வேண்டும் நிபந்தம் ஆராய்ந்துளான்
துங்க ஆகமம் சொன்ன முறைமையால். 16
வேறு - அறுசீர் விருத்தம்
அறம்பொருள் இன்பம் ஆன
அறநெறி வழாமற் புல்லி
மறங்கடிந்து அரசர் போற்ற
வையகம் காக்கும் நாளில்
சிறந்தநல் தவத்தால் தேவி
திருமணி வயிற்றின் மைந்தன்
பிறந்தனன் உலகம் போற்றப்
பேர்அரிக் குருளை அன்னான். 17
தவமுயன்று அரிதில் பெற்ற
தனிஇளங் குமரன் நாளும்
சிவமுயன்ற டையுந் தெய்வக்
கலைபல திருந்த ஓதிக்
கவனவாம் புரவி யானை
தேர்ப்படைத் தொழில்கள் கற்றுப்
பவமுயன்ற துவும்பேறே என
வரும் பண்பின் மிக்கான். 18
அளவில் தொல்கலைகள் முற்றி
அரும்பெறல் தந்தை மிக்க
உளமகிழ் காதல் கூர
ஓங்கிய குணத்தால் நீடி
இளவரசு என்னும் தன்மை
எய்துதற் கணியன் ஆக
வளரிளம் பரிதி போன்று
வாழுநாள் ஒருநாள் மைந்தன். 19
திங்கள் வெண்கவிகை மன்னன்
திருவளர் கோயில் நின்று
மங்குல் தோய்மாட வீதி
மன்னிளங் குமரர் சூழக்
கொங்கலர் மாலை தாழ்ந்த
குங்குமம் குலவு தோளான்
பொங்கிய தானை சூழத்
தேர்மிசைப் பொலிந்து போந்தான். 20
பரசு வந்தியர் முன்சூதர்
மாகதர் ஒருபால் பாங்கர்
விரைநறுங் குழலார் சிந்தும்
வெள்வளை ஒருபால் மிக்க
முரசொடு சங்கம் ஆர்ப்ப
முழங்கொலி ஒருபால் வென்றி
அரசிளங் குமரன் போதும்
அணி மணி மாட வீதி. 21
தனிப்பெருந் தருமம் தானோர்
தயாஇன்றித் தானை மன்னன்
பனிப்பில் சிந்தையினில் உண்மைப்
பான்மை சோதித்தால் என்ன
மனித்தர் தன்வரவு காணா
வண்ணம் ஓர்வண்ணம் நல்ஆன்
புனிற்றிளங் கன்று துள்ளிப்
போந்ததம் மறுகி னூடே. 22
அம்புனிற்றாவின் கன்றோர்
அபாயத்தின் ஊடுபோகிச்
செம்பொனின் தேர்க்கால்மீது
விசையினால் செல்லப்பட்டங்கு
உம்பரின் அடையக்கண்டங்கு
உருகுதாய் அலமந்தோடி
வெம்பிடும் அலறும்சோரும்
மெய்ந்நடுக்குற்று வீழும். 23
மற்றது கண்டு மைந்தன்
"வந்ததிங்கு அபாயம்" என்று
சொற்றடு மாறி நெஞ்சில்
துயருழந்து அறிவு அழிந்து
"பெற்றமும் கன்றும் இன்றுஎன்
உணர்வு எனும்பெருமை மாளச்
செற்ற என்செய்கேன்" என்று
தேரினினின்று இழிந்து வீழ்ந்தான். 24
அலறு பேர்ஆவை நோக்கி
ஆருயிர் பதைத்துச் சோரும்
நிலமிசைக் கன்றை நோக்கி
நெடிதுயிர்த்து இரங்கி நிற்கும்
"மலர்தலை உலகங் காக்கும்
மனுவெனும் என் கோமானுக்(கு)
உலகில் இப்பழி வந்துஎய்தப்
பிறந்தவா ஒருவன்" என்பான். 25
வந்த இப்பழியை மாற்றும்
வகையினை மறைநூல் வாய்மை
அந்தணர் விதித்த ஆற்றால்
ஆற்றுவது அறமே ஆகில்
எந்தை ஈதுஅறியா முன்னம்
இயற்றுவன் என்று மைந்தன்
சிந்தை வெந்துயரம் தீர்ப்பான்திரு
மறையவர் முன் சென்றான். 26
தன்னுயிர்க் கன்று வீயத்
தளர்ந்த ஆத்தரி யாதாகி
முன் நெருப்புயிர்த்து விம்மி
முகத்தினில் கண்ணீர் வார
மன்னுயிர் காக்குஞ் செங்கோல்
மனுவின் பொற்கோயில் வாயில்
பொன்னணி மணியைச் சென்று
கோட்டினால் புடைத்தது அன்றே. 27
பழிப்பறை முழக்கோ ஆர்க்கும்
பாவத்தின் ஒலியோ வேந்தன்
வழித்திரு மைந்தன் ஆவி
கொளவரும் மறலி ஊர்திக்
கழுத்தணி மணியின் ஆர்ப்போ
என்னத் தன் கடைமுன் கேளாத்
தெழித்தெழும் ஓசை மன்னன்
செவிப்புலம் புக்க போது. 28
ஆங்கது கேட்ட வேந்தன்
அரியணை இழிந்து போந்து
பூங்கொடி வாயில் நண்ணக்
காவலர் எதிரே போற்றி
"ஈங்கிதோர் பசுவந்தெய்தி இறைவ!
நின் கொற்ற வாயில்
தூங்கிய மணியைக் கோட்டால்
துளக்கியது" என்று சொன்னார். 29
மன்னவன் அதனைக் கேளா
வருந்திய பசுவை நோக்கி
"என் இதற்குற்றது" என்பான்
அமைச்சரை இகழ்ந்து நோக்க
முன்னுற நிகழ்ந்த எல்லாம்
அறிந்துளான் முதிர்ந்த கேள்வித்
தொல்நெறி அமைச்சன் மன்னன்
தாளிணை தொழுது சொல்வான். 30
வளவ! நின்புதல்வன் ஆங்கோர்
மணி நெடுந் தேர்மேல்ஏறி
அளவில் தேர்த்தானை சூழ
அரசுலாந் தெருவில் போங்கால்
இளையஆன் கன்று தேர்க்கால்
இடைப் புகுந்து இறந்ததாகத்
தளர்வுறும் இத்தாய் வந்து
விளைத்ததித் தன்மை" என்றான். 31
அவ்வுரை கேட்ட வேந்தன்
ஆவுறு துயரம் எய்தி
வெவ்விடந் தலைக் கொண்டாற்
போல்வேதனை அகத்து மிக்"கிங்கு
இவ்வினை விளைந்தவாறு" என்று
இடருறும் இரங்கும் ஏங்கும்
"செவ்விது என்செங்கோல்!" என்னும்
தெருமரும் தெளியும் தேறான். 32
மன்னுயிர் புரந்து வையம்பொதுக்
கடிந்து அறத்தில் நீடும்
என்னெறி நன்றால் என்னும்
"என்செய்தால் தீரும்" என்னும்
தன்னிளங் கன்று காணாத்
தாய்முகங் கண்டு சோரும்
அந்நிலை அரசன் உற்றதுயரம்
ஓர் அளவிற்று அன்றால். 33
வேறு - கொச்சகக் கலிப்பா
மந்திரிகள் அது கண்டு
மன்னவனை அடி வணங்கிச்
"சிந்தை தளர்ந்து அருளுவது
மற்று இதற்குதீர்வு அன்றால்
கொந்தலர்த்தார் மைந்தனை முன்
கோவதை செய்தார்க்கு மறை
அந்தணர்கள் விதித்த முறைவழி
நிறுத்தல் அறம்" என்றார். 34
வழக்கு என்றுநீர் மொழிந்தால்
மற்றது தான் வலிப்பட்டுக்
குழக்கன்றை இழந்த லறும்
கோவுறு நோய் மருந்தாமோ?
இழக்கின்றேன் மைந்தனை என்று
எல்லீருஞ் சொல்லிய இச்
சழக்கு இன்றுநான் இயைந்தால்
தருமந் தான் சலியாதோ. 35
மாநிலங் காவலன் ஆவான்
மன்னுயிர் காக்குங் காலைத்
தான தனக்கு இடையூறு
தன்னால் தன் பரிசனத்தால்
ஊன மிகுபகைத் திறத்தால்
கள்வரால் உயிர் தம்மால்
ஆன பயம்ஐந்தும் தீர்த்து
அறம் காப்பான் அல்லனோ. 36
என்மகன் செய் பாதகத்துக்கு
இருந்தவங்கள் செய இசைந்தே
அன்னியன் ஓர்உயிர் கொன்றால்
அவனைக் கொல்வேன் ஆனால்
தொன்மனு நூல்தொடை மனுவால்
துடைப்பு உண்டது எனும்வார்த்தை
மன்னுலகில் பெற மொழிந்தீர்!
மந்திரிகள்! வழக்கு" என்றான். 37
என்று அரசன் இகழ்துஉரைப்ப
எதிர் நின்றமதி அமைச்சர்
"நின்ற நெறிஉலகின் கண்இது
போல் முன் நிகழ்ந்ததால்
பொன்று வித்தல்மரபு அன்றுமறை
மொழிந்த அறம் புரிதல்
தொன்று தொடுநெறி யன்றோ?
தொல்நிலங் காவல!" என்றார். 38
அவ்வண்ணம் தொழுது ரைத்த
அமைச்சர்களை முகம் நோக்கி
மெய்வண்ணம் தெரிந்து உணர்ந்த
மனுவென்னும் விறல் வேந்தன்
இவ்வண்ணம் பழுது உரைத்தீர்என்று
எரியின் இடைத் தோய்ந்த
செவ்வண்ணக் கமலம் போல்முகம்
புலர்ந்து செயிர்த்து ரைப்பான். 39
அவ்வுரையில் வருநெறிகள் அவை
நிற்க அற நெறியின்
செவ்விய உண்மைத் திறம்நீர்
சிந்தை செயாது உரைக்கின்றீர்
எவ்உல கில்எப் பெற்றம்
இப்பெற்றித் தாம் இடரால்
வெவ்வுயிர்த்துக் கதறி மணி
எறிந்து விழுந்தது? விளம்பீர். 40
போற்றிசைத்துப் புரந்தரன் மால்அயன்
முதலோர் புகழ்ந்து இறைஞ்ச
வீற்றிருந்த பெருமானார் மேவி
யுறை திருவா ரூர்த்
தோற்றமுடை உயிர் கொன்றான்
ஆதலினால் துணிபொருள் தான்
ஆற்றவுமற்று அவற் கொல்லும்
அதுவேயாம் என நினைமின். 41
எனமொழிந்து மற்று இதனுக்கு
இனிஇதுவே செயல் இவ்ஆன்
மனமழியுந் துயர் அகற்ற
மாட்டாதேன் வருந்தும் இது
தனதுறு பேர்இடர் யானும்
தாங்குவதே கருமம் என
அனகன் அரும்பொருள் துணிந்தான்
அமைச்சரும் அஞ்சினர் அகன்றார். 42
மன்னவன் தன்மைந்தனை அங்கு
அழைத்தொரு மந்திரி தன்னை
"முன்னிவனை அவ்வீதி முரண்
தேர்க்கால் ஊர்க" என
அன்னவனும் அதுசெய்யாது அகன்று
தன் ஆருயிர் துறப்பத்
தன்னுடைய குலமகனைத் தான்
கொண்டு மறுங்க ணைந்தான். 43
ஒருமைந்தன் தன் குலத்துக்கு
உள்ளான் என்பதும் உணரான்
தருமம் தன்வழிச் செல்கை
கடன் என்று தன்மைந்தன்
மருமம் தன் தேராழிஉற
ஊர்ந்தான் மனு வேந்தன்
அருமந்த அரசாட்சி அரிதோ?
மற்று எளிதோ தான். 44
தண்ணளி வெண்குடை வேந்தன்
செயல் கண்டு தரியாது
மண்ணவர் கண்மழை பொழிந்தார்
வானவர் பூமழை சொரிந்தார்
அண்ணல் அவன் கண்எதிரே
அணி வீதிமழ விடைமேல்
விண்ணவர்கள் தொழ நின்றான்
வீதி விடங்கப் பெருமான். 45
சடை மருங்கில் இளம்பிறையும்
தனி விழிக்குந் திருநுதலும்
இட மருங்கில் உமையாளும்
எம் மருங்கும் பூதகணம்
புடை நெருங்கும் பெருமையும்
முன்கண்டு அரசன் போற்றிஇசைப்ப
விடை மருவும் பெருமானும்விறல்
வேந்தற்கு அருள் கொடுத்தான். 46
அந்நிலையே உயிர் பிரிந்த
ஆன் கன்றும் அவ்அரசன்
மன்னுரிமைத் தனிக் கன்றும்
மந்திரியும் உடன் எழலும்
இன்ன பரிசானான் என்று
அறிந்திலன் வேந்தனும் யார்க்கும்
முன்னவனே முன் நின்றால்
முடியாத பொருள் உளதோ. 47
அடி பணிந்த திருமகனை
ஆகமுற எடுத்து அணைத்து
நெடிது மகிழ்ந்து அருந்துயரம்
நீங்கினான் நில வேந்தன்
மடி சுரந்து பொழிதீம்பால்
வருங் கன்று மகிழ்ந்துண்டு
படி நனைய வரும்பசுவும்
பருவரல் நீங்கியது அன்றே. 48
பொன்தயங்கு மதி லாரூர்ப்
பூங்கோயில் அமர்ந்த பிரான்
வென்றி மனு வேந்தனுக்கு
வீதியிலே அருள் கொடுத்து
சென்றருளும் பெரும் கருணைத்
திறம் கண்டுதன் அடியார்க்கு
என்றும் எளிவரும் பெருமை
ஏழ் உலகும் எடுத்தேத்தும். 49
இனைய வகைஅற நெறியில்
எண்ணிறந்தோர்க்கு அருள் புரிந்து
முனைவர் அவர் மகிழ்ந்தருளப்
பெற்றுடைய மூதூர் மேல்
புனையும் உரை நம்மளவில்
புகலலாந் தகைமை யதோ?
அனைய தனுக் ககமலராம்
அறவ னார்பூங் கோயில். 50
திருச்சிற்றம்பலம் 🕉️🙏
ஓம் நமசிவாயம் 🕉️🙏
சிவாய நம ஓம் 🕉️🙏
நற்றுணையாவது நாதன் நாமம் நமச்சிவாயவே🕉️
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏