D Muthu Prakash, Kanchipuram 💐
1K views • 20 days ago
#Ayya Vaikundar #அய்யா வைகுண்டர் #💚Ayya 💗 Vaikundar💚 #🚩அய்யா வைகுண்டர் 🚩 #அய்யா வைகுண்டர் {1008} கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை 12ஆம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 18.06.2026.
அய்யா துணை
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
அகிலம்:
========
நொம்பலங்க ளெல்லாம் நிசமாகத் தீருவதும்
அன்பா யுலகில் ஆனதே சத்தோரும்
ஒருதலமாய் வந்து ஒன்றாய்க் குவிகிறதும்
கருதினமாய்ப் பார்த்து அவர்கள் மிகவுரைப்பார்
முன்னாள் மொழிந்த முறையாக மம்போலே
இந்நாள் சமைந்திருக்கு தென்று மகிழ்ந்துரைப்பார்
.
விளக்கம்:
=========
எல்லாரும் மன வருத்தம் தீர்ந்ததால் உலக மக்கள் அன்பும் சந்தோசமும் கொண்டு ஒரே இடத்தில் ஒற்றுமையாய்க் கூடிக் குலாவுவதைக் கண்டவர்கள் அன்புடன் முன்பு கூறப்பட்ட ஆகமங்களின் முறைபோல் இன்றைக்கு இங்கே வைகுண்டர் உருவாகி இருக்கிறார் என்று மகிழ்ந்து கூறினர்.
.
.
அகிலம்:
========
வைகுண்ட ராசர் வருவார்தான் பூமியிலே
மெய்கொண்ட ராசர் மேதினியில் வந்தவுடன்
சாதிபதி னெண்ணும் தலமொன்றி லேகுவிந்து
கோதிக் குளிக்கும் ஒருகிணற்றி லல்லாது
கர்மவியா திசெவிடு கண்குரு டூமையெல்லாம்
தர்மத்தால் தீர்த்தார் சகலவுயி ரானதுக்கும்
.
விளக்கம்:
=========
மேலும் வைகுண்டராசா பூமியிலே வருவார். அவ்வாறு உலகில் வந்தவுடன் பதினெட்டுச் சாதிகளும் ஒரே இடத்தில் கூடித் தமது பிறப்பு உயர்வு தாழ்வு கருதாது, வைகுண்டர் பாதங்களைத் தொழுது ஒரு கிணற்றின் நீரை எல்லாரும் கோரிக் குடிப்பார்கள். அதுமட்டுமல்லாது சகல உயிர்களுக்கும் குஷ்டம், செவிடு, கண்குருடு, ஊமை ஆகிய எல்லா வகை நோய்களையும் தரும தண்ணீராலும் மண்ணாலும் வைகுண்டர் தீர்ப்பார் என்றும்,
.
.
அகிலம்:
========
செல்வ முண்டாகும் சீமானார் வந்தவுடன்
அல்லல் மிகத்தீரும் அவரை யறிந்தவர்க்கு
எளியோர் வலியோர் எல்லா மொருப்போலே
பழியான பேச்சுப் பாரினில் கேட்கவிடார்
தேசமெல்லாம் பரக்கும் சீமானார் வந்தசெய்தி
தோசமெல்லா மகலும் சுத்தமாய்க் கண்டவர்க்கு
சார்ந்தவர்க்கு சாந்தனுமாய்த் தர்மங்கொடுத் தருள்வார்
சேர்ந்தவர்க்கு நல்ல செல்வமுண் டாகுமெனச்
.
விளக்கம்:
=========
வைகுண்டர் வந்தவுடன் சகல உயிர்களுக்கும் அதிகமான செல்வச் செழிப்பு உண்டாகும். அவரை அறிந்து கொண்டவர்க்குத் துன்பங்கள் எல்லாம் தீர்ந்து விடும். எளியோர், வலியோர் எல்லாரையும் சமத்துவமாக ஆக்கிடுவார். பழியான பேச்சுகளை உலகில் கேட்கவிடாவண்ணம் செய்வார். வைகுண்டர் வந்த செய்தி எல்லாத் தேசங்களுக்கும் பரந்து விடும். அவரை பூரணமாய் அறிந்தவர்க்கு எல்லாத் தோசங்களும் அகன்றுவிடும். தம்மைத் தஞ்சம் என்று கீழ்ப்படிந்து இருப்பவர்க்குச் சாந்தம் உள்ளவராகக் காட்சி அளித்துத் தண்ணீரும் மண்ணும் தருமமாகக் கொடுத்துச் சகல துன்பங்களையும் தீர்த்துச் செல்வமும் தருபவர் வைகுண்டர் என்றும்,
.
.
அகிலம்:
========
சொல்லியிருந் தாகமத்தின் துல்யச் சுருதிப்படி
நல்லவை குண்டர் நாட்டில்வந்தா ரென்றுசொல்லி
சாதிபதி னெண்ணும் சடல வரவுமற்று
ஆதிவை குண்டர் அடிவீழ்ந் தேத்தியவர்
எல்லா மொருதலத்தில் இரண்டு மனுப்போலே
அல்லோரும் வந்தோர் ஆவிநீ ருண்டிருந்தார்
.
விளக்கம்:
=========
துல்லியமாகக் கூறிய முன் ஆகமச் சொல்லைப் போல நல்ல வைகுண்டர் நாட்டில் வந்தார் என்று சொல்லி பதினெட்டு சாதி மக்களும் தத்தமது உடலின் பிறப்பால் வந்த சாதிப் பெயரை மறந்து, ஆதி வைகுண்டரின் பாதங்களில் விழுந்து அவரைப் போற்றி, எல்லாரும் ஓர் இடத்தில் கூடி ஆண் பெண் என்னும் இரு மனிதப் பிரிவு போன்று இருந்தாலும் எல்லாரும் ஒரு குளத்து நீரை உண்டு வாழ்ந்து வந்தனர்.
.
.
அகிலம்:
========
அல்லாமல் முன்னாள் ஆகமத் தின்படியே
எல்லாமுன் வியாசர் எழுதின சொற்படியே
தெய்வச்சான் றோர்களுக்குச் சேர்ந்த வியாழமது
மெய்வகையாய் வந்து மிகத்தோன்றி யேயிருக்க
இன்ன மிவர்வழியில் இயல்பாய் மணமுகித்து
மன்னர் வைகுண்டர் மகராச ராகியவர்
.
விளக்கம்:
=========
அது மட்டுமல்லாமல் முன் ஆகமத்தைப் போலவும், வியாகரர் முன்னர் மொழிந்ததைப் போலவும், இந்த உத்தம வைகுண்டர் நாட்டில் வந்து அவதரித்தார். தெய்வச் சான்றோர்களுக்கு உதவியாக வந்த தேவகுரு இவர் ஆவார். உண்மையான சான்றோர் வழியில் தோன்றியிருக்கும் இவர். நல்ல முறையில் திருமணம் முடித்து எல்லாருக்கும் மன்னரான வைகுண்ட இராசர் ஆவார்.
.
.
தொடரும்... அய்யா உண்டு.
27 likes
18 shares