நீ ஏன் என்னை நேசிக்கவில்லை
நீ ஏன் என்னை கொண்டாடவில்லை
நீ ஏன் என் கைகளை இறுகப்பற்றிக்கொள்ளவில்லை
நீ ஏன் என்னை முக்கியம் என
உணர்த்தவேயில்லை
நீ கொஞ்சமாவது என் உணர்வுகளின் மெல்லிய நூலை
உடைக்காமல் பார்த்துக்கொண்டிருக்கலாம்
நான் போகிறேன் என்றாலும்
இறுகப்பற்றிக்கொண்டிருக்கலாம்
என்னை இழந்துவிடாமல்
இறுகப்பற்றுவதற்கு
உன்னிடம் ஒரு காரணம் கூடவா
சொல்லும்படி இருக்கவில்லை
நான் உனக்கு அத்தனை பரிபூரணம் என உணர்த்திக்கொண்டிருக்கமாட்டாயா
என்று எத்தனை நாள் ஏங்கியிருக்கிறேன்
உன்னிடம் ஏன் இத்தனையும் எதிர்பார்த்து
மௌனமாய் மண்டியிடுகிறேன் என்று
எப்போதாவது யோசித்திருக்கிறாயா?
என் ஆத்மா உன்னிடமே சரணாகதியாகிக்கிடந்தது
அதை மீட்க முடியாத விரும்பாத
பெரும் மனப் போராட்டங்களில்த்தான்
உன்னை மாற்றிவிட மன்றாடிக்கொண்டிருந்தேன்
என் தேவைகள் நிறைவேறாமலும்கூட
இந்த ஆத்மா விலகிக்கொள்ளாமல்
உன்னிடம் ஒட்டிக்கொள்வது
எத்தனை நரகவேதனை அறிவாயா ?
விலகவும் சக்தியற்று
இறுகப்பற்றவும் வாய்ப்பற்ற ஒரு வாழ்தலின் பெருவலியை உனக்கு எப்படிச்சொல்லி உணர்த்துவது ?
என் ஏக்கங்களின் பெருஞ்சுவாலை
தீயாய் பரவி
நான் எரிந்து சாம்பலாகுமுன்னாவது
நீ வந்து பற்றிக்கொண்டிருக்கலாம்
இப்போதும் கூட
கடைசியாய் ஒரு தடவை திரும்பி விடமாட்டாயா என்ற ஏக்கத்தோடு தான் என் ஆத்மாவை உன்னிடமிருந்து பிடுங்கிக்கொண்டிருக்கிறேன்
விடுவித்த பிறகு இனி எப்போதும்
தேடிக்கொள்ளாதே
இப்போது இருக்கும் நான்
அப்போது இருக்கப்போவதேயில்லை
#அவளுக்காக ♥️