*தினம் ஒரு தேவாரம்* *பாடல் பெற்ற* *சிவத்தலங்கள்*.
*புதிய தொடர் பதிவு*
*தேவாரம் பாடல் பெற்ற* *சிவ ஸ்தலங்கள்*
தொடர் பதிவில் இன்று காவிரி தென்கரை தலங்களில்
ஆறாவதாக(6)
பார்க்க இருப்பது
சுகப் பிரசவம் அருளும்
தாயுமானவர் திருக்கோவில், திருச்சிராப்பள்ளி.
சிவஸ்தலம் பெயர்:
திருச்சிராப்பள்ளி
இறைவன் பெயர்:
தாயுமானவர், மாத்ருபூதேஸ்வரர், செவ்வந்திநாதர்
இறைவி பெயர்:சுகந்த குந்தளாம்பிகை,
மட்டுவார் குழலியம்மை
இங்குள்ள தீர்த்தம் சிவதீர்த்தம். இது கோயிலுள் உள்ளது.
திருப்பராய்த்துறையில் இருந்து வாழ்ந்து வந்த அன்பரொருவர் திருநீற்றைப் பெற்று வாயால் ஊதிய பாவத்திற்காகக் காட்டுப் பன்றியாய்ப் பிறந்தார்.
பலகாலம் அலைந்து திரிந்து கடைசியில் வில்வவனமாகிய இத்தலத்தை அடைந்து அதை அழிக்கத் தொடங்கியபோது வேடர்கள் அதுகண்டு துரத்தினர்.
அப்போது அப்பன்றி ஓடமாட்டாது இங்குள்ள சிவதீர்த்தத்தில் வீழ்ந்தது.
இத் தீர்த்தத்தில் வீழ்ந்தமையால் அப் பன்றி பேறு பெற்று உய்ந்தது.
அத்தகைய உயர்ந்த தீர்த்தம் இத் தீர்த்தமாகும்.
இச்சிறப்பினை
விளக்கும் சிற்பம்,
இத் திருக்குளத்தில் இறங்கும் போது வலப்புறத்தில் கல்லில் செதுக்கப்பட்டுள்ளது.
திருநாவுக்கரசர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் 5-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.
இத்தலப்பெயரைச் சொன்னாலே தீவினை நீங்கிவிடும் என்று அப்பர் தன்னுடைய பதிகத்தில் குறிப்பிடுகிறார்.
திருஞானசம்பந்தர் அருளிய இத்தலத்துக்கான பதிகம்
நன்றுடையானைத் தீயதிலானை நரைவெள்ளே
திருநாவுக்கரசர் அருளிய இத்தலத்துக்கான பதிகம்
மட்டு வார்குழ லாளொடு
பெண்களுக்கு சுகப் பிரசவம் அருளும் சிறப்புவாய்ந்த கோயிலாகத் திகழ்கிறது திருச்சி மலைக்கோட்டை அருள்மிகு தாயுமான சுவாமி திருக்கோயில்.
சுவாமியே பெண்ணாக வந்து தனது பக்தைக்குப் பிரசவம் பார்த்த வரலாற்றுச் சிறப்பு மிக்கது இந்தத் திருத்தலம்.
நவீன கருவிகள் இல்லா அன்றைய காலத்திலேயே இப்பெருங் கோட்டைக் கோயில் 417 படிகளுடன், 273 அடி உயரத்தில் உலகக் கட்டடக் கலைக்கு எடுத்துக்காட்டாகவும், வரலாற்று முக்கிய தத்துவம் பெற்றதாகவும், புராதன சின்னமாகவும் விளங்குகிறது இந்த மலைக்கோயில்.
புவியியல் ஆய்வுப்படி 3,500 பில்லியன் ஆண்டுகள் பழமையானது இந்த மலை எனக் கூறப்படுகிறது.
சோழர், பல்லவர், பாண்டியர், பிற்காலச் சோழர், நாயக்கர், மராட்டியர் கால கட்டடக் கலைப்பாணிகளைக் கொண்டு விளங்குகிறது கோயில்.
மன்னர்கள் மற்றும் குறுநில மன்னர்கள் பாதுகாப்பிலிருந்த இத்திருக்கோயில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் துறவியர் பராமரிப்பிலும் இருந்துள்ளது.
புராணச் சிறப்புடையது.
திருச்சி கொடும்பாளூர் என்ற இடத்திலிருந்து கற்களும் பிற பொருள்களும் கொண்டு கட்டப்பட்டன.
மலையின் மேல் உள்ள சிவலிங்கம் தானாக வளர்ந்தது என்பது ஐதீகம்.
ராமாயண காலத்திலேயே இந்த மலை இருந்ததாக கூறப்படுகிறது.
திரிசிரன் என்ற அசுரன் இத்திருத்தலத்தில் உள்ள சிவலிங்கத்தைப் பூஜித்து வந்தான் என்பது புராண வரலாறு.
மேலும், தாயுமானவர் திருக்கோயில் கருவறை திருப்பணி திரிசிரன் செய்ததாகும்.
பிற்காலத்தில் இம்மலையைச் சூழ்ந்து அமைந்த நகரத்திற்கு திரிசிரபுரம் என்ற பெயர் ஏற்பட்டிருக்கிறது.
சோழர் ஆட்சியியில் உறையூர் தலைநகராக இருந்தபொழுது சாரமாமுனிவர் என்பவர் சிவலிங்கத்தை செவ்வந்தி மலர்க்கொண்டு
பூஜித்து வந்தார்.
அதனால் இறைவன் செவ்வந்திநாதர் என்று அழைக்கப்பட்டார்.
இறைனை பூஜை செய்வதற்கு அமைக்கப்பட்ட நந்தவனத்தில் உள்ள செவ்வந்தி மலர்களை களவாடிய கள்வனைப் பற்றி உறையூரை ஆட்சிசெய்த பராந்தக சோழனிடம் முறையிட, அவன் கள்வனை அழைத்துத் தண்டிக்காத காரணத்தால், முனிவர் இறைவனிடமே முறையிட கிழக்கு முகமாக இருந்த சிவன் மேற்கு முகமாக திரும்பி உறையூரை மண்மாரி பொழிந்து உறையூர் அழிந்தது.
அன்றிருந்த கிழக்கு வாசல் பகுதி தெரியும் வண்ணம் நிலை மட்டும் உள்ளது.
இக்கிழக்கு வாசலைக் கடந்து, மேற்கு முகமாக உள்ள மூலவர் இறைவனைத் தரிசிக்கலாம்.
திருச்சி நகரை எந்த திசையிலிருந்து நெருங்கும் போதும் கம்பீரமாக காட்சி தரும் மலைக்கோட்டையில் அமைந்துள்ள கோவில் தான் தாயுமானவர் கோவில்.
மலைக்கோட்டை என்று சொல்லப்படும் ஒரு குன்றின் மேல் 273 அடி உயரத்திலும், 417 படிகளும் கொண்டு அமைந்திருக்கும் இந்த ஆலயம் தென் கயிலாயம் என்று போற்றப்படுகிறது.
திரிசரன் என்ற அரக்கன் இங்கே ஆட்சி புரிந்து இறைவனைப் பூசித்து பேறு பெற்றான்.
அதனால் இத்தலம் திரிசிரபுரம் என்றும்
பெயர் பெற்றது.
தென் கயிலாயம் என்று பெயர் வரக் காரணமும் சுவையானது.
ஒருமுறை கைலாயத்தில் சிவபெருமானை வணங்க வந்தவர்களுள் ஆதிசேஷனும் வாயுபகவானும் இருந்தனர்.
ஆதிசேஷன் வருகையைப் பலரும் புகழ்ந்து கொண்டாடியதைக் கண்டு வாயுவுக்குப் பொறாமை ஏற்பட்டது.
வாயு ஆதிசேஷனை எதிர்க்க, இருவருக்கும் ஏற்பட்ட மோதலில் ஆதிசேஷன் கைலாய மலையைத் தன் உடலால் இறுக்க, அதைத் தகர்ப்பதற்காக வாயுதேவன் பலத்த காற்றை வீச கைலாயம் அதிர்ந்தது.
அதிலிருந்து மூன்று துண்டுகள் புறப்பட்டு திருக்காளத்தி, திருச்சி, இலங்கையில் உள்ள திரிகோணம் எனும் மூன்று இடங்களில் வீழ்ந்தன.
இப்படித்தான் திருசிரமலை தென் கயிலாயம் என்ற பெயர் பெற்றது.
இத்தலத்தில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்குப் பார்த்த நிலையில் ஒரு பெரிய சிவலிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார்.
மலையில் உள்ள பாறைகள் மீது மூன்று அடுக்குகளாக கட்டப்பட்டுள்ள இந்த ஆலயம் பழங்கால கட்டிடக் கலைக்கு ஒரு எடுத்துக் காட்டாக விளங்குகிறது.
முதல் தளத்தில் இறைவி மட்டுவார் குழலம்மை சந்நிதியும், இரண்டாம் தளத்தில் இறைவன் தாயுமானசுவாமியின் சந்நிதியும் அமைந்துள்ளன.
இறைவன், இறைவி இருவர் சந்நிதியும் மேற்குப் பார்த்தவாறு அமைந்திருக்கின்றன.
தமிழ்நாட்டில் உள்ள மிகப்பெரிய சிவலிங்கத் திருமேனிகளில் தாயுமானவர் லிங்கத் திருமேனியும் ஒன்றாகும்.
லிங்கத் திருமேனி சுமார்
5அடி உயரம் உள்ளது.
கி.பி. 7-ம் நூற்றாண்டைச் சேர்ந்த மகேந்திரவர்மனால் குடையப் பெற்ற இரண்டு குடவரைக் கோவில்கள் இங்கு உள்ளது.
மலையின் உச்சியில் உச்சிப் பிள்ளையார் கோவில் இருக்கிறது
தலப் பெருமை
இறப்பவருக்கு முக்திதரும் காசியைவிடவும், பிறப்பவருக்கு முக்திநல்கும் திருவாரூரை விடவும் பெருமை மிகுந்த சிராமலைபோல அருமை வாய்ந்த திருத்தலம் அவனியில் வேறு எங்கும் இல்லை என்னும் சிறப்பினைக் கொண்டது இத்திருத்தலம்.
இதனை பூலோக கைலாயம் என்றும் சைவ சமயம் போற்றுகின்றது.
திருக்கயிலை மலையில் சிவபெருமானும் உமையம்மையும் வீற்றிருப்பதைப் போல அருள்மிகு தாயுமான சுவாமியும் மட்டுவார்குழலம்மையும் இத்திருத்தலத்தில் எழுந்தருளியிருப்பதுடன், முழு முதலாகிய விநாயகப்பெருமான் மலை அடிவாரத்தில் மாணிக்க விநாயகராகவும்,
மலை உச்சியில் உச்சி விநாயகராகவும்
அருள் பாலித்து வருகின்றனர்.
பழமையான சிவாலயமான இத்திருத்தலம், 274 சைவத்தலங்களுள் ஈடு இணையற்ற தலம்.
தென் கயிலாயம் என்றும், தட்சிண கயிலாயம் என்றும் அழைக்கப்படுகிறது.
கி.பி. 7-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மகேந்திரவர்மனால் மலையின் மேலும், கீழும் குடையப் பெற்ற இரு குகைக் கோயில்களும் மேல்குகையில் உள்ள கங்காதரரின் சிற்பமும் மற்றும் தமிழிலும், கிரந்தத்திலும் உள்ள பல கல்வெட்டுகளும் சான்றாக உள்ளது.
கோயிலின் சித்திர மண்டபம் திருக்குற்றாலத்தில் உள்ள சித்திரசபை போல கூரைச் சுவர்கள் உள்பட எங்கு பார்த்தாலும், அரிய ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன.
சிவபெருமானது 25 வடிவங்கள், தாயுமானவர் உறையூரை அழித்த வரலாறு அழகிய ஓவியமாகவும், தாயாக வந்த காட்சி ஒரு தூணில் அழகிய சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ளன.
மேற்கூரையிலிருந்து தொங்கக்கூடிய ஒரே கல்லாலான கற்சங்கிலி, சிங்கத்தின் வாய்க்குள் கீழே விழாமல் உருளக்கூடிய பந்து, தொங்கும் தாமரைப்பூவில் தேன் உண்ணும் கிளிகள் முதலியவை சிறந்த கருங்கல் வேலைப்பாடாகும்.
திருமுறைகளால் சிறப்பிக்கப் பெற்ற பல அற்புதங்களும் அதிசயங்களும் நிகழ்ந்த ஆன்மிக சிறப்புமிக்க தலமாகவும், பாடல்பெற்ற ஒப்பற்ற பிரார்த்தனைத் தலமாகவும் விளங்கும் அருள்மிகு தாயுமான சுவாமி திருத்தல வரலாறு என்னும் நூல் இத்தலத்தின் பல பெருமைகளையும், சிறப்புகளையும் உள்ளடக்கிய ஒரு ஆன்மிக கருவூலமாக உள்ளது.
இத்திருக்கோயிலில் இறைவனே தாயாக வந்து சுகப்பிரசவம் பார்த்ததால் தாயுமான சுவாமி என்று அழைக்கப்படுகிறார்.
இங்கு பிரார்த்தனை செய்யும் பெண்களுக்கு சுகப் பிரசவம் உண்டாகும் என்பது நம்பிக்கை.
குழந்தைப் பேறு, சுகப்பிரசவம் ஆக இங்கு வந்து பிரார்த்தனை செய்து கொள்ளும் தலமாக இந்த சிவஸ்தலம் விளங்குகிறது.
கர்ப்பமுற்ற பெண்கள் சுகப்பிரசவம் ஆவதற்காக தாயுமானவர் சந்நிதியில் வாழைத்தார் வாங்கிக் கட்டுவதாக வேண்டிக் கொள்வார்கள்.
பிரசவம் ஆன பிறகு தாயுமானவர் சந்ந்தியில் வாழைத்தாரைக் கட்டி அதை அர்ச்சகர் சற்று நேரம் ஊஞ்சல் போல ஆடவிட்டு பிறகு அங்கு வரும் பக்தர்களுக்கு வாழைப்பழங்களை பிரசாதமாக விநியோகிப்பார்கள்.
மூலவர் கருவறை தெற்குச் சுற்றில் தென்முகக் கடவுளான தட்சிணாமூர்த்தி எட்டு முனிவர்களுடன் தர்ப்பாசனத்தில் அமர்ந்து அருள் பாவிப்பது மற்ற தலங்களில் இல்லாத சிறப்பாகும்.
இவரை வழிபட்டால் கல்வியும், ஞானமும் கிட்டும்.
இத்தலத்தில் நவக்கிரகங்கள் அனைத்தும் சூரிய பகவானைப் பார்த்தவாறு எழுந்தருளியுள்ளதால் இங்கு வந்து வழிபட்டால் நவக்கிரக தோஷங்கள் நீங்கும்.
பங்குனி மாதம் 23, 24, 25 ஆகிய நாட்களில் சூரியனின் கிரணங்கள் சிவலிங்கத் திருமேனி மீது படுவது இத்தலத்தின் மற்றொரு சிறப்பாகும்.
மேலும் சிவபெருமானின் 64 மூர்த்தங்களுள் ஒன்றான கங்காள மூர்த்தம் இத்தலத்தில் உள்ளது.
மலையில் பல்லவர் காலத்திய இரண்டு குகைகள் உள்ளன.
தல சிறப்புகள்
திரிசிர மலையில் தனகுப்தன் தனது மனைவி இரத்தினாவதியுடன் வாழ்ந்து வந்தான்.
தனகுப்தனுடன் இனிய இல்லறம் நடத்திவந்த இரத்தினாவதி ஒவ்வொரு நாளும் திரிசிர மலையில் உறையும் செவ்வந்திநாதரை வழிபட்டுத் தாயாகும் பேறு அடைந்தாள்.
பேறுகாலம் முதிரவே பிரசவம் பார்க்க வரும்படி தன் தாய்க்குத் தெரிவித்தாள்.
தாயும் மகளுக்குப் பிரசவத்திற்கு வேண்டிய மருந்து மற்றும் எண்ணெய் போன்ற பொருள்களுடன் பூம்புகாரிலிருந்து புறப்பட்டு திரிசிராமலை வரும் வழியில் காவிரியில் நீர்ப்பெருக்கு காரணமாக, தாய் வரவு வடகரையிலேயே தடைப்பட்டது.
பிரசவிக்கும் நேரம் நெருங்கியும் தாய் வரவில்லை என்பதால் தாம் வழிபட்ட செவ்வந்திநாதரிடம் வேண்டினாள்.
அப்போது செவ்வந்திநாதரே தாய் வேடம் தரித்து நிறைபேற்றுடன் தவித்துக்கொண்டிருந்த இரத்தினாவதிக்கு தக்க மருத்துவம் பார்த்து தாயையும், பிறந்த ஆண் மகவையும் ஏழு தினங்கள் கவனித்துக்கொண்டார்.
காவிரி நீர்ப்பெருக்கு வடிந்து உண்மையான தாய் வந்தாள்.
இரு தாய்களில்
உண்மையான தாய் யார் எனத் திகைத்தாள்.
அப்போது, தாயாக வந்த இறைவர், மறைந்து வானில் மட்டுவார் குழலம்மையுடன் இடபவாகனராக தோன்றினார்.
அன்று முதல் திரிசிராமலை செவ்வந்திநாதருக்குத் தாயுமானவர் என்ற திருநாமம் ஏற்பட்டது.
இது சித்திரைப் பெருந்திருவிழாவில் இன்றும் செட்டிப்பெண் மருத்துவம் எனக் கொண்டாடப்படுகிறது.
கர்ப்பிணிப் பெண்கள் தாயுமான சுவாமியை நினைத்து பக்தியுடன் சுகப்பிரசவ சுலோகம் தினமும் மூன்று முறை சொல்லி வணங்கிவந்தால் சுகப்பிரசவம் உண்டாகும்.
சுகப் பிரசவம் ஆனோர், பெற்றெடுத்த குழந்தையோடு, நேர்த்திக் கடனாக, பால், வாழைத் தார் ஆகியவற்றுடன் வந்து வழிபட்டு அர்ப்பணம் செய்வதை
நாள்தோறும் இத்தலத்தில் காணலாம்.
இத்தலத்தில்
முருகப் பெருமான் முத்துக்குமாரசாமியாக பன்னிரு திருக்கரங்களும், ஆறு திருமுகமும் கொண்டு மயில் மீதமர்ந்து கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்.
வள்ளி, தெய்வசேனா தேவியர் இருபுறமும் விளங்குகின்றனர்.
மற்றொரு சந்நிதியில் முருகப் பெருமான் ஒரு திருமுகமும் நான்கு திருக்கரங்களும் கொண்டு தனது இரு தேவியருடன் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகின்றார்.
இத்தலத்து முருகர் அருணகிரிநாதரால் திருப்புகழில் பாடப் பெற்றவராவார். திருப்புகழில்
16பாடல்கள் உள்ளன.
அகத்தியர், அனுமன், அர்ச்சுனன், ராமர், இந்திரன், சப்தரிஷிகள், பிரம்மா, ஜடாயு ஆகியோர் இத்தல இறைவனை வழிபட்டுள்ளனர்.
எப்படிப் போவது?
திருச்சி நகரின் மையப்பகுதியில் மலைக்கோட்டை என்று சொல்லும் ஒரு குன்றின் மேல் அமைந்திருக்கிறது.
திருச்சி தமிழ்நாட்டில் உள்ள ஒரு முக்கிய நகரம். தமிழ்நாட்டின் எல்லா முக்கிய நகரங்களில் இருந்தும் திருச்சிக்கு ரயில் மற்றும் சாலை போக்குவரத்து வசதிகள் உண்டு.அருகில் உள்ள பாடல் பெற்ற சிவஸ்தலம்1. உய்யக் கொண்டான் மலை - 7 கிமி -
2. திருமூக்கிச்சரம் - 5 கிமி -
3. திருவெறும்பூர் - 14.3 கிமி -
திருக்கோயிலுக்கு வரும் சேவார்த்திகளுக்குத் தினந்தோறும் பகல் 12.00 மணி அளவில் 200 நபர்களுக்கு அன்னதானம் நடைபெறுகிறது. பிரதி வாரம் வெள்ளிக்கிழமை மற்றும் திருவிழா நாள்களில் வடை, பாயசம், அப்பளத்துடன் கூடிய சிறப்பு அன்னதானம் நடைபெறுகிறது.
கோயில் நடை திறக்கும் நேரம்: காலை 6.00 - 12.30 மாலை 4.00 - 8.30
முகவரி
அருள்மிகு தாயுமான சுவாமி திருக்கோயில்,
மலைக்கோட்டை, என்.எஸ்.பி. சாலை,
திருச்சிராப்பள்ளி - 620002.
தொலைபேசி எண்: 0431-2704621
மின்னஞ்சல் : thayumanaswamy@thnrce.com
ஆலய முகவரி
அருள்மிகு தாயுமானவசுவாமி திருக்கோயில்
மலைக்கோட்டை
திருச்சி
திருச்சி மாவட்டம்
PIN - 620002
இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். 🚩🕉🪷🙏🏼
#🙏🏼ஓம் நமசிவாய #🙏கோவில் #தினம் ஒரு கோயில் #ஆலய தரிசனம்🔔 #🔥🕉️அண்ணாமலையார் கோவில் •×சிவன்ו🕉️🔥