63 நாயன்மார் வரலாறு

1 Post • 75 views
ரவிசங்கர் ராஜா, ஆரணி
543 views 1 days ago AI indicator
இன்று(2-6-26)வைகாசி மாதம் மூலம் நட்சத்திர நாளில் திருஞானசம்பந்தருடன் சிவனடி சேர்ந்த நாயன்மார்கள் பற்றிய சிறப்பு பதிவு. வைகாசி மூலத்திருநாளின் நெகிழ்ச்சி பின்னணி! இன்று (2-6-26)வைகாசி மூல நட்சத்திரத் திருநாள். பெருமைமிக்க இந்த நாளில் சிவனின் புகழ்பாடி சீலம் கொண்ட நாயன்மார்கள் நால்வரின் குருபூஜை கொண்டாடப்படுகிறது. ஈசனின் பிள்ளையாகவே வளர்ந்த ஞானக் குழந்தையாம் திருஞான சம்பந்தர்,திருநீலநக்க நாயனார், இசையால் ஈசனை வசமாக்கிய திருநீலகண்ட யாழ்ப்பாணர், திருப்புகலூர் முருக நாயனார் ஆகிய நால்வரின் குருபூஜை தினம் இன்று. இவர்கள் நால்வருமே ஒரே நாளில், ஒரே ஊரில்,ஜோதியில் கலந்தது அதிசயிக்கத்தக்க நிகழ்வு. மேலும் இந்தநாள், திருஞானசம்பந்தரின் திருமண நாளாகவும் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. திருஞானசம்பந்தமூர்த்தி : தேவார மூவரில் முதன்மையானவர். ஈசனின் அருளையும் அம்பிகையின் அருட்பாலையும் பெற்ற ஞானக்குழந்தை. பேசத் தொடங்கிய காலத்திலேயே ஈசனைப் பற்றி பாடத் தொடங்கியது. 'தோடுடைய செவியன்' என்று பாடத் தொடங்கி தலம்தோறும் சென்று சைவ சமயத்தின் புகழைப் பரப்பினார். செல்லும் இடமெங்கும் ஈசனின் பெயரால் பல அற்புதங்களைச் செய்த அருளாளர் ஞானசம்பந்தப் பெருமான். திருநீலநக்க நாயனார் : சாத்தமங்கை என்ற திருத்தலத்தில் பிறந்த இந்த நாயனார், ஈசனையே எல்லாமுமாக எண்ணி வாழ்ந்தவர். ஒருமுறை சாத்தமங்கை அயவந்தீஸ்வரரின் திருக்கோயிலின் சுற்றுப் பிராகாரத்தில் இருந்த சிவலிங்கத் திருமேனியில் சிலந்தி ஒன்று செல்ல, அதைக் கண்ட நீலநக்கரின் மனைவி விரைவாகத் தனது வாயால் ஊதி அந்த சிலந்தியை விரட்டினார். இதனால் பதறிப்போன நீலநக்க நாயனார், ஈசனை எச்சில் வாயால் ஊதி அவமதித்ததாகக் கூறி அவரை அங்கேயே விட்டுவிட்டுச் சென்றார். அன்றிரவே நாயனாரின் கனவில் தோன்றிய ஈசன், 'நாயனாரின் மனைவி வாயால் ஊதிய இடம் தவிர மற்ற எல்லா இடங்களும் கொப்புளங்களால் வெம்மை பெற்றிருப்பதாகவும், தன்பால் கொண்டிருந்த அன்பின் காரணமாக அப்படிச் செய்த மனைவியை ஏற்றுக்கொள்ளுமாறும்' கட்டளையிட்டார். இப்படி ஈசனிடம் மட்டற்ற பக்தியும் கனிவும் கொண்டவர் திருநீலநக்க நாயனார். திருநீலகண்ட யாழ்ப்பாணர் : திருஎருக்கத்தம்புலியூரில் பாணர் குலத்தில் பிறந்தவர். இசையால் ஈசனை மகிழ்விக்கும் திருப்பணியை செய்துவந்தவர். மதங்கசூளாமணி எனும் தனது மனைவியுடன் இணைந்து தலம்தோறும் சென்று இறைவனை இசையால் அர்ச்சித்து வந்தார். இவரது இசைக்கு மயங்கிய ஆலவாய் அண்ணல் சொக்கநாதர், இவரை கோயிலுக்குள் அழைத்து பொற்பலகையிட்டு இசைக்க வைத்தார். 'தரையில் இருந்து இசைத்தால் அவரது இசைக்கு இழுக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காகவே இந்தப் பொற்பலகையைக் கொடுத்தோம்' என்று அசரீரியாகத் தனது பக்தர்களுக்கும் எடுத்துச் சொல்லி, பாணரின் இசைத் திறமையை புகழ்ந்தார் ஈசன். சீர்காழியில் திருஞானசம்பந்தரைக் கண்டு வணங்கி, அவருடைய பாடல்களை இசைத்து இறைவனை வழிபட்டு வந்தார். முருக நாயனார் : சோழ நாட்டின் திருப்புகலூரில் அவதரித்த நாயனார் இவர். திருப்புகலூர் வர்த்தமானீச்சுரத் திருக்கோயில் நந்தவனத்தைப் பராமரித்து, அங்கு மலர்ந்த பூக்களைக் கொய்து, மலர் மாலைகளாக்கி ஈசனுக்கு அணிவித்து சேவை செய்து வந்தார் முருகனார். கோயிலின் திருமடத்தில் தங்கி சேவை செய்து வந்த இவரைக் காண திருநாவுக்கரசர் பெருமானும், திருஞானசம்பந்தரும், திருநீலகண்ட யாழ்ப்பாணரும் ஒருசேர வந்திருந்தார்கள். அவர்களைக் காண திருநீலநக்கர், சிறுத்தொண்டர் ஆகிய நாயன்மாரும் வந்து மடத்தில் தங்கி இருந்தார்கள். அவர்களோடு அன்பால் இணைந்த முருக நாயனார் பெரிதும் மகிழ்ந்தார். இந்த நிலையில், பெற்றோர்களின் வற்புறுத்தலால் திருமணத்துக்கு சம்மதித்தார் ஞானசம்பந்தப் பெருமான். திருநல்லூர் பெருமணம் திருத்தலத்தில் ஞானசம்பந்தருக்குப் பெண் அழைப்பு நடைபெற்றது. இதில் சம்பந்தரின் உறவினர்களோடு முருக நாயனார், திருநீலநக்க நாயனார், திருநீலகண்ட யாழ்ப்பாணரும் கலந்துகொண்டார்கள். அப்போது தனது அவதார நோக்கம் முடிவடைந்ததை உணர்ந்துகொண்ட சம்பந்தப் பெருமான், சிவலோகத் தியாகேசர் திருக்கோயிலில் நெக்குருகி 'நமசிவாயத் திருப்பதிகம்' எனும் பாடல்களைப் பாடினார். ``காதலாகிக் கசிந்து கண்ணீர்மல்கி ஓதுவார்தமை நன்னெறிக் குய்ப்பது வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது நாதன் நாமம் நமச்சிவாயவே' என்று தொடங்கிய பதிகத்தின் முடிவில், பெரும் ஜோதிப் பிழம்பொன்று தோன்றியது. உடனே சம்பந்தரும் அவரோடு வந்த கூட்டத்தாரும் சிவனின் கருணையை எண்ணி வியந்து, பஞ்சாட்சரம் ஓதியவாறு ஜோதியில் கலந்தனர். அந்த நாள் வைகாசி மூலத்திருநாள். சம்பந்தருடன் இணைந்து திருநீலகண்ட யாழ்ப்பாணர், முருக நாயனார், திருநீலக்க நாயனார் ஆகிய நாயன்மார்கள் தனது குடும்பத்தாரோடு ஒரே நாளில்,ஒரே இடத்தில் ஈசனின் திருவடியை அடைந்தார்கள். அதனால் திருநல்லூர் பெருமணம் சிவலோகத் தியாகேசர் ஆலயத்தில் திருஞானசம்பந்தரின் திருமண திருவிழா இந்த நாளில் நடைபெறுகிறது. ' இந்த திருமணத்துக்கு வந்திருந்து ஆசீர்வதித்து அம்பிகை திருநீறு அளித்தார்' என்ற ஐதீகத்தால் இன்றும் இந்த ஆலயத்தில் திருவெண்ணீற்று உமையம்மை சந்நிதியில் குங்குமத்துக்குப் பதிலாக திருநீறே அளிக்கப்படுகிறது. இயன்றவர்கள் இன்று இந்த ஆலயத்துக்குச் சென்று இந்த நான்கு நாயன்மார்களோடு சிவசக்தி தம்பதியையும் தரிசித்து வாருங்கள். மங்கள வாழ்வும், முக்திக்கான வழியும் கிடைக்கும் என்பது ஐதீகம். 🚩🕉🪷🙏🏼 #🙏🏼ஓம் நமசிவாய #🙏ஆன்மீகம் #🙏ஆன்மீக குருக்கள்🧘🏿‍♂️ #63 நாயன்மார்கள் வரலாறு #🙏🌹பாரதபூமி🌹🙏🌹சித்தர்கள் பூமி🌹🙏புண்ணியபூமி🌹🙏
19 likes
10 shares
ரவிசங்கர் ராஜா, ஆரணி
663 views 1 days ago AI indicator
இன்று(2-6-26)வைகாசி மாதம் மூலம் நட்சத்திரத்தில் திருநீலநக்க நாயனார் முக்தியடைந்ததை முன்னிட்டு திருநீலநக்க நாயனார் வரலாறு பற்றிய சிறப்பு பதிவு! திருநீலநக்க நாயனார் புராணம் "ஒலிபுனல்சூழ் சாத்தமங்கை நீலநக்கற்கு அடியேன்" "திருஞானசம்பந்தரின் திருமணத்தை தரிசித்து சிவப்பேற்றை அடைந்த மறையவர்." “இறைவரோ தொண்டருள் ஒடுக்கம் தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே” சிவத்தை அறிந்து கொள்ள விரும்புகிறவர்கள் முதலில் அவரின் அடியார்களின் பெருமையை உணர வேண்டும். சிவ அடியார்களின் பெருமையை எடுத்துரைக்கவே சேக்கிழார் பெரிய புராணத்தை எழுதினார். அறுபத்தி மூன்று நாயன்மார்களின் புகழை அறுபத்தி நான்காம் ஒருவர் தொகுத்தே இது. நாயன்மார்கள் மொத்தம் 63 பேர். தொகை அடியார்கள் 9 பேர். இவர்களையெல்லாம் நமக்கு அறிமுகம் செய்து வைத்த மிகப்பெரிய அரிய பணியைச் செய்தவர் சேக்கிழார் பெருமான். திருநீலநக்க நாயனார் புராணம்: "மனைவியார் செய்த அன்பினை மனத்தினில் கொள்ளார் புனையும் நூல்மணி மார்பர் தம் பூசனைத் திறத்தில் இனைய செய்கை இங்கு அநுசிதமாம் என எண்ணும் நினைவினால் அவர் தம்மை விட்டு அகன்றிட நீப்பார்." பாடல் விளக்கம்: மனைவியார் செய்த செயலில் உள்ள அன்பை மனத்தில் கொள்ளாதவராய முந்நூல் அணிந்த மார்பினராய திருநீல நக்கர், இது தகாத செயலாகும் என்ற எண்ணங் கொண்டதனால், அம்மனைவியார் தம்மை விட்டு நீங்குமாறு துறப்பவர். இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ அயவந்தீஸ்வரர் இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ இருமலர்க்கண்ணம்மை அவதாரத் தலம் : சீயாத்தமங்கை (திருச்சாத்தமங்கை) முக்தி தலம் : ஆச்சாள்புரம் குருபூஜை நாள் : வைகாசி - மூலம் பொன்னியாறு எந்நாளும் பொய்க்காமல் தரும் நீரால் வளம் கொழிக்கும் சோழ நாட்டில் திருச்சாத்தமங்கை அøமந்துள்ளது. அங்குள்ள செந்நெல் விளைந்து முதிர்ந்து நிற்கும். வயல்களில் மலர்ந்திருக்கும் தாமரைப் மொட்டின் மீது கயல் மீன்கள் துள்ளித் துள்ளிப் புரண்டு விளையாடும். எழில் மிகும் தாமரைத் தடாகங்களில் அன்னம் போன்ற நடைபயிலும், வண்ணப் பெருநிலவு முகத்துச் செந்தழிப் பெண்கள் நீராடும் போது அன்னப் பறவைகளும் அவர்களுடன் வந்து கலந்து நீராடும். பிரம்ம தேவன் எம்பெருமானைப் போற்றி வழிபட்ட திருத்தலமாதலால் இததிருப்பெயர் ஏற்பட்டது என்பது புராண வரலாறு. இத்ததைய பல்வளமிக்கத் திருநகரில் எம்பெருமான் எழுந்தருளியுள்ள கோயிலுக்கு அயவந்தி என்று பெயர். இக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானுக்கு அயவந்திநாதர் என்று பெயர். எம்பெருமானின் பிராட்டியாருக்கு மலர்க் கண்ணியம்மை என்பது திருநாமம். இத்திருத்தலத்தில் வாழ்ந்து வரும் வேதியர்கள் அயவந்திநாதர் மலர்ப்பாதங்களில் இடையறாது பக்தி பூண்டெழுகி வந்தனர். எந்நேரமும் வேத பாராயணம் செய்வர். திருவெண்ணீற்றின் பெருமையை உணர்ந்த இம்மறையவர்கள் மூன்று வகையான வைதீகத் தீயை வளர்ப்பர். இம்மறையவர்களார் மனைத்தக்க மாண்பு உடைய மாதர்களும், தங்களுக்கே உரித்தான நான்காவது தியாகக் கற்புத் தீயையும் வளர்ப்பர். இம்மறையவர்களிடம், அந்தணச் சிறுவர்கள் வேதம் பயில்கின்றபொழுது, சாம வேதம் பாடுகின்ற பூவை என்கிற நாகணவாய்ப் பறவைகள் தாமும் இவ்வேதங்களைத் தம் குஞ்சுகளுக்குக் கற்பிக்கும். சில சமயங்களில் அந்தணச் சிறுவர்கள் வேதம் பயி்ல்கின்ற போது சற்று பிழையாகக் கூறிவிட்டாலும் உடனே இப்பூவைப் பறவைகள் அச்சிறுவர்களின் தவற்றைத் திருத்திக் கூறவும் செய்கின்றன. இத்தகைய சீர்மீக்கத் திருச்சாத்த மங்கையில், சீலமிக்க வேதியர் மரபில் ஆலமுண்ட அண்ணல்பால் அடிமைத் திற பூண்டவராக விளங்கியவர்தான் திருநீலநக்க நாயனார். இவ்வடியார் வேத நூல்கள் மொழிவதற்கு ஏற்ப எம்பெருமானுக்கும், எம்பெருமான் அடியவர்களுக்கும் திருத்தொண்டுகள் யாவும் புரிந்து நாடோறும் சிவகாம விதிப்படி சிவபெருமானைப் பூசித்து வந்தார். இவ்வாறு நாயனார், ஒழுகிவரும் நாளில் எம்பெருமானுக்கு உகந்த திருவாதிரை நன்னாள் வந்தது. திருநீலநக்க நாயனார் வழக்கம் போல் தமது மாளிகையி்ல் முறைப்படி இறைவழிபாட்டை முடித்துக் கொண்டு அயவந்திநாதரைத் தரிசித்து வர எண்ணினார். மனைவியாரை அழைத்துக்கொண்டு வழிபாட்டிற்குத் தேவையான பொருள்கள் அனைத்தையும் குறைவர எடுத்துக் கொண்டு புறப்பட்டார். கோயிலை அடைந்த இச்சிவதம்பதிகள் ஆலயத்தை வலம் வந்து அயவந்தி நாதரையும் மலர்க் கண்ணியம்மையாரையும் வழிபட்டு சிவபூஜையைத் தொடங்கினர். அது சமயம் அம்மையார் இறைவழிபாட்டுப் பெருள்களை அவ்வப்போது குறிப்பறிந்து கணவருக்கு எடுத்துக் கொடுத்தார். நாயனார் அயவந்திநாதரின் திருவடித் தாமரைகளை வணங்கிப் பூசனை செய்தார், அப்பொழுது, அயவந்திநாதரின் பொன்னாற்மேனிதனில், சுதைச் சிலந்தி ஒன்று, தன் நிலையினின்றும் தவறி வந்து விழுந்தது. அதுகண்டு அம்மையார் மனம் துடிதுடித்துப் போனார். இறைவன் திருமேனியில புண் ஏற்பட்டு விடுமே! என்று அம்மையார் இதயம் புண்பட்டுத் துயறுற்றார். அம்மையார் உள்ளத்தில் அச்சம் ஏற்பட்டது. அம்மையார் அச்சத்தோடும், அன்போடும், விரைந்து எழுந்து சிவலிங்கத் திருமேனியில் நின்றும் அச்சிலந்தி விலகிப்போகும் வண்ணம் வாயினால் ஊதித் திருமேனிக்குப் பங்கம் வராமல் காத்தார். அவ்வமயம் எதிர்பாராமல் சற்று உமிழ் நீரும் சிலலிங்கத் திருமேனியில் பட்டுவிட்டது. இளங்குழந்தையைப் பராமரிக்கும் தாயைப்போல் சிவலிங்கத்தை அம்மையார் இங்ஙனம் ஊதி உமிழ்ந்தார் என்பதை உணர முடியாத நாயனார் அம்மையார் அரனாருக்கு ஏதோ அபசாரம் விளைவித்ததாக எண்ணினார். ஆத்திரத்தோடு அறிவிலியே! என் ஐயனுக்கு எனன அபசாரம் செய்தாய் என்று கேட்டார் நாயனார். கணவரின் கடுமொழி கேட்டுச் சினம் கொள்ளாமல் மனைவியார், ஐயன் மீது சிலந்தி விழுந்ததால், ஊதிப் போக்கினேன் என விடையளித்தார். மனைவியின் மொழி கேட்டு மேலும் ஆத்திரம் கொண்ட நாயனார், நன்று நீ பேசுவது! இறைவன் திருமேனியில் சிலந்தி விழுந்தால் அதற்கென இத்தகைய அபச்சாரமான செயலைக் செய்வதா? சிலந்தி விழுந்தால் அந்த இடத்தை வேறு வகையால் போக்குவதை விட்டு விட்டு வாயால் ஊதி உமிழ்வதா? என இறைவனுக்கு இத்தகைய பெருந்தவறு செய்த உன்னோடு எங்ஙனம் வாழ்வேன்? இக்கணமே உன்னைத் துறந்தேன்! என்று கூறியதோடல்லாமல் பூஜையையும் முடிக்காமல் வேக வேகமாக வீட்டிற்கு போனார். அவரது மனைவியாரோ மன வேதனை மேலிட செய்வதறியாது இறைவன் கோயிலிலேயே தங்கி விட்டார். சிவபூஜையில் கரடி புகுந்தாற்போல்,தன்னால் இன்று பூஜை தடைபட்டதே என்று கலங்கினார்; எம்பெருமானிடம் பிழை பொருத்தருள பிரார்த்தித்தார் அடியவரின் மனைவியார். அம்மையார் இரவு முழுவதும் விழித்துக் கொண்டு ஆலயத்திலேயே தங்கியிருக்க, நாயனார் வீட்டிற்குச் சென்று துயின்றார். அன்றிரவு எம்பெருமான் நாயனார் கனவிலே எழுந்தருளி, தொண்டனே! இதோ என் உடம்பைப் பார். உன் வாழ்க்கைத் துணைவி ஊதிய இடந்தவிர மற்றைய இடங்களிலெல்லாம் கொப்புளங்கள் தோன்றியிருப்பதைக் காண்பாயாக! என்று திருவாய் மலர்ந்து தமது வெண்ணீறு அணிந்த மேனியிலே இருக்கும் கொப்புளங்களைக் காட்டி மறைந்தார் எம்பெருமான்! நாயனார் கனவு கலைந்து திடுக்கிட்டு விழித்தார். தம் தவற்றை எண்ணி வருந்தினார். ஆலயத்தை நோக்கி ஓடினார். அரனாரை வீழ்ந்து வணங்கி எழுந்து தன் தவற்றை எண்ணி மனம் வாடினார். ஆலயத்தின் வெளிப்பிரகாரத்தில் தூணில் சாய்ந்த வண்ணம் உறங்காமல் அமர்ந்திருக்கும் மனைவியைக் கண்டார். மனைவியும் கணவனைப் பார்ததார். நாயனார் மனைவியிடம் கனவிலே பெருமான் திருவாய் மலர்ந்ததையும், தான் இறைவனின் புண்பட்ட திருமேனியைத் தரிசித்ததையும் சொல்லி மனைவியிடம் மன்னிப்புக் கேட்டார். மனைவியை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தார் நாயனார். இல்லறத்தை முன்போல் இனிது நடத்தலாயினார். இங்ஙனம் இவர்கள் வாழ்ந்து வரும் நாளில் திருஞானசம்பந்தர் தமது அடியார் கூட்டத்தோடு திருத்தலங்கள் பலவற்றைத் தரிசித்துக்கொண்டே திருச்சாந்தமங்கையை நோக்கிப் புறப்பட்டார். திருஞானசம்பந்தருடன், திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனாரும், அவருடைய மனைவியாராகிய மதங்க சூளாமணி அம்மையாரும் வந்து கொண்டிருந்தனர். திருநீலநக்க நாயனார், மேளதாளத்துடன் அன்பர்கள் புடைசூழ ஆளுடைப் பிள்ளையையும், அடியார்களையும் எல்லையிலே பூரண பொற்கும்ப கலசங்களோடு எதிர்கொண்டு வரவேற்று வணங்கி தமது திருமாளிகைக்கு அழைத்து வந்தார். திருஞானசம்பந்தருக்கும் திருக்கூட்டத்தாருக்கும் திருவமுது செய்வித்து மகிழ்ந்தார். இரவு தமது திருமாளிகையிலே துயிலுமாறு ஏற்பாடு செய்தார். திருஞானசம்பந்தர் தம்முடன் வந்திருக்கும் பாணருக்கும், அவர் தம் வாழ்க்கைத் துணைடியாருக்கும் அன்றிரவு அங்கேயே தங்க இடம் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதும் நாயனார் அவர்களை இழி குலத்தோர் என்று கூடக் கருதாமல் வேள்வி நடத்தும் இடத்திலேயே துயில்வதற்குப் படுக்கை அமைத்துக் கொடுத்தார். ஞானசம்பந்தர் அயவந்தி அண்ணலைப் பணிந்து பாடிய திருப்பாசுரத்தில் திருநீலநக்கரின் இத்தகைய உயர்ந்த திருத்தொண்டையும் சிறப்பித்துக் கூறியுள்ளார். திருஞானசம்பந்தர் அயவந்தி நாதரின் அருளைப் பெற்றுப் புறப்பட்ட போது திருநீலநக்க நாயனார் அவரைப் பிரிய மனமில்லாமல் அவரோடு புறப்பட்டார். திருஞானசம்பந்தர் அன்பு மேலிட, நீவிர் எம்முடன் வருவது ஏற்றதல்ல! இங்கேயே தங்கியிருந்து அயவந்தி நாதருக்கு திருத்தொண்டு பல புரிந்து நலம் பெறுவீராக! என்று அன்பு கட்டளையிட்டார். திருஞானசம்பந்தரின் தரிசனத்தால் அவர் மீது திருநீலநக்க நாயனாருக்கு ஏற்பட்ட பக்திக்கும் அன்பிற்கும் எல்லை ஏது? அல்லும் பகலும் அவ்வடியார் ஞானசம்பந்தர் நினைவாகவே இருந்து வந்தார். பெருமண நல்லூரி்ல் நிகழும் ஞானசம்பந்தரின் திருமணத்தினைக் கண்டுகளிக்கச் சென்றார். அங்கு தோன்றி சிவஜோதியி்ல மனைவியாருடன் கலந்து சிவபெருமானுடைய திருவடி நிழலை அடைந்தார். திருநீலநக்க நாயனார் வைகாசி மாதம் மூல நட்சத்திரத்தில் முக்தி அடைந்தார். திருநீலநக்க நாயனாரின் குருபூஜை வைகாசி மாதம் மூலம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. 🚩🕉🪷🙏🏼 #🙏🏼ஓம் நமசிவாய #🙏ஆன்மீகம் #🙏ஆன்மீக குருக்கள்🧘🏿‍♂️ #63 நாயன்மார்கள் வரலாறு #🙏🌹பாரதபூமி🌹🙏🌹சித்தர்கள் பூமி🌹🙏புண்ணியபூமி🌹🙏
4 likes
14 shares