#அய்யா வைகுண்டர் #🚩அய்யா வைகுண்டர் 🚩 #💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர் {1008} #Ayya Vaikundar .கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஏழாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 02.03.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
.
அகிலம்
=======
உடனேதான் லட்சுமியும் உரைக்கிறா ளாதியுடன்
திடமான கோவே செய்ய மணிவிளக்கே
என்னை மகரச் சிலைபோல் பிறவிசெய்ய
என்ன விதமாய் இசைவீர்கா ணென்கோவே
என்றுரைக்க அம்மை ஏதுரைப்பா ரெம்பெருமாள்
நன்றுநன்று பெண்ணே நமக்குத்தொழி லோகடிது
அலையி லுனையும் ஆமதியப் பொன்மகரச்
சிலைபோல் வளருவெனச் சிந்தித்தா ரெம்பெருமாள்
வடகயிலை வாசலிலே வந்தலைந்த வாரிதிரை
மடமடென வந்து வாரியெடுத் தாயிழையைச்
செந்தூ ரலைவாரி திரைமே லெடுத்திருத்தி
அந்தூரு வாரி அம்மை தனையெடுத்துச்
சந்தன வாரி சமுத்திரத்தி னுள்ளிருத்திப்
பந்தியாய் வைத்த பரமமணிக் கோட்டையதுள்
தெய்வரம்பை சூழத் தேவரெல்லா மோலமிட
மெய்பரமக் கன்னியர்கள் மிகுவாய்க் குரவையிட
இடம்மான மெக்காளம் டகுடகா வென்றிடவே
மடம்மான வாத்தியங்கள் மடமடென வேயதிர
வலம்புரிக ளெல்லாம் மாதுவந்தா ளென்றூத
சிலம்புனைந்த ரத்தினங்கள் சில்விளக் கேந்திநிற்க
முத்துகள் சிப்பி முன்வந் தொளிவீச
கொத்துக் கொத்தாகக் கோமேதகஞ் சூழ
கன்னிமா ரெல்லாம் கால்கவரி வீசிநிற்க
தன்னிகரில் லாமறையோர் சாஸ்திரங்க ளோதிநிற்க
மகரச் சிலையாள் மாதுதிரு லட்சுமியாள்
சிகரகோ புரத்தாள் திருவுருவந் தான்வளர்ந்தாள்
பார்பதி மாதுமையும் பரமேஸ்வரித் தாயும்
சீர்பதியு மங்கே தினமூன்று நேரம்வர
ஈஸ்வரனும் வேதா இவர்கள் தினம்வரவே
வாசவனும் வானவரும் வந்துநிதம் போற்றிசெய்ய
செய்ய அமரரெல்லாம் சிவசிவா வென்றுநிற்க
வெய்யவனுஞ் சந்திரனும் மெல்லிபதம் போற்றிநிற்க
புஷ்ப மலர்தூவிப் பொன்னுலகத் தோர்சூழ
செப்பமுள்ள மகரச் சிலைபோல் திருவளர்ந்தாள்
.
விளக்கம்
=========
உடனே மகாலட்சுமி மகாவிஷ்ணுவைப் பார்த்து, மனம் சலனமில்லாத மாமன்னரே ! மாசில்லா மணிவிளக்கே ! என்னை மகரச்சிலை போல் பிறவி செய்வதற்குத் தாங்கள் என்ன உபாயத்தைக் கையாளுவீர்கள் மன்னவரே என்று கேட்டாள்.
.
இந்தக் கேள்வியிலேயே மகாலட்சுமியின் சம்மதத்தை உணர்ந்த மகாவிஷ்ணு, நன்று என் நாயகியே ! எந்த தொழில் எனக்குக் கஷ்டமானது ? எல்லாத் தொழிலுமே எமக்கு எளிதேயாகும் என்று சொல்லிக்கொண்டே, அலைமகளான மகாலட்சுமி அரியதோர் பொன் மகரச் சிலைபோலக் கடலுக்குல் வளர்க என்று தம் மனதிலே நினைத்தார்.
.
செப்படி வித்தை நாதன் இப்படி சிந்தித்த மறுகணமே, கடல் அலைகள், வடகயிலையில் இருந்து கொண்டிருந்த அன்னை மகாலட்சுமியை ஆவி அணைத்து, தம்மீது அமரவைத்து திருச்செந்தூர் கடலினுள் சந்தன வாரி சமுத்திரத்தில் கொண்டு சேர்த்தது.
.
அங்கே ஒழுங்குற அமைக்கப்பெற்றிருந்த பரமமணிக் கோட்டைக்குள், தெய்வ ரம்பையர்கள் புடை சூழ்ந்திருக்க, தேவர்களெல்லாம் அபயமிட்டு அடைக்கலமாயினர். மெய்பரமக் கன்னியரெல்லாம் பொலிபோடு குரவையிட்டனர். ஏழுவகை வாத்தியங்கள் எங்கும் ஒலி பரப்பிய வண்ணமாயின.
.
வலம்புரிச் சங்குகளோ அன்னை வந்தானென்று ஓம்கார நாதத்தை ஒலித்துக்கொண்டு இருந்தன. சிலம்புனைந்த ரத்தினங்களோ, தம்மை விளக்காகப் பாவித்து வேண்டிய வெளிச்சத்தைப் பிரகாசித்தன. சிப்பிக்குள்ளிருந்த முத்துக்களெல்லாம் லட்சுமிதேவியின் திருமுன் வந்து நின்று ஒளி வீசிக்கொண்டிருந்தது. கோமேதகங்களோ திரள் திரளாக வந்து சூழ்ந்தன. கன்னிமாரெல்லாம் வெண்சாமரம் வீசிக்கொண்டிருந்தனர்.
.
தமக்கு நிகர் எவருமில்லாத அளவில் முற்றும் உணர்ந்த முனிவர்களெல்லாம் சம்பிரதாயப்படி சாஸ்திரங்களை வாசித்துக் கொண்டிருந்தனர்.
.
இத்தகு ஏற்றமிகு சிறப்புகளெல்லாம் இயல்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, அலைமகளான அன்னை மகாலட்சுமிதேவி மகரச் சிலை மாதுவாக, உயர்ந்த கோபுரமாக திருஉருவம் பெற்று நின்றாள்.
.
அப்போது அங்கே பார்வதி, உமையவள், பரமேஸ்வரித்தாய் என்றெல்லாம் போற்றப்படும் இறைவியும், ஈசனும், பிரம்மதேவனும், இந்திரன் முதலான வானவர்களும் தினந்தோறும் வந்து, மகரச் சிலையாக வளர்ந்து கொண்டிருக்கும் மகாலட்சுமிதேவியைப் போற்றி வந்தனர்.
.
மேன்மை பொருந்திய வானவர்களெல்லாம் சிவசிவா என்று சொல்லிக்கொண்டேயிருக்க, சூரியனும், சந்திரனும், மகர மாதுவின் மலர்ப்பாதம் போற்றிநிற்க, தேவலோகத்தோரெல்லாம் சூழ்ந்து நின்று மலர் மாரி சொரிந்த வண்ணமாயிருக்க அழகு மிளிரும் அபூர்வமான மகரச் சிலைபோல் திருமகளாகிய அன்னை மகாலட்சுமி வளர்ந்து கொணடேயிருந்தாள்.
.
கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஏழாம் நாள் வாசிப்பு நிறைவு பெற்றது.... தொடரும்... அய்யா உண்டு.