D Muthu Prakash, Kanchipuram 💐
675 views
கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஆறாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 04.02.2026. . அய்யா துணை . தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர். . அகிலம் ======== மத்திய நாதன் மனமகிழ்ந் தேதுசொல்வார் நல்லதுதா னென்று நாட்டமுற் றெம்பெருமாள் வல்ல பரமே சுரரோ டேவகிர்வார் கன்மம்போ லொத்தக் கலிப்பிறப் பானதினால் நம்மள் முதல்மாறிப் பிறக்கநா ளாகுதுகாண் ஆனதா லீசுரரே அருளுகிறேன் நீர்கேளும் ஈனமுள்ள பாவி இயன்றதுரி யோதனனைக் கொன்றே னவனைக் குருநாடை வர்க்கீந்து முன்னே மறையோன் மொழிந்தசா பத்தாலே தேவர்முதல் வானோர் தேவமுனி தான்வரையும் மூவ ருறையும் உற்றதெய்வ லோகமேழும் மேலோர்க ளெல்லாம் மேதினியி லென்றனக்குப் பூலோகந் தன்னில் பிள்ளையென வேபிறக்க வேணுமென்று மாமுனிவன் விட்டசா பத்தாலே தாணுவே நீரறியத் தாம்பிறந்தார் சாணாராய் ஏழுலோ கமதிலும் ஏற்றமுள்ள வித்தெடுத்துக் கீழுலகில் பெற்றேன் கீர்த்தியுள்ள சாணாராய்ப் பெற்றுவைத்து ஸ்ரீரங்கப் பூமியிலே போயிருந்தேன் . விளக்கம் ========= ஈசர் முதலான எல்லாரும் சேர்ந்து, உங்கள் எண்ணப்படியே எங்களையும் இந்த உலகத்தையும் இயக்குங்கள் என்று சொன்னதைக் கேட்டு மகிழ்ச்சியுற்ற மாயோன், இதுவும் ஒருவகையில் நல்லதுதான் என்று நினைத்தபடியே சிவபெருமானிடம் சில செய்திகளை உரையாடினார். . பாவ வினை போன்ற கலியுகம் பிறந்திருப்பதால் நாமெல்லாங் கூட இந்த கலியுகத்தில் பிறந்தாக வேண்டிய காலம் அடுத்து விட்டது. எனவே, ஈசுரரே நான் சொல்லுகின்ற செய்தியைக் கவனமாகக் கேளுங்கள். . கெடுமதியாளனான பாவி துரியோதனனைக் கொன்று அவன் பஞ்சபாண்டவர்களிடமிருந்து அபகரித்து ஆண்ட குருநாட்டை மீட்டு பாண்டவர்களிடம் ஒப்படைத்துவிட்டு. நான் ஸ்ரீரங்கம் செல்லும்போது, விண்ணுலகம் ஏழிலுமுள்ள தேவர்களெல்லாம் மண்ணுலகத்தில் விஷ்ணுவின் பிள்ளைகளாகப் பிறப்பார்கள் என்று, முன்பொருகால் யோக முனிவர் இட்ட சாபத்தின் காரணமாகச் சப்தமாதர்களின் மூலமாகத் தாங்களும் அறியும்படி ஏழு லோகத்திலும் ஏற்றமுள்ள வித்தெடுத்து பூமியிலே மனிதர்களாய்ப் பிறப்பித்தோம். பிறந்த அந்த பிள்ளைகளுக்கு தேவசங்கங்கூடி பெருமையோடு பெயரிட்டு கீர்த்தியுள்ள சான்றோராய் தரணியிலே வாழுங்கள் என்று வாழ்த்தி வைத்து விட்டு ஸ்ரீரங்கத்திலே போயிருந்தேன். . . அகிலம் ======= மற்றுஞ்சில நாட்கழித்து வாழுந் தியதிதனில் அனந்த புரம்நோக்கி யானேகும் வேளையிலே புனந்தனிலே நின்று புலம்பலுற்றார் தேவர்களும் தெய்வலோ கத்திலுள்ள தேவதே வாதிகளும் வைகுண்ட லோகமதில் வாழுகின்ற தர்மிகளும் சிவலோகம் வாழும் சிட்டர்முதல் வானவரும் தவமான வேதாவின் தன்னுகத்தில் வாழ்பவரும் வடகயி லாசமதில் வந்திருந்தார் வாட்டமதாய் நடக்கும் வழியில் நானவரைக் கண்டேதான் தாது கரமணிந்த தானவரே தர்மிகளே ஏதுகா ணீங்கள் இங்குவரக் காரணமேன் என்றவரோ டேகேட்டேன் ஈசுரரே கேட்டருளும் அன்றவர்க ளென்னோடே அருளினதை நீர்கேளும் கலியன் பிறந்ததினால் கட்டழிந்து மானுபங்கள் சலிவாகி எங்களுட தானதவங் குன்றினதால் இனியிருந்தா லென்னபலன் என்றுமிக எண்ணமுற்றுக் கனிந்து வுமைத்தேடிக் காணவந்தோ மென்றுரைத்தார் . விளக்கம் ========= ஸ்ரீரங்கத்தில் சிறிது காலம் இருந்த நான் அங்கிருந்து புறப்பட்டுத் திருவனந்தபுரம் நோக்கிச் சென்று கொண்டிருந்தேன். நான் போய்க் கொண்டிருந்த வேளையில், தெய்வ லோகத்திலுள்ள தேவர்களும் வைகுண்டலோகத்தில் வாழுகின்ற தர்மிகளும், சிவலோக வாசிகளான சித்தர்களும், வானவர்களும், பிரம்மலோகத்தைச் சேர்ந்த தபோதனர்களும் வட கயிலாசத்தில் மனவாட்டத்தோடு என்னை நினைத்துத் தவமிருந்தார்கள். . அவர்கள் அப்படித் தவமிருப்பதை உணர்ந்த நான் அவர்களிடம் சென்று, நீங்களெல்லாம் இங்கே வந்து மனக்கவலையோடு இருப்பதற்கு என்ன காரணம் என்று கேட்டேன். என்னுடைய அந்தக் கேள்விக்கு அவர்களெல்லாம் சொன்ன பதிலை அப்படியே சொல்லகிறேன் ஈசுரரே தாங்கள் கவனமாக கேட்டருளுங்கள். . சுவாமி ! இந்த உலகத்திற்குக் கேடு விளைவிக்கும் கபடமான கலி பிறந்துவிட்டதால், இதற்கு முன்பிருந்த மனுதர்மம், மனச்சாட்சி, மனதநேயம், விசுவாசம், நம்பிக்கை போன்ற நற்குணங்கள் யாவும் கட்டழிந்து நிலைகுலைந்து தடுமாற்றமாகி விட்டது. . ஆகவே நாங்கள் இது காலம் வரைக்கும் கட்டிக்காத்து வந்த தான தவங்களும் மானம், மரியாதைகளும் எங்களை விட்டு கொஞ்சங் கொஞ்சமாக நழுவிப்போவதைப் போல் உணருகிறோம். எனவே, இனி இங்கிருந்து எப்பலனும் நம்மிடம் நிலைத்து நிற்காது என்று எண்ணின, இந்த நிலைமைகளுக்கு விடிவாகிய தங்களை கனிவோடு தேடிய வண்ணம் தங்கள் வருகைக்காகக் காத்திருக்கிறோம் என்று அந்த தேவர்களும், தர்மிகளும், சித்தர் முதலான வானவர்களும், தபோதனர்களும் என்னிடம் சொன்னார்கள் என்ற செய்திகளை மகாவிஷ்ணு சிவபெருமானிடம் தொடர்ந்து சொல்லிக் கொண்டேயிருக்கிறார். . . அகிலம் ======= அப்போது வுங்களுக்கு ஆகவேண் டியவளம் இப்போதே சொல்லும் என்றேகேட்டேன் தேவருடன் சொல்லுகிறா ரந்தத் தேவர்கள்தா மீசுரரே நல்லதுதா னிந்த நாட்டில்கலி வந்ததினால் கலிக்குமுன் னுள்ளதுவும் கலியில்மிகக் கண்டதுவும் அலிக்கிய மானதினால் அக்கலிமா ளும்போது சிவசத்தி தான்முதலாய்ச் சீவனுள்ள செந்துகளும் தவமுனிவ ராகிடினும் தரணி புற்பூண்டுவரை மட்டை மருந்திலையும் மலைகடலும் வாசுகியும் திட்டமுடன் நாரணர்க்குச் சிந்தையொத்த பேர்களெல்லாம் மேனி யழுக்கறுத்து மேன்மூ டிருளறுத்து யோனிப் பிறப்பும் உற்றலிங் கப்பிறப்பும் அவரவர்க் குள்ள அதிகப் பிறப்போடும் எவரெவர்க்கும் பூமியொன்றில் இனிப்பிறக்க வேணுமல்லோ ஆகும் பிறப்பும் ஆகுவது மிந்நாளில் சாகும் பிறப்புத் தவறுவது மிந்நாளில் அப்படியே நீசன் அவன்பிறந்தத் தோசமதால் எப்படியும் ரண்டிலொன்று ஆகுவது திட்டமுண்டே ஆனதா லெங்களுட அக்கமதி லிப்போது மானமாய்ச் சான்றோராய் வகிருமென்றா ரீசுரரே கொஞ்சம் பொறுவுமென்று கூறிவந் தேன்முன்னமே இஞ்சொல் பார்க்கும்போது இவ்வுலகி லுள்ளோரைப் பிறவிசெய்ய ஞாயமுண்டு பிள்ளைமொழி சொன்னதினால் திறவி முதற்பொருளே செய்தியென்ன சொல்லுமென்றார் அப்போது ஈசுரரும் அச்சுதரைத் தான்பார்த்து இப்போது மைத்துனரே யானென்ன சொல்வதுதான் நீர்நினைத்த துபோலே நிச்சயித்துக் கொள்ளுமென்றார் பாரனைத்துங் காக்கும் பரமே சுரருரைத்தார் . விளக்கம் ========== உங்களுடைய வருகைக்காகத்தான் காத்திருக்கிறோம் என்று அவர்கள் சொனனதும், நான் அவர்களிடம் தேவர்களே ! தர்மிகளே ! சித்தர் முதலான வானவர்களே ! தபோதனர்களே ! உங்களுக்கெல்லாம் என் மூலமாக என்ன காரியம் ஆகவேண்டும் என்று உடனே சொல்லுங்கள் எனக் கேட்டேன். . அவர்களோ, என்னைப் பார்த்து, சுவாமி ! இந்த உலகில் கபடம் நிறைந்த கலியன் கொடூரம் அதிவேகமாக ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்துவிட்டது. ஆகவே, அற்பர்களுக்கெல்லாம் அதிக சந்தோசமாகிவிட்டது. எனவே, கலியுகம் பிறப்பதற்கு முன்பிருந்த நல்லொழுக்கங்களும், கலியுகம் பிறக்கும் போதிருந்த நியாய நடுக்களும் அலட்சியமாக்கப்பட்டு விட்டது. . ஆனதினால், இந்த இடறான கலிக்கு முடிவு ஏற்படும் காலத்தில், சிவபெருமானும், உமையவளும், மற்றுமுள்ள உயிரினங்களும், தவத்தினால் வலிமைபெற்ற முனிவர்கள் முதலாக இந்த உலகிலுள்ள புல், பூண்டு, மரம், மட்டை மூலிகைகள், மலைகள், கடல் மற்றும் பாம்பு முதலான ஊர்வனங்கள் யாவற்றிலும் தேர்வு செய்து. அதில் மகாவிஷ்ணுவின் மனதிற்கு உகந்த உத்தமத் தன்மையடையவற்றை தேர்ந்தெடுத்து, அவைகளின் உள்ளத்திலும் உடலிலுமுள்ள அழுக்கான ஊறல்களைக் கழுவிக் களைந்து, ஞான விழிப்புணர்வு பெறுவதற்குத் தடையாக இருக்கும் கெட்ட எண்ணங்களை அகற்றி, உயர்நிலை பெறுவதற்காக, அவரவர்க்கு ஏற்ற வகையில் பூலோகத்தில் ஏதேனும் ஒரு நாட்டில் பிறந்து ஆகவேண்டும் என்பது தானே விதி? அதற்கான காலம் இது தானே? . ஆகும் பிறப்பு ஆவதுவும் இப்போதுதான், சாகும் பிறப்புத் தவறுவதும் இப்போது தான். அந்த மோசமான கலியன் பிறந்த நீசத்தனத்தினால் இந்த இரண்டில் ஒன்று நடந்தேயாகும் என்ற திட்டம் ஏற்கெனவே உள்ளதுதானே. அந்தத் திட்டத்தின்படி எங்களைப் பிறவி செய்வதாகயிருந்தால், மானமுள்ள சான்றோராகப் பூவுலகிலே பிறவி செய்யுங்கள் என்று என்னிடத்தில் சொன்னார்கள். . அவர்களின் இந்த இணக்கமான விணணப்பத்திற்குப் பதிலாகக் கொஞ்சநாள் பொறுத்திருங்கள் என்று அன்று நான் கூறினேன். அன்று நான் இவர்களிடம் சொன்னதையும், இன்று இவர்கள் நடந்து கொண்ட முறைகளையும், இவர்களின் பேச்சையும் ஆராய்ந்து பார்க்கும்போது இவர்களையெல்லாம் இப்போதே பூலோகத்தில் பிறவி செய்வதற்கான நியாயமுண்டு. . ஆகவே, அனைத்திற்கும் காரணமான ஆதி முதற் பொருளான ஈசுரரே ! இனி உங்கள் கருத்தென்ன என்பதை எடுத்துரையுங்கள் என்று மகாவிஷ்ணு சிவபெருமானிடம் கேட்டார். . அதைக் கேட்ட சிவபெருமான், மகாவிஷ்ணுவைப் பார்த்து மைத்துனரே இப்பொழுது நான் சொல்வதற்கொன்றுமில்லை. தாங்கள் நிச்சயித்தபடியே நிறைவேற்றுங்கள் என்றார். . . தொடரும்... அய்யா உண்டு. #அய்யா வைகுண்டர் #Ayya Vaikundar #அய்யா வைகுண்டர் {1008} #🚩அய்யா வைகுண்டர் 🚩 #💚Ayya 💗 Vaikundar💚