கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் அய்யா வைகுண்டர் அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஐந்தாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 24.01.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
.
மகாவிஷ்ணுவின் புத்திமதிகளும் கலிநீசனின் மறுப்புரையும் தொடர்ச்சி...
=====================
பல்லுயிருக் கெல்லாம் படியளக்கு மாலோனும்
இத்தனையும் வேண்டி என்றனக்குப் பூசையது
நித்தமும்நீ செய்யெனவே நின்னோடு கேட்டேனோ
பூசைசெய்தாய் நீயும் பிராமண நம்பூரிகட்குத்
தேச மறியாதோ செப்பாதோ சாட்சியது
ஏற்கா திருப்பதற்கு ஏற்ற அடையாளம்
தெற்கே தலைவைத்துச் சென்றதுவுங் காணலையோ
பின்னுமந்தப் பூசை புனக்கார மானதெல்லாம்
பின்னுங் கடைச்சாதி புலச்சிகை யெச்சித்தீதான்
அறியலையோ நான்தான் அமுதேற் றிருப்பதுதான்
வெறிகொண்ட நீசா மேதினிகள் சொல்லாதோ
என்றந்த மாலும் இத்தனையுஞ் சொல்லிடவே
.
விளக்கம்
=========
உலகில் எல்லா உயிர்களுக்கும் பாகுபாடின்றி படியளந்து கொண்டிருக்கும் மகாவிஷ்ணு கலியரசனைப் பார்த்து கலியரசா ஏழை எளியவர்களையெல்லாம் கொடுமைப்படுத்திப் பணம் வசூலித்து தினந்தோறும் எனக்குப் பூசை செய் என்று உன்னிடம் நான் கேட்டோனோ?
.
நீ செய்த பூசையெல்லாம் பிராமணர்களுக்கும், நம்பூரிகளுக்கும்தான் என்பதை இந்த உலகம் அறியாதா? தேவைப்படும் நேரத்தில் அந்த விவரங்களை இந்த உலகத்தோர் சாட்சியாக நிரூபிக்கமாட்டார்கள் என்று நினைக்கிறாயா?
.
இது காலம்வரை நீ செய்த பூசைகளையெல்லாம் நான் ஏற்றுக்கொண்டிருந்தேன் என்று எண்ணுகிறாயா? நான் ஏற்கவில்லை என்பதற்கு உற்ற அடையாளத்தை உரைக்கிறேன் கேட்டுக்கொள்.
.
நீ என்னுடைய திரு உருவத்தைச் சிலையாக வடித்து வைத்திருக்கிறாயே அதைப் பார். தெற்கே தலை வைத்து எத்திக்கைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன் என்பதை அந்த நிலை உனக்கு உணர்த்தும்.
.
ஆனால் நான் இங்கே அமுதமாக ஏற்றுக் கொண்டிருந்தது எதைத் தெரியுமா? உன்னால் கடைச் சாதி என்று ஒதுக்கி வைத்திருக்கும் புலைச்சியின் கையினால் ஏற்றி வைக்கப்பட்ட தீபத்தை மட்டுமல்லாமல் என்னுடைய எவ்விதமான பூசை புனக்காரங்களையும் நான் ஏற்றுக் கொள்ளவில்லை.
.
இத்தகைய இந்த நிலவரங்களைப் பற்றிய உண்மைகளை இந்த உலகத்தோர் அறிவார்கள். பதவி வெறிபிடித்த பதரான உனக்கு அதை அறியும் ஆற்றலும் அருகதையும் சற்றேனும் இல்லை என்று கலியரசனின் கவனத்தைக் கவரும்படியாக மகாவிஷ்ணு எடுத்துரைத்தார்.
.
.
அகிலம்
========
அன்றந்த நீசன் அதற்கேது சொல்லலுற்றான்
நான்தந்த தொன்றும் நாவில்வைக்க வில்லையென்றால்
என்தொந் தமாக என்னோ டிருப்பதென்ன
போபோ நீதானும் போகு மிடந்தனிலே
நீபோ வெனவே நிகழ்த்தினான் மாயவரை
.
விளக்கம்
=========
மாயோன் உரைத்த செய்தி மாநீசனுக்கு அடுக்கவில்லை. எனவே, அந்த மாநீசன் மகாவிஷ்ணுவைப் பார்த்துச் சொல்லுகிறான். நான் இதுநாள் மட்டும் செய்த பூசை புனக்காரங்களையெல்லாம் நீ ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் எனக்கு நெருக்கமானவனாக நீ என்னோடு இருக்கவேண்டிய அவசியமில்லை. உடனே இங்கிருந்து போய் விடு. நீ எங்கே இருக்கவேண்டும் என்று விரும்புகிறாயோ அங்கேயே போய் விடு என்று மகாவிஷ்ணுவை விரட்டினான்.
.
.
அகிலம்
========
அப்போது மாயன் அதிகக் கோபத்துடனே
இப்போது நீசனைப்பார்த்(து) ஏதுரைப்பா ரம்மானை
அனந்தபுரம் விட்டுச் சுவாமி திருச்செந்தூர் ஏகல்
போறேன் நானுன்னுடைய புரத்தைவிட்டுச் செந்தூரில்
வாறேன் நானுன்னை வதைக்கவொரு கோலமிட்டு
எளியசா ணானெனவே எண்ணம்வைத் தென்றனையும்
நளியாகப் பேசி நகைத்தாயே மாநீசா
எளியோர் வலியோர் எவெர்க்கும்வெகு நன்மைசெய்து
வெளியாக உன்றனக்கு விபரம்போ தித்தருளி
நீயறியத் தர்மம் நீணிலத்தி லேநடத்திப்
பேய்வெறியைக் கொன்று பேருலக மத்தனையும்
நாடாள் வார்தமக்கு நான்பட்டமுஞ் சூட்டித்
தாடாண்மை யான சத்தியமா யென்றனையும்
ஒருபுத்தி யாகி உள்ளென்னைக் கொண்டோர்க்குப்
புதுப்புத்தி யீந்து பூலோகம் ஆளவைப்பேன்
.
விளக்கம்
=========
இதைக் கேட்ட திருமால் மிகுந்த கோபம் கொண்டு நீசனைப் பார்த்து, நீசனே நான் உன்னுடைய திருவனந்தபுரத்தை விட்டுத் திருச்செந்தூர் போகப் போகிறேன்.
.
பிறகு உன்னை வதைத்து அழிக்க ஓர் உருவம் கொண்டு இங்கு மீண்டும் வருவேன். மாநீசனே என்னை இவன் எளிய சாணான் என்று கீழ்த்தரமான எண்ணம் கொண்டு கேலியாகப் பேசி நகைத்தாயே.
.
எளியவர்கள், வலியவர்கள் எல்லாருக்கும் நன்மை செய்தும் உனக்கு எல்லா விவரங்களையும் வெளிப்படையாக உபதேசித்து அருளியும், நீ அறியும் படியாகத் தருமத்தை இப்பரந்த உலகினில் நடத்தியும், பேய் வெறியைக் கொன்றும், இந்தப் பெரிய உலகம் முழுவதும் ஆட்சி புரியும் தகுதியுள்ள சான்றோருக்கு நான் சிறந்த பட்டம் சூட்டியும் உள்ளத்தில் முழுமுயற்சியுடனும், உண்மையுடனும் என்னைச் சதா ஒரே நினைவாக நினைத்துக் கொண்டு இருப்பவருக்கு மாற்றுப்பிறப்பு கொடுத்தும் இந்தப் பூலோகத்தை ஆள வைப்பேன்.
.
.
தொடரும்... அய்யா உண்டு.
#அய்யா வைகுண்டர் #அய்யா வைகுண்டர் {1008} #🚩அய்யா வைகுண்டர் 🚩 #Ayya Vaikundar #💚Ayya 💗 Vaikundar💚