D Muthu Prakash, Kanchipuram 💐
511 views
கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஆறாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 02.02.2026. . அய்யா துணை . தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர். . அகிலம் ======== மகாவிஷ்ணு மறுத்துரைத்தல் ==================== அன்று மகாமால் ஆகங் களிகூர்ந்து ஆனாலும் நான்கேட்ட அவ்வரங்க ளானாலும் மானாபர ஞாய வரம்பழித்துப் போட்டீரே இதற்குமுன் னேதாலும் என்னையறி யாதவண்ணம் ஒதுக்கிலிருந் தோர்வளமை உங்களால் செய்ததுண்டோ மும்முறைபோ லென்னை உவந்துக் கெணியாமல் அம்முறையை நீரும் அழித்ததேன் ஈசுரரே என்னைக் கெணியாமல் இக்கலியைச் செய்ததினால் நன்னமிர்த ஈசுரரே நம்மாலே கூடாது அழிப்பதுவுங் கலியை அங்கல்லால் கூடாது விழிப்பதென்ன நம்மாலே விசாரமிடக் கூடாது . விளக்கம் ========== ஈசனின் இதமான பேச்சு மகாவிஷ்ணுவை மகிழ்வித்தது என்றாலும் சிவபெருமானைப் பார்த்து ஈசுரரே தாங்கள் கூறுவது சரிதான். ஆனால் இப்போது முன்புள்ள நியாயமுறைகளை மீறியல்லவா செயல்பட்டிருக்கிறீர். . இதற்கு முன்பெல்லாம் எனக்கு அறிவிக்காமலோ, மறைத்தோ ஏதேனும் ஒரு காரியம் செய்திருப்பீர்களா? இப்போது என்னை மதிக்காமல் கலியைப் பிறவி செய்ததினால் நம்மால் அநதக் கலியனை அழிக்க முடியாது. கலியை அழிக்கவேண்டுமானால் அவன் எங்கிருந்து ஆரம்பமானானோ அங்கிருந்தே ஆரம்பிக்க வெண்டும் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். தெரிந்திருந்தும் ஏன் இப்போது ஒன்றும் தெரியாதவர்போல் விழிக்கிறீர். ஈசனே சொல்வதையெல்லாம் சொல்லிவிட்டேன். இன்னும் சொல்லுவதற்கு ஒன்றுமில்லை. . . அகிலம் ======== நம்மாலே யொன்றும் நடவாது ஈசுரரே சும்மாவென் னோடிருந்து சோலிபண்ண வேண்டாங்காண் உகத்துக் குகங்கள் ஓடித்திரிந் தலைந்து மகத்துவமாய்ச் சந்து சதைமுறிந்து நோகுதையா தூங்கி விழியாமல் திமிர்ப்போல் சரீரமது ஏங்கிமிக வாடுதப்பா என்திருவைக் காணாமல் பாவிகள் பண்ணிவிட்ட பாட்டைமிக எண்ணுகையில் ஆவி மிகவாடி அங்கமெல்லாஞ் சோருதையா அந்தமுழுப் பாவிகளில் அதிகமுழுப் பாவியிவன் சந்ததிக்குத் தாய்தகப்பன் தாழ்ந்துநின் றேவல்செய்தால் கொடியவனோ பாவி கொஞ்சமிஞ்ச மோயிவன்தான் முடியுமோ பாவி யுத்தமிடச் சென்றதுண்டால் தன்ம மறியாத சண்டித்தடி மூடர்கையில் நம்மைப் பிடித்தங்கே நகட்டிவிட வேண்டாங்காண் பட்ட அடிவூறப் படுத்திருக்கப் போறேனான் ஒட்டொழிய என்னை ஒடுக்கிவிட வேண்டாங்காண் என்றாதி நாரா யணர்தானு மிப்படியே அன்றாதி நாதன் அவரோ டிதுவுரைக்கச் . விளக்கம் ========= முடிவாகச் சொல்லுகிறேன். நம்மால் கலியனை அழிப்பதென்பது நடக்காத காரியம். ஆகவே என்னை இனிமேல் வேலை வாங்க வேண்டாம். யுகத்துக்கு யுகம் அலைந்து திரிந்து என்னுடைய சந்து சதையெல்லாம் வலிக்கிறது. என் லட்சுமியைக் காணாமல் என் மனம் ஏங்கித் தவிக்கிறது. . அந்த ஆறுகத்துப் பாவிகளையும் அழப்பதற்கு நான் பட்ட பாட்டை நினைக்கும்போது என் உடம்பெல்லாம் சடைகிறது. அந்த முழுப் பாவிகளைவிட அதிக வலிமை பெற்றவன் இந்தக் கலி என்னும் கபடப்பாவி. பெற்றவர்களை வேலை வாங்கும் கொடியவர்களை விட இந்தப் பாவி கொஞ்சமும் குறைந்தவனில்லை. . அந்தக் கலியனோடு சண்டையிட யாரால் முடியும், அந்தக் கபடக் கலியனிடம் என்னை அனுப்பிவைக்க ஈசனே நீர் எத்தனிக்க வேண்டாம். கலியன் தரம் நியாயங்களைச் சற்றும் அறியாதவன். அவனிடம் வெற்றி பெறுவதென்பது முடியாத ஒன்று. . நான் ஏற்கெனவே ஆறுயுகங்களில் அந்த அரக்கர்களிடம் பட்ட அவலங்களை எல்லாம் மறந்து சற்று ஓய்வெடுக்கப் பேகிறேன். ஒட்டுமொத்தமாக என்னை அழித்துவிடத் தயவுசெய்து எண்ண வேண்டாம் என்று சிவபெருமானிடம் மகாவிஷ்ணு கூறினார். . . அகிலம் ------------- சிவபெருமான் மகாவிஷ்ணுவிடம் இசைவு மொழி கூறுதல் ============================================================= சிவனு மிகவயர்ந்து செப்புவார் மாயருடன் புவன மதற்குடைய பொன்னே யென்மாதவமே இப்படித்தான் மைத்துனரே ஈதுரைத்தீ ரானாக்கால் எப்படித்தா னானும் ஏகம தாளுவது 400 சுவரல்லோ மைத்துனரே சித்திரம் நாங்களல்லோ கவரல்லோ நாங்கள் கயமல்லோ மைத்துனரே மாயனல்லோ எங்களுக்கு மலையல்லோ மைத்துனரே ஆயனல்லோ எங்களுக்கு அணையல்லோ மைத்துனரே கொப்பல்லோ நாங்கள் குருவல்லோ மைத்துனரே செப்பல்லோ மைத்துனரே சிமிள்கூடு நாங்களெல்லாம் நீர்தானு மிப்படியே நெகிழ்ந்தமொழி சொன்னதுண்டால் ஆர்தானு மெங்களுக்கு அணைவுமொழி சொல்லுவது மூடிப்படிக் குலுங்க முயங்காதோ கொப்பதெல்லாம் கூடிப்படிக் குலுங்க குலையாதோ சீவனது தேவர்முனி சாஸ்திரிகள் சிறுபுத்தி யைக்கேட்டு மூவருன்னைப் பாராமல் முனிந்துசெய்த ஞாயமெல்லாம் பொறுத்தருளு மென்னுடைய புண்ணிய மைத்துனரே மறுத்துரைத்தால் நானுமினி வகுத்துரைக்க ஞாயமில்லை எல்லாம் பொறுத்து இனியுமக்குத் தேர்ந்தபடிச் சொல்லொன் றுக்குள்ளே செலுத்தியர சாளுமென்று ஈசுரனார் சொல்ல எம்பெருமா ளேதுசொல்வார் . விளக்கம் ----------------- மகாவிஷ்ணுவின் நீண்ட உரையால் மன வாட்டமடைந்த சிவபெருமான், மீண்டும் மகாவிஷ்ணுவிடம் சொல்லுகிறார்.. இந்த உலகத்திற்கு உயர்வான பொருளே, என் மாதவமே, இப்படியே நீர் சொல்லிக் கொண்டிருந்தால் இந்த உலகத்தை நான் எப்படி ஆட்சி புரிய முடியும். . என்னுடைய மைத்துனரே நீர் சுவரென்ளால் நான் அதில் வரையப்பட்டுள்ள சித்திரமல்லவா? நீர்த்தேக்கமல்லவா தாங்கள். நாங்கள் அதிலிருந்து பிரிகின்ற கால்வாய் தானே? மாயவனாகிய நீர் எங்களுக்கெல்லாம் மலையல்லவா? மூவருக்கும் நடுவரான மைத்துனரே எங்களை கட்டிக்காக்கும் கோட்டைச் சுவரே நீர் தானே. . கிளைகளான எங்களையெல்லாம் தாங்கி நிற்கும் பெரிய விருட்சமே, செப்பல்லவா நீர். நாங்கள் சிமிழ் கூடு தானே? தாங்களே இப்படித் தளர்ச்சியடைந்து ஒதுங்கிக் கொள்வதுபோல் சொன்னால் வேறு யார் எங்களுக்கு ஆறுதல் கூறுவார்கள். கிளைகளைத் தாங்கி நிற்கும் மூடு இப்படி அசைந்தால் கிளைகளாகிய எங்களுடைய கதி என்னவாகும். உடல் நிலைகுலையும்போது உயிர் நிலைகுலையாமல் இருக்குமா? . தேவர்கள், முனிவர்கள், சாஸ்திரிகள் முதலியோரின் சிறுமதிக் கிணங்கி மூவரில் ஒருவராகிய உம்மைச் சிறிது கூட நினைக்காமல் கலியனைப் படைத்தது பற்றிய குற்றங் குறைகளையெல்லாம் என்னுடைய மைத்துனராகிய தாங்கள் பொறுத்தருள வேண்டும். இன்னும் தாங்கள் மறுத்துக் கூறினால் அதற்குமேல் வலியுறுத்த எனக்கும் மார்க்கமில்லை. ஆகவே, எல்லாக் குற்றங்களையும் பொறுத்து நீர் நிச்சயித்தபடியே உம்முடைய ஒரு சொல்லை உலகிற்கு உத்தரவாக்கி அரசாளுங்கள் என்று மகாவிஷ்ணுவிடம் சிவபெருமான் கூறினார். . . தொடரும்... அய்யா உண்டு. #Ayya Vaikundar #🚩அய்யா வைகுண்டர் 🚩 #அய்யா வைகுண்டர் #💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர் {1008}