#அய்யா வைகுண்டர் #🚩அய்யா வைகுண்டர் 🚩 #Ayya Vaikundar #💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர் {1008} கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஏழாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 24.02.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
.
அகிலம்
=======
மகாவிஷ்ணுவுக்கு சப்தமாதர்கள் இடட சாபம்.
===================
எங்களையுங் கற்பழித்து இந்த வனந்தனிலே
மங்கள சோபனமும் மறந்து மயிர்விரித்துத்
தூங்காமல் வாடி தினமும் மிகவுணர்ந்து
ஆங்கார மேமறந்து அவனியா சையறுத்துத்
தலைவிரித்துக் கலையைச் சதமென்று எண்ணாமல்
உலையில் மெழுகதுபோல் உறுவனத்தி லேநிலையாய்
வெயில்பனியிலு மேகத் துளிர்விழிக் குள்ளாகிக்
குயில்கூவும் வனத்தில் கோதையேழு பேரும்
நின்றோமே காட்டில் நீர்செய்த மாயமதால்
இனியெங்கள் மக்கள் ஏழ்வரையு மேழ்வழியும்
அநியாய முமடக்கி ஆனமக்கள் வம்மிசத்தைக்
கொத்தோடே சேர்த்தெடுத்துக் குறுங்கலியை யடக்கி
அரசாள மக்களுக்கு ஆனபதி ஈயும்வரைக்கும்
எங்களைப்போல் சுகமற்று இருப்பீர்காண் பண்டாரம்
மங்களமல் லால்கலி மாளும்வரை வாராது
என்று சபித்தார் ஏற்றகன்னி ஏழ்பேரும்
.
விளக்கம்
========
எங்களை நீர் கற்பழித்ததினால் எங்கள் சுபசோபனங்கள் யாவையும் மறந்து, இந்த வனத்தில் தலைவிரி கோலமாகவும், தூங்காமலும், சோர்வடைந்தும், ஒவ்வொரு நாளும் மிகப்பெரிய மன உளைச்சலோடும், எங்களுக்கே உரித்தான கர்வத்தை மறந்து, பூலோகத்தைப் பற்றிய எண்ணங்களைத் துறந்து, கூந்தலைச் சிதறவிட்டு, சுவாசத்தைக் கூட நிலையானதாகக் கருதாமல், உலையில் அகப்பட்ட மெழுகு உருகுவதைப் போல் திரட்சியான இந்தக் கானகத்தில் நிலையாக நின்றோம். வெயில், பனி, மழை அத்தனைக்குள்ளும் அகப்பட்டு குயில் கூவும் இந்த வனத்தில் நாங்கள் ஏழு பெண்களும் உம்முடைய சூழ்ச்சிக்குள் சிக்கியதால் இந்தக் காட்டிற்குள் நிலையாக நின்று விட்டோம்.
.
இனி இதைப்பற்றி நாங்கள் நினைக்காமல் இருக்கத் தக்க நிலையிலான ஏற்பாடுகளைச் செய்துவிடும். அதாவது, முதலில் அநியாயச் செயல்களுக்கு முடிவு ஏற்படுத்தி, குறுகிய புத்தியை உடைய கலி என்னும் கொடிய மாய்மாலத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் மாய்ந்துபோகச் செய்துவிட்டு, நாங்கள் பெற்ற ஏழு பிள்ளைகளையும், அவர்களின் சந்ததியரையும் சேர்த்தெடுத்து அவர்களுக்கு அரசாட்சியும் தர்மபூமியும் அருள வேண்டும். எங்கள் வேண்டுகோளின்படி எம் மக்களுக்கு அரசாட்சியும் தர்மபூமியும் தரும் வரைக்கும் எங்களைப் போல் நீரும் எந்தவித சுகத்தையும் அனுபவிக்க முடியாதவராகவே இருப்பீர். உமக்கு எவ்வித சுபசோபனமும் இந்தக் கேடான கலி முடியும்வரை கிடைக்காமலே போகும் என்று சப்தமாதர்கள் மகாவிஷ்ணுவுக்குச் சாபம் கொடுத்தார்கள்.
.
.
அகிலம்
========
அன்றுநா ராயணரும் அவர்கேட்டுத் துக்கமுற்று
என்னசொல்லப் போறோம் யாம்தா மினியெனவே
வன்னத் திருமேனி மனதுநொந் தேதுசொல்வார்
பெண்ணேநீ ரேழ்பேர்க்கும் பிரமா அமைத்தபடி
எண்ணம் வந்ததல்லால் யானென்ன செய்தேனடி
ஆனால் கலியை அழிந்துமக்கள் தம்வழியை
நானாகச் சென்றெடுத்து நலங்கொடுக் கும்வரைக்கும்
துயர மெனக்குத் தொடுக்குமெனச் சாபமிட்டீர்
அசுரக் குடும்பம் அறுக்கும்வரை முன்னாளில்
ஈசரிட்ட சாபம் ஈதோடே வாய்த்துதடி
மாசங் கடந்து வரும்வரைக்கும் நீங்களுந்தான்
எங்கே போயிருக்க ஏழ்பேர்க்குஞ் சம்மதங்காண்
கொங்கை யினியழகக் கோதையரே சொல்லுமென்றார்
.
விளக்கம்
========
சப்தமாதர்களின் சாபத்தைப் பெற்ற மகாவிஷ்ணு, மிகுந்த கவலையுற்றார். இவர்களுக்கு என்ன பதில் சொல்வதென யோசித்தவாறு மனவேதனையோடு அந்த மாதர்களைப் பார்த்து. சொல்லுகிறார். மாதர்களே ! நீங்கள் ஏழு பேரும் எனக்குச் சாபம் தருவதென்பது நீங்கள் செய்த குற்றமோ, நான் செய்த தவறோ அல்ல. இவை யாவும் பிரம்மதேவன் அமைத்தபடியே நடந்தேறியுள்ளன. விதியின் விளைவால்தான் எனக்குச் சாபமிட வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு வந்துள்ளது. அதற்கு நான் என்ன செய்வது?
.
ஆனால் நான் இந்தக் கேடு மிகுந்த கலியை அழித்து, நம்முடைய மக்களையும் அவர்களின் சந்ததியரையும் அரவணைத்துக் காப்பாற்றி அவர்களுக்கெல்லாம் நற்பேறு கொடுக்கும் வரை நீங்கள் இதுகாலம் வரை அனுபவித்ததைப் போன்ற துன்பங்களை நானும் அனுபவிக்க வேண்டும் என்று சாபமிட்டுள்ளீர்கள்.
.
இதுவும், அன்றொரு கால் சிவபெருமான் என்னப் பார்த்து அசுரர் குலத்தை அடியோடு அழித்து ஒழிக்கும் வரை உமக்கு ஓய்வில்லை என உரைத்தார். அன்று சிவபெருமான் சொன்னதற்கும் நீங்கள் இன்றெனக்கு இட்ட சாபத்திற்கும் ஏதோ ஒரு வகையில் சம்பந்தம் இருக்கிறது.
.
ஆனால், கலியை அழிப்பதென்பது நினைத்த மாத்திரத்தில் நிறைவேறிவிடும் காரியம் அல்ல. அதற்குத் வேதகாலக் கணக்குப்படி பார்த்தாலும் பல மாதங்கள் ஆகலாம். அதுவரைக்கும் நீங்கள் ஏழு பேரும் எங்கேபோய் இருக்கலாம் என்று நினைக்கிறீர்கள்? உங்கள் எண்ணத்தை என்னிடத்தில் சொல்லுங்கள் என்று தம் இனிய தேவியர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்ட பாரளந்த பரம்பொருள் வாஞ்சையோடு கேட்டார்.
.
.
அகிலம்
=======
வைகையில் இறந்த இரு உயிர்கள் பற்றிய விவரம்
==================================================
அப்போது கன்னி அவரெல்லா மாராய்ந்து
செப்புகிறா ரந்தச் சிவபத்தர் தன்னுடனே
மக்கள்ரண்டு பேர்கள் மாண்டாரவ ருயிரை
அக்கமது செய்தீரோ அயலோவது ஞாயமென்ன
என்றுகன்னி ஏழ்பேரும் இரங்கித் தொழுதிடவே
அன்றுநா ராயணரும் ஆதிசிவ னுமையும்
தாதா மனமகிழ்ந்து சதுர்முகனைத் தானழைத்து
வேதாவே மக்கள்ரண்டை வெற்றியுள்ள வைகையிலே
கொன்றானே சோழன் குருநன்றி யைமறந்து
சென்றாரே மக்கள் சென்றவுயி ரெவ்விடங்காண்
.
விளக்கம்
=========
மகாவிஷ்ணுவின் வாஞ்சை மிகுந்த வார்த்தைகளைக் கேட்ட சப்தமாதர்கள் ஒருவரோடு ஒருவர் ஆலோசித்துவிட்டு, சிவநேசனாகிய மகாவிஷ்ணுவைப் பார்த்து, சோழப் பேரரசனால் மாண்டு போன எங்கள் இரண்டு பிள்ளைகளின் உயிர்களை என்ன செய்தீர்கள்?
.
இறந்த இரண்டு பிள்ளைகளின் வாரிசு வழியில் பிறவி செய்தீர்களா? அல்லது அயலார் வாரிசு வழியில் பிறவி செய்தீர்களா? அதைப்பற்றி எங்களுக்குத் தாங்கள் சொல்லப்போகும் விவரம் என்ன? என்று கேட்டனர்.
அதனால் மனம் மகிழ்ந்த மகாவிஷ்ணு, பிரம்மதேவனை வருவித்து, பிரம்ம தேவரே, வைகை ஆற்றில் சோழ மன்னன் குரு நன்றியை மறந்து என் மக்கள் இருவரைக் கொன்றானே, அந்த இரு உயிர்களும் இப்போது என்ன நிலையில் இருக்கிறது என்று கேட்டார்.
.
.
தொடரும்…. அய்யா உண்டு.