கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஆறாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 05.02.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
அகிலம்
========
தேவலோகத்தார் மனுப்பிறப்பு
============================
அப்போது பாரளந்த அய்யாநா ராயணரும்
முப்பொருளு மொன்றாய் ஒத்திருந் தேதுசொல்வார்
தேவரையுந் தான்வருத்திச் செப்புவா ரையாவும்
பாவலரே நீரும் பார்த்துணர்ந் தோராமல்
மாலிங்கே யில்லையென்று மாறாட்டஞ் சொன்னதற்கு
சூலின் கருத்திரண்டு தொல்புவியி லேபிறக்கும்
உங்களி னமாக ஒருபிள்ளை பெற்றதுண்டு
அங்குபோய்ச் சாணாராய் அதில்பிறக்கப் போவுமென்று
சொல்லவே தேவரெல்லாம் சிரித்துமனங் கூடி
நல்லதுகாண் நாரணரே நாங்கள்பிழைத் தோமெனவே
பிறக்கவே போவோம் பிறந்தா லடியார்க்கு
இறக்கவிதி யாகுமல்லோ இழிகலிய னேதுவினால்
இறந்தால் பின்னுமந்த இனத்திலடி யார்பிறக்க
வரந்தாரு மென்று வணங்கிநின்றா ரையாவை
அப்போது அய்யா அரிநமோ நாரணரும்
செப்பரிய நல்லகுலத் தேவர்களுக் கேதுரைப்பார்
மக்களே நீங்கள் வையகத்தி லேபிறந்தால்
வக்கலிய னேதுவினால் மாயமுங்க ளைச்சூழ்ந்து
என்பேரு மீசர் ஏற்றஉமை யாள்பேரும்
தன்பேருஞ் சொல்லாதே என்று தடுத்தடிப்பான்
ஆனதால் சாவுவரும் ஆனாலு முங்களுயிர்
மானமது மாறாமல் மாறியவ் வினத்திலுறும்
இப்படியே வுங்களைநான் இரட்சித்துக் காக்குமட்டும்
எப்படியு முங்களுயிர் இதில்விட் டகலாதென்றார்
நல்லதுகா ணென்று நாட்டமுற்றுத் தேவரெல்லாம்
வல்ல வகையான வாய்த்தசா ணாரினத்தில்
தேவ ருயிர்பார்த்துச் சென்றுதித்தார் தேவரெல்லாம்
.
விளக்கம்
=========
மகாவிஷ்ணு தனதுள் சிவபெருமானையும், பிரம்ம தேவரையும் உருவேற்றி, மும்மூர்த்திகளும் ஒருமித்திருக்கும் பரப்பிரம்ம நிலையில் இருந்துகொண்டு, தேவலோகத்தாரையெல்லாம் வரவழைத்துச் சொல்லுகிறார்,. தேவர்களே, நீங்களெல்லாம் தெய்வலோகத்தில் இருந்தும், அவதார நிர்ணயங்களை, அதாவது அவதாரண ஞானங்களைத் தெரிந்திருந்தும் அதன் உள்ளார்ந்த தத்துவக் கருத்துகளை சிந்தித்து உண்மையை உணராமல், இந்த கலியுகத்திலுள்ள கலிநீசப் பாவிகள், அவதார எதார்த்தங்களைப் பற்றிச் சற்றும் அறியாமல் பிதற்றுகின்றார்களே அதைப் போல மகாவிஷ்ணு மண்ணுலகில் மாண்டு கிடக்கிறார் என்றும், அவர் இங்கு இல்லை என்று பொய்யானதோர் செய்தியைச் சொல்லியுள்ளீர்கள். இந்தக் குற்றத்திற்காக நீங்களெல்லாம் பூலோகத்தில் மனதர்களாகப் பிறந்தாக வேண்டும்.
.
நீங்கள் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் தேவலோகத்தைச் சேர்ந்த ஒருவரை ஏற்கனவே நான் பூலோகத்தில் என் பிள்ளையாகப் பெற்று வைத்திருக்கிறேன். அவருடைய பிதிர் வழியில் பெண்ணின் கருவறையில் கருவாகப் புகுந்து உருவாகத் திரண்டு சான்றோராகப் பிறவி எடுங்கள் என்று மகாவிஷ்ணு தேவலோகத்தாரிடம் சொன்னார்.
.
மகாவிஷ்ணுவின் அந்த உத்தரவால் உளம் பூரித்த தேவர்கள், நாங்கள் பிழைத்தோம் நல்ல காரியம் செய்தீர்கள் சுவாமி என்று நன்றி தெரிவித்தவாறு, சுவாமி ! நாங்கள் பூலோகத்தில் பிறப்பதற்காகப் போகப் போகிறோமே அங்கே பிறந்தால் அடியார்களாகிய எங்களுக்குப் பூலோக நியதிப்படி இறப்பதற்கான விதியும் உண்டல்லவா?
.
கேடான கலி இவ்வுலகில் வந்த காரணத்தால் பூலோகத்தில் பிறவியெடுக்கும் எங்களுக்கு அங்கே சாவு வந்தாலும் மீண்டும் அதே சான்றோர்களாக நாங்களெல்லாம் பிறப்பதற்கான வரத்தினைத் தந்து எங்களை அனுப்பி வையுங்கள் சுவாமி என்று வணங்கி நின்றார்கள்.
.
அதனால் அகமகிழ்ந்த நாராயணப் பரம்பொருள் தேவர்களைப் பார்த்து, தேவர்களே நீங்களெல்லாம் பூலோகத்தில் போய் பிறந்தால், அந்த கலியின் ஏதுவான மாய்மால மயக்கம் உங்களையும் விட்டு வைக்காது. அப்படி உங்களையும் கலியானது சூழ்ந்திருக்கும் அந்நேரம் என்னுடைய பெயரையும், சிவபெருமானின் பெயரையும், லோகமாதாவாகிய உமையவளின் பெயரையும், நீங்கள் உச்சரிக்கவே கூடாது என்று கலிமயக்கம் அதிகமானோரெல்லாம் ஆதிக்கம் செலுத்துவார்கள். உங்களை அடித்து உதைத்துத் தடை செய்வார்கள்.
.
இத்தகைய சூழ்நிலைக் கைதிகளாக வாழ்ந்துவரும் உங்களுக்கு நிலவுகலக நியதிப்படி சாவு வரத்தான் செய்யும் . வந்தாலும் உங்கள் உயிருக்கு எந்தவிதக் கேடும் ஏற்படாத வண்ணம் மீண்டும் மீண்டும் அதே சான்றோர்களாகவே பிறப்பீர்கள்.
இப்படி உங்கனை நான் வந்து ஆட்கொண்டு அருள்பாலிக்கும் காலம்வரை, எக்காரணத்தை முன்னிட்டும் உங்கள் உயிர் சான்றோர் நிலையை விட்டு அகலாது என்று கூறினார். இதனால் மனமகிழ்ந்த தேவர்கள் சான்றோர்களாகப் பிறக்கச் சென்றார்கள்.
.
.
அகிலம்
--------------
சம்பூர்ணத்தேவன் பூலோகத்தில் பிறக்க மறுத்தல்:.
======================================================
மூவருரை மாறாமல் மோகமுள்ள தேவரெல்லாம்
போகும் பொழுதில் பொன்னுலகத் தேவர்தன்னில்
தாவும்பெரிய வொரு சம்பூரணத் தேவன்
பரதே வதையான பார்மறலி தன்னுகத்தில்
உரமான தேவியவள் உடையமன்ன னைநீக்கித்
தெய்வச்சம் பூரணனும் சேர்ந்தவளோ டேநடப்பாய்
மாயவளை மாய்கையினால் மாறியவன் பேசினனே
நான்பிறக்கப் போணுமென்றால் நன்னுதலை யென்னோடு
தான்பிறக்கச் சொல்லித் தாரம்போ லாக்குவீரால்
நான்பிறக்கப் போவேன் நாரணரே யல்லாது
தான்பிறக்கப் போவதற்குச் சங்கடங்க ளுண்டுமையா
என்றுரைக்கத் தேவன் எடுத்துரைப்பா ரெம்பெருமாள்
.
விளக்கம்
=========
தேவலோகத்தார்கள் எல்லாம் பூலோகத்தில் மனிதர்களாகப் பிறக்க ஒப்புக்கொண்டு சென்றபோது, தேவலோகத்திலுள்ள தேவர்களில் பெருமைக்குரியதோர் சம்பூரணத்தேவன், எமலோகத்தில் தன்னுடைய கணவனை கைவிட்டுவிட்டு வாழ்ந்துவரும் பரதேவதை என்ற பெண்ணுடன் நெருக்கமாகப் பழகி நீண்டகாலம் இருவரும் உறவாடி வந்ததால் பூலோகத்தில் பிறவியெடுக்கமாட்டேன் என்று மகாவிஷ்ணுவிடம் மறுப்பு தெரிவித்தான்.
சுவாமி ! நான் பூலோகத்தில் மனிதனாகப் பிறக்கப்போக வேண்டுமானால், எமலோகத்தை சேர்ந்த பரதேவதை என்ற பெண்ணையும் என்னோடு பூலோகத்தில் பிறவிசெய்து, அவளை எனக்கு மனைவிபோல் ஆக்குவீரானால் நான் பூலோகத்தில் மனிதனாகப் பிறக்கப்போவேன் இல்லையென்றால் அதில் பல இடையூறுகள் ஏற்படும் என்று சம்பூரணத்தேவன் சொன்னான்.
.
.
அகிலம்
--------------
நன்றுநன்று தேவாநீ நாணமென்ன பேசுகிறாய்
உன்பிறப்பு உயர்பிறப்பு ஓவியத்தின் தன்பிறப்பு
பின்பிறப்பு ஏமன் பூமிப் பிறப்பல்லவோ
அப்பிறவிக் கிப்பிறவி அடுக்குமோ தேவாநீ
இப்பிறவி ஞாயம் ஏனுரைத்தாய் மாதேவா
ஆனையொடு பூனை அணைந்துநலஞ் செய்திடுமோ
பூனையொடு ஆனை புல்குமோ மாதேவா
.
வெண்பா
=========
ஆனை மதமா யடர்ந்து மிகத்தேவா
பூனை யொடுவந்து புல்குமோ - பூனை
நாயோடு புல்குமோ நல்லறிவில் லாத்தேவா
ஈயோடு சேர்மோ இசல்
.
நடை
=====
ஏனடா தேவாநீ இந்தமுறை சொன்னதென்ன
வீணடா இவ்வாசை விட்டுவிடு நீதேவா
கீரிக்குப் பாம்பு கிளைவருமோ வையகத்தில்
ஓரிக்குச் சிங்கம் ஒக்குமோ மாதேவா
இப்படியே மாயன் எடுத்துரைக்கத் தேவாதி
எப்படியும் புத்தி இசையாம லேயுரைப்பான்
காவலரே மாமோகம் கண்டஇட மன்றல்லவோ
ஆவலது கொண்டஇடம் அச்சுதரே சம்மதங்காண்
எந்தவித மாகிடினும் எனக்கந்தப் பெண்கொடியைத்
தொந்தமா யென்றனக்குத் தொலையாத ஆசையதும்
தந்தருளி வைத்தால் தர்மமுண் டுங்களுக்கு
என்றன் பிரானே இனிமாற்றிச் சொல்லவேண்டாம்
.
விளக்கம்
=========
அதைக் கேட்ட மகாவிஷ்ணு, சம்பூரணத் தேவனைப் பார்த்து, தேவா ! நீ என்ன நியாயம் பேசுகிறாய். நீ தேவலோகத்தைச் சேர்ந்தவன். பரதேவதையோ எமலோகத்தைச் சேர்ந்தவள். அதுமட்டுமல்ல அவள் இன்னொருவனின் மனைவி. அவள் தன் கணவனுக்குத் துரோகம் செய்துவிட்டு உன்னை விரும்புகிறாள். நீயோ இன்னொருவனின் மனைவியை அவனிடமிருந்து பிரித்த குற்றத்திற்கு ஆளாகுகிறாய்.
.
நீங்கள் இருவர் செய்வதும் பெரும் பிழையாகும். அத்துடன் உங்கள் இருவரின் இருப்பிடங்களும் கலாசார வேறுபாடு உடையதாகும். யானையும், பூனையும் ஒன்றோடு ஒன்று எப்படி இணைந்து உறவாடாதோ, அதுபோல் பூனையோடு நாய் புணர முடியாது, ஈயோடு ஈசல் சேராது. இப்படியிருக்க, மதம் பிடித்த யானை அதன் தலையில் அதுவே மண்ணை வாரிப் போடுவதைப்போல் நீ ஏன் உன்னையும் உன்னுடைய வாழ்வையும் பாழாக்குகிறாய்?
.
தேவா கீரிக்குப் பாம்பு ஒருபோதும் உறவாகாது. நரியும் சிங்கமும் எந்த நிலையிலும் நயந்து வாழாது. அதுபோல் உங்கள் இருவரின் வாழ்வியலும் ஒத்துப்போகாது. ஆகவே, உன்னுடைய இந்த ஆசை நல்லதல்ல. எனவே உன்னுடைய கோரிக்கையை கைவிட்டுவிடு என்று சம்பூரணத் தேவனுக்கு மகாவிஷ்ணு எடுத்துரைத்தார்.
.
மகாவிஷ்ணு இத்தனை புத்தி எடுத்துரைத்த பின்னும், சம்பூரணத் தேவனின் மனதில் சற்றுக் கூட மாற்றமில்லை. அவன் மீண்டும் மகாவிஷ்ணுவை நோக்கி, எங்களையெல்லாம் காத்தருளும் தாங்கள் எங்கள் ஆசையை நிறைவேற்றி அருள் பாலியுங்கள். நான் இதுகாலம் வரை இச்சை கொண்டது அவளை மட்டுந்தான். அவள் மீது கொண்ட ஆவலை என்னால் மாற்றவே முடியாது. எப்படியாவது பரதேவதை என்ற பெண்ணோடு நான் அன்னியோன்னியமாக வாழ்ந்தாக வேண்டும் என்பதே என் ஆசை. அதை நிறைவேற்றினால் புண்ணியமாய்ப் போகும். என்னுடைய இந்தக் கோரிக்கைக்கு இனி மறுப்பு தெரிவிக்காதீர்கள் சுவாமி என்றான்.
.
.
தொடரும்... அய்யா உண்டு.
#🚩அய்யா வைகுண்டர் 🚩 #Ayya Vaikundar #💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர் {1008} #அய்யா வைகுண்டர்