#Ayya Vaikundar #🚩அய்யா வைகுண்டர் 🚩 #அய்யா வைகுண்டர் #அய்யா வைகுண்டர் {1008} #💚Ayya 💗 Vaikundar💚 கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை எட்டாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 01.04.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
அகிலம்
========
ஒரு கழஞ்சிச் சலமெடுக்கவும், இரண்டு நாழிகை வழிக்கு ஒரு தண்ணீர் பந்தலும், மூன்று நாழிகை வழிக்கு ஒரு தர்மசாலை மடமும் நன்றாய் முகியும்.
.
விளக்கம்
=========
இந்த திருவாசகத்தில் இதுவரைச் சொல்லியுள்ள உத்தரவை சிறிதளவேனும் கடைப்பிடித்து வாழ்வதற்கான வைராக்கியத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அந்த வைராக்கியத்தை எல்லாரும் எடுத்துக் கொண்டால் இந்த உலகம் சகல ஐஸ்வரியங்களையும் பெறும்.
.
அதனால் உலகம் முழுவதிலும் ஒரு நிமிட நேரம் நடந்து செல்லும் தூரத்திற்கு ஒரு தண்ணீர்ப் பந்தல் வீதமும், 144 நிமிட நேரம் நடந்துசெல்லும் தூரத்திற்கு ஒரு அன்ன தர்ம சாலை வீதமும் நல்ல முறையில் அமையும்.
.
உள்ளுறை மறைபொருள் விளக்கம்
===================================
ஒரு கழஞ்சி என்பது இன்றைய எடையில் 5 கிராம் 30 மில்லிகிராமாகும். முந்தைய காலங்களில் குறைந்த பட்சம் என்பதற்குப் பதிலாக ஒரு கழஞ்சியேனும் என்று சொல்வது வழக்கம். அதைப்போல் இந்தத் திருவாசகத்தில் குறைந்த அளவைக் குறிக்கும் நோக்கத்திலேயே கழஞ்சி என்ற சொல் கையாளப்பட்டுள்ளது. அதைப் போல் சலம் என்ற சொல்லுக்கு வைராக்கியம் என்றும் ஒரு பொருள் உள்ளது. ஆக, இந்த திருவாசக அறிவிப்பின்படி நாம் கொஞ்சமாவது செயல்பட வேண்டும் என்ற வைராக்கியத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அப்படி யாவரும் முறைப்படும் நிலை உண்டாகும் பட்சத்தில் கீழே குறிப்பிடும் சம்பவமும் நடக்கும்.
.
ஒரு நாழிகை என்பது 48 நிமிடமாகும். ஆரோக்கியமான ஒரு மனிதன் 96 நிமிட நேரம் நடந்து செல்லும் தூரத்திற்கு ஒரு தண்ணீர்ப் பந்தலும் 14 நிமிட நேரம் நடந்து செல்லும் தூரத்திற்கு ஒரு தர்ம சாலை, அதாவது, அன்ன தர்மச் சத்திரமும் உலகெங்கும் சிறப்பாக அமைந்து செழிப்பாக நடைபெறும்.
.
அகிலம்
========
தர்மங்கொடுக்கிற பேர்களுண்டு வாங்கிறபேர்களில்லை யென்று சொல்லுகிற வெயிலாள் மடக்கொடியாள் வயிற்றிலே நாடுமொரு மதலை பிறந்து பத்து வருசமாச்சுது.
.
விளக்கம்
=========
உலகில் உள்ள எல்லாரும் தர்ம சிந்தனை உடையோராக இருந்தால் உலகத்தில் தர்மம் கொடுப்போர் உள்ளனர். அதனை வாங்குவதற்க்கு ஆளில்லை என்கிற தன்னிறைவு நிலை தாரணியில் தாமாக ஏற்படும் என்று போதனை செய்கின்ற மூவருக்கும் முன்னவர் ! மூவலர் தேடியும் முற்றா முதல்வன் என்றெல்லாம் போற்றப்படுகின்ற பரப்பரம்மத்தின் தாய்த் தன்மை பொருந்திய பூலோகத்தில், இப்போதெல்லாம் தன்னிறைவு நிலையை விரும்புகின்ற நல்லோர் பிறப்பதில்லை. இத்தகு நிலை ஏற்பட்டு பத்து வருடம் ஆகி விட்டது.
.
.
அகிலம்
========
நாங்களும் மகா அருணா சலத்திலே வாலிபப் பிள்ளையா யிருக்கிறோம். அந்த வாலிபப் பிள்ளை என்ன சொல்கிறா ரென்றால்
.
விளக்கம்
=========
நாங்களும், அதாவது மூவாதி மூவரும், முப்பெரும் தேவியரும், தேவாதி தேவர்களும் கலியின் தாக்கம் எந்த நிலையிலும் நெருங்கவே முடியாத மேன்மை மிகுந்த பரலோகத்தில் என்றென்றும் நிலை மாற்றமே இல்லாத இளமையோடு இருக்கிறோம். அந்த வாலிபத் தன்மையுடைய நாங்கள் என்ன சொல்கிறோம் என்றால்.
.
.
அகிலம்
========
வீர புரந்தர தர்மராசா வழியிலே விகிநாராயணர் இங்கே வந்து மூன்று மாதத்துக்குத் தவசுபண்ணி இரண்டு மாதத்துக்கு மேல் வருகிறார்.
.
விளக்கம்
=========
வீரத்தில் நெருப்புக்கு நிகரான தர்மராசாவாகிய மகாவிஷ்ணு, அவருக்கே வழக்கமான வழியில், அதாவது, பிரபஞ்சத்தைத் தோற்றுவித்த காலத்தில் அறத்தை அறியாத அநியாயக் கேடனாக மண்ணகம் முழுவதும் மாமிச மலைபோல் பிறந்தானே குறோணி என்னும் கொடிய அசுரன், அவனைக் கொல்வதற்காக மண்ணுலகில் வந்து மாதவம் செய்தாரே அதைப்போலக் கலியை அழிக்கவும் விடுபட்ட கிரிகைகளை நிறைவேற்றுவதற்காகவும், அதாவது, தாம் அவதாரம் எடுத்த யுகங்களிலெல்லாம் நிலுவையில் இருந்துள்ள வேலைகள் யாவையும் செய்து முடிக்கின்ற (நாராயணம்) பரம்பொருளாக, பூலோகத்திற்கு வந்து, மாதம் என்ற சொல்லுக்குத் தமிழ் அகராதி பெருமை என்றோர் அருமையான பொருளைத் தருகிறது. அதன்படி மூன்று பெருமைகளுக்கான தவம் செய்வார்.
.
அத்தகு பெருமைகளுக்கான மூன்று தவம் யாதெனில், இந்தக் கலியுகத்தைமுடிப்பதற்கு ஒரு தவம். சாதி வரம்புகளை உடைத்து சமப்படுத்துவதற்கு ஒரு தவம். உலக இயக்கத்தின் பொருட்டு ஏகனாகிய பரம்பிரம்மத்திலிருந்து அனேகமாகி அருள்பாலித்த தாய்நிலைத் தெய்வங்கள் முதலாக சப்த மாதர்கள் வரையிலானவர்களை எல்லாம் ஆட்கொண்டு, நல்வழியில் வாழுகின்ற மக்களைக் கடைத்தேறச் செய்வதற்காகவும் ஒரு தவம்.
.
இம்மூன்று பெருமைகளுக்கான தவத்தில் இரண்டு பெருமைகளுக்கான தவத்தை முடித்து, அதற்கு மேல் மூன்றாம் தவத்துக்கு வருவார்.
.
தொடரும்... அய்யா உண்டு.