கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஆறாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 01.02.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
அகிலம்
========
எதிர்ப்பவரார் சொல்லும் இந்தமாய் மாலமொடு
கலியென்ற சொல்லு காதில்மிகக் கேட்டதுண்டால்
சலிவாகி மேனி சடலமிரு ளாகுமல்லோ
மெய்ப்பேச வேணுமென்று மேவி யிருந்தாலும்
பொய்ப்பேச புத்திப் பொலியும் பொடுபொடென
வாளா யுதத்தாலே வாய்த்தகணை யம்பாலே
பாழாக்க வென்றாலும் படாதே மகாலிதான்
மற்றப் பிறவி யாக வகுத்தாலும்
இத்தனை யெண்ணம் இல்லையே யென்றனக்கு
அய்யோயென் மக்கள் அதற்குள்ளாகப் பட்டாரே
.
விளக்கம்
=========
சிவபெருமானே! எனக்குத் தாங்கள் அலைச்சல் ஏற்படுத்துவது ஒருபுறமிருந்தாலும், இப்போது எடைத்திருக்கிறீரே மாய்மாலக் கலி அதை எதிர்த்துப் போரிட்டு செல்ல வல்லவர் யார்? சொல்லும் பார்க்கலாம்.
.
கலி என்கிற வார்த்தையைக் கேட்டாலே உடலெல்லாம் நடுங்கி சடைந்து இருண்டுவிடுகிறது. உண்மையைத் தான் பேச வேண்டும் என்று மக்கள் பிடிவாதமாக இருந்தாலும், தாங்கள் படைத்திருக்கும் கபடமான கலிமாய்கை அவர்களைப் பொய் பேசத் துண்டுவதோடு பொய்யிலேயே மக்களெல்லாம் ஐக்கியமாகிவிடுவார்களே.
.
.
அகிலம்
=======
மெய்யோ யினிமக்கள் விளங்குவ தெக்காலம்
தீண்டிப் பிடித்தானே செத்தகலி மாய்மாலன்
வீண்டிடறு தீர்ந்துமக்கள் விளங்குவது எக்காலம்
ஆறு பிறவி அழித்ததுவு மென்றனக்கு
நீறுபோ லெண்ணுதுகாண் நிற்கலியைப் பார்க்கையிலே
என்ன விதத்தால் இவனை யழிப்போமென்று
வன்னச் சிவனாரே மனதுவேறே ண்ணுதுகாண்
நாடாச்சு தேசம் நகரியுங்கள் பாடாச்சு
வீடாச்சு குண்டம் மேதினிக ளங்காச்சு
தேச வழிபோறேன் செல்லாது இங்கேதான்
மாய்கை வலையைவிட்டு மறையவே போறேன்காண்
பலபேர்க ளாட்டும் பாம்புபோ லென்னையுந்தான்
அலைவிதமா யென்னை அழைத்ததென்ன சொல்லுமென்றார்
.
விளக்கம்
=========
இந்தக் கலியை வாள் அம்பு போன்ற எந்தவித ஆயுதத்தாலும் அழித்துப் பாழாக்கிவிட முடியாது. உலகிலுள்ள அத்தனை மனிதர்களின் சிந்தையிலும் கபடமென உறைந்து, உருவமே இல்லாமல் உலகத்தின் அமைதியைக் கெடுக்கும் மாயக் கலியை மாய்ப்பதற்கு எவ்வித ஆயுதத்தாலும் முடியாது.
.
இந்தச் சதிகாரக் கலிக்கு ஏதேனும் ஒரு உடலைக் கொடுத்துப் பிறவிசெய்திருந்தால் என் சிந்தனைக்கு இவ்வளவு குழப்பம் ஏற்பட்டிருக்காது. அத்தனை வலிமை வாய்ந்த கபடமான கலி மாய்கைக்குள் என் மக்களெல்லாம் அகப்பட்டு கொண்டார்களே. கயமையான அந்தக் கலிக்குள் அகப்பட்ட மக்கள் அதிலிருந்து கடைத்தேறுவது எக்காலமோ தெரியவில்லையே.
.
துக்கமான அந்த மாய்மாலக் கலி மக்களை தொற்றிக் கொள்ளுமே, அந்த வீணான துன்பத்திலிருந்து மக்கள் விழித்தெழுவது ஏலாத காரியமாயிற்றே. இதற்கு முன்பு நிகழ்ந்த ஆறு யுகங்களிலும் நான் அழித்த அரக்கர்களை நினைத்துப் பார்க்கும் போது அந்தக் கலியின் முன்னால் அந்த அரக்கர்களெல்லாம் எனக்குத் தூசுபோல் தெரிகிறது.
.
சிவபெருமானே, இந்தக் கலியை என்ன உபாயத்தால் அழிப்பது என்று யூகிப்பதிலே என்மனம் பலவாறு குழப்பமடைகிறது. நாடு, நகரம், தேசம் உலகம் எல்லாம் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். இனி எல்லாமே உங்கள் பாடுதான். எனக்கு இங்கிருக்க ஒத்துவராது. நான் தேசாந்திரியாகப் போகப் போகிறேன்.
.
மாய்கையாகிய கலியில் சிக்கிக் கொள்ளாமல் மறைந்திருக்கப் போகிறேன். விரும்பியோரெல்லாம் தம் விருப்பபடி விளையாட்டு காட்டும் பெட்டிப் பாம்மைப்போன்று என்னையும் இங்கே அழைத்து அலைய வைத்த காரணத்தைச் சொல்லுங்கள் என்று சிவபெருமானிடம் மிகக் கோபமாகச் கேட்டார் மகாவிஷ்ணு.
.
.
அகிலம்
=======
சிவபெருமான் மகாவிஷ்ணுவிடம் காரணம் உரைத்தல்.
=======================================================
அப்போது ஈசுரனார் அச்சுதரைத் தான்பார்த்து
இப்போது நானும் இயம்புகிறேன் கேளுமென்று
முற்பிறவி துயரம் எல்லாம் வரும்படிக்குப்
பண்டுவொரு சாபம் பகர்ந்தேன்நான் மைத்துனரே
அன்றுசா பம்பகர்ந்த அதுகேட்டுக் கொண்டருளும்
குறோணி யொருசூரக் கொடும்பாவி தான்பிறந்து
சுறோணித மாயவரே தொல்புவியெல் லாமுழுங்கி
என்னோடு ஈஸ்வரியாள் எல்லோரை யும்விழுங்க
நின்னோடு மாயவரே நீயொருவன் தப்பிமிக
என்னை நினைத்துத்தவம் இருந்தாய்நீ கீழுலகில்
தென்னவனே நீயும் செய்தத் தவமதினால்
எழுந்தருளி நானும் என்னவரம் வேணுமென்றேன்
.
விளக்கம்
=========
மகாவிஷ்ணுவின் கோபமான கேள்விக்கு சிவபெருமான் மகாவிஷ்ணுவைப் பார்த்து, மைத்துனரே, இப்போது நான் சொல்லுவதைக் கவனமாகக் கேளும்.
.
பிரபஞச்சத்தின் ஆரம்ப காலத்திலேயே, அதாவது நாமெல்லாம் உதயமான காலத்திலேயே இத்தகைய துன்பங்களும் துயரங்களும் வரும். அதையெல்லாம் நீர்தான் எதிர்கொண்டு விடிவு காணவேண்டும் என்று நான் உம்மிடம் சொல்லியிருக்கிறேன். மைத்துனரே, அன்று நான் எந்தச் சந்தர்ப்பத்தில் எதனால் அப்படிச் சொன்னேன் என்பது பற்றிய விவரத்தையும் இப்போது சொல்லுகிறேன். கேட்டருளும்.
.
குறோணி என்றொரு கொடும்பாவி அசுரன் தோன்றி, மிக ஆவேசமாக இந்த உலகத்தையும், என்னையும், உமையவள் முதலாக எல்லாரையும் விழுங்க முற்பட்டபோது மாயவராகிய நீர் மட்டும் அதிலிருந்து தப்பித்து, பூலோகத்தில் என்னை நினைத்துத் தவமிருந்தீர்.
.
நீர் செய்த தவத்தின் பயனாக நான் உம்மிடம் எழுந்தருளி உமக்கு என்ன வரம் வேண்டுமெனக் கேட்டேன்.
.
.
அகிலம்
=======
குளிர்ந்த குணமான கோவேந்தே நீமாறி
கேட்டாயே சூரனுடல் கீறித்துண் டாறாக்கித்
தாட்டாண்மை யாகத் தரணிதனில் விட்டெறிய
வரந்தாரு மென்று வாகாகக் கேட்டவுடன்
தரந்தரமே துண்டம் தரணிக்கெல் லாம்பிறந்து
மாற்றா னாயுனக்கு வருமாறு யுகம்வரைக்கும்
சீற்றத் துடனே செடமெடுக்கு மென்றுசொல்லித்
தந்த வரத்தின் தன்மையா லிந்தமுறை
எந்தன்மேல் கோபம் ஏன்சொல்லப் போறீர்காண்
என்றந் தஈசர் இப்படியே சொன்னவுடன்
.
விளக்கம்
==========
அப்போது நீர் இந்த உலகத்தை விழுங்க நினைக்கும் குறோணியாகி அசுரனை ஆறு கூறாக வெட்டி விட்டெறிய எனக்கு வரம் தாரும் என்று கேட்டீர்.
.
அப்போது, உம்மிடம் அந்தக் குறோணியை ஆறு கூறாக்கி அவனியில் விட்டெறிந்தால் அவனுடைய ஒவ்வொரு நுறுகளும் உமக்கு எதிரியாக இவ்வுலகில் பிறக்கும், அதனால் யுகக் காண்டங்கள் ஏற்படும் என்று சொன்னேன். அதன்படிதான் ஆறு யுகங்களிலும் நீர் அவதரித்து அந்த ஆறுயுகத்து அரக்கர்களையும் அழித்தீர். இவை யாவும் அன்று நான் சொன்ன சொல்படிதான் நடைபெறுகிறதே தவிர என்பேரில் கோபப்படவேண்டாம் என்று மகாவிஷ்ணுவிடம் சிவபெருமான் கூறினார்.
.
.
தொடரும்... அய்யா உண்டு.
#அய்யா வைகுண்டர் {1008} #🚩அய்யா வைகுண்டர் 🚩 #💚Ayya 💗 Vaikundar💚 #Ayya Vaikundar #அய்யா வைகுண்டர்